Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

புதுமைப்பித்தன்

Labels: ,

புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருதாச்சலம். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி, திருப்பாதிர்புலியூரில் அவர் பிறந்தார். தந்தை பெயர் வி. சொக்கலிங்கம் பிள்ளை; அம்மா பெயர் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தனின் உடன் பிறந்த-வர்கள் இரண்டுபேர். முதலில் தங்கை ருக்மணி அம்மாள், பிறகு தம்பி சொ. முத்துசாமி.

pudu3தாசில்தாராகப் பணியாற்றிய வி. சொக்கலிங்கம் பிள்ளை பணிநிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றலாகிப்-போனபோது, புதுமைப்பித்தனின் தொடக்கக் கல்வியும் அந்தந்த ஊர்களுக்கு மாற்றப்பட்டது. செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிஞ்சி ஆகிய ஊர்களில் தொடக்கக் கல்வி கற்ற புதுமைப்பித்தன், 1918இல் வி. சொக்க-லிங்கம் பிள்ளை ஓய்வுபெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பி, ஆர்ச்யோவான் ஸ்தாபனப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931 இல் பி.ஏ. பட்டம் பெற்றார். அதேவருடம் ஜுலையில் கமலாம்மாளுக்கும் புதுமைப்-பித்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கமலாம்மாள் (1917_1995) திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.

1933 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி புதுமைப்பித்தனின் முதல் கதையான `குலோப் ஜான் காதல்’ காந்தியில் வெளிவந்தது. பிறகு 1934 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து அவருடைய பல கதைகள் மணிக்-கொடியில் வெளிவரத் தொடங்கின. மணிக்கொடி பி. எஸ். ராமையாவுடன் அவருக்கு நெருங்கியத் தொடர்பிருந்தது. 1934 ஆம் முற்பகுதியில் புதுமைப்பித்தன் சென்னைக்கு சென்றார். 1934 ஆகஸ்டு மாதம் ஊழியனில் உதவியாசிரியராக சேர்ந்து 1935 பிப்ரவரி வரை ஊழியனில் பணியாற்றினார். பிறகு 1936 முதல் 1943 செப்டம்பர் வரை தினமணியில் உதவியா-சிரியராக இருந்தார். நிர்வாகத்துடனான மோதலின் காரணமாக ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம் தினமணியிலிருந்து விலகியபோது பிற உதவியா-சிரியர்களோடு சேர்ந்து புதுமைப்பித்தனும் விலகினார்.

புதுமைப்பித்தனின் புத்தகங்கள், முறையே 1939இல் உலகத்துச் சிறுகதைகள், பேஸிஸ்ட் ஜடாமுனி கப்சிப் தர்பார், ஆகியவையும் 1940 இன் தொடக்கத்தில் புதுமைப்-பித்தன் கதைகள்_ம் பிறகு ஆறு கதைகள்_ம் 1943 இல் காஞ்சனையும், 1947 இல் ஆண்மை, உலக அரங்கு ஆகியவையும் வெளிவந்தன.

1944 ஆம் ஆண்டு டி. எஸ். சொக்கலிங்கம் தினசரி_யை தொடங்கிய போது புதுமைப்பித்தன் அதில் சேர்ந்தார். பிறகு தினசரியிலிருந்து விலகித் திரைப்படத் துறையில் நுழைந்தார். 1946 இல் ஜெமினியின் `அவ்வை’ மற்றும் `காமவல்லி’ படங்களில் பணியாற்றினார். பின்பு `பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படக் கம்பெனியை தொடங்கினார். 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் புதுமைப்பித்தனின் மகள் தினகரி பிறந்தாள்.

1947 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 1948 மே தொடக்கம் வரை புதுமைப்பித்தன் எம். கே. டி. பாகவதரின் `ராஜமுக்தி’ படத்திற்காக புனேயில் தங்கி பணியாற்றினார். அங்கு அவர் கடுமையான காசநோய்க்கு ஆளானார். நோய் முற்றி மருத்துவர்கள் கைவிட்டு-விட்ட நிலையில் 5 மே 1948 இல் திருவனந்தபுரத்திற்குத் திரும்பினார். அதே ஆண்டு ஜுன் 30 இல் மறைந்தார்.

காலம் தாண்டும் ஆற்றல்

Labels: , ,

சுந்தர ராமசாமி

`நோபல் பரிசு பெற்ற சில கலைஞர்களையாவது பின்தங்கச் செய்யும் கலைஞனாகப் புதுமைப்பித்தனை உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இம்முடிவுக்கு நீங்கள் வந்தததற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை விளக்க முடியுமா?’

என்கிற கேள்விக்கு சுந்தர ராமசாமி காலச்சுவடு; இதழ் 10, ஜனவரி 1995-_ல் எழுதிய பதிலின் சுருக்கம்.


  புதுமைப்பித்தன் சிறுகதைகளும் கவிதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவரின் நாடகங்கள் பலவீனமானவை. கட்டுரைகள் அவ்வடிவத்திற்குள் இன்று உலகெங்கும் உறுதிப்பட்டு-விட்ட வாதத்தின் நீட்சி முழுமை பெறாமல் சிந்தனை-களின் தெறிப்புகளாக முடிந்து போகின்றன. கவிதைகள், பொருட்படுத்தத் தகுந்த சோதனை முயற்சிகள், ஆகக் கூடிய வெற்றியை அவர் பெற்றிருப்பது சிறுகதை-களில்தாம்.

புதுமைப்பித்தனுக்கு காலத்தின் மீதான பயணம் சாத்தியப்பட்டிருப்பது. இப்போது நிரூபணமாகிக்-கொண்டிருக்கிறது. அவர் எழுதி முடித்து இன்று அரை நூற்றாண்டு முடிந்துவிட்டது. வாழ்க்கைக் கோலங்களும், வாழ்க்கைப் பார்வைகளும் எவ்வளவோ மாறி-விட்டன. அவருக்குப்பின் வந்த பல படைப்பாளிகள் அவர் காட்டாத சோபைகளையும், விரிவுகளையும், ஆழங்களையும் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். ஆனால் இன்றும் அவருடைய சிறுகதைகள் நம்முடன் நெருக்கமான உறவு கொள்கின்றன. நமக்கும் அவருக்குமான உறவில் சென்றுபோன காலத்தின் அலுப்பு ஊடுருவ முடியாமல் திணறுகிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் பலவும் நிறைவின் அமைதி கூடாதவைதாம். ஆனால் நிறைவு கூடியவையும் கூடாதவையும், அன்றும் சரி, இன்றும் சரி படைப்பு வீரியம் கொண்டவையாகவே காட்சி அளித்து வருகின்றன. இந்த வீரியம் ஆழ்ந்த, நெருக்கமான உறவை வாசகர் மனதில் உருவாக்குகிறது. இதன் கவர்ச்சியும் அலாதியானது. கவர்ச்சியின் பளபளப்புக்கு நேர் எதிரான கவர்ச்சி இது. கவர்ச்சியின் பளபளப்பு கோலங்கள் சார்ந்தது எனில், வீரியம் சாராம்சம் சார்ந்தது. இன்றைய வாசகனும், அந்த வீரியத்தை அவருடைய மொழி சார்ந்தும் அவர் தேர்வு கொண்ட பொருள் சார்ந்தும், படைப்பை முன் வைத்த விதம் சார்ந்தும், ஊடுருவி நிற்கும் விமர்சனத்தின் கூர் சார்ந்தும் படித்து அனுபவிக்கலாம்.

நோபல் பரிசு பெற்ற இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகள் எல்லாமே ஆகத் தரமானவையாக இருக்கக்கூடும் என்பது நம் கற்பனை. வாசிப்பின் மூலம் நேர் பரிச்சயம் கொள்ளத் தவறும் போதும், தரத்தை சுய நிர்ணயம் செய்யும் ஆற்றலைப் பெறாத நிலையிலும் உருவாகிவரும் பிரமைகள், தாழ்வு மனப்பான்மையில் ஊறி நம் பார்வையைக் கெடுக்கிறது. அத்துடன் நோபல் பரிசுகள் தர நிர்ணயத்தில் வெற்றி பெற்றவையாக எப்போதும் அமைவதும் இல்லை. தோல்ஸ்தாய், காஃப்கா, ஜேம்ஸ் ஜாÊய்ஸ், இப்ஸன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்பெர்க், வலேரி, ரில்கே, மெர்சல் ப்ரூஸ்ட், கசாந்த் ஸாக்கீஸ் போன்றவர்களுக்குத் தரப்படாத நோபல் பரிசின் மீது உலக அரங்கில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இவ்வுன்னதப் படைப்பாளிகள் பெறாத பரிசை இவர்களுக்குக் கீழ்நிலையில் நிற்கும் படைப்பாளிகள் பலரும் பெற்றும் இருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற பலரும் காலத்தை எதிர்கொள்ள முடியாமல் சரிந்து கொண்டிருப்பது இப்போது கண்கூடு. இவர்களுடைய எண்ணிக்கையும் கணிசமானது. ஜவான் புனின், ஷோலக்கோவ் போன்ற ருஷ்ய ஆசிரியர்களும், ஜான் ஸ்டீன்பெக், சிங்ளேர் லூயி, பேள் எஸ் பக் போன்ற அமெரிக்க ஆசிரியர்களும் ஜான் கால்ஸ்வர்த்தி என்ற ஆங்கில ஆசிரியரும் காலத்தின் முன் பின்னகர்ந்து கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர், ரவீந்திரநாத் தாகூரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது நமக்கு மனச் சோர்வை தரக்கூடியதுதான். ஆனால், காலம் ஒரு படைப்பாளியை ஏந்தும் போதோ உதறும் போதோ அவன் பிறந்த தேசத்தைப் பற்றியோ அவன் எழுதிய மொழியைப்பற்றியோ அவ்வளவாகக் கவலைப்படுவது இல்லை.

ஆங்கிலம் அறிந்த தமிழ் வாசகர்கள் நான் குறிப்பிட்டிருக்கும் இவ்வாசிரியர்களின் படைப்புகளில் ஒரு சிலவற்றையேனும் படித்து இவர்களுடைய எழுத்தை புதுமைப்பித்தனின் எழுத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற ஆசிரியர்களின் புத்தகங்களைத் தேடிக் கண்டு பிடிப்பதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் நோபல் பரிசு பெற்றவர்களின் புத்தகங்களைப் பெறுவது சுலபமாக இருப்பது நம் விசித்திரத் தலைவிதி. இவர்களின் எழுத்தின் ஒரு பகுதியைப் படித்துப் பார்த்தால் கூட காலத்தின் களிம்பு இவர்கள் மீது படிந்துவிட்டிருப்பது தெரியும். நமக்கும் இவர்களுக்கும் இடையிலான காலம் இவர்களுடனான நம் உறவிலும் பெரிய இடைவெளியை உருவாக்கியிருக்கிறது. இன்று இவர்களின் வீரியத்தை நம்மால் உணர முடிவதில்லை. புதுமைப்பித்தன், அவரிடம் நாம் எதிர்ப்பார்ப்பதைவிட குறைவாகத் தந்திருக்க, இவர்கள் ஒவ்வொருவரும் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகம் தந்து நம்மை அலுப்புக்கு உள்ளாக்குகிறார்கள் என்ற உணர்வையே நாம் பெறுகிறோம். நம் சிரத்தையை இவர்களால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. இவர்களைப் படித்து ஒப்பிட்டுப்பார்த்தால் புதுமைப்பித்தனின் காலம் தாண்டும் ஆற்றலும், அவர் அளிக்கும் புத்துணர்ச்சியும் தற்பெருமை சார்ந்த மதிப்பீடு அல்ல என்பது தெரியவரும். தமிழ் வாசிப்பில் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தமிழில் நிறையவே படிக்கக் கிடைக்கிற ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளுடன் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழில் படிக்கக் கிடைக்கும் நோபல் பரிசு பெற்ற ஆசிரியையான பேள் எஸ். பக்கின் `நன்னிலம்’ என்ற நாவலின் தரத்துடன் புதுமைப்-பித்தனின் எழுத்தின் தரத்தை ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்யலாம்.

சிற்பியின் நரகம்

Labels: ,

புதுமைப்பித்தன்

சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும் விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேச வாசிகளும். வெளுத்து ஒதுங்கிய கடாரவாசிளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும் - எல்லாம் ஒன்றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களையும், வேலைக்காரர்களையும் பொற் பிரம்பின் சமயோசிதப் பிரயோகத்தால் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அரசனுக்குக் கடாரத்திலிருந்து வெள்ளை யானைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் என்றுமில்லாத கூட்டம்!

800px-coral_castle_1 

அஸ்தமன சூரீயனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில் சிகரங்களிலும், மாளிகைக் கலசங்களிலும் தாக்கிக் கண்களைப் பறிப்பது மட்டுமல்லாது, கடற்கரையில் கரும்பாறையில் நிற்கும் துவஜஸ்தம்பத்தின் மீது, கீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனையில் அமைக்கப்பட்ட பொன் முலாம் பூசிய வெண்கலப் புலியின் முதுகிலும் வாலிலும் பிரதிபலிப்பது அவ்விடத்திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுத்தது.

இந்திர விழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நான கட்டத்தின் படிக்கட்டில், பைலார்க்கஸ் என்ற யவனன் கடலை நோக்கியபடி உட்கார்ந்திருந்தான். நீண்ட போர்வையான அவனது டோக்கா காற்றில் அசைந்து படபடவென்றடித்து, சில சமயம் அவனது தாடியையும் கழுத்துடன் இறுகப் பின்னியது. பெரிய அலைகள் சமயா சமயங்களில் அவனது பின்னிய தோல் வார்ப்பாதரட்சையை நனைத்தன. அவ்வளவிற்கும் அவன் தேகத்தில் சிறிதாவது சலனம் கிடையாது. மனம் ஒன்றில் லயித்துவிட்டால் காற்றுத்தான் என்ன செய்ய முடியும், அலைதான் என்ன செய்ய முடியும்?

பைகார்க்கஸின் சிந்தனை சில சமயம் அலைகளைப் போல் குவிந்து விழுந்து சிதறின. கனவுகள் அவனை வெறியனைப் போல் விழிக்கச் செய்தன.

திடீரென்று, ''சிவா!'' என்ற குரல். ஒரு தமிழ்நாட்டுப் பரதேசி!

''யவனரே! உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ் வெளியில் லயித்ததோ? நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா?எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம்! கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான்! எல்லாம் ஒன்றில் லயித்தால்...?''

''உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்ச மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை... அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை  ஒப்புக்கொண்டால், உமது கட்டுக்கோப்பில் தவறு கிடையாதுதான்... அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஒவ்வொருவனுடைய மனப் பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்... எனக்கு அது வேண்டாம்... நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும், மதுக் கிண்ணமும் போதும்...''

''சிவ! சிவ! இந்த ஜைனப் பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை... உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது?''

''உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால்தான் அர்த்தமுண்டு. எங்கள் *ஜூபிட்டரின் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத் தாழ்வில்லை...'' என்று சிரித்தான் பைலார்க்கஸ்.

''சிவ! உம்மிடம் பாசத்தை வைத்தான். அதுவும் அவன் விளையாட்டுத்தான்!'' என்று தம் சம்புடத்திலிருந்த விபூதியை நெற்றியில் துலாம்பரமாக அணிந்துகொண்டார் பரதேசி.

''நாளங்காடிப் பக்கம் போகிறேன், வருகிறீரா?'' என்றார் மீண்டும் அச்சந்நியாசி.

''ஆமாம்! அங்கே போனாலும் சாத்தனைப் பார்க்கலாம். அவனிடம் பேசுவதில் அர்த்தமுண்டு... அவனுக்குத் தெரியும் சிருஷ்டி ரகசியம்...''

''ஓஹோ! அந்தச் சிலை செய்கிற கிழவனையா? உமக்கு ஏற்ற பைத்தியக்காரன்தான்... ஏதேது! அவனே அதோ வருகிறானே!'' என்றார் சாமியார்.

பைலார்க்கஸ் எழுந்து அவனை யவன முறையில் வணங்கினான்.

சாத்தனுக்கு எண்பது வயதிருக்கும்; தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை; கண்களின் தீட்சண்யம் போகவில்லை. பிரமன் மனித வடிவம் பெற்றது போல் காணப்பட்டான். அவனும் கைகூப்பி வணங்கி, ''பைலார்க்கஸ், உன்னைத்தான் தேடிவந்தேன்! வீட்டிற்கு வருகிறாயா? எனது லட்சியம் இன்றுதான் வடிவம் பெற்றது...!'' என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் கூவியழைத்தான்.

''இவரைத் தெரியுமா? பாண்டிய நாட்டு, உங்கள் பரதேசி... அவர் தத்துவங்களை எல்லாம் என்னுள் திணித்துப் பார்த்தார்... பைலார்க்கஸிடம் முடியுமா?'' என்று கேலியாகச் சிரித்தான் யவனன்.

''சுவாமி வரணும், இன்று என் குடிசையில் அமுது படி கழிக்க வேண்டும்'' என்று பரதேசியைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான் சாத்தன்.

''என்ன, என்ன! நீயுமா?'' என்றான் பைலார்க்கஸ்.

''பைலார்க்கஸ்! நீ நீரசுவரவாதியாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை; மற்றவரைக் கேலி செய்யாதே...''

''அதற்குத்தான் நான் பிறந்திருக்கிறேன், அப்பா! எனது வேலை அது...''

''சரி, வாருங்கள் போகலாம், சுவாமி வரணும்!'' என்று இருவரையும் இரட்டை மாட்டு வண்டிக்கு அழைத்துச் சென்றான் சிற்பி.

வண்டியின் கதி மெதுவாகத்தான் இருக்க முடிந்தது. எதிரே யானைகளும், பொதி கழுதை, பொதி மாடுகளும், துறைமுகத்தை நோக்கிவரும் நேரத்தில் தீப்பந்தம் பிடித்துச் செல்லும் மக்களை விலக்கிக்கொண்டு வண்டி செல்வது கடினந்தான். திடீரென்று அரசாங்க உத்தியோகஸ்தர்களின் ரதம், யானை வந்துவிட்டால் தெருவே தூளிபடும். முரசொலி இருந்து என்ன பயன்? அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரத்தத்தின் அடியில்தான்! சாத்தனின் வண்டி அதில் முட்டிக்கொள்ளவிருந்தது.

*ஜூபிட்டர்: யவன இதிகாசங்களில் குறிப்பிடப்படும் தேவர்களுக்கு அரசன்; கிரகங்களில் வியாழன்.

‘'தெய்வச்செயல்!'' என்றான் சாத்தன்.

''உன் சிருஷ்டி சக்தி'' என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக்கொண்டு.

''பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்! அது உனக்குத் தெரியுமா? நீ நேற்றுப் பிறந்தவன்... கூத்து!... அதில் எவ்வளவு அர்த்தம்? மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று... இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப்பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு  கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்... உலகத்தின் அர்த்தத்தை... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது... அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை - பைலார்க்கஸ், உனக்கென்ன! நீ கேலிக்காரன் - உபநிஷத்தில் தேடியலைந்தேன்... ஹிமயத்தில் தேடியலைந்தேன்... சாந்தி அந்த இரவு... என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை! என்ன ஏமாற்றம்!... ஆசைதான் வழிகாட்டியது. அந்த ரூப செளந்தரியம் பெறுவதற்கு எத்தனை ஆட்களைத் தேடினேன்!... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்... தெய்வம் ஒன்று உண்டு... அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்... இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்... அதைச் சாதிக்க முடியும்?''

''நீதான் சாதித்தாய்! நீதான் பிரம்மா! உன் சாதனைதான் அது. சிருஷ்டி! மயங்காதே! பயப்படாதே! நீதான் பிரம்மா! சிருஷ்டித் தெய்வம்!'' என்று பைலார்க்கஸ் அடுக்கிக்கொண்டே போனான்.

சாமியார் புன்சிரிப்புடன் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.

வண்டியும் நாளங்காடியை அடைந்து, கீழ்ச் சதுக்கத்தின் வழியாக ஒரு சந்தில் திரும்பி, ஒரு வீட்டின் முன்பு நின்றது.

மூவரும் இறங்கி வாசற்படியில் ஏறினர். ஒரு யவனப் பெண் வந்து காலைக் கழுவினாள். ஒரு காப்பிரி, மரியாதையாகக் குனிந்து, கலிங்க வஸ்திரத்தினால் துடைத்தான்.

''சுவாமி வரவேண்டும்! பைலார்க்கஸ், இப்படி வா!'' என்று இருவரையும் அழைத்துக்கொண்டு ஓர் அறைக்குள் சென்றான் சாத்தான்... அவன் வயதிற்கு அவ்வளவு துடிதுடிப்பு ஆச்சரியமானதுதான்!

''மூபாங்கோ, தீபம்!'' என்று கத்தினான். அந்தக் காப்பிரி ஒரு கைவிளக்கை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஜன்னல் இல்லாத அந்த அறையிலும் காற்று நூலிழை போல் வந்து உள்ளத்தையும் உடலையும் மயக்கியது.

