Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

நேற்றிருந்த வீடு

Labels: , , ,

எஸ்.ராமகிருஷ்ணன் - - கதாவிலாசம்


கரிச்சான குஞ்சு

3800613078_e