''இங்குகூடவா விளக்கு இல்லை! திரையை ஒதுக்கு! ஸ்வாமி, பைலார்க்கஸ், இதுதான் என் வாழ்க்கை!'' என்று திரையை ஒதுக்கினான்.

இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீபஒளியில், ஒற்றைக் காலைத் தூக்கி நடிக்கும் பாவனையில், ஆள் உயரத்தில் மனித விக்கிரகம்! விரிந்த சடையும் அதன்மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரைகளைக்  காண்பிக்கும் கைகளும், அந்த அதரத்தில் தோன்றிய அபூர்வப் புன்னகையும் மனத்தில் அலைமேல் அலையாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்தச் சிலையேயாயினர். சிலையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத் துடிதுடிப்பு!

சந்நியாசி, தம்மையறியாமல் பாட ஆரம்பித்தார்...

பனித்த சடையும், பவளம்போல்
மேனியும், பால் வெண்ணீறும்,
குனித்த புருவமும், கொவ்வைச்
செவ்வாயும், குமிண் சிரிப்பும்,

இனித்தங்கசிய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மா நிலத்தே!

''சுவாமி, அப்படி சொல்லக் கூடாது!''

''சாத்தா! அவர் சொல்லுவதுதான் சரி! இது கலையா! இது சிருஷ்டி! இதை என்ன செய்யப்போகிறாய்?''

''அரசன் கோவிலுக்கு... இதென்ன கேள்வி?''

''என்ன! இந்த அசட்டுத்தனத்தை விட்டுத்தள்ளு... அரசனுடைய அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு... இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு; ஜீவன் உண்டு...'' என்று வெறி பிடித்தவன் போல் பேசினான் பைலார்க்கஸ்.

''சீ, பைலார்க்கஸ்! உனது வெறிபிடித்த கொள்கைகளுக்கு யவனத்தான் சரி! அகஸ்தூஸா - அந்த உங்கள் சாம்ராட் - அவனுக்குத்தான் சரி உன் பேத்தல்!''

''சாத்தனாலே! உமது இலட்சியத்திற்கு அரசன் கோரிக்கைதான் சரியான முடிவு. இனி ஏன் இந்த ஜைனர்கள் தலைதூக்கப் போகிறார்கள்...!'' என்றார் சாமியார்.

''இந்த வெறிபிடித்த மனிதர்களைவிட, அந்தக் கடலுக்கு எவ்வளவோ புத்தியிருக்கிறது...'' என்று கோபித்துக்கொண்டு பைலார்க்கஸ் வெளியேறிவிட்டான்.

2

அன்றுதான் கும்பாபிஷேகம். சிலையைப் பிரதிஷ்டை செய்த தினம். சோழ தேசத்திலேயே அது ஒரு பெரும் களியாட்டம் என்று கூற வேண்டும். சாத்தனுக்கு இலட்சியம் நிறைவேறிற்று. அன்று பைலார்க்கஸ் தனது குதூகலத்தில் பங்கெடுத்துக்கொள்ள உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சாத்தனுக்கு அதிகம்.

புதிய கோவிலிலிருந்து வீடு சேரும்பொழுது அர்த்த ஜாமமாகி விட்டது.

வயதின் முதிர்ச்சி அன்றுதான் அவனைச் சிறிது தளர்த்தியது. சோர்ந்து படுத்தான். அயர்ந்துவிட்டான்...

அப்பா! என்ன ஜோதி! அகண்டமான எல்லையற்ற வெளி! அதிலே சாத்தனின் இலட்சியம், அந்த அர்த்தமற்ற, ஆனால் அர்த்தபுஷ்டி மிகுந்த, ஒரு புன்சிரிப்பு! மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம்! என்ன ஜீவன்! என்ன சிருஷ்டி!

திடீரென்று எல்லாம் இருண்டது! ஒரே கன்னக் கனிந்த இருள்! ஹிருதய சூனியம் போன்ற பாழ் இருட்டு!

பிறகும் ஒளி... இப்பொழுது தங்கத்தினாலான கோவில்! கண்கள் கூசும்படியான பிரகாசம்!... கதவுகள் மணியோசையுடன் தாமே திறக்கின்றன... உள்ளே அந்தப் பழைய இருள்!

சாத்தன் உள்ளே செல்லுகிறான். இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது! என்ன! இதுவா பழைய சிலை! உயிரில்லை! கவர்ச்சிக்கும் புன்னகையில்லையே!...எல்லாம் மருள்!... மருள்...!

அந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன.

''எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்!'' என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை! இப்படியே தினமும்...

நாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன - அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே!

''எனக்கு மோட்சம்...!'' இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்!

சாத்தன் நிற்கிறான்...

எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறி பிடிக்கிறது. ''உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னை உடைக்கிறேன்! போடு! உடை! ஐயோ, தெய்வமே! உடைய மாட்டாயா! உடைந்துவிடு! நீ உடைந்து போ! அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து...!'' இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கணத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா! பழைய புன்னகை!...

சாத்தன் திடுக்கிட்டு விழித்தான். வெள்ளி முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது.

‘'என்ன பேய்க் கனவு, சீ!'' என்று விபூதியை நெற்றியில் அணிந்து கொள்கிறான்.

''பைலார்க்கஸ் - பாவம் அவன் இருந்தால்...'' சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை.

நினைவுப் பாதையில் பதுங்கியிருக்கும் நகுலன்

Labels: ,

ramana_ps75@yahoo.com

தமிழ்ப் புனைவுபரப்பிலும், கவிதை புலத்திலும் நகுலனின் இடம் தனித்தது. தமிழ் நவீன கவிதையின் இரு பாதிக்கத்தக்க குணாம்சங்களாக பிரமிளையும் நகுலனையும் சொல்லலாம். பிரமிளுடையது, மரபின் செழுமையையும் சமத்காரத்தையும் எடுத்துக்கொண்டு படிம மொழியில் பேசுவது. நகுலனின் கவிதையை, மரபை clip_image002[3]அழைத்தும், மரபிலிருந்து விடுபட்டுக் கொண்டும் எழுதிக் கொண்ட நேர் கவிதை எனலாம். முதல் தலைமுறை நவீன கவிஞர்களை உருவாக்கிய சி.சு. செல்லப்பா அவர்களின் எழுத்துப் பத்திரிகையில்தான் நகுலனின் (டி.கே துரைஸ்வாமி) கவிதைகளும் தொடங்கின. எழுத்தில் எழுதிய பல கவிஞர்களின் கவிதைகள் இன்றைய வாசகன் படிக்கும்போது உணர்வெழுச்சியைத் தராமல் அலுப்பை தந்து கொண்டிருக்கும் வேளையில், மஞ்சள் ஒளி படிந்த அபத்த நிலையை எதிர்கொள்ளும் வினோதத்தை நகுலனின் கவிதைகள் தந்தபடியிருக்கின்றன.

நகுலனின் வீடு தமிழ்நாட்டுக்கு வெளியே திருவனந்தபுரத்தில் கெளடியார் ஹில்ஸ் சாலையில் நவீன பங்களாக்களுக்கு இடையில், கேரள நிலப்பரப்புக்கேயுரிய விசித்திரமான திடீர் இறக்கத்தில் உள்ளது. நிலம் சார்ந்து அவரின் வாழ்விடம் அன்னியப்பட்டிருப்பதற்கும், அவருடைய எழுத்துகளுக்கும் நுட்பமான உறவிருக்கிறது. வட்டார நாவல்களும், சிறுகதைகளும் வரவேற்புடன் எதிர்கொள்ளப்பட்ட காலத்தில்தான் இவரது புத்தகங்களும் வெளிவரத் தொடங்குகின்றன. ஆனால் நினைவுப்பாதை, நாய்கள் போன்ற இவரது நாவல்களிலோ, பிற புனைவுகளிலோ தமிழ் புனைவில் ஏற்கனவே உறுதிப்பட்ட செம்மையான கதை மாந்தர் உருவாக்கம், பின்னணி தொடர்ச்சி இவை எதுவும் இருக்காது. நகுலனின் வெவ்வேறு சாயல்களாகத்தான் எல்லா பாத்திரங்களும் இயக்கம் கொள்கின்றன. நினைவுப்பாதை நாவலில், ஒரே ஒரு ஞாபகம் மட்டுமே புனே என்னும் ஊரைப்பற்றிய கவனிப்பாக இருக்கும். (அந்த ஊரில் நிறைய பேர் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பார்கள்) ஒர் ஊர் பற்றி எந்த ஒட்டுதலும், விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு, நகுலனின் ஜன்னலிலிருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது.

தமிழில் தத்துவ சாய்வு எழுத்துக்கள் நிறைய உண்டு. மனத்தடையற்று எண்ணங்கள் முன்னும், பின்னும் ஊடறுத்த நகுலனின் சுய அவதானத்திலிருந்து, தத்துவமும் புனைவும் ஒரே வெளியில் உருக்கொண்டன.

யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம்.

இந்தப் பார்வைதான் வட்டார கலாச்சாரத்தின் நினைவுகளிலிருந்து நகுலன் அணுகப்படாமல் இருப்பதற்குக் காரணம். கலாச்சாரம், தான் உருவாக்கியிருக்கும் தளைகளை எழுத்தாளன் ஊடறுக்கும்போது முதலில் பலத்த எதிர்ப்புணர்வை தெரியப்படுத்துகிறது. காலத்தில் கலாச்சாரம் தன் இறுக்கத்தை நெகிழ்த்துகையில் அந்த எழுத்தாளனின் உடலையும் பொருத்திக் கொள்ள சில சமிக்ஞைகளை அனுப்புகிறது. தன்னைப் போன்ற உடல்கள் புறக்கணிக்கப்படும் வேளையிலும், உரையாடல் என அர்த்தப்படுத்திக்கொண்டு - அர்த்தப்படுவதாக பாவனை செய்து கொண்ட - பதில் சமிக்ஞை செய்து தன்னை படைப்பாளி பொருத்திக் கொள்கிறான். வாழ்வையே அது தெரிவிக்கும் செய்தியின் அடிப்படையில் முப்பரிமாண கனவாக பார்க்காமல் வெளிறிய தன்மையை தொடர்ந்து கவனித்து வரும்போது கலாச்சாரமும் அரசியலும் அந்த விழிகளை ரகசியமாய் புறக்கணித்து விடுகின்றன. கலாச்சாரம் என்பதே ஜாதிகளின் நினைவின் மேலும், இரகசியக் கனவுகளின் மீதும் கட்டப்பட்டதுதானே.

கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி இரகசியத் தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும், மரணமும் ஒரே கணத்தில் நடந்து, வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நகுலனின் கவிதைத் தொகுப்புகள்:

1. கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

2. மூன்று

3. ஐந்து

4. சுருதி

5. இரு நீண்ட கவிதைகள்

நகுலனின் உரைநடை:

1. நினைவுப்பாதை (நாவல்)

2. நாய்கள் ( '' )

3. நிழல்கள் ( '' )

4. வாக்குமூலம் ( '' )

5. நவீனின் டைரி ( '' )

6. நகுலனின் கதைகள்(சிறுகதைகள்)

கோட்ஸ்டாண்ட் கவிதைகள்

Labels: ,

நகுலன்

clip_image002

வழக்கம்போல்

வழக்கம் போல் வெளி வாசல்
திண்ணையில் சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கின்றான்.
   அந்தி மயங்கும் வேளை--_ -
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர_சக்தி அவனை ஆட்கொள்
கிறது.
      வெயில் மறைகிறது.
நிழல் மெல்ல மெல்ல இல்லாமல்
ஆகும் நேரம் நெருங்குகிறது.
இலைகளும் மரங்களும்
மங்கலாக மயங்கிக் கிடக்கும்
தோற்றம். தென்னை மரத்தின்
உச்சியில் ஒரு ஒற்றைக்
காகம் மெல்லக் கா கா என்று
குரல் கொடுக்கிறது. கையெழுத்து
மறையும் வேளை என்று
சொல்கிறார்கள். பிரமலிபியும்
என்று கூடச் சொல்லத் தோன்
றுகிறது. 'பட்'டென்று நிழல்கூட
இல்லாமல் போகிறது. இருள்
எங்கும் 'கப்'பென்று பரவுகிறது.
மரம், தந்திக்கம்பம், வீடு -
எல்லாமே மறைகின்றன.
எங்கும் 'திட்டு' 'திட்டாக'
இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது.

தன் மிதப்பு

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலை
சீவிக் கொண்டிருந்தான்.
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது - அது
கூடத் தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் - இந்த
நிலைமையையும் தன்னு
டைய வெளித் தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
   அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
          என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
                என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்தும்
அவனால் அவனை
   விடுவித்துக்கொள்ள
   முடியவில்லை
   ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது,
* * *
வேறொரு நண்பனைப் பார்க்கச்
   சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
   பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
   என்று.


கடைசிக்கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
   எல்லாம்.

நகுலன்

Labels: ,

நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி, டி.கே. துரைசாமி என்கிற பெயரிலும் எஸ். நாயர் என்கிற பெயரிலும் நகுலன் எழுதியிருக்கிறார். 1922 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நகுலன் பிறந்தார். ஆங்கிலத்தில் clip_image001முதுகலைப்பட்டம் பெற்று பின்னர் நகுலன் திருவனந்தபுரம் மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். மறைந்த பெண் கவிஞர் திரிசடை, நகுலனின் சகோதரி. நகுலனின் வெளிவந்திருக்கும் படைப்புகள்: நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1972), நாய்கள் (1974), நவீனன் டயரி (1978), மூன்று (1979), ஐந்து (1981), கோட்ஸ்டாண்ட் கவிதைகள் (1981), இவர்கள் (1983), சில அத்தியாயங்கள் (1983) இரு நீண்ட கவிதைகள் (1991). இப்பொழுது நகுலன் சுகவீனமடைந்து விட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தன்னைச் சந்திக்க வந்த ஒரு நண்பரிடம் நகுலன் இப்படிச் சொன்னார்: ``நான் இறந்த பின்பு தயவு செய்து எனக்கு எவரும் இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனெனில் அக்கூட்டத்திற்கு என்னால் வர இயலாது’’.

நவீனத் தமிழ்க் கவிதையில் நகுலனின் முக்கியத்துவம் சமீப காலமாய் மௌனமாய் மறக்கப்பட்டு வரும் ஒன்று. அனேகமான நாற்பது வயதைக் கடந்துவிட்ட எல்லா கவிஞர்களுக்கும் மொத்த கவிதைத் தொகுதி வெளி வந்து அவை மறுபிரசுரமும் கண்டுவிட்ட இக்கால கட்டத்தில் இதுவரை நகுலன் கவிதைகளைத் தொகுத்து வெளியிட எந்தப் பதிப்பகமும் முன்வரவில்லை. நகுலனின் புத்தகங்கள் எவையும் மறுபிரசுரமும் காணவில்லை, ஆனால் நகுலனிடமிருந்து பாதிப்பை பெற்று நகருவதுதான் நவீனத் தமிழ்க் கவிதைச் சூழலுக்கு ஆரோக்கியமானது என்பது தமிழ்க் கவிஞர்கள் தொடர்ந்து சொல்லிவரும் ஒன்று. நகுலன் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர். அவருடைய எழுத்துக்கள் அவை கவிதை, கதை, கட்டுரை என எதுவானாலும் நகுலனுடையவை என்ற பிரத்யேகக் குறியுடையனவையாகவே இருந்திருக்கின்றன. தத்துவ விசாரம் என்று கருதிவிடத் தக்க ஆனால் சிந்திக்கும் எந்த மனத்தையும் பாதிக்கும் காலம் காலமான மனிதாயப் பிரச்னைகளை நகுலனின் கவிதைகள் ஆராய்கின்றன. வியாபாரத் தனமும் அரசியல் தனமும் இலக்கியத்தையும் கலைகளையும் பாதித்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் அந்தக் கறை சிறிதளவும் படியாத எழுத்துகள் நகுலனுடையவை.

கு.ப. ரா கலையின் தனித்துவம்

Labels: , ,

கரிச்சான் குஞ்சு

(1990_ல் வானதி பதிப்பகம் வெளியிட்ட `கு.ப.ரா.’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கு.ப.ரா. சிறுகதைகள் பற்றிய நீளமான கட்டுரையின் சுருக்கம்)

எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க பதச் சேர்க்கைகள், தேர்ந்தெடுத்த சொற்பிணைப்பினால் உருவாக்கப்பட்ட, அர்த்த பேதங்கள் நிறைந்த, புதுமையான படைப்புகள் கு.ப.ரா. சிறுகதைகள். அவற்றை ரசனைத் திறத்தின் அளவு கோல்களாகவே குறிப்பிடலாம். அவரது கதைகளின் எளிமை ஆச்சரியமானது. மூடு மந்திரங்களோ, புரியாத சொற்றொடர்களோ, கஷ்டமான பதச்சேர்க்கைகளோ, சிரமமான வாக்கியங்களோ, நீண்டு புரியாது குழப்பும் சொற்றோடர்களோ காண முடியாது. மென்மையான குழந்தை உள்ளமும், பெண்மையின் பிடிவாதமும், அழகும் கொண்ட அற்புதமான நடையுடன் அவரது ஒவ்வொரு கதையும் தனித்தனி உலகங்களாக இப்பொழுதும் சுழல்கின்றன. வாழ்வில் காணும் உண்மையை ஊடுருவிப் பார்ப்பதே கு.ப. ரா கலையின் தனித்துவம்.

வாழ்க்கையின் ஆழங்களுக்கு, அனாயசமான பல தளங்களுக்கு மிகச் சாதாரணமாக தனது வாசகனை அழைத்துச் சென்று வாழ்வின் மூலாதாரங்களை அதன் முழு வேகத்துடன் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கு.ப.ரா. சிக்கல்கள் நேரும்போது முடிச்சுகளை அவிழ்க்க அவனுக்கு வழி சொல்லித் தந்ததில்லை, புதியதோர் வாழ்க்கையைக் கனவு காண வைக்கவில்லை, கோஷங்களை எழுப்பவில்லை. ஆனால், வாழ்வின் சாதாரணங்களை எளிமையை, சிறிய சம்பவங்களின் மூலமாக நுட்பமான இலக்கிய சாதனைகள் மூலமாக மிக உயர்ந்த தளங்களுக்கு வாசகனை உயர்த்தினார். எனவேதான் அவரது கதைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இப்பொழுதும் புத்தம் புதியதாய், அழகாய், இளமையாய், துடிப்பும் உணர்வும் நிறைந்து ததும்பும் புதுமைகளாய் இருக்கின்றன.

ஒடுக்கப்பட்டு, ஒடுங்கி வீட்டின் மூலையில் நிறுத்தப்பட்ட விக்கிரகங்களாக, மாலையிட்டு, கட்டிலில் கிடத்தப்பட்ட அடிமைகளாக சமையலறையின் மூலையில் புகையும் எண்ணெயில் வேகும் பெண்களை, கு.ப.ரா. சித்தரித்த விதம் எளிமை, பின்பு யாருக்கும் கைவராதது. ஏறத்தாழ நூறு அல்லது நூற்றி இருபத்தி ஐந்து கதைகளை அவர் எழுதியிருக்கலாம். வாழ்வில் கண்ட நிதர்சன உண்மைகளை, எதார்த்தத்தை மீறாத அதே கணத்தில் ரசக்குறைவான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், சிக்கனமான வார்த்தைகளை உபயோகித்து எந்த விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ள அவரால் முடிந்தது.

தமிழில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் இன்றும் சிறுகதை என்பதை ஏதோ ஒரு சிறு சம்பவம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சம்பவம் ஒரு செய்தியாகலாம் ஒரு சிறுகதை ஆக முடியாது. ஆனால், அன்றே சிறுகதை உருவ பிரக்ஞை கு.ப.ரா. கதைகளில் நிலைபெற்றிருக்கும் விதம் ஆச்சரியமும் அபூர்வமும் கூடியது. இந்த உருவப் பிரக்ஞையை கடைசிவரை அவர் காப்பாற்றி வந்தார்.

ஆணைக்கண்டு பெண் அஞ்சுவதும், பெண்ணைக் கண்டு ஆண் வெறிப்பதும், முறைப்பதும், இச்சை-யில்லாத இடங்களில் உற்றுப் பார்ப்பதும் இருபாலாரிடமும் காணப்படும் மனோபாவம். இந்த மனோபாவத்தை மனித மனங்களின் ரகசியங்களைத் தேடித் துருவி எழுதிக் காட்டிய கதை கனகாம்பரம். கட்டுப்பெட்டியான கிராமத்துப் பெண் பேசியது மட்டும் அல்ல, வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்து விட்டாள். வந்தவனுக்கு திகைப்பு, ஆச்சர்யம்; ஏதோ ஒரு ரசக்குறைவு; நடக்கக் கூடாது நடந்துவிட்ட பதைபதைப்பு. கணவன் இல்லாத வீடு, நாகரிகமே என்றாலும் தனி பெண்; வந்தவன் நிலைகுலைந்து விட்டான். வெளிச்சம் கண்கூச வைத்துவிட்டது. அவள் இருக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவசரமாக பாய்ந்து வெளியேறினான் அவன். அவளுக்குத் திகைப்பு. உட்காரச் சொன்னது தவறா? அவன் ஏன் ஓடவேண்டும். தடால் என்று கதவு திறக்கும் சத்தம். கணவனுக்கு நிகழ்ந்தது கேள்விப்பட்டு ஆத்திரம் பொங்கியது. “உள்ளே வந்து உட்காரச் சொன்னாயா-?’’ என்று அழுத்தி கேட்கிறான். ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. “நீ என்ன சொன்னே சினேகிதங்கிட்ட’’

“ஒண்ணும் சொல்லலியே, இப்ப வந்துடுவார் என்று சொன்னேன்’’

“அதற்காக உள்ளே வந்து உட்காரச் சொல்லணுமா?’’

1940களில் இந்தச் சம்பவம் ஒரு பெரிய விசயமாகவும், இன்றைக்கு அப்படியொன்றும் முக்கியத்துவமான விசயம் அல்ல என்றும் மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு தெரியலாம். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்றென்-றைக்குமாக நிகழும் இந்த மனோ விசித்திரங்கள், சமுத்திர புயல் என்றைக்கும் சாதாரணமானது அல்ல. மிகச் சிறிய சம்பவம் ஒன்றை அதிகம் பேசாமல், குரல் உயர்த்தாமல், தன் கட்சியை வலியுறுத்தாமல், எதிர்கட்சியைத் தாக்காமல், உலக இயல்பு மாறாமல் இந்தக் கதையை கு.ப.ரா. உருவப் பிரக்ஞையுடன் சாதித்து இருக்கிறார். அவர் சொல்வதற்கு மேலும் இந்தக் கதையை ஒரு வார்த்தைக்கூட நகர்த்த முடியாது. இந்த இடத்தில் இப்படித்தான் முடியும், முடியவேண்டும் என்ற உருவ அமைப்பு இந்தக் கதையில் மட்டும் அல்ல கு.ப.ராவின் அனைத்துக் கதைகளிலும் காணப்படும் அதிசயமாகும்.

பெண்களைப் பற்றி, கு.ப.ரா. கதைகளில் காணப்படும் நுட்பமான இந்த இலக்கிய விளைவுகளைத் தமிழில் வேறு எந்த இலக்கிய ஆசிரியர்களும் சாதித்தது கிடையாது. பெண்களின் குறிப்பாக தமிழ்ப் பெண்களின் மனப்பூட்டுகளைத் திறப்பதற்குரிய சாவிகளைத் தமது கதைகளில் பெரும்பாலும் சாதுர்யமாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவர். ஆணும் மற்றொரு ஆணும் சினேகமாக இருப்பதுபோல் இன்றும், ஒரு பெண்ணும் ஆணும் சினேகமாக இருக்க முடியாதா-? என்ற கேள்வியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தக் கதை எதிரொலி செய்துகொண்டே இருக்கும்.

இந்தக் கதை மட்டுமல்ல கு.ப.ராவின் ஏனைய மற்றக் கதைகளும் குறிப்பாக நூருண்ணிசா, ஆற்றாமை, விடியுமா, பண்ணை செங்கான், பாலம், சிறிது வெளிச்சம்_ அவர் ஒரு மிகச் சிறந்த தொடக்கம் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

சிறிது வெளிச்சம் கதையில் சாவித்திரி வாழ்வு இருண்டு கிடக்கிறது. புருஷன் பகல் முழுவதும் வீட்டில் இருக்கமாட்டான். இரவில் இருப்பதாக பெயர் பண்ணுவான். பெரும்பாலும் ராத்திரி 2 மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். பக்கத்து வீட்டில் கதை சொல்லும் எழுத்தாளன் குடியிருக்கிறான். தினமும் சாவித்திரியை அவன் கணவன் போட்டு அடிக்கிறான், உதைக்கிறான். ஒருநாள் இதுபோல் சாவித்திரியை அடித்துவிட்டு புருஷன் பின் வருமாறு சொல்லிவிட்டு வெளியே போகிறான். சாவித்திரி கதை சொல்லும் எழுத்தாளன் வீட்டிற்குள் வருகிறாள். இனி கதையிலிருந்து...

“நான் இங்கே படுத்துக் கொள்ள முடியாது. சோலி இருக்கிறது’’, என்று அந்த மனிதன் வெடுக்கென்று புறப்பட்டான். என்ன மனிதனவன், அவன் போக்கு எனக்கு அர்த்தமே ஆகவில்லை. சாவித்திரி உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற் கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என்முன் நின்றது. நல்ல யௌவனத்தில் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேநீர் பார்த்ததுபோல் தென்பட்டது. 18 வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்கிறோமே அது மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. இதழ்கள் மாந்துளிர்கள் போல் இருந்தன. அப்பொழுது தான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளை நன்றாகப் பார்த்தேன். கண்களுக்கு இதமான மெல்லிய பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒளி அவள் தேகத்தில் இருந்து வீசிற்று. தாழ்ப்பாள் விடுபடும் சத்தம் கேட்டது. நான் படுக்கையில் இருந்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போல் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

“வேண்டாம் விளக்கு வேண்டாம் அணைத்து விடுங்கள் அதை’’ என்றாள் அவள்.

உடனே அதை அணைத்துவிட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். புருஷன் ஒருவிதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சர்யம்.

“உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேன் என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.’’

“அம்மா...’’

“என் பெயர் சாவித்திரி.’’

“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப்போய் விட்டது?’’

“இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே, அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது? பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை, குருவி போலத்தான் மனிதர்களும்... இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?’’

“புருஷன்....’’

“என்னடா இந்தப் பெண் இப்படி பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா! புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண்கள் புதிதாக இருக்கிறாள்... பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...’’

“நீங்கள் அப்படி...’’

“நீங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள், நீங்கள்தானே பெரியவர். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும் எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா?’’

“இல்லை.’’

“ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.’’

வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில் தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்து துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவனாக இருந்தன.

“அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக் கொண்டு...’’

“இனிமேல் என்னை என்ன செய்துவிடப் போகிறான். கொலைதானே செய்யலாம்?- அதற்குமேல்?-’’

“நீ இப்படி பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்குப் புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்...’’

“நல்ல வார்த்தையா-? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?’’

“பின் என்ன செய்யப் போகிறீர்கள்?’’

“என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை_ அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிறவரை அடிபட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்.’’

“அடடா, இப்படியேயா!’’

“வேறு வழி என்ன இருக்கிறது?’’

என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை.

“என்ன? பதில் இல்லை?’’ என்று அவள் சிரித்தாள்.

“நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?’’ என்று திடீரென்று கேட்டேன்.

“கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே, சில மாதங்களுக்குப் பிறகு...?’’

“என்ன சாவித்திரி...’’

“அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும் போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஓய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புதுமுகத்தைப் பார்ப்பீர்கள்...’’

“நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்போது நானும் பேசலாமா?’’

“தாராளமாக’’

“என்னைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது.’’

“அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்ற உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு அழகு கொடுக்காது...’’

“நீ எப்படி அந்த மாதிரி பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?’’

“எப்படியா? என் புருஷனைப் போல என்னிடம் பல்லைக் காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல; கிழவியல்ல; நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்கிறேன்... மிருக இச்சைக்குப் பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?’’

“சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?’’

“எது சுகம்? நகை போட்டுக் கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப் பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர். புடவை, ரவிக்கை_ நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி, சரீர சுகம்; நான் ஒரு நாளும் அடையவில்லை இதுவரையில்.’’

“அதாவது...’’

“என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக் கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.’’

“பின் எதைத்தான் சுகம் என்கிறாய்?’’

“நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும்கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலும் என்னை என்ன சொல்லச் சொல்லுகிறீர்கள்?’’

“உன் புருஷன் ஏன்...?’’

“என் புருஷனுக்கு என் சரீரம் சலித்து போய்விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.’’

“சாவித்திரி! தைரியமாக ஒன்று செய்யலாமே.’’

“நான் எதையும் செய்வேன்; ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம், அவ்வளவுதான்.’’

உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்துப் பார்க்கிறேன்.

“வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கி விட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்கு என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.’’

“எது சொன்னாலும்...’’

“ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.’’

நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.

“நான் போய் படுத்துக் கொள்ளட்டுமா.’’

“தூக்கம் வருகிறதா?’’

“தூக்கமா? இப்பொழுது இல்லை.’’

“பின் சற்றுதான் இரேன்.’’

“உங்கள் தூக்கமும் கெடவா?’’

“சாவித்திரி...’’

“நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது.”

“நிஜமா!’’ என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

“பொய் சொன்னால்தான் நீ உடனே...’’

“அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்!’’

“சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.’’
“அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக்கட்டும், என் கட்டை சாய்ந்த பிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.’’

“ஏன் அப்படி சொல்லுகிறாய்?’’

“இல்லை, இனிமேல் இந்தச் சரீரம் என் சோகத்தை தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கே ஒரு திருப்தி ஏற்படுகிறது.’’

“நான் சொல்லவில்லையா?-’’ என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக் கொண்டேன். அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் சாய்ந்து கொண்டாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததைப் பூசி, மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.

மெல்ல அவளை படுக்கையில் படுக்க வைத்தேன், என் படுக்கையில்! அப்பொழுதும், அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகசியங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின. இதழ்கள் ஓய்ந்து போனது போல பிரித்தபடியே கிடந்தன.

திடீரென்று “அம்மா! போதுமடி!’’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

“சாவித்திரி, என்னம்மா?’’ என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக் கொண்டேன்.

“போதும்.’’

“சாவித்திரி விளக்கு...’’

அவள் திடீர் என்று எழுந்து உட்கார்ந்தாள்.

“ஆமாம். விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் இந்த வெளிச்சம் போதும்!’’ என்று எழுந்து நின்றாள்.

“நீ சொல்லுவது அர்த்தமாகவில்லை சாவித்திரி.’’

“இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக் கொள்ளுங்கள்.’’

“ஏன்... ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்.’’

“ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக்கூடாது. ஆபத்து’’ என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டு சிறிதும் தயங்காமல் உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.’’

சட்டென்று என் உள்ளத்திலும் எரிந்த விளக்கு அணைந்தது.

`போதும்.’

போதும்__எது போதும் என்றாள். தன் வாழ்க்கையையா? துக்கமா? தன் அழகா, என் ஆறுதலா அல்லது இந்தச் சிறிது வெளிச்சமா?’ என்று முடிகிறது கதை.

இதுதான், இவைதான் கு.ப. ராஜகோபாலன் சிறப்பு.

ஆற்றாமை

Labels: ,

கு.ப.ரா (1943)

‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள்.
‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா.

‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’

momentsweremember500

அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான்.

‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள்.

சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் போனாள்.

அறை சற்று தூரத்திலிருந்தபோதிலும் கொஞ்சம் சாதாரணமாகப் பேசினால் காதில் விழாத தூரத்தில் இல்லை. இளம் தம்பதிகளுக்கு அக்கம் பக்கம் ஞாபகம் சில சமயங்களில் இருக்கிறதே இல்லையல்லவா?

‘போங்கள்; இதென்ன விளையாட்டு. யாராவது வரப் போகிறார்கள்!’ என்று கமலா மகிழ்ச்சியுடன் சொன்னது அரை குறையாக சாவித்திரி காதில் பட்டது. அந்த அறையில் பொங்கிய இன்பம் ஏறிய காற்று சாவித்திரியிடம் வந்தபொழுது அவள் மூச்சு திணறிற்று. வேதனை உள்ளத்தையும், உடலையும் ஏதோ செய்ய, பெருமூச்சு விட்டுக்கொண்டு குப்புறப்படுத்துக்கொண்டாள்.

சாவித்திரியின் புருஷன் வடக்கே எங்கோ மிலிடரி சர்வீஸில் இருந்தான். சாஸ்திரத்துக்காக சாந்தி முகூர்த்தம் நடந்த மூன்று நாள் இருந்துட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான். வருஷம் இரண்டாயிற்று. கடிதங்கள் வந்தன. ஆள் வரக்காணோம்.

சாந்திமுகூர்த்தம் ஆகாமல் வைத்திருந்தால் நாலுபேர் ஏதாவது சொல்லுவார்கள் அல்லவா? அதற்காக சம்பந்திகள் இருவரும் சேர்ந்து முகூர்த்தத்தை நடத்திவிட்டார்கள். பிறகு பெண்ணை விட்டுவிட்டுப் பையன் எவ்வளவுக் காலம் இருந்தாலும் பாதகமில்லை. நாலு பேர் பிறகு வாயைத் திறக்கமாட்டார்கள்.

ஆனால், அந்தச் சாந்திமுகூர்த்தம் சாவித்திரிக்கு யமனாகத்தான் பட்டது. உள்ளத்தை அவள் ஒருவிதமாக முன்போலவே அடக்கி ஒடுக்கிவிட்டாள். உடல்தான் ஒடுங்க மறுத்தது. ஒடுங்கின உள்ளத்தையும் தூண்டிவிட்டது. அந்த மூன்று நாள் அனுபவித்த ஸ்பரிச சுகத்தை அதனால் மறக்க முடியவில்லை. வாய்விட்டு அலறிற்று.

சாவித்திரி நல்ல சரீரக்கட்டு படைத்த யுவதி. இளமைச் செருக்கு அவள் உடலில் மதாரித்து நின்றது. அதன் இடைவிடாத வேட்கையை அவளால் சகிக்கமுடியவில்லை.

‘இந்த கமலாவுக்கு எவ்வளவு கொழுப்பு! அகமுடையான் அருகில் இருந்தால் இப்படியெல்லாமா குதிக்கச் சொல்லும்? என்னிடம் வந்து என்ன பீத்திக்கொள்வது வேண்டியிருக்கிறது? நான் கிடக்கிறேன் வாழாவெட்டி போல. என்னிடம் வந்து என்ன கும்மாளம்! இல்லை. வேண்டுமென்றுதான். நான் பார்த்து வேதனைப்பட வேண்டும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கிறாள் போலிருக்கிறது! சதா இவள் அகமுடையான் சொன்னது என்ன பிரதாபம்! இவள்தான் அகமுடையானைப் படைத்தவளோ?... ஏன் தலைகீழா நிற்கமாட்டாள். உடனொத்தவள் நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே என்று அவளுக்குப் பெருமை! நான் நொந்துகிடக்கிறேன், நொந்துபோயிருப்பேன் என்று கொஞ்சமாவது அவளுக்குத் தோன்றினால் _ எப்படித் தோன்றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு.’

சாவித்திரி பொருமிக்கொண்டே படுத்திருந்தாள்.

‘ஏண்டி, ஏந்து குழாய் ஜலம் எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்படாதோ, இந்தா காபி!’ என்று அவள் தாயார் வந்தாள்.

‘எல்லாம் ஆகட்டும். அதற்குத்தானே பெத்தே என்னை. செய்கிறேன். போ!’

‘இதோ இருக்கு காபி. நான் அந்த தெருவுக்குப் போயிட்டு வரேன். ராத்திரிக்கு வரமுடியாதோ என்னவோ...’ ‘நீ வந்து இங்கே என்ன செய்யப்போறே. உங்கண்ணா ஆத்துலேயே இருந்துட்டுவா!’

‘ராத்திரி ஜாக்கிரதையா கதவைத் தாப்பா போட்டுண்டு...’

‘ஆகட்டும், ஆகட்டும் போ!’

அவள் தாயார் நார்மடிப் புடவையைச் சரிபடுத்திக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டு அந்தத் தெருவுக்குப் புறப்பட்டுப் போனாள். சாவித்திரியின் பக்கத்திலிருந்த காபியின் சூடு ஆறிவிட்டது. சாவித்திரியின் உள்ளத்திலிருந்த சூடு ஆறவில்லை.

புருஷன் ஆபீஸ் போனதும் கமலா வந்தாள். ‘அம்மாமி காபி சாப்பிடல்லயா?’

சாவித்திரி அவளை அசூயையுடன் பார்த்துக்கொண்டு ‘ஆறிப் போய்விட்டது, சாப்பிடவில்லை!’ என்றாள்.

‘நான் தரட்டுமா? அவருக்குச் சாயந்திரத்திற்குப் பிளாஸ்கில் போட்டு வைத்திருக்கிறேன். தரேனே, பிறகு போட்டால் போச்சு!’

‘வேண்டாம், எனக்கு வேண்டியிருக்கவில்லை. நெஞ்சைக் கரிக்கிறது.’

‘இன்னிக்கி சினிமாவுக்குப் போவோமான்னேன், நாளைக்கு ஆகட்டும்னார். நீங்களும் வர்ரேளா அம்மாமி?’

‘நன்னாயிருக்கு, நீங்க இரண்டுபேரும் தமாஷா போகிறபோது நான் நடுவில்...’

‘போங்க அம்மாமி!’ என்று சந்தோஷத்துடன் கூறினாள் கமலா. சாவித்திரிக்குக் கமலாவின் பூரிப்பு விஷமாக இருந்தது.

‘என்ன அம்மாமி, உடம்பு ஒரு மாதிரி இருக்கேளே?’

‘எனக்கென்ன கேடு, ஒன்றுமில்லை.’

‘கருகிய மொட்டு’ என்று ஒÊரு நாவல் கொண்டு வந்திருக்கிறார். படிக்கலாமா?’ என்று சொல்லி, கமலா எழுந்துபோய் புத்தகத்துடன் வந்து உட்கார்ந்தாள்.

மேல் அட்டையில் சித்திரம் ஒன்று. அதை கமலா வெட்கத்துடனும் சிரிப்புடனும் சாவித்திரிக்குக் காட்டினாள்.

ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்து ஆழ்ந்து யோசனையிலிருக்கிறான். கையிலிருந்த புத்தகம் கீழே விழுந்து கிடக்கிறது. பின்னால் மனைவி வந்து புன்னகையுடன் நிற்கிறாள். அவனுக்குத் தெரியாமல்.

‘இதற்கு என்ன அர்த்தம் அம்மாமி?’ என்று கமலா கேட்டாள்.

‘புருஷன் ஏதோ கவலைப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். தருணம் தெரியாமல் அசட்டுமனைவி சிரித்துக்கொண்டு வந்து நிற்கிறாள்போல் இருக்கிறது.’

கமலாவின் புன்னகை மறைந்துவிட்டது.

‘அப்படியா இருக்கும்?’

‘வேறென்ன இருக்கப்போகிறது?’ என்று சாவித்திரி சிரித்துக்கொண்டே குரூரமாகச் சொன்னாள்.

‘இருக்காது, அம்மாமி!’

‘பின் எப்படி இருக்கும்?’

‘வந்து, வந்து புருஷன் அவளை, நினைத்துக்கொண்டே படிக்கிறான். மெய்மறதியில் புத்தகம் கீழே விழுகிறது. அவள் வெகு நேரம் வரவில்லை. கடைசியில்...’

‘அதுதான் இருக்கவே இருக்கே!’

‘படிக்கலாமா?’

‘படியேன்.’

கமலா படித்தாள் வெகுநேரம். சாவித்திரி காதில் எவ்வளவு விழுந்ததோ?

‘ஐயோ, நாழியாகிவிட்டதே! படித்துக்கொண்டே இருந்துவிட்டேன். போகிறேன்!’ என்று கமலா மாலை ஐந்து மணிக்கு எழுந்து தன் வீட்டிற்குப் போனாள்.

சாவித்திரி எழுந்திருக்கவில்லை. வீடு கூட்டுகிறவள் வந்தாள். ‘நான் கூட்டிக்கொள்கிறேன் போ!’

பூக்காரி வந்தாள்.

‘இன்னிக்கிப் பூ வாண்டாம்!’

இருட்டிவிட்டது. இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டது. ராகவனும் கமலாவும் கொட்டம் அடித்தது அவளுக்குச் சகிக்கவே இல்லை. வீட்டில் அயலார் இருப்பதுகூட அவர்களுக்கு நினைவில்லையா? ஆத்திரத்துடன் எழுந்து மின்சாரவிளக்கைப் போட்டுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

‘இலை போட்டுவிட்டேனே வாருங்களேன்!’ என்றால் கமலா.

‘அதற்குள்ளா... இப்பவே சாப்பிட்டுவிட்டு...’

‘எனக்குத் தூக்கம் வருகிறது.’

‘தூக்கம் வருகிறதா!’ என்று ராகவன் சிரித்தான். சாவித்திரி காதில் எல்லாம் விழுந்தது.

கமலா இலையை வாசலில் கொண்டு போட்டுவிட்டு கம்பிக் கதவையும், ரேழிக் கதவையும் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு திரும்பினவள் எதிர்த்த உள்ளில் சாவித்திரி மயங்கி மயங்கிப் படுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, ‘அம்மாமி, சாப்பிட்டாச்சா?’ என்றாள்.

‘ஆச்சு!’

கமலா உள்ளே போய்த் தாளிட்டுக் கொண்டாள்.

கலியாணக்கூடம் போட்ட வீடு. இரண்டு பக்கங்களிலும் குடி. இரண்டு பக்கக்கூடத்து உள்ளுகளுக்கும், ரேழியிலும் கதவுகள்.

இரவு எட்டே மணிதான் இருக்கும். ஊர் ஓசைகூட அடங்கவில்லை. கமலாவின் பக்கத்தில் ஓசை அடங்கிவிட்டது. சாவித்திரிதான் எழுந்திருக்கவே இல்லை.

‘ராகவன்!’ என்று வாசலில் மெதுவான குரல் கேட்டது.

முதலில் சாவித்திரி வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள். பிறகு Êஏதோ நினைத்துக்கொண்டு எழுந்து மெதுவாக ரேழிக்கதவைத் திறந்துகொண்டு திண்ணையண்டை போனாள்.

வாசலில் ராகவன் வயதுள்ள வாலிபன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

‘ராகவன் இருக்கிறாரா?’

‘இருக்கார்!’ என்று சாவித்திரி கம்பிக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே திரும்பினாள்.

வாலிபன் ரேழிக்கு வந்து தயங்கினான்.

சாவித்திரி சற்று மெதுவான குரலில் ‘அந்த ரேழிக்கதவைத் தட்டுங்கள்!’ என்றாள் ஜாடையுடன்.

வாலிபன் திரும்பவும் தயங்கினான்.

‘வெறுமனே தட்டுங்கள், திறப்பார்!’ என்றாள். ஒருவிதமான குரூர ஆனந்தத்துடன் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு, ஆவலுடன் நடைபெற போவதை எதிர்பார்த்தாள்.

வாலிபன் ‘ராகவன்’ என்று கதவைத் தட்டினான்.

சிறிது நேரங்கழித்து ‘யார்?’ என்ற உறுமல் கேட்டது.

‘நான்தான்!’

‘நான்தான் என்றால்?’ என்று சீறிக்கொண்டு ராகவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே இருந்தபடியே எட்டிப்பார்த்தான்.

‘நான்தான் சீனு, மதுரை.’

‘ஓ, வாருங்கள்!’ என்று ராகவன் பலதரப்பட்ட உள்ளக்கலவரத்தில் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு ரேழியில் நுழைந்து சீனுவை வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான்.

ஒரு வினாடி சீனுவின் கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசற்படிக்கு எதிரே கமலா ஆடை நெகிழ்ந்த நிலையில் படுத்திருந்தவள் ராகவன் உடம்பு கதவு திறந்த இடத்திலிருந்து விலகினதும் சடாரென்று எழுந்து கட்டிலை விட்டுக்குதித்து சுவரோரம் ஓடினாள்.

சாவித்திரி இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்தாள். கமலா தலையில் கட்டுப்பூ தொங்கிக்கொண்டிருந்தது. அறையிலிருந்து மல்லிகை வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கம்மென்று வெளியேறின.

அந்தரங்கம் திறந்துகிடந்தது போன்ற அந்த அறையை அதற்கு மேல் அவளால் பார்க்கமுடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது. சத்தப்படாமல் அறைக்கதவைச் சாத்திக்கொண்டாள்.

திடீரென்று ஒரு வருத்தமும், பச்சாதாபமும் தோன்றி அவளைத் தாக்கின.

‘என்ன காரியம் செய்தேன்!’ என்ன பாவம் செய்தோ, யாரைப் பிரித்துவைத்தோ இப்பொழுது இப்படித் தனியாகக் கிடந்து தவிக்கிறேன். ஐயோ...’

அளவற்ற ஆவலில் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு கலந்த இரண்டு உள்ளங்கள் ஒரு கணத்தில் சிதறி தூரத்தில் விழுந்தன. கமலா கண்ணீர் பெருகாத தோஷமாக, மகாகோபத்துடன் ஆடையைச் சீர்திருத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.

சீனுவை அனுப்பிவிட்டு ராகவன் உள்ளே வந்தான்.

மெதுவாகக் கட்டிலில் ஏறிக் கமலாவைத் தொட்டான். கமலா அவன் கையைப் பிடுங்கி உதறி எறிந்தாள்.

‘இன்னொரு கதவையும் நன்றாகத் திறந்து விடுகிறதுதானே!’

‘ஓ, ஞாபகமில்லை கமலா!’

‘ஞாபகம் ஏன் இருக்கும்?’

‘சின்ன விஷயத்துக்கு ஏன் பிரமாதப் படுத்துகிறாய்?’

‘சின்ன விஷயமா? என் மானம் போய்விட்டது.’

ராகவனுக்கு அதுவும் இதுவுமாக எரிச்சல் கிளம்பிற்று.

‘எவ்வளவு போய்விட்டது?’ என்று சீறினான்.

‘போதும் வாயை மூடுங்கள். அண்டை அயல் இருக்கிறது!’ என்று அவளும் சீறினாள்.

சாவித்திரியின் காதில் இதுவும் விழுந்தது. குப்புறப்படுத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

‘பாவியை என்ன செய்தால் என்ன?’ என்று புலம்பினாள்.

கமலா மூக்கைச் சிந்தும் சத்தம் கேட்டது.

‘திருப்திதானா பேயே!’ என்று சாவித்திரி தன்னைத் தானே உரக்கக் கேட்டுக்கொண்டாள்.  

கு.ப.ரா

Labels: ,

கு.ப.ரா 1902 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார். திருச்சி நேஷனல் காலேஜில் `இண்டர் மீடியட்’ படித்துக்கொண்டிருந்தபோது clip_image001[13]அவரது தந்தை ஏ. பட்டாபிராமய்யர் இறந்துவிட, தாய் ஜானகி அம்மாளுடன் கும்பகோணத்திலிருந்த சொந்தமான மிகப் பழைய வீட்டிற்கு வந்தார். அங்கு, கும்பகோணத்தில் கு.ப. ராஜகோபாலனுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கவிஞர் ந. பிச்சமூர்த்தி. பிறகு கல்லூரியிலும், வாழ்விலும், ரஸனையிலும், இலக்கியத்திலும் தொடர்ந்து 20 ஆண்டு காலம் _கு.ப.ரா.வின் மரணம் வரை_ `கும்பகோணம் இரட்டையர்கள்’ என்று மற்றவர்கள் கூறும்படி இணைபிரியாதவர்களாய் இவர்கள் இருவரும் இருந்தனர்.

  1926ஆம் ஆண்டு கு.ப.ரா, அம்மணி அம்மாளை மணந்தார். மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா ஆபீஸில் அவருக்கு வேலை கிடைத்தது. விரைவில் `ரிவென்யூ இன்ஸ்பெக்டர்’ ஆகப் பதவி உயர்வு பெற்றார். ஆனால், அப்போது திடீரென்று அவருக்கு கண் பார்வை மிகக் குறைந்துவிட்டதால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு 1936ஆம் ஆண்டு தொடங்கி சிறிது காலம் `தமிழ்நாடு’ என்ற தினசரியில் வ.ரா. ஆசிரியராக இருந்தபோது சி.சு. செல்லப்பாவும் கு.ப.ரா.வும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்கள். `தமிழ்நாடு’ தினசரி நின்றுவிட்டதும் கு.ப.ரா. மீண்டும் கும்பகோணம் வந்தார்.

  கும்பகோணத்தில் ஆர். மஹாலிங்கம், என்ற கண் மருத்துவர் செய்த சிகிச்சையால், ஒரளவு கண் பார்வை மீண்டது. உடனே சென்னைக்குத் திரும்பிவந்தார். குடும்பம் கும்பகோணத்தில் இருந்தது. 1937ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்துக்கொண்டார். நண்பர்களின் ஏற்பாட்டின் பேரில் கிடைத்த மொழிபெயர்ப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் சிரமப்பட்டுதான் இக்காலகட்டங்களில் கு.ப.ரா. வாழ்ந்தார். 1939ஆம் ஆண்டு ஜுலை மாதம் வ.ரா. வை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட `பாரத தேவி’ வாரப் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். மற்றொரு துணையாசிரியர் சி.சு. செல்லப்பா. `பாரத தேவி’யில் கு.ப.ரா `பாரத்வாஜன்’, `சத்யம்’, `கரிச்சான்’ ஆகிய புனைபெயர்களில் எழுதினார். `பாரத தேவி’யும் நீடிக்கவில்லை. பிறகு க.சீ.வெங்கட் ரமணி நடத்திய `பாரத மணி’ பத்திரிகையில் சேர்ந்தார்.

  பிறகு இரண்டாவது உலகப் போர் தொடங்கியதும் கு.ப.ரா. மீண்டும் கும்பகோணம் சென்றார். அங்கு `மறுமலர்ச்சி நிலையம்’ என்ற பெயரில் அவருடைய வீட்டுத் திண்ணையிலேயே புத்தக கடை ஒன்றைத் தொடங்கினார். விற்பனைக்காக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை அவருக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்குப் பதிலாக பதிப்பகத்தார் கொடுத்தவை. விற்று காசாக்கிக் கொள்ளவேண்டியது அவர் பொறுப்பு, ஆனால், விற்பனைக்கு பதிலாக புத்தக கடை நூலகமாக மாறிவிட்டது. நண்பர்கள் பலர் வந்து கடையிலேயே படிக்கத் தொடங்கினர். சிலர் எடுத்துக்கொண்டு போய் படித்துவிட்டு திரும்பத் தந்தனர். சில நாட்களுக்குப் பின் கு.ப.ரா. சிரமப்படுவதைக் கண்டு மனம்பொறுக்காத தொண்டர் ஒருவர் புத்தகங்களை விற்றுத் தருவதாக எடுத்துக்கொண்டு போய் தன்கடையில் வைத்துக்கொண்டார்.

  புத்தகக் கடை முயற்சி தோல்வியில் முடிந்தபின் 1943 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து 27 மைல் தொலைவில் உள்ள துறையூர் என்ற சிற்றூரில் இருந்து வெளிவந்த `கிராம ஊழியனில் கௌரவ ஆசிரியராகச் சேர்ந்தார். திருலோக சீதாராமை ஆசிரியராகக்கொண்ட கிராம ஊழியனுக்கு கு.ப.ரா. கும்பகோணத்தில் இருந்தவாறே எழுதினார்.

  கு.ப.ரா.வுக்கு இரண்டு சகோதரிகள். இளைய சகோதரிதான் கு.ப. சேது அம்மாள். மிகச் சிறிய வயதிலேயே கு.ப.சேது அம்மாள் கணவனை இழந்துவிட்டார். இது கு.ப.ராஜகோபலனைச் சங்கடம்கொள்ளச் செய்தது. 1943ஆம் ஆண்டு கு.ப.ரா. முயற்சிக்குப் பின் கு.ப. சேது அம்மாளுக்கு மறுமணம் நடைபெற்றது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு விரைவிலேயே சேது அம்மாள் காலமானார். கு.ப.ராஜகோபாலனுடைய பல கதைகள் சேது அம்மாளின் இளவயது வாழ்க்கையுடன் தொடர்புடையவை.

  கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தின் போதே கு.ப.ரா.வுக்கு இலக்கியத்தின் பேரிலும் எழுத்தின் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை மூல மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காகவே வங்காளி கற்றுக்கொண்டார். கல்லூரியில் பிச்ச மூர்த்தி மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து `ஷேக்ஸ்பியர் சங்க’த்தைத் தொடங்கினார். தவறாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் `ஷேக்ஸ்பியர் சங்க’ கூட்டங்களில் கு.ப.ரா. கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதி வாசித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் பிச்சமூர்த்தியுடன் சேர்ந்து கும்பகோணத்தில் `பாரதி சங்கம்’ நிறுவினார். இக்காலகட்டத்தில் சுதந்திரச் சங்கு, மணிக்கொடி இரண்டு பத்திரிகைகளிலும் தொடர்ந்து கு.ப.ரா.வின் கதைகள், கவிதைகள் வெளிவந்தன. 1938ஆம் ஆண்டு நவயுகப் பிரசுராலயத்திற்காக ஸ்டீவன்ஸனின் ¡ `Dr. Jekyll and Mr. Hyde’ நாவலை இரட்டை மனிதன் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். பிறகு துர்கேச நந்தினி, தேவி சௌதுராணி என்ற இரண்டு வங்காளி நாவல்களை மொழிபெயர்த்தார்.

  1934ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டுவரை _ இடைப்பட்ட இந்தப் பத்து வருடங்களில், புத்தகங்களாக இப்போது கிடைக்கும்படி, கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியிருக்கிறார். புத்தக உருப் பெறாதவை அனேகம். அவருடைய கட்டுரைகள் எவையும் புத்தகமாகத் தொகுக்கப்படவே இல்லை. 1943க்கு முன்பே முடிக்கப்பட்ட டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாறு 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்லயன்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

  செக்ஸ் விஷயங்களை எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டு கடைசிக் காலம் வரை கு.ப.ரா. மீது சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தது. `கனகாம்பரம்’ என்கிற சிறுகதை வெளிவந்தபோது `பழகுகிற நண்பனின் மனைவி காமக் கிளர்ச்சிகளை ஏற்படுத்தினால் அதை எழுதலாமா?’ என்கிறவிதமாய் சர்ச்சை உருவானது. ராஜாஜி கு.ப.ரா பெயரைக் குறிப்பிடாமல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று எழுதினார்.

  `தாய்’ சிறுகதையைப் பத்திரிகைகள் பிரசுரம் செய்ய மறுத்துவிட்டன. 1943ஆம் ஆண்டு இன்னொரு சிறுகதையை இதே காரணம் சொல்லி கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் பிரசுரிக்க மறுத்துவிட்டார். கு.ப.ரா. சொன்னார்: ``ஸெக்ஸ் என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அது மானிட உணர்ச்சியின் அடிப்படை அம்சம்; மனக்கடலின் ஆழத்தில் _ அடித்தளத்தில் பொதிந்து கிடக்கும் முதல் உணர்ச்சி’’.

குறிப்பிட்டபடி கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த விஷயத்தை தவிர்த்து அவர் கதைகளையோ கவிதைகளையோ எழுதவில்லை என்றும்கூட சொல்லலாம். ஆண் பெண் உறவுகளை, குறிப்பாக பால் உணர்ச்சிகளை அப்பட்டமாகவும் உரக்கவும் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக ஆகிவிட்டது. ஆனால், அதை சூட்சுமமாகவும் கலையுணர்ச்சியுடனும், ஒரு சிறுகதையில் அதன் கட்டுக்கோப்பும் செறிவும் குலையாமல், முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற லாவகம் கு.ப.ரா.வுக்கு மிகவும்  சிறப்பாகக் கூடிவந்திருப்பதை இன்றும் படிக்கும் போது உணரமுடிகிறது. கு.ப. ராஜகோபாலனிடம் கூடிவந்த அந்த மென்மையும் கலை நேர்த்தியும், இன்று பக்கம்பக்கமாக பச்சையாக எழுதுவதாலேயே தன்னை ஒரு பெரிய புரட்சிகரமான எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்கள் உணராத ஒரு விஷயம். ஆபாசமாகவோ அல்லது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையிலோ எழுதிவிட்டு, துணிச்சலாக எழுதிவிட்டதாகவும் அவை பலத்த சர்ச்சைக்கு இடமாகி சூழலை மாற்றிவிடப் போவதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவர்களிடம் இருக்கும் தன்மைகள் எப்போதும் கு.ப.ரா.விடம் காணப்பட்டதில்லை. சர்ச்சைகளை உருவாக்கவோ, புரட்சிகளை ஏற்படுத்தவோ கு.ப.ரா. எழுதவில்லை. அவர் வாழ்க்கையிலும் அநுபவத்திலும் கண்டவற்றை எழுதினார். புரட்சி பேசும் அந்தத் தமிழ் எழுத்தாளர்கள் பாடம் பெற்றுக் கொள்ளவேண்டிய நிலையில்தான் இன்றும் கு.ப.ரா இருக்கிறார் என்பதுதான் காலஓட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல் முன்னேறி வரும் கு.ப.ரா.வின் முக்கியத்துவம்.

  1944ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சாவூரில் கலாமோஹினி ஆசிரியரான `சாலிவாஹனன்’ திருமணத்திற்குச் சென்று திரும்பிய வழியில் கு.ப.ரா.வுக்கு கால்களில் வலி எடுக்க ஆரம்பித்தது. கால்கள் வீக்கம் ஏற்பட்டு எரிச்சலுடன் தொல்லை தந்தபோதும் இரண்டு மூன்று நாட்களாக மருத்துவரிடம் போகமலே வீட்டிற்குள்ளேயே சிரமப்பட்டார். கண் மருத்துவர் ஆர்.மஹாலிங்கம் தற்செயலாக கு.ப.ரா.வை பார்க்க வந்தவர், கால் வீக்கத்தின் தீவிரம் உணர்ந்து காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு காங்கரின் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. `காலின் சதைகள் உயிரற்றுவிட்டன. உடனே முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களையும் எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து’ என்று மருத்துவர்கள் கூறினர். தி.ஜானகிராமனும் கரிச்சான் குஞ்சுவும் அப்போது மருத்துவமனையில் கு.ப.ரா. உடனிருந்தனர். இருவரும் மிகவும் கெஞ்சிக் கேட்டும் பிறகு கோபப்பட்டுக் கூறியபோதும் கு.ப.ரா. `ஆப்ரேஷன்’_க்கு மறுத்துவிட்டார். அவர் நனைந்த கண்களுடன் தி. ஜானகிராமனிடம் சொன்னார்: ``Let me die a peaceful death’’.

  42வது வயதில் 1944ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் காரிலேயே கு.ப.ராஜகோபாலன் உயிர் பிரிந்துவிட்டது.

_ தளவாய் சுந்தரம்

கு. அழகிரிசாமி

Labels: ,

குருசாமி ஆச்சாரி அழகிரிசாமி என்கிற கு. அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் இடைச்செவல் என்கிற கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பிறந்தார். வீட்டில் அழகிரிசாமியை மற்றவர்கள், செல்லையா என்று அழைத்தனர். 1943ஆம் ஆண்டுமுதல் கு. அழகிரிசாமி சிறிது clip_image002[4]காலம் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சுரண்டை என்ற ஊரில் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில்
வேலை பார்த்தார். பின்னர் சிறிது காலம் பத்திரிகையாளராக பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு ‘அழகிரிசாமி கதைகள்’ வெளிவந்தது. இதே வருடத்தில் மலேஷியா ‘தமிழ்நேசன்’ பத்திரிகையில் துணையாசிரியராக அழகிரிசாமி சேர்ந்தார். பின்னர் 1970ல் ‘சோவியத் நாடு’ பத்திரிகையின் துணையாசிரியரானார். சோவியத் நாடு பத்திரிகையில் சேர்ந்த அதே வருடம் ஜூன் 5ஆம் தேதி அழகிரிசாமி காலமானார். அழகிரிசாமியின் மறைவுக்குப் பின்னர் 1971ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது அவருக்கு வழங்கப்பட்டது. கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தையும், அருணாசலக்கவிராயர் காவடிச்சிந்தையும் கு.அழகிரிசாமி பதிப்பித்துள்ளார். சங்கீதத்தில் அழகிரிசாமிக்கு அபார ஈடுபாடு இருந்தது. Ðல சங்கீத வித்வான்கள் அழகிரிசாமியின் நண்பர்கள். “எனக்கு நான்கு விஷயங்கள் முக்கியம். முதலாவது பாரதி, இன்னொன்று கம்பன், அடுத்து ராமாயணக் கதாநாயகன் ராமன். பிறகு தியாகய்யர். இந்த நான்கு பேரையும் பற்றி யாரும் குறைவாகப் பேசினால் அவர் வீட்டில் நான் கை நனைக்க மாட்டேன்” என்று அழகிரிசாமி அடிக்கடி சொல்வாராம். ‘கரிசல் வட்டார இலக்கியவாதிகளுக்கு முன்னத்தி ஏர் பிடித்தவர்’ என்று அழகிரிசாமியை குறிப்பிடுவார்கள்.

குமாரபுரம் ஸ்டேஷன்

Labels: ,

கு. அழகிரிசாமி

குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவுக்கு எந்த ஊரும் கிடையாது. ஆனாலும், ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயரையாவது வைத்துவிடத்தானே வேண்டும்? அந்தக் கணக்கில்தான் குமாரபுரம் என்ற பெயரை வைத்திருக்கிறார்களே ஒழிய, மற்றபடி கிழக்கே ஒரு மைலுக்கு அப்பால் உள்ள குமாரபுரம் என்ற கிராமம் முக்கால் நூற்றாண்டாக ஸ்டேஷனைப் பகிஷ்காரம் செய்துகொண்டுதானிருக்கிறது. தாது வருஷப் பஞ்சத்தின்போது ஜனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரையிலும் ரயில் பாதை போடப்பட்டதாகச் சொல்லுவார்கள். அந்தப் பாதையில் கோவில்பட்டிக்குத் தெற்கே ஏழாவது மைலில் இருக்கிறது இந்த ஸ்டேஷன். சுற்றுக்கிராமவாசிகள் வாழ்நாளில் ஒரு முறையோ, இரு முறையோதான் கோவில், குளம் என்று யாத்திரை கிளம்புவார்கள். பத்து மைல் தூரத்தில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். அதற்குப் போய்ப் பொங்கலிட்டுவிட்டு வருவது வழக்கம். இந்த க்ஷேத்திராடனத்துக்கு ரயிலும் வேண்டாம்; மோட்டாரும் வேண்டாம். பெரும்பாலான சமயங்களில் அவர்கள் போகவேண்டிய ஊர் ஸ்டேஷனை விடவும் அருகில் இருக்கும். நேரே ஊருக்கு நடந்து போகாமல் ஸ்டேஷனுக்கு வந்து யாரும் ரயில் ஏறுவார்களா?

Modern-Art-Paintings-Prints-6

இந்த ஸ்டேஷனின் வரலாற்றில் முதன்முதலாக வந்து இறங்கிய முக்கியஸ்தர் சுப்பராம ஐயர் என்றுதான் சொல்ல வேண்டும்.கோவில்பட்டியிலிருந்து அவர் மூன்றுநாட்களுக்கு முன் வந்திருந்தார். புதிதாகமாற்றுதலாகி வந்திருக்கும் ஸ்டேஷன்மாஸ்டருக்கு அவர் பால்ய நண்பர். சிறிது காலம்வரை பள்ளித்தோழர். சற்று எட்டியஉறவும்கூட. ஸ்டேஷன் மாஸ்டர் தன் நண்பருக்குஇந்தக் காட்டு ஸ்டேஷனில் வரவேற்பு அளித்து விருந்துபசாரம் செய்ய இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடைய பிள்ளைக்கு ஆறாம் ஆண்டு நிறைவுவந்தது. அதை ஒரு சாக்காக வைத்து நண்பரை அழைத்தார். சுப்பராம ஐயரும் அமைதியான சூழ்நிலையில் நண்பரோடு நிம்மதியாகப் பொழுது போக்கலாம் என்று வந்து சேர்ந்தார்.

ஆண்டு நிறைவு வைபவத்துக்கு வந்த ஒரே விருந்தினர் சுப்பராம ஐயர்தான்.
பால்ய நண்பர்கள் இருவரும் தத்தம் வாழ்க்கை வரலாறுகளையும், ஊர்விட்டு ஊர் மாற்றுதலாகிப்போன கதைகளையும், குடும்பச் செய்திகளையும் பற்றி விஸ்தாரமாக இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். கோவில்பட்டியில் வசதிகள் எப்படி என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். குமாரபுரம் ஸ்டேஷனில் எப்படி நாட்களைத் தள்ள முடிகிறது என்று சுப்பராம ஐயர் கேட்டார்... ஒரு நாள் கழித்து.

மறுநாள் ஸ்டேஷன் மாஸ்டர் அடிக்கொரு தடவை தம் வேலையைக் கவனிப்பதற்காக அவரிடம் விடைபெற்றுப் போய்க் கொண்டிருந்தார். முற்பகலில் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத சமயங்களில், அவருடைய பையனோடு உட்கார்ந்து தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார் சுப்பராம ஐயர். பையன்களோடு விளையாடுவதோ பையன்களின் கூட்டுறவால் குதூகலம் அடைவதோ அவருக்கு வழக்கமில்லை. அவருடைய தொழில்தான் அதற்குக் காரணமோ என்னவோ! இருந்தாலும் பேச்சுத்துணைக்கு அங்கே அந்தச் சிறுவன்தானே இருக்கிறான்? அவனோடு ஒரு தினுசாக மத்தியானம்வரை பொழுதைக் கழித்தார். சாப்பாட்டுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் படுத்துத் தூங்கினார். மூன்று மூன்றரைக்கெல்லாம் எழுந்து, தாம் கையோடு கொண்டுவந்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.

பிளாட்பாரத்தில் ஐந்தாறு வேப்ப மரங்கள் இருந்தன. கோடைக்காலமானதால் நன்றாகப் பூத்துத் தரையில் படிக்கணக்கில் பூக்களை உதிர்த்திருந்தன. அடர்த்தியாகத் தளிர்த்திருந்த அந்த மரங்களிலிருந்து குளிர்ந்த காற்று சிறிது மலர் மணத்தோடு ஸ்டேஷனை நோக்கி வீசிக் கொண்டிருந்தது. அதனால் ஸ்டேஷன் கட்டடத்தில் காற்றுவரும் பக்கத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் தெற்கேயிருந்து வந்து ஒரு எக்ஸ்பிரஸ் வண்டி வழக்கம்போல் அந்த ஸ்டேஷனில் நிற்காமல் போய்விட்டது. இனி மாலை ஆறு மணிக்குமேல்தான் அங்கே வண்டிகள் வரும். ஆகவே ஸ்டேஷன் மாஸ்டர் நண்பரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். புத்தகத்தை மூடிக் கீழே வைத்த சுப்பராம ஐயர், ‘இந்த ஸ்டேஷனுக்குப் பிரயாணிகளும் வருவதுண்டல்லவா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

“வராமல் என்ன? நேற்றுக்கூட ஒரு பிரயாணி வந்து இறங்கினாரே?” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். சுப்பராம ஐயர் உரக்கச் சிரித்தார்.நேற்று வந்து இறங்கிய பிரயாணி அவரேதான். “இப்படி இன்னும் பத்து ஸ்டேஷன்கள் இருந்தால் போதும், இரயில்வே பட்ஜெட்டில் வருஷம் தவறினாலும் துண்டு விழுவது தவறாது” என்று அவரோகணச் சிரிப்போடு சொல்லிப் பேச்சையும் சிரிப்பையும் ஏககாலத்தில் நிறுத்தினார் சுப்பராம ஐயர்.

“அப்படியும் சொல்லிவிடுவதற்கில்லை. நாளை திங்கட்கிழமை. கோவில்பட்டியில்
சந்தை. பத்து டிக்கெட்டுகளுக்காவது ஆள் வந்து சேரும்.”

“அப்படியானால் நாளை ஸ்டேஷனுக்கு இரண்டு ரூபாய் வரும்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்!” இருவரும் சிரித்தார்கள். அப்போது போர்ட்டர் கருப்பையா வந்து ஒரு மூலையில் நின்று, இவர்கள் பேசுவதை ரஸித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“எதற்காகத்தான் இந்த ஸ்டேஷனைக் கட்டிப் போட்டானோ? இது இல்லையென்று எவன் அழுதான்?”

“இந்த ஸ்டேஷன் சுற்றுக் கிராமவாசிகளுக்கு வேறொரு வகையில் மிகவும்
பிரயோஜனப்பட்டு வருகிறது. இப்படியும் ஸ்டேஷனால் ஒரு நன்மை இருக்கமுடியும் என்பதை இங்கு மாற்றுதலாகி வந்த பிறகுதான் பார்த்தேன்.”

சுப்பராம ஐயர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ஸ்டேஷன்மாஸ்டர் தொடர்ந்து சொன்னார்.

“இது கோடை காலமாக இருப்பதனால்தான் சுற்றிலும் உள்ள இந்தப் புன்செய் நிலங்கள் இப்படிப் பயிர் பச்சையில்லாமல் வறண்டு கிடக்கின்றன. Ñற்ற சமயங்களில் இப்படி இராது. நவதானியங்களும் விளையும் செழுமையான பூமிதான். நிலத்தில் வேலை செய்பவர்கள் குடிதண்ணீர் பிடிப்பதற்கு மண் கலயங்களோடு இங்கே வருவார்கள். இருபது கலயம் தண்ணீராவது தினமும் தேவைப்படும். அந்த வகையில் இந்த ஸ்டேஷன் பிரயோஜனப்பட்டு வருகிறது.”

“அப்படியானால் தண்ணீர்ப் பந்தல் கட்ட வேண்டிய இடத்தில் ஸ்டேஷனைக் கட்டியிருக்கிறான் என்று சொல்லுங்கள்!”

ஸ்டேஷன் மாஸ்டர் இப்போது தமாஷை நிறுத்தி விட்டு மனப்பூர்வமாகவே பேச ஆரம்பித்தார்.

“இப்படித்தான் ஒன்று இருக்க வேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொண்டுபோய்க் கட்டுகிறான் மனிதன். ஒரு காரியத்துக்கென்று உண்டாக்கப்பட்டது, மற்றொரு காரியத்துக்குப் பிரயோஜனப்படுகிறது. நியாயமாகச்
செய்த செலவு தண்டச்செலவாக மாறிக்கொண்டு வருகிறது. உலகமே அப்படி
இருக்கும்போது இந்தக் குமாரபுரம் ஸ்டேஷனை மட்டும் பழித்துப் பேசுவானேன்?”
சுப்பராம ஐயர் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டு, ‘உலகத்தையே உங்கள் ஸ்டேஷன் ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள்! ஆறு மாதங்களுக்குள் இந்தக் கல்
கட்டடத்தின்மேல் உங்களுக்கு இவ்வளவு பாசம் ஏற்பட்டுவிட்டது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது’ என்றார்.

ஸ்டேஷன் மாஸ்டர் சற்று ஆவேசமாகவே பேச ஆரம்பித்தார்:

“கோவில்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டியிருக்கிறானே, எதற்காகக் கட்டியிருக்கிறான்? சொல்லுங்கள். பார்ப்போம்!”

“எதற்காகப் பள்ளிக்கூடம் கட்டுவான்? நூறு குழந்தைகள் படிப்பதற்காகத்தான் கட்டுவான்!”

“சரி, ஒப்புக்கொள்ளுகிறேன்! நூறு குழந்தைகளும் எதற்காகப் படிக்கிறார்கள்?” என்று கேட்டார் ஸ்டேஷன்மாஸ்டர்.

“இப்படியெல்லாம் கேள்வி போடுகிறீர்கள்?”

“காரியமாகத்தான் உங்களைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.”

“....”

“பிள்ளைகள் அறிவு வளர்ச்சிக்காகப் படிக்கிறார்கள் என்றுதானே
சொல்கிறீர்கள்?”

“நீங்கள் வேறு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறீர்கள்?”

“எந்தப் பைத்தியக்காரனும் அறிவு வளர்ச்சிக்காகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. நீங்களும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம்? படிக்காதவனுக்கும் உத்தியோகம் உண்டு என்று சட்டம் செய்யட்டும், எவனாவது மழைக்குக்கூடப் பள்ளிக்கூடத்தில் வந்து ஒதுங்குகிறானா என்று பார்க்கிறேன்”
என்று சவால் விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

சுப்பராம ஐயர் சிரிக்கும்போது போர்ட்டரும் சேர்ந்து சிரித்தான். அவனை வைத்துக்கொண்டு தமாஷ் பேச்சுப் பேசுவது மரியாதை இல்லை என்று நினைத்தோ என்னவோ, சுப்பராம ஐயர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். “என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று கிண்டினார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“உங்களிடத்தில் பேசி ஜெயிக்கவா? குமாரபுரம் ஸ்டேஷன் சந்திர சூரியர்கள்
உள்ளவரை நிலைத்திருக்கட்டும், எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை” என்று
சொல்லிவிட்டு ஐயர், ஏதோ ஒரு பக்கத்தைத் தேடியவராய்ப் புத்தகத்தைப்
புரட்டினார்.

ஸ்டேஷன் மாஸ்டர் போர்ட்டரை அழைத்து, “வீட்டுக்குப் போய்க் காபி போடச்
சொல், கருப்பையா” என்று சொல்லி அனுப்பினார்.

“நாமும் போகலாமே” என்றார் ஐயர்.

சிறிது நேரத்தில், இருவரும் எழுந்து ஸ்டேஷனை அடுத்திருந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் எட்டு மணிக்கெல்லாம் வடக்கே போகும் பாஸஞ்சர் வண்டி ஒன்று இருந்தது. அன்று திங்கட்கிழமை. கோவில்பட்டிச் சந்தைக்குச் செல்லும் பிரயாணிகள் நாலைந்து பேர் ஏழு மணிக்கு முன்னதாகவே சாக்குப் பைகள் சகிதம் ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்து வெற்றிலை, பாக்குப் போட்டவண்ணம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஏழேகால் மணிக்கெல்லாம், சுப்பராம ஐயரும் பலகாரம் சாப்பிட்டு வந்து பிளாட்பாரத்தில் உள்ள வேப்பமரங்களில் கீழே கிடக்கும் ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து முந்தியநாள் கையில் வைத்துக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார். ஆனால் நாட்டுப்புறப் பிரயாணிகளின் சுபாவமான உரத்த சம்பாஷணைகளால் அவரால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை. சுகந்தமான வேப்பங்காற்றும் அவருடைய கவனத்தை திருப்பிக் கொண்டிருந்தது. “இந்தப் பாலைவனத்திலும் இப்பேர்பட்ட ஒரு நறுமணம்! இந்த மாதிரியான ஓர் இளங்காற்று!

பார்த்தால் ஒரே கருப்பு மண்ணாக இருக்கிறது. இங்கே இப்படிச் சில மரங்கள்
முளைத்து, இப்படி ஒரு திவ்யமான வாசனையைக் காற்றில் கலந்துகொண்டிருக்கிறது. இந்த வாசனை கூட இந்த மண்ணில்தான்
உற்பத்தியாகியிருக்கிறது.”

அவர் கண்கள் தூரத்தில் தெரியும் கிராமங்களை ஏறிட்டு நோக்கின.

“இந்த ஊர்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும்
இந்த மண்ணை நம்பித்தான் வாழ்கிறார்கள். இந்தக் கரிசல் மண்ணிலிருந்து
மணமும் கிடைக்கிறது; உயிரும் கிடைக்கிறது.”

அவருடைய சிந்தனைகளெல்லாம், அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் வசனங்களைப்போல் சுவை பெற்றிருந்தன. தொடர்ந்து படிப்பது போலவே எதிர்பாராத சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது மேற்கே சுமார் அரைமைல் தூரத்தில் நாலைந்து பேர் அவசரம் அவசரமாக ஸ்டேஷனை நோக்கி ஓட்டமும்  நடையுமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ‘வண்டிக்கு நேரம் இருக்கிறது. இப்படி வேர்க்க விறுவிறுக்க ஓடிவருவானேன்?’ என்று ஐயர் நினைத்தார். அதைவிட அப்பாவித்தனமாக இருந்தது, சிலர் ஒருமணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருந்தது.

“சூதுவாதில்லாத ஜனங்கள்” என்று ஒருமுறை அவர் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார். வேப்பங்காற்று இருக்க இருக்கச் சுகம் ஏற்றிக்கொண்டிருந்தது. இந்தக் காற்றுக்காகவே அங்கே கோடைகாலத்தைக் கழித்துவிடலாம் போல் அவருக்குத் தோன்றியது. இந்த அடிப்படையில், சுற்றிலும் உள்ள மண்ணிலும், புல்லிலும், புல் நடுவே பூத்துக் குலுங்கும் காட்டு மலர்களிலும், சாம்பல் நிறக் கற்றாழைகளிலும் அவருக்கு ஒரு அன்பும் அனுதாபமும் பிறந்தன. சிறிது நேரத்தில் ரயில் ஏறிவிடப் போகிறோம் என்ற நினைப்பில் அந்த அன்பும், அனுதாபமும் சற்று அழுத்தம் பெறவும் செய்தன.

‘மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்! மனிதர்களாகவும் வாழ்கிறார்கள்!’

இரண்டு மூன்று பேர் பிளாட்பாரத்துக்கு வந்து, கைகாட்டி மரத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அங்கேயே ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்றார்கள். எப்போதோ மாடு வாங்கிய செய்தியை ஓர் ஆசாமி கதையாகச் சொல்ல, மற்றவர்கள் கவனமாக “உம்” போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சுப்பராம ஐயர் அவர்கள் பேச்சை உற்றுக்கேட்டார். அந்தப் பேச்சில் உண்மை மட்டுமல்ல, அர்த்தமும் சுவாரஸ்யமுமே இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. அவர்களை அழைத்து வைத்துக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையெல்லாம் ஆதியோடு அந்தமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூட
அவர் ஆசைப்பட்டார்!

அரை மைல் தூரத்தில் வெள்ளை வேஷ்டிகளாகக் காட்சியளித்துக் கொண்டு ஓடிவந்தவர்கள், நான்கு சிறுவர்களும் ஒரு பெரியவருமாக இனம் காட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் வராததுமாக, “டிக்கெட் குடுத்தாச்சா?” என்று கேட்டார் ஓடி வந்த பெரியவர்.

பேசிக்கொண்டு நின்றவர்களில் ஒருவர், “இல்லை, இல்லை” என்றார்.

எல்லோரும் ஒரு மூச்சு விட்டுக்கொண்டார்கள். அந்த நான்கு சிறுவர்களின் கண்களும் ஏககாலத்தில் வேப்பமரத்தடியில் பெஞ்சியில் உட்கார்ந்துகொண்டிருந்த சுப்பராம ஐயரைத்தான் பார்த்தன. பார்த்த மாத்திரத்தில் மிகுந்த மரியாதை கொடுத்து, மூச்சு விடுவதைக்கூடக் கொஞ்சம் மட்டுப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட ஒருவரை அவர்கள் வருஷத்தில் ஒரு தடவை காண்பதே அபூர்வம். அவர்களுடைய பள்ளிக்கூடத்துக்கு எப்போதாவது வரும், பெரிய இன்ஸ்பெக்டரைப் போல் காலில் பூட்ஸ் போட்டுக்கொண்டு குளோஸ் கோட்டும் ஜரிகை அங்கவஸ்திரமுமாகக் காட்சி அளித்தார் ஐயர். தலையில் விழுந்திருந்த வழுக்கையும் அவருடைய கௌரவத்தை உயர்த்திக் காட்டியது. இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்ற சிறுவர்களை ஐயரும் பார்த்துக்கொண்டார். நான்கு சிறுவர்களும் ஏறக்குறைய ஒரே பிராயமுடையவர்களாக இருந்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயது வரையிலும் மதிக்கலாம். ஒவ்வொருவனுடைய கையிலும் இரண்டொரு புத்தகங்களும், சில வெள்ளைக் காகிதங்களும் இருந்தன. சட்டைப்பைகளில் சீவித் தயாராக வைத்திருந்த பென்ஸில்கள், பள்ளி மாணவர்கள் என்பதைச் சொல்லாமலே தெரிவித்தன. சிறுவர்களோ, ஐயரோ பரஸ்பரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்தச் சமயத்தில் கை இறக்கப்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டரும் ஐயரிடம் டிக்கெட்டோடு வந்தார். “இந்த இடம் உங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது போலிருக்கிறதே; இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்!”

“நல்ல காற்று!” என்றார் ஐயர். டிக்கெட்டையும் வாங்கிக் கொண்டார்.

“அப்படியானால் அடுத்த லீவுக்கு வந்துவிடுங்கள். இந்த மாதிரி மூன்று நாட்களில் புறப்பட்டுவிடாமல் சேர்ந்தார்போல், ஒரு பத்து நாட்களாவது இருந்துவிட்டுப் போகலாம்...”

“அப்படியே செய்யலாம்! பத்து நாட்கள்தானே? ராமன் பதினாலு வருஷம் வனவாசம் செய்திருக்கிறபோது நாம் பத்து நாட்கள் இங்கே இருக்க முடியாமலா போய்விடப் போகிறது?”

“அந்த வனவாசத்தில்தான், ராமன் தன் உயிர்த்துணைவர்களையெல்லாம் சம்பாதித்துக் கொண்டான். அவனை ராமனாக்கியதே அந்த வனவாசம்தான்” என்று சொன்னார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“பள்ளிக்கூடத்தைவிட்ட பிறகு புராணங்களையெல்லாம் நன்றாக ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது!” என்று சுப்பராமையர் தமாஷாகச் சொன்னார்.

ஆனாலும் நண்பரின் வார்த்தைகளில் ஏதோ ஒரு சுகமும் உண்மையும் இருப்பதுபோலவே அவருக்குத் தோன்றியது. மேற்கொண்டு சாவகாசமாகப் பேசச் சந்தர்ப்பம் இல்லை. வண்டி வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், காரியார்த்தமாக ஸ்டேஷனுக்குள் போய்விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். சிறுவர்களை நிறுத்திவிட்டுப் பெரியவர் போய் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார். எல்லாப் பிரயாணிகளுமே டிக்கெட்டோடு பிளாட்பாரத்துக்கு வந்து தயாராக நின்றார்கள்.

உரிய காலத்தில் வண்டியும் வந்துவிட்டது. ஐயர் ஏறிய பெட்டியிலேயே கிராமத்துப் பெரியவரும், அவரோடு வந்த சிறுவர்களும் ஒருவருக்குப் பின் ஒருவராக ஏறினார்கள். வண்டியில் நிறையக் காலியிடம் இருந்தது. ஒரு ஜன்னலோரத்தில் போய் உட்கார்ந்தார் ஐயர். அவருக்கு எதிர்வரிசைப் பெஞ்சியில் நிறைய இடம் இருந்தபடியால் சிறுவர்கள் அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். பெரியவர் ஐயருக்கு வலது கைப்பக்கத்தில் வந்து அமர்ந்தார். பெரியவருக்கு வலதுபுறத்தில் பூதாகாரமான ஆகிருதி படைத்த ஒருவர் ஏராளமான சாமான்களோடு உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஜன்னலை ஒட்டி, அவருடைய கனத்தில் முக்கால்வாசியாவது இருக்கும், ஒரு அம்மாள் இருந்தாள். அம்மாளின் பக்கத்திலும் என்னென்னவோ மூட்டை முடிச்சுக்கள், பண்டபாத்திரங்கள்...

குமாரபுரம் ஸ்டேஷனைவிட்டு வண்டி நகர்ந்துவிட்டது.

பையன்கள் இரண்டு பக்கத்து ஜன்னல்கள் வழியாகவும், மரம் மட்டைகள் எதிர்த் திசையில் ஓடத் தொடங்கியதை ரஸித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் தோன்றிய ஆச்சரியத்தையும், அங்கே தாண்டவமாடிய ஆனந்தத்தையும் பார்த்த சுப்பராம ஐயருக்கு, அந்தப் பையன்கள் வாழ்க்கையிலேயே அன்றுதான் முதல்முதலாக ரயில் பிரயாணம் செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றியது. அவர்களோடு ஏதாவது பேசவேண்டுமென்று  ஆசை; அப்படியெல்லாம் அவரைப் போன்றவர்களால் சுலபமாகப் பேசிவிட முடிகிறதா? அவருக்கு அது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

சில நிமிஷங்கள் கழிந்தபின், பையன்களைப் பார்த்து முதலில் பேச ஆரம்பித்தவர், மேற்குப்புற ஜன்னல் பக்கம் இருந்த பூதாகாரமான மனிதர்தான். எடுத்த எடுப்பிலேயே சௌஜன்யமாகப் பேச ஆரம்பித்தார்.

“ஏண்டா, எங்கே பிரயாணம்?” என்று கேட்டார். அவருடைய குரல் அவருடைய உருவத்தைவிடக் கனமாக இருந்தது.

பையன்களுக்கு அதற்குப் பதில் சொல்லவே தோன்றவில்லை.

அவர்கள் சார்பில் பெரியவர்தான் பேசினார்:

“கோவில்பட்டிக்குப் பெரிய பள்ளிக்கூடத்திலே சேரப்போறாக.”

பையன்கள் அவரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய வைரக் கடுக்கன், வைர மோதிரம், தங்கப்பொத்தான்கள், உள்ளங்கை அகலக் கைக்கடிகாரம் இத்தனையும் மாறிமாறி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்தன.

“எந்தக் கிளாஸில் சேரப் போறாங்க?”

“நம்ம ஊரிலே ஆறு பாஸ் பண்ணியிருக்கிறாக. அங்கே ஏழிலே கொண்டுபோய்ச் சேர்க்கணும்.” “எந்த ஊர்ப் பையன்கள்?”

“இடைசெவல் கிராமம்.”

“இடைசெவலா? அங்கே ஏழாம் வகுப்பு இல்லையோ?”

“இல்லை; ‘சர்க்கார் சாங்ஸ்’னுக்கு எழுதிப் போட்டிருக்காக.”

“பாஸ் பண்ணினதுக்குச் சர்டிபிகேட் இருக்கா?”

“இருக்கு,”

“இருந்தாலும் பரீக்ஷை வெச்சுத்தான் சேர்ப்பாங்க,”

“அதுக்காகத்தான் பெரிய வாத்தியாரு ஒரு மாசமா வீட்டிலே வச்சிப் பாடம் சொல்லிக் குடுத்தாரு” என்றார் பெரியவர்.

பூதாகாரமான ஆசாமி ஒரு பையனைப் பார்த்து, “டேய், நான் மூணு கேள்வி கேட்க்கிறேன். நீ பதில் சொல்லிட்டா உன்னை ஏழிலே எடுத்துக்குவான்’ என்றார், உடனடியாக, ‘வாட்டீஸ் யுவர் நேம்?” என்று கேட்டார்.

“மை நேம் இஸ் ஸ்ரீநிவாசன்” என்றான் ஒரு பையன்.

“வாட்டீஸ் யுவர் பாதர் நேம்?” இது அவருடைய அடுத்த கேள்வி.

“மை பாதர் நேம் இஸ் ராமசாமி நாயுடு.”

“வாட் கிளாஸ் யூ பாஸ்?” என்று அவர் மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

அவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவதைப் பார்த்துச் சுப்பராமையர் வாய்க்குள்ளேயே சிரித்தார்.

“ஸிக்ஸ்த் கிளாஸ்” என்று அடக்கமாகப் பதில் சொன்னான் ஸ்ரீநிவாசன்.

“போதும்டா! கெட்டிக்காரப் பையனா இருக்கே. இப்படித்தான் ‘டக் டக்’னு பதில் சொல்லணும். நிச்சயம் நீ ஏழாம் வகுப்புத்தான்.”

பையனுக்கு ஒரே சந்தோஷம்.

பெரியவர், அந்த ஆசாமியைப் பார்த்து, “மத்தப் பையன்களையும் ஏதாவது கேளுங்க” என்று கேட்டுக் கொண்டார்.

“நம்ம இங்கிலீஷ் அவ்வளவுதான்! அதுக்குமேலே எங்க வாத்தியார் கத்துக்குடுக்கல்லே!” என்று சொல்லிவிட்டுத் தொப்பை வயிறு குலுங்கக் ‘கடகட’ வென்று சிரித்தார்.

எதிரே உட்கார்ந்திருந்த அவருடைய மனைவியும் சுப்பராமையரும் இலேசாகச் சிரித்தார்கள்.

“நமக்கு எந்த ஊரோ?” என்று அவரை விசாரித்தார் கிராமத்துப் பெரியவர்.

“திருநெல்வேலி ஜங்ஷனிலே பங்கஜ விலாஸ் காபி கிளப் இருக்கில்லே, அது நம்ப கடைதான். பார்த்திருப்பேளே?”

“திருநெல்வேலிக்குச் சின்னப் பிள்ளையிலே ஒரு தரம் வந்தது தான்...”

“அது நம்ப கடைதான். இந்தப் பையன்களைப்போல் ஆயிரம் பையன்கள் நம்ப கடையிலே சாப்பிட்டுக்கொண்டு படிச்சிருக்கான்கள். ஜங்ஷனிலே நம்ப கடையை விட்டுக் காலேஜ் பையன்கள் வேறே எங்கேயும் போக மாட்டான்கள். இருபத்தஞ்சு வருஷமாய் பார்த்துண்டு வர்ரேன்.”

“நல்ல கடையை விட்டு யார்தான் போவாக!”

அவர் பையன்களைப் பார்த்துத் திரும்பி, “டேய் நீங்களும் காலேஜுக்கு வரப்போ நம்ம கடைக்குத்தாண்டா சாப்பாட்டுக்கு வரணும்....” என்றார்.

பையன்களுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரு நகரவாசி தங்களிடம் இவ்வளவு அன்பாகப் பேசுவது அவர்களுக்கு ராஜோபசாரமாக இருந்தது. “நமக்குப் பிள்ளைகள் எத்தனையோ?” என்று நாட்டுப்புறப் பாங்கில்
விசாரித்தார் பெரியவர்.

“நம்ம கடையிலே சாப்பிட்டவன்களும், சாப்பிடப்போறவன்களும் நம்ம பிள்ளைகள்தான்” என்றார் அவர்.

பெரியவருக்கு அது விளங்கவில்லை. இதை ஹோட்டல்காரர் கவனித்துக்கொண்டார். இருந்தாலும் அவருடைய திகைப்பைப் போக்க முயற்சி
செய்யாமல், “சொந்தப் பிள்ளைகளுக்குப் பணம் வாங்கிண்டா சாப்பாடு போடுவான்னு நீங்க நினைக்கலாம். என்ன செய்யறது! ஹோட்டல்காரன் தர்மம் பண்ணமுடியாது. ஆனால், என்னாலே முடிஞ்ச தர்மத்தைப் பண்ணாமல் இல்லை. எத்தனையோ பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டப் பணம் கொடுத்திருக்கிறேன். அதிலே திருப்பி வாங்கினதும் உண்டு; வாங்காததும் உண்டு” என்று திருப்தியோடு சொன்னார். அடுத்த நிமிஷம் மனைவியைப் பார்த்துப் பலகாரங்களை எடுத்து வைக்கச் சொன்னார்  அவர் சாப்பிடுவதற்குத்தான்.

“ரொம்பத் தூரப் பிரயாணமோ?” என்று கிராமத்துப் பெரியவர் கேட்டார்.

“மதுரை வரைக்கும் போகிறோம். ஒரு கல்யாணம்,”

திரும்பவும் அந்தப் பெரியவர், “நமக்கு எத்தனை குழந்தைகளோ?” என்று
அதே கேள்வியைக் கேட்டார்.

“நான்தான் சொன்னேன், எல்லாக் குழந்தைகளும் நம்ம குழந்தைகள்தான்னு. பெத்தால்தான் குழந்தையா? இந்த நாலு பையன்களும் என் குழந்தைகள்தான். என்ன சொல்றீங்க?”

பெரியவருக்கு ஒருவாறு புரிந்துவிட்டது. அதைக் காட்டிக் கொள்ளும் முறையில், “குழந்தைகள் இல்லை போலிருக்கு! அதுக்கென்ன, ஐயா சொன்னாப்லே
உலகத்திலே உள்ள குழந்தைகளெல்லாம் நம்ம குழந்தைகள்தான். இப்போ பாருங்க, இதிலே ஒருத்தன்தான் என் பேரன். மத்த மூணு பேரும் கூடப் படிக்கிற பையன்கள்தான். எல்லாரையும் சொந்தப் பிள்ளைகள் மாதிரி நான்தான்
கோவில்பட்டிக்குக் கூட்டிக்கிட்டுப் போகிறேன். அந்தக் கடைசிப் பையன் குடும்பம் கொஞ்சம் ஏழைக்குடும்பம். எப்படிப் படிக்கவைக்கிறதுன்னு அவனோட அப்பன் கொஞ்சம் யோசனை பண்ணினான். பையன்களோட பையனாகப் படிக்கட்டும், இப்போ ஆகிற செலவை நான் தர்றேன், பின்னாலே பார்த்துக்கிடலாம்னு நான்தான் தைரியம் சொல்லிக் கூட்டியாரேன். அவனுக்குப் படிப்பிலே அக்கறை. மேலே படிக்கப் போகணும்னு மூனு நாளாச் சாப்பிடாம அழுதிருக்கான்...” என்று  கூறிக்கொண்டே போனார்.

ஹோட்டல் முதலாளியின் மனைவி பலகாரப் பாத்திரத்தைத் திறந்தாள். அதனுள் இருந்த பக்ஷணங்கள் ஒரு கல்யாணத்துக்கே போதும்போல் இருந்தன. இவர் சொல்லாமலே அந்த அம்மாள் ஒரு பெரிய இலையை ஐந்தாறு துண்டுகளாகக் கிழித்துப் பையன்களுக்கும், பெரியவருக்கும் சேர்த்து என்னென்னவோ பலகாரங்கள் எடுத்து வைத்துக்கொடுத்தாள். பையன்கள் வாங்கிக்கொள்ளத் தயங்கினார்கள்.

“டேய்! வயத்துக்கு வஞ்சகம் பண்ணாதீங்கடா. வாங்கிச் சாப்பிடுங்க” என்றார் ஹோட்டல் முதலாளி.

“உம், வாங்கிக்கோங்க” என்று பெரியவரும் சொன்னார்.

பையன்கள் கை நீட்டி அவற்றை வாங்கிக்கொண்டார்கள்.

ஹோட்டல்காரர் மற்றொரு இலையைச் சுப்பராமையர் பக்கம் நீட்டினார். அவர் நாசூக்காக, “இப்போதான் காபி சாப்பிட்டேன். வேண்டாம், நீங்க சாப்பிடுங்கோ” என்று சொல்லிவிட்டுக் கோட்டுப் பையிலிருந்து புத்தகத்தை வெளியே எடுத்தார்.

ஹோட்டல் முதலாளி விடவில்லை. கட்டாயப்படுத்தி ஒரு டம்ளர் காபியைக் குடிக்க வைத்துவிட்டார்.

எல்லோரும் பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, வண்டி நாலாட்டின் புத்தூர் ஸ்டேஷனில் வந்து நின்று, அதையும் விட்டு புறப்பட்டுவிட்டது.

சுப்பராமையர் புத்தகத்தை விரித்துப் படித்துக் கொண்டிருந்தார். பையன்களும் எழுந்து போய்க் கையைக் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தார்கள். சுப்பராமையரின் கையிலிருந்த புத்தகத்தின் பெயரை எழுத்துக் கூட்டி, “அன்னா கரோனினா, லியோ டோல்ஸ்டோய்” என்று மெல்லிய குரலில் வாசித்தான் ஒரு பையன். அது ஐயர் காதில் விழுந்தது.

“டோல்ஸ்டோய்! அதுவும் சரிதான்! சொல்லிக் கொடுக்காத வரையில் யாருக்கும் டோல்ஸ்டோய் தானே ஒழிய டால்ஸ்டாய் எப்படி ஆகமுடியும்” என்று நினைத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் சிறுவர்கள் தங்கள் கையிலிருந்த காகிதங்களை விரித்துப்
படிக்கத் தொடங்கினார்கள்.

“என்னடா அது?” என்று கேட்டார் ஹோட்டல்காரர்.

“எங்கள் ஹெட்மாஸ்டர் எழுதிப்போட்டது?”

“என்ன எழுதிப் போட்டிருக்கிறார்?”

ஒரு பையன் சொன்னான்: “பசுவைப்பற்றி இங்கிலீஷில் ஒரு வியாசம். ‘நரியும் திராக்ஷையும்’ கதை. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்’ கதை. நண்பனுக்கு ஒரு கடிதம்.”

“எல்லாம் இங்கிலீஷில்தான். பெரிய வாத்தியார் ரொம்பப் படிச்சவரு. நல்ல மனுஷன். பெத்த தகப்பன் மாதிரி இவுகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து எழுதிப் போட்டிருக்காரு” என்றார் பெரியவர்.

“நன்னாப் படிங்கடா. இப்படித்தான் ஏதாவது எழுதச் சொல்லிப் பரீட்சை வைப்பாங்க” என்றார் ஹோட்டல்காரர்.

புத்தகத்தைப் படிப்பதுபோல் பாவனை செய்து கொண்டு, பேச்சுக்களைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சுப்பராமையர்.

ஹோட்டல்காரர் காபியைச் சாப்பிட்டுவிட்டு, “பையன்கள் நன்னாப் படிக்கக்கூடிய பையன்கள்னு தோணுது” என்று பெரியவரிடம் சொன்னார்.

“பட்டிக்காட்டுப் புள்ளைகளானாலும் படிப்பு நல்ல படிப்புத்தான். வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன்கூடப் புள்ளைக மேலே பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேன்!” என்றார் பெரியவர்.

“அது சரிதான். வாத்தியாரும் ஒரு தகப்பன்தானே?” என்றார் ஹோட்டல்காரர்.

இதைக் கேட்டதும் சுப்பராமையரின் உடம்பு சிலிர்த்தது. பெரியவர், “அதில் சந்தேகம் வேறேயா? இந்தப் பையன்கள் படிப்பிலே மட்டுமில்லே, வேலையிலும் சூட்டிகைதான்” என்றார்.

“வேலையா?”

“ஆமாம்; வேலை செய்யாம எப்படி? பள்ளிக்கூடம் போக முன்னாலே, மாட்டைப் பத்திக்கிட்டுப்போய் மேய்ப்பாக. பருத்திக்கொட்டை ஆட்டுவாக. இப்படி வீட்டு வேலைகளைச் செஞ்சிட்டுத்தான் பள்ளிக்கூடம் போறது...”

“பேஷ்! அப்படித்தான் இருக்கணும். பொழைக்கிறவனுக்கு அதுதான் லட்சணம்!
அழுக்குப் படாத படிப்பு படிப்பிலே சேத்தியா? அவனாலே ஊருக்குப் பிரயோசனம் உண்டோ? அவனுக்குத்தான் என்ன பிரயோசனமாயிருக்கு? என்னை எடுத்துக்கோங்க... நான் இரண்டாம் கிளாஸுக்கு மேலே படிச்சதில்லே. பி.ஏ., எம்.ஏ., படிச்சிருந்தா உத்தியோகம் பார்த்திருப்பேன். பார்த்திருந்தா, இத்தனை வருஷமாப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பண்ணி வந்த உபகாரத்தைப் பண்ணியிருக்க முடியுமா? நாலு பேருக்கு உபகாரமா இருந்தாத்தான் படிப்பிலே சேர்த்தி. ஊர்க்காரனை மெரட்டுற படிப்பு வேண்டவே வேண்டாம். நான் சொல்றது எப்படி?”

“அதிலே சந்தேகம் வேறயா?” என்றார் பெரியவர். இப்படியே பேசிக்கொண்டிருந்தார்கள். வண்டி கோவில்பட்டிக்கு வந்துவிட்டது. வாசிப்பதுபோல், விரித்து வைத்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிப் பழையபடியும் கோட்டுப்பைக்குள் வைத்தார் சுப்பராமையர். எல்லோரும் இறங்குவதற்கு ஆயத்தமானார்கள்.

“தைரியமாய்ப் பரீக்ஷை எழுதுங்கடா! நான் வயசானவன். ஆசீர்வாதம் பண்ணறேன்; எல்லோரும் பாஸ், போய்ட்டு வாருங்க. திருநெல்வேலியிலே படிக்க வரப்போ! பங்கஜ விலாஸை மறந்துட வேண்டாம். தெரிஞ்சதா?” என்று சொல்லி வழியனுப்பினார் ஹோட்டல் முதலாளி.

வண்டியை விட்டு சுப்பராமையரும், அந்தப் பையன்களும், பெரியவரும் இறங்கினார்கள். போகும்போது ஐயர், ஹோட்டல் முதலாளியைப் பார்த்துப் புன்னகைத் ததும்பும் முகத்தோடு வணங்கி விடைபெற்றுக்கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள் பையன்கள். முன்னே நடக்க ஒருவிதத் தயக்கம். அவ்வளவு தூரத்துக்கு அவரிடம் மரியாதை பிறந்துவிட்டது.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், குதிரை வண்டியை
எதிர்பார்த்துக்கொண்டு நின்றார் சுப்பராமையர். கோவில்பட்டி ஸ்டேஷனில் போர்ட்டர் வேலை செய்யும் ஒருவன், அன்று தனக்கு இரவு வேலையானதால், வெளியே ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தான். பெரியவரையும், சிறுவர்களையும் பார்த்து, “வாங்க வாங்க” என்று சொல்லிக்கொண்டே வந்தான். அவர்கள் வந்த காரியத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்டான். அவனும் இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவன்தான் என்பதைப் பேச்சிலிருந்து சுப்பராமையர்  ஊகித்துவிட்டார்.

பையன்களையும், பெரியவரையும், தன் வீட்டுக்கு அந்தப் போர்ட்டர் பலகாரம் சாப்பிட அழைத்ததோடு, அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் ஊருக்குப் போகலாம் என்று சொன்னான்.

சுப்பராமையருக்குக் குதிரை வண்டி கிடைத்துவிட்டது. அதில் ஏறிக்கொண்டு, வண்டி மூலை திரும்பும் வரையில் சிறுவர்களையே பார்த்துக்கொண்டு சென்றார். குமாரபுரம் ஸ்டேஷன், ஸ்டேஷன் மாஸ்டரின் தர்க்கங்கள், வேப்பம்பூ மணத்தோடு வீசிய காற்று, கரிசல் மண் மணமும் உயிரும் கொடுப்பது, ஹோட்டல்காரரின் தர்மகுணம், படிப்புக்கு அவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுத்த விளக்கம், கிராமத் தலைமையாசிரியர் தந்தையைப் போல் சிறுவர்களை நடத்தியது, டால்ஸ்டாயை ‘டோல்ஸ்டோய்’ என்று வாசித்த ‘அறிவு’, ஏழைப் போர்ட்டரின் விருந்துபசார அழைப்பு  இப்படி, எல்லாமே அவருக்கு ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. இருபது நிமிஷ ரயில் பிரயாணத்தில், இருபது வருஷங்கள் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாத எத்தனையோ அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டது போன்ற ஆனந்தப் பரவசம்... கிராமத்து ஹெட்மாஸ்டரையும், ஹோட்டல் முதலாளியையும் போர்ட்டரையும்விடப் பெரிய வாத்தியார்கள் இந்த உலகில் இருக்க முடியுமா என்றுகூட அவருக்கு ஒரு நிமிஷம் தோன்றியது. அவர்களிடம் படிக்காத படிப்பையா இந்தச் சிறுவர்கள் இனிமேல் படிக்கப் போகிறார்கள் என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். “குமாரபுரம் ஸ்டேஷனுக்குப் பிரயாணிகள் வராததைவிடப் பெரிய கேலிக்கூத்து, மேல்படிப்புக்காக இவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு வருவது! அந்த ஸ்டேஷனுக்காவது தண்ணீர் பந்தல் என்ற மதிப்பு உண்டு ஆனால்...”

சுப்பராமையர் குதிரை வண்டியில் வீடுபோய்ச் சேர்ந்தார்.

பெரியவரையும், பையன்களையும் அந்தப் போர்ட்டர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். ஊரிலேயே காலை ஆகாரம் பண்ணிக்கொண்டு வந்தவர்களானதால் அங்கே அவர்கள் ஒன்றும் சாப்பிடவில்லை. போர்ட்டருடைய கட்டாயத்துக்காகக் காபியை மட்டும் வாங்கிக் குடித்தார்கள்; மத்தியானம் சாப்பிட வருவதற்கும் சம்மதித்தார்கள். அப்புறம் எல்லோருமாக  போர்ட்டர் உட்பட பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள். பள்ளிக்கூட வராண்டாவில் மற்றவர்களை நிறுத்திவிட்டுப் போர்ட்டர் மட்டும் நேரே தலைமையாசிரியரின் அறையை விசாரித்துத் தெரிந்துக்கொண்டு அங்கே போனான். இடைசெவல் கிராமத்திலிருந்து ஆறாவது வகுப்புத் தேறிய நான்கு பையன்கள் ஏழாம் வகுப்பில் சேர வந்திருக்கும் செய்தியை அவரிடம் தெரிவித்தான். அவர் உடனே ஓர் ஆசிரியரை வரவழைத்து, அவரிடம் இரண்டு மூன்று கேள்வித் தாள்களை எடுத்துக் கொடுத்து, அந்தக் கிராமத்துப் பையன்கள் ஏழாம் வகுப்புக்குத்தகுதி உடையவர்கள்தானா என்பதைச் சோதித்துப் பார்க்கும்படிச் சொல்லி அனுப்பினார்.

ஓர் அறையில் நான்கு சிறுவர்களும் தனித்தனியே உட்கார வைக்கப்பட்டார்கள். கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை எழுதிக்கொள்ளும்படிச் சொல்லி உதவி ஆசிரியர் வாசித்தார். எல்லாம் ஆங்கிலக் கேள்விகள். பையன்கள் எழுதிக்கொண்டார்கள். ஒரு மணி நேரத்துக்குள் பதில்களை எழுதிவிட வேண்டுமென்றும் சொன்னார் ஆசிரியர். பையன்களும் எழுதத் தொடங்கினார்கள். போர்ட்டரும் பெரியவரும் பள்ளியைவிட்டு வெளியே வந்து, ஒரு புளியமரத்து நிழலில் உட்கார்ந்து ஊர்ச் சமாச்சாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்

பத்தரை மணிக்கெல்லாம் ஆங்கிலப் பரிக்ஷை முடிந்தது. அப்புறம் கணக்கு, தமிழ், பொது அறிவு ஆகியவை சம்பந்தப்பட்ட பரீக்ஷைகள். எல்லாமே பன்னிரண்டு மணிக்குள் முடிந்துவிட்டன. பள்ளிக்கூடம் விட்டு எல்லாப் பையன்களும் மத்தியானச் சாப்பாட்டுக்காக வீடுகளுக்குப் போனார்கள். அவர்களை நான்கு சிறுவர்களும் மிரள மிரள விழித்துக்கொண்டு பார்த்தார்கள். உதவி ஆசிரியர் அவர்களை அந்த அறையிலேயே உட்கார வைத்துக்கொண்டு விடைத் தாள்களை வேகமாகத் திருத்தி மார்க் போட்டார். பிறகு எழுந்து தலைமை ஆசிரியரின் அறைக்குப் போனார். அப்போது பெரியவரும் போர்ட்டரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

“பரீக்ஷை நல்லா எழுதியிருக்கீங்களா?” என்று கேட்டான் போர்ட்டர்.

“கணக்குத்தான் கஷ்டமாக இருந்தது.”

“இங்கிலீஷ்?”

“ரொம்ப லேசு.”

“ஊரிலே ஹெட்மாஸ்டர் எழுதிப்போட்ட கேள்விகள்தான். ஒரு நொடியில் பதில் எழுதிவிட்டேன்” என்றான் ஒருவன். மற்றவர்களும் அப்படியே சொன்னார்கள்.

“இங்கிலீஷ் நல்லா எழுதினால் பாஸ்தான்” என்று போர்ட்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பெரியவர், “ஊர் வாத்தியார் வாத்தியார்தான்! எப்பேர்ப்பட்ட மனுசன்! இங்கே என்ன கேப்பாங்கன்னு அங்கேயே தெரிஞ்சி சொல்லிக் கொடுத்திருக்கிறாரே, அதில்லே மூளை!” என்று இடைசெவல் கிராமத்துத் தலைமை ஆசிரியரை வானளாவப் புகழத் தொடங்கினார்.

“கெட்டிக்கார வாத்தியார் போலிருக்கு!”

“கெட்டிக்காரருன்னா, அப்படி இப்படியா! அதுக்கு ஏத்தாப்பலே கொணமும் அமைஞ்சுதே தம்பி, அதைச்சொல்லு. இப்படி ஒரு வாத்தியார் நம்ம ஊருக்கு வந்ததே இல்லை. பிள்ளைகள்கிட்டே பெத்த தகப்பன்கூட அவ்வளவு பிரியமா இருக்கமாட்டான்னா, அப்புறம் பார்த்துக்கோயேன்” என்றார் பெரியவர் பூரிப்புடன்.

எல்லோரும் வெற்றியை எதிர்நோக்கிக்கொண்டு கோலாகலமாகப் பேசிக்கொண்டிந்தார்கள்.

சிறிது நேரத்துக்குள்ளேயே, பரீக்ஷை வைத்த உதவி ஆசிரியர் வந்து, சிறுவர்களையும், பெரியவரையும் போர்ட்டரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துக் கொண்டு போனார். அப்போதுதான் அவர்களுடைய மனம் கோலாகலத்தை இழந்து, ‘திக்திக்’ என்று அடித்துக்கொள்ளத் தொடங்கியது.

“இப்படி வாருங்கள்” என்று அவர்களை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார் உதவி ஆசிரியர். எல்லோரும் உள்ளே போனார்கள். தலைமை ஆசிரியரைப் பார்த்ததும், போர்ட்டர் கும்பிட்டான். பெரியவருக்கோ கும்பிடப் போன கைகள் குவியாமல் நடுங்கின. பையன்கள் எதுவுமே செய்யாமல், அப்படியே நின்றுவிட்டார்கள். ஆச்சரியத்தினால் அவர்களுடைய கண்கள் அகல விரிந்துவிட்டன. மூடியிருந்த வாய்கள் தாமாகத் திறந்துகொண்டன. ஒவ்வொரு கையிலும் விரல்களை விரல்கள் பிசைந்துகொண்டிருந்தன.

குமாரபுரம் ஸ்டேஷனிலிருந்து டால்ஸ்டாய் புத்தகமும் கையுமாக அவர்களோடு பிரயாணம் செய்த அதே பிரமுகர்தான் இங்கே தலைமை ஆசிரியராக உட்கார்ந்து கொண்டிருந்தார்! இதைப் பையன்கள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?

“வாருங்கோ” என்று சிரித்துக்கொண்டே அவர் வரவேற்றார்.

“பெரிய வாத்தியாரைக் கும்பிடுங்க” என்று போர்ட்டர் சொன்ன பிறகுதான், பையன்களும் பெரியவரும் வணக்கம் செய்தார்கள்.

“கேள்விகளெல்லாம் கஷ்டமாக இருந்ததா?” என்று கேட்டுவிட்டு மறுமுறையும் சிரித்தார் சுப்பராமையர். அந்தச் சிரிப்பில் இருந்த அழகும், கவர்ச்சியும், அன்புப் பெருக்கும் ஒரு பையனுடைய கண்களில் கண்ணீரையே வரவழைத்துவிட்டன.

அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் எல்லோரும் வாயடைத்துப் போய்த் திகைத்து நின்றார்கள்.

அடுத்தாற்போல், “உங்கள் பெயர்களைச் சொல்லுங்கள்” என்றார்.

“நாராயணசாமி, ‘ஸ்ரீனிவாசன்’, ‘சுப்பையா’, ‘திருப்பதி”

“எல்லோரும் பாஸ்!” என்றார் சுப்பராமையர். பையன்கள் நால்வருக்கும் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவிட்டது.

“எல்லோரும் ஏழாம் வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்கள். நன்றாகப் படியுங்கள். ஒவ்வொரு பரீக்ஷையிலும் நல்ல மார்க் வாங்கவேண்டும்” என்று கூறிவிட்டு, “உங்கள் ஊர் வாத்தியார் மட்டுமல்ல இந்த ஊர் வாத்தியாருமே தகப்பனாரைப் போன்றவர்தான். பெரியவரே! நான் சொல்லுவது சரிதானே?” என்று சிரிப்பும் பரவசமுமாகக் கேட்டார் தலைமை ஆசிரியர்.

“அதிலே சந்தேகம் வேறயா?” என்று கிராமியப் பாணியில் சத்தம் போட்டுச் சொல்லிவிட்டு ஒரு முறை கும்பிட்டார் பெரியவர்.

சுப்பராமையர் மூன்றாவது தடவையும் அழகாகச் சிரித்தார்.

“போய் வாருங்கள்” என்று விடை அளித்து அவர்களை அனுப்பியபின், குமாரபுரம் ஸ்டேஷன்தான் அவர் மனக்கண்ணில் காட்சியளித்தது.

வாய்க்குள்ளேயே, ‘அது பெரிய பள்ளிக்கூடம்!’ என்று ஒரு முறை சொல்லிக்கொண்டார் சுப்பராமையர்.

தெரியவில்லை

Labels: ,

ந. பிச்சமூர்த்தி

2

மலையைப் பார்க்கிறேன்

சிலைக்காகும்

கோயிலுக்காகும்

பங்களாவின்

சுற்றுச் சுவர்க்காகும்

தாரோடும் வீதிக்கு

ஜெல்லிக் கல்லாகும்.

மலைச்சிகரம்

மனிதச் சாதனைக்காகும்.

எதெதோ தெரிந்தாலும்

மலையாகப் பார்க்கத் தெரியவில்லை.

மலரைப் பார்க்கிறேன்.

புலரும் காதலுக்குத்

தூண்டில் முள்ளாகும்

அத்தர்க்காகும்

படத்துக்காகும்

எதெதோ தெரிந்தாலும்

மலராகப் பார்க்கத் தெரியவில்லை.

என்னைப் பார்க்கிறேன்

கண் காணாச் சமூகத்தை

நிலை நிறுத்தும் கல்தூண்.

பரிணாமத்தின் பனிச்சிகரம்

சந்ததியின் சங்கிலியில்

காலம் காட்டும் கடைக்கரணை

எதெதோ தெரிந்தாலும்

நானாகப் பார்க்கத் தெரியவில்லை.

ந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்

Labels: , ,

ஜெயமோகன்

[22_08_2001 மாலை சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்த ந. பிச்சமூர்த்தி நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை]

சிறந்த எழுத்தாளர்கள் இருவகை. மானுடத்தின் அடிப்படை, நன்மையே என்ற நம்பிக்கை உடையவர்கள் முதல் வகையினர். மானுடத்தின் தீமையினால் இவர்கள் சீண்டப்படுகிறார்கள், சமநிலைகுலைகிறார்கள். நன்மை மீதான தங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள போராடுகிறார்கள். அதன் போக்கில் ஒரு விடையை, நிலைபாட்டை அடைகிறார்கள். அல்லது நம்பிக்கை இழந்து வெறுமையில் முட்டி நின்றுவிடுகிறார்கள்.

இரண்டாம் வகையினர் மானுடத்தின் அடிப்படை இயல்பு, தீமையே என்ற நம்பிக்கை உடையவர்கள். மானுடத்தின் விரிவில் இருந்து நன்மையைத் தேடித் திரட்டி எடுக்க, நம்பிக்கையை நிறுவிக் கொள்ள தங்கள் முழு படைப்பு சக்தியாலும் தீவிரமாக இவர்கள் போராடுகிறார்கள். இப்போக்கும் தரிசனங்களையும் தத்துவ நிலைபாடுகளையும் உருவாக்குகிறது, சிலசமயம் வெறுமையையும்.

உலகத்துப் படைப்பாளிகள் அனைவரையும் இந்தக் கோணத்தைப் பயன்படுத்தி இரண்டாகப் பிரித்து விடலாம். இது ஒரு பகுப்பாய்வு அல்லது விமரிசனமுறை என்பதைப் பார்க்கிலும் ஒருவகை ரசனை முறை என்று கூறுவதே சரியானது. இதன்மூலம் உருவாகும் ஒரே பயன், நாம் படைப்பாளிகளைக் கூர்ந்து கவனிக்கிறோம் என்பதே. உண்மையில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி படைப்பாளிகளை ஆராயப் புகுந்தோமெனில் முக்கியப் படைப்பாளிகள் எப்படி சட்டகத்திற்கு வெளியே வழிந்து பரவி செல்கிறார்கள் என்பதையே காண நேரும். ஏனெனில் அது, படைப்பின் அடிப்படை இயல்பு. படைப்பியக்கத்தைச் சட்டகங்களுள் ஒடுக்கி நிறுத்த முடியாது. அதேசமயம் சட்டகப்படுத்தாமல் சட்டகங்களுக்கு வெளியே பரவும் படைப்பின் உயிரியக்கத்தைக் கண்டறியவும் இயலாது. படைப்பாளியை ஒட்டுமொத்தமாக வகுத்துக் கொள்ள முயல்வது அவனுடைய நுட்பங்களுக்குள் நுழைய மிகச்சிறந்த வழிமுறையாகும் என்பது என் அனுபவம்.

மீண்டும் வருகிறேன். தல்ஸ்த்தோய் மானுட நன்மையில் ஆழமான நம்பிக்கை உடையவர் என்றால் தஸ்தோயெவ்ஸ்கி மானுடத்தின் தீமையை நம்புகிறவர். இருவரும் தேடுவது மனிதனுள் உறையும் `கிறிஸ்து’வையே. என் இயல்பின்படி எனக்கு முதல்வகை படைப்பாளிகள் மீதுதான் எப்போதுமே ஆழமான ஈடுபாடு உள்ளது. ஹெர்மன் ஹெஸி, தாமஸ் மன், நிதாஸ் கசன் சாகிஸ், ஐசக் பாஷவிஸ் சிங்கர்.... இரண்டாம் வகைப் படைப்பாளிகளில் இருளின் வழியாக ஒளிநோக்கி முகம் திருப்ப முடிந்த தஸ்தயேவ்ஸ்கி எனக்கு முக்கியமானவர்; இருண்ட கோட்டையில் சுற்றிவரும் காஃப்காவும் காம்யூவும் எனக்கு முக்கியமானவர்கள் அல்ல; ஹெமிங்வேயை ஒரு இலக்கியக்கர்த்தாவாகவே என் மனம் ஏற்கவில்லை.

தமிழுக்கு வருவோம். `இருள் என்பது குறைந்த ஒளி’ என்று கூறியவன் முதல் இனத்தவன். `பற்றுகோடாக எதுவுமே இல்லையே’ என்று பரிதவித்தவன் இரண்டாம் வகை. பாரதியையும் புதுமைப்பித்தனையும் இப்படி இரண்டு வகைமாதிரிகளாகக் கொள்ளும் போக்கு தமிழில் ஏற்கெனவே வேரோடியுள்ளது. குறிப்பாக, சுந்தர ராமசாமி அவருடைய பிச்சமூர்த்தியின் கலை _ மரபும் மனித நேயமும் என்ற நூலில் இதை விரிவான ஒரு அட்டவணைக்குப் பயன்படுத்துகிறார். மணிக்கொடியுகப் படைப்பாளி-களில் புதுமைப்பித்தனைத் தவிர பிறர் அனைவரையும் பாரதிக்குப் பின்னால் நிற்க வைத்து புதுமைப்பித்தனை நேர் எதிர்வரிசையில் சமமாக அமரச் செய்கிறார்.

ந. பிச்சமூர்த்தியை அனைத்து வகையிலும் பாரதியின் பின்னால், மிக நெருக்கமாக நிறுத்தமுடியும். அவரைப் புரிந்து கொள்ள பாரதியில் இருந்து அவர் வேறுபடும் இடங்களையும், புதுமைப்பித்தனில் இருந்து அவர் முரண்படும் இடங்களையும் அடையாளம் செய்து கொண்டால் போதும். பிச்சமூர்த்தி குறித்த விவாதங்-களின் உடன் வினாவாக நம்முள் இலக்கியத்-தின் உள்ளே எப்போதும் இருந்தபடி இருக்கும் இந்தப் பிரச்சினையும் _ மானுடனின் அடிப்படையான நல்லியல்பு குறித்த நம்பிக்கை குறித்தது _ எழுந்த-படியேதான் இருக்கும்.

ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளில் தெரியும் நம்பிக்கை அம்சம் எத்தகையது? ஒளியின் அழைப்பு என்ற ந. பிச்சமூர்த்தியின் கவிதையை ஒரு முதற்கட்ட உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். பொதுவாக எந்த ஒரு படைப்பாளியைப் பற்றிப் பேசும்போதும் அவனுடைய மிகச்சிறந்த படைப்பு ஒன்றே எடுத்துக் கொண்டு அவனுடைய மொத்தப் படைப்பியக்கத்திற்கும் அதைப் படிமமாக ஆக்குவது ஒரு நல்ல உத்தியாகும். ஏனெனில் மிகச்சிறந்த படைப்புகளில் படைப்பாளியின் பலங்களும் பலவீனங்களும் எல்லாமே நுட்பமாக பிரதிபலிக்கும். ஒளியின் அழைப்பு அத்தகைய ஒரு கவிதை. `மணிக்கொடி’ இதழில் [1934 அக்டோபர் 28] வெளிவந்தது இக்கவிதை. `பிட்சு’ என்ற பெயரில் இக்கவிதையை அதில் ந. பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார். அதே இதழிலேயே `உதர நிமித்தம்’ என்ற கதையையும், ந. பிச்சமூர்த்தி சொந்தப் பேரில் எழுதியுள்ளார்.

இதோ விரிந்து வளரும் மரம்
பட்டப்பகலில் இரவைக் காட்டும் அதன் நிழல்
மரத்தடியில் ஒரு கழுகு...
ரத்தம் செத்த சோனிக் கழுகு...

பெரிய மரத்தின் பசிக்கு ஆளாகி, சுரண்டப்பட்டு, ரத்தம் செத்த சோனிக் கழுகு. சோனியாகக் காரணம் வாழ்க்கைப் போர்தான். அதற்காக அது விதியென்று-பேசி வீணில் இருக்கவில்லை. தியாகம் என்று நியாயம் கற்பிக்கவுமில்லை.

பிறவி இருளை துளைத்து
சூழ்வின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி
எப்படி விண்ணினின்று வழியும் ஒளியமுதைத் தேடிப்போகிறது.
ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்புக்கிணங்கி
எப்படி உடலை நெளித்து நீட்டி வளைந்து வளருகிறது!
என்று சித்திரப்படுத்தும் ந. பி.
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி

என்று கண்டடைகிறார்.

ஜீவா விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு ஒளியை நாடு
கழுகு பெற்ற வெற்றி நமக்குக் கூடும்

எனத் தன்னிடமே கூறிக் கொள்கிறார். இது அவரது ஆரம்பகாலக் கவிதை, அனேகமாக அவர் எழுதிய மூன்றாவது கவிதை இது.

அந்த மணிக்கொடி இதழின் மற்ற தலைப்புகள் இக்கவிதையுடன் எப்படித் தொடர்பு கொண்டுள்ளன? `தனுவுண்டு சத்யாக்ரகம் அதன் பேர்!’ என்று அதை கூறுகிறது ஒரு கட்டுரை. `பழையன கழிதலும் புதியன புகுதலும் _ இளமையின் எழுச்சியும் கிளர்ச்சியும்’ இன்னொரு கட்டுரை. `ஆசியாவை விழுங்கினதும் ஐரோப்பா மழுங்கினதும்’ நேருவின் கட்டுரை. `காங்கிரஸ் பிறந்த கதையும் வளர்ந்த கதையும். அன்று சிரித்தார்கள் இன்று எதிர்க்கிறார்கள்’ என்று இன்னொரு கட்டுரை.

ஒரு பெரிய போராட்ட உற்சாகத்தின் காலகட்டம் என்ற பிரமையைத் தருகிறது மணிக்கொடியின் இவ்விதழ். இது ஒரு பக்கம் தான். மறுபக்கம் ஒன்றுண்டு, ஒத்துழையாமை இயக்கத்தின் துவளல் காரணமாக காந்தியடிகள் காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து விலகி நின்ற காலம். பாபு ராஜேந்திர பிரசாத் காங்கிரஸ் தலைவர். சூழலில் ஒரு சோர்வு படர்ந்திருந்தது என்று பிற சமகாலக் குறிப்புகளிலிருந்து ஊகிக்கலாம். மணிக்கொடியின் இவ்விதழில் `எங்கிருந்தாலும் ஓடிவருவேன் _ தேசத்துக்கு காந்தியடிகள் நிபந்தனை’ என்ற கட்டுரை ஒன்றும் பிரசுரமாகியுள்ளது. இக்கட்டுரையின் உள்தொனி தெளிவானது, காந்தியடிகள் விலகியிருக்கிறார் என்ற உண்மை. அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பை விதைக்க முயல்கிறது இக்கட்டுரை. ஆகவே, `சூழ்வின் இருள்’ தான் உண்மை. மணிக்கொடியின் பிற கட்டுரைகளில் உள்ள தீவிரமான உற்சாகம் ஒரு சுயபாவனை. அது அப்போது தேவைப்படுகிறது போலும்.

ந. பிச்சமூர்த்தி `ஜீவா விழியை உயர்த்து’ என்று மீண்டும் மீண்டும் தன்னை நோக்கி, தன் சூழலை நோக்கி கூவியிருக்க வேண்டும். அக்கவிதை ஒளியைக் குறித்ததா இல்லை இருளைக் குறித்ததா என்று சொல்லுவது சிரமம். அமுதம் பொழியும் வானம் ஒவ்வொருவரின் தலைக்கு மேலேயும் எழுந்து பரந்துள்ளது குறித்து அவருக்கு ஐயமில்லை. அதை நோக்கி எழுவதே உயிரின் தர்மம் என்ற நம்பிக்கையே அவரது சாரம். ஒரு உயிரின் இயல்பான வேட்கை வானமுதம் மட்டுமே என்ற தரிசனம்தான் அவரை எழுதச் செய்கிறது. ஆயினும் சூழலின் இருள், சுரண்டும் வாழ்க்கைப் போட்டி, இருத்தலின் கசப்பான விதிமுறைகள் அவருக்குச் சவாலாக அமைகின்றன.

அவரது கதை `உதர நிமித்தம்’ இதற்கு எடுத்துக்காட்டு `வயிற்றுக்காக’ என்று பொருள்படும் அத்தலைப்பே கூறிவிடுகிறது. மனித நிலைமை குறித்த ஒரு தரிசனம், கூடவே மனித வாழ்வின் தவிர்க்க முடியாத போலி வேடங்கள் ஆகியவை குறித்த பிரக்ஞை இரண்டுக்கும் இடையேயான கூர்மையான முரண்பாட்டைச் சொல்லும் இக்கதை அவர் இருந்த `சூழலின் இருள் மங்கலை’ சுட்டிக் காட்டுவது (இலக்கிய படைப்பு என்ற முறையில் மிக சாதாரணமானது இது என்பதையும் கூறிவிடுகிறேன்) பாரதியில் இருந்து பற்ற வைத்துக் கொண்ட `ஒளிப்பிரக்ஞை’ ஒரு பக்கம், உதர நிமித்தம் அல்லாடும் அன்றாட வாழ்க்கை மறுபக்கம். இலட்சியவாதியின் தத்தளிப்பு இங்கு தொடங்குகிறது. பிச்சமூர்த்தியின் படைப்புலகு இங்குதான் தொடங்குகிறது. இப்பாதை-யினூடாகவே நகர்கிறது.

இதே இதழ் மணிக்கொடியில் புதுமைப்பித்தன் சொ. விருத்தாசலம் என்ற பெயரில் `கவிஞனின் மோகனக் கனவு’ என்று கவிதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இவ்விஷயத்துடன் தொடர்புபடுத்தி யோசிக்க வேண்டிய விஷயம் இது. கவிதை யதார்த்தத்தின் குரலாகவும், யதார்த்தங்களை உண்டு பண்ணுவதாகவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ள இன்று இது மிகப் பழைய ஒரு வாதம் ஆயினும் அன்று ஏறத்தாழ அத்தனைக் கவிஞர்களையும் ஆண்ட பிரக்ஞை இது. ந. பிச்சமூர்த்தி கூறும் அமுதத்தை உதிர்க்கும் அந்த வானம் கவிஞனின் மோகனக் கனவு மட்டும் தானா?

ந. பிச்சமூர்த்தியின் இன்னொரு முக்கிய கவிதையான `கிளிக்குஞ்சு’ அவரது போராட்டத்தை மேலும் தெளிவாகச் சுட்டுவது.

கூட்டிலிருக்கும் கிளிக்குஞ்சே
கண்மூடி ஏங்காதே
உன் பஞ்சரம் சிறையல்ல

என்ற முதல் வரியே கூண்டுக்கும் வானுக்குமான போராட்டத்தை, தீராத ஏக்கமாகத் தொடரும் ஒளிவேட்கையை சுட்டிவிடுகிறது.

மனமே காய்கனிகளின் ரசமே தெவிட்டா அமுதம்
மலர்களின் மணமே தெய்வ வாசனை
ஸ்பரிசமே தெய்வத் தீண்டல்
பார்வையே ஒளியின் அலை

என்று புலன்களையே விடுதலையின் கால்வாயாக, பிரபஞ்சத்தையே ஈசானாகக் கண்டு அக்கவிதை முடிவடைகிறது.

ந. பிச்சமூர்த்தி கலையின் எதிர்மறை அம்சம் என்ன? அவரை ஓர் இலக்கியப் படைப்பாளியாக எப்படி மதிப்பிடலாம்?

நான், ஒரு வாசகனாகவும் விமரிசகனாகவும், எழுத்தாளனாகவும் ந. பிச்சமூர்த்தி குறித்து மிதமான மரியாதையையே கொண்டிருக்கிறேன். ஒரு வாசகனாக அவரது பல படைப்புகள் என்னைக் கவரவில்லை. ஒளியின் அழைப்பு, கிளிக்குஞ்சு, சாகுருவி, ஆத்தூரான் மூட்டை போன்ற சில கவிதைகள் ஞானப்பால், மாங்காய்த்தலை முதலிய சில கதைகள் எனக்குப் பிடித்தவை. ஒரு பெரும் இலக்கியப் படைப்பாளியாக என் மனதில் அவரை நிறுவ இவை போதுமானவை அல்ல என்றுதான் படுகிறது. ஒரு விமரிசகனாக நான் ந. பிச்சமூர்த்தியை தமிழ் இலக்கிய மரபின் முக்கியமான முன்னோடியாகக் கருதுகிறேன். நவீனத் தமிழ்ச்சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றுக்கான அழகியல் அடிப்படை-களை உருவாக்கியதில் அவரது பங்கு முக்கியமானது. ஒரு இலக்கியவாதியாக தன்னை அவர் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்று எதிர்மறையாகவும் மதிப்பிடுவேன். அதாவது இலக்கியவாதி தன் தேடலை முழுக்கவும் இலக்கியத்தினூடாகவே நிகழ்த்த வேண்டும். அவனது பாதை, அவனது ஊடகம், அவனது ஆயுதம் அதுவேயாகும். அவனது ஆன்மிகமும், அரசியலும் கூட அதனூடாக அவன் கண்டடைய வேண்டியவை மட்டுமே. பிரம்மம் அவன்முன் இலக்கிய வடிவமாகவே எழுந்தருளல் வேண்டும். ந. பிச்சமூர்த்தியின் தேடல்கள் (ஆன்மிகத்திலும், தத்துவத்திலும்) இலக்கியத்தினூடாக நிகழவில்லை என்பதை அவர் படைப்புகள் காட்டு-கின்றன என்று எனக்குப் படுகிறது. அவரது ஆளுமை-யில் பலபகுதிகள் கவிதைகளினூடாக அவ்வப்போது தெரிகின்றன. அவருக்கு அத்வைத ஈடுபாடு இருந்திருக்-கிறது. பக்தி இலக்கியத்தின் மீது பிடிப்பு இருந்திருக்-கிறது. நாமறியாது, ஒளிவிழாத பகுதியில் அவரது தேடல் நடந்து கொண்டிருந்திருக்-கிறது. அங்கு கண்டதை இங்கு கூறவே அவர் முயல்கிறார். ஆகவே, அவரது தேடல் வடிவம் சார்ந்ததே. பாரதியின் வசன கவிதையில் தொடங்கி நவீனத்துவக் கவிதையின் விளிம்பு வரை அவரது பயணம் நகர்ந்து வந்தது இந்த வடிவத் தேடலின் விளைவாகவேயாகும். மணிக்கொடி-யில் 1934இல் வெளியான `பிரிவில் தோன்றும் பேரின்பம் என்ற முதல் கவிதையை `பாரதியின் வசன கவிதையின் பலவீனமான பிரதி’ என்று கூறிவிடலாம். சாகுருவி ஒரு நவீனயுகக் கவிதை. தமிழ்க் கவிதையில் உருவான முதல் நவீனத்துவப் பிரதியும்கூட. இப்பயணமே ந. பிச்சமூர்த்தியை தமிழுக்கு முக்கியமானவராக ஆக்குகிறது. மூன்றாம் தலைமுறையின் ஒரு எழுத்தாளனாக என்னை ந. பிச்சமூர்த்தி பாதிக்கவே இல்லை. கண்டடைந்தபின் கூறுவதற்காக மேடையமர்ந்-தவர் அவர். எனக்கு அமர்தலில் நம்பிக்கை இல்லை. ஓயாத தத்தளிப்புடன் முட்டிமோதி அலைந்து ரயில்நிலையத்தில் செத்தவன்தான் எனக்கு முன்னோடி.

ஒரு படைப்பிலக்கியவாதியாக ந. பிச்சமூர்த்தியை பலவீனப்படுத்திய அம்சம் என்ன?

இது ஒரு விரிவான நூலுக்கான தலைப்பு. இவ்வாறு கூறுகிறேன். இலட்சியவாதக் கனவை முன்வைத்த ந. பிச்சமூர்த்தி அதற்கு எதிரான `சூழலின் இருளை’ மிக எளிமையாக உருவகப்படுத்திக் கொண்டார். அவரது படைப்புலகில் உள்ள மானுடத் தீமை மிகமிகப் பலவீனமானது. அதை வென்று `வானின் ஒளியமுதுக்கு’ சிரம் நீட்ட ஓரிருமுறை உடல் நெளிந்தாலே போதுமானது.

ந. பிச்சமூர்த்தி தன் காலகட்டத்து இருளை நோக்கி அரைக்கண் பார்வையையே திருப்பினர். அவர் கதைகளில் தீவிரமான, அத்தனை சுலபமாக இலட்சியவாதத்தால் பதில் கூறிவிட முடியாத பிரச்சினைகள் இல்லை. எம். வேதசகாய குமாரை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். `கோபாலய்யங்காரின் மனைவி’ என்ற புதுமைப்பித்தனின் கதையே உண்மையில் தமிழ்ச்சூழலால் பாரதியின் இலட்சியவாத `ஒளி வேட்கை’க்கு எதிராக விடப்பட்ட முதல் அறைகூவல். அது உருவாக்கும் `அப்பட்டமான’ யதார்த்தப் பிரக்ஞையை பாரதி வாரிசுகளின் இலட்சியவாதம் எதிர் கொண்டிருக்குமானால் அவர்கள் பெரும்படைப்புகளை உருவாக்கும் பெரும் நெருக்கடிக்-குள் சென்று விழுந்திருப்பார்கள். அப்படி நிகழவில்லை. ந. பிச்சமூர்த்தி எழுதிய அதே மணிக்கொடி இதழில்தான் `கோபாலய்யங்காரின் மனைவி’யும் வெளிவந்தது என்பது ஒரு முக்கியமான விஷயம். ஆனால், அதை ந. பிச்சமூர்த்தி எதிர்கொள்ளவில்லை.

சாதியால் பிளவுண்டு, மானுடச் சிறுமைகளால் சிதைந்து, கோழைத்தனத்துள் ஊறிக் கிடந்த ஒரு சூழலில் நின்று கொண்டு ஒரு கவிஞன் `ஜீவா விழியை உயர்த்து’ என்று சொல்லலாமா என்ன?

தஸ்தயேவ்ஸ்கி விழியை உயர்த்துமிடம், `போரும் அமைதியும்’ என்ற மாபெரும் நாவலிலேயே ஒரே ஒரு இடம்தான். ஆன்ட்ரூ இளவரசன் நெப்போலி-யனுடனான போரில் புண்பட்டு விழுந்து கிடக்கும் மரணத்தின் விளிம்புத் தருணம். மற்ற தருணங்களில் எல்லாம் மானுடத்தின் மகத்தான நாவலாசிரியனின் பார்வை மண்மீதுதான். மனிதர்கள் மீதும் இயற்கை மீதும் தான். அதுவே மகத்தான கலையை உருவாக்-கியது. ந. பிச்சமூர்த்தி மூன்றாவது கவிதையிலேயே விழிகளை உயரத் தூக்கிவிட்டார்.

ஆகவே, ந. பிச்சமூர்த்தியின் படைப்புலகில் இலக்கியத்தின் ஆதாரமான போராட்டம், முரண்பாடுகளில் மோதிச் சிதறி முன்னகரும் கலைப்பயணம் நிகழவில்லை. பிட்சு முதலிலேயே சின் முத்திரையுடன் அமர்ந்து விட்டார். அமர்ந்தபின் அவர் கூறியவை முக்கியமான உண்மைகள் அல்லவா என்று கேட்கலாம். இலக்கியம் கூறுவதற்காக உள்ள ஊடகமல்ல. தேடலுக்கான ஊடகம் அது. இலக்கியம் காட்டும் உண்மை அதன் புனைவின் ஒரு பகுதி மட்டுமே. இலக்கியத்திற்கு வெளியே அதற்கு மதிப்பில்லை. அப்படைப்பை படிக்கும் வாசகன் தன் தேடலினூடாகத் தன் உண்மையைக் கண்டடைய அது வழிவகுக்கிறது. அவ்வுண்மையே _ அதற்கு அப்படைப்புடன் எவ்விதமான நேரடித் தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட, அந்த படைப்பு உருவாக்கும் உண்மை ஆகும். எனக்கு தஸ்தயேவ்ஸ்கி மிக முக்கியமானவர். ஆனால், அவர் `கூறும்’ உண்மைகள் ஏதும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் நூல்களினூடாக நான் அடைந்தவையே எனக்கு முக்கியம். அவர் தன் நூல்களின் பரப்பில் உணர்ச்சிகளையும் யதார்த்தங்களையும் மோதவிட்டு உருவாக்கும் மாபெரும் மானுட நாடகம்தான் எனக்கு முக்கியம். அங்குதான் அவர் தன் தேடலையும் நிகழ்த்துகிறார். அதை எழுதாது முடிவுகளை மட்டுமே அவர் எழுதியிருப்பாரெனில் அவர் எனக்கு ஒரு படைப்பாளியே அல்ல. ந. பிச்சமூர்த்தி பெரும்பாலும் முடிவுகளையே எழுதினார். மோதலும் பயணமும் அவரது கவிதைகளில், அதிகமும் வடிவரீதியான தேடலில், மட்டுமே நிகழ்ந்தன.

கவிதையின் [கலைகளின்] சித்தாந்தம் குறித்து எழுதுகையில் ந. பிச்சமூர்த்தி எழுதுகிறார். ``அழகுத் தெய்வமும் அன்புத் தெய்வமும் அகத்துள் அடிவைத்துச் செல்லும் கால் கலையுணர்ச்சி பொங்குகிறது’’. [காவியத்தின் மூன்று கிளைகள். கலை விளக்கம் மணிக்கொடி 1935 ஜனவரி] கலைகளை வாழ்க்கைக்கு மறுமொழியாகவோ, வாழ்வின் விடுதலையாகவோ, வாழ்வு மீதான நேசமாகவோ காணலாம் என்கிறார் ந. பிச்சமூர்த்தி. இக்கட்டுரையில் ருஷ்ய தேச இலக்கியம் குறித்து அவர் அறிந்திருப்பதற்கான தடயங்கள் உள்ளன. இரண்டாம் வகை எழுத்துக்கான உதாரணமாக அவற்றை அவர் சுட்டவும் செய்கிறார்.

ஆனால், இந்த அழகுதெய்வமும் அன்புத் தெய்வமும் தங்கள் நிழலுடன் மட்டுமே அகத்துள் அடியெடுத்து வைக்க முடியும் என்கிறது இந்திய செவ்வியல் மரபு, சீதேவியின் நிழல் மூதேவியேதான். அவளது பின்பக்கமே மூதேவி என்று இன்னொரு ஐதீகம். இன்னொரு ஐதீகப்படி அவள் சீதேவியின் அக்கா. அவர்கள் பிரிக்க முடியாதவர்கள். அவர்களின் தீராத மோதலில் கலையைக் கண்டது செவ்வியல். நமது சிற்ப மரபில் இதற்கு எண்ணற்ற உதாரணங்களை காணலாம்.

அப்படியானல் ந. பிச்சமூர்த்தியை நமது மரபின் செவ்வியல் பண்புகளின் வழிவந்தவர் என்று கூறிவிட முடியாது என்பது தெளிவாகிறது. அது உருவகிக்கும் முழுமையும் சமநிலையும் அவரது கலைப்பிரக்ஞைக்குள் இல்லை. அவர் கற்பனாவாதிதான் (ரொமான்டிக்) அவரது கற்பனாவாதமே மரபில் இருந்து `உகந்த’ `இனிய’ விஷயங்களைப் பொறுக்கச் செய்தது. சூழலில் இருந்து `எளிய’ விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளச் செய்தது.

பாரதியும் கற்பனாவாதியே. அவரது கற்பனாவாதம் புதிய யுகம் சார்ந்தது. புதுமைக்கான கொப்பளிப்பு. பிச்சமூர்த்தியின் கற்பனாவாதம், பின்நோக்கி நிற்பது, இறந்தகாலம் நோக்கி ஏங்குவது இதுவே இவர்கள் இருவரிடையே உள்ள வித்தியாசம் என்று கூறலாம். ந. பிச்சமூர்த்தியை பாரதியுடன் ஒப்பிட்டு அவரது `பழைமை’யை உணர்வது மிக எளிய ஒரு விஷயம். அவரைப் புதுமைப்பித்தனிடம் ஒப்பிட்டு அவரது `பழைமை’யை வேறு விதமாக உணர்வது சற்று சிரமம். காரணம் ந. பிச்சமூர்த்தியின் மனிதாபிமானம் _ பாவனையற்ற இயல்பான சகஜமான மானுட நேயம் _ இருபதாம் நூற்றாண்டுப் பிரக்ஞையில் வேரூன்றியது. அது அவரை காத்துநிற்கும். ஆனால், ந. பிச்சமூர்த்தி-யின் படைப்புலகில் `நாசகார கும்பல்’ `துன்ப கேணி’ `கோபாலய்யங்காரின் மனைவி’ போன்ற அழுத்தமான சமூக யதார்த்த சித்திரிப்புகள் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதே போல `சிற்பியின் நரகம்’ `கபாடபுரம்’ போன்ற தத்துவார்த்த யதார்த்தம் உடைய கதைகளையும் அவர் எழுதவில்லை. யதார்த்தம் என்ற அம்சமே அவர் உலகில் பெரிதும் மௌனமாக்கப்பட்டுள்ளது. அங்கு இலக்கியவாதத்தின் கொடி பறக்கிறது. அதன் பொருட்டு அவர் தன் ஒரு விழியை மூடிக் கொள்கிறார் எனலாம். ந. பிச்சமூர்த்தியை ஆன்மிக கற்பனைவாதி (ஷிஜீக்ஷீவீtuணீறீ க்ஷீஷீனீணீஸீtவீநீ) எனலாம் என்று நான் எண்ணிக் கொள்கிறேன்.

மணிக்கொடி 1935 ஜனவரி 20 இதழில் பிச்சமூர்த்தி எழுதினார் (பிரார்த்தனை என்ற கவிதை)

வானகம் செல்லும் வண்ணம்
கூரையில் புறாவைப்போல்
கானக மன நெருக்கில்
உழலாமல் விண் எய்ததாலே...
பித்தனென பேரைப் பெற்றேன்
பித்தனாயிருக்க அருள்வாய்
பித்தரே பித்தர் குருவே.

மிக ஆரம்பகால கவிதையிலேயே இவ்வாறு கானக மனநெருக்கை விட்டு விலகி, விண் எய்த முயலும் பாவனை அவரிடம் கூடிவிட்டிருந்தது

துரதிர்ஷ்டவசமாகக் கலைகளும் இலக்கியம் கானக மனநெருக்கில் மட்டுமே விளைபவை. விண்ணில் அவை மலர்வதில்லை. மண்ணில் தெரியும் வானமே கலை. ஆம், வானமானாலும் அது மண்ணில் தெரிந்தாக வேண்டும்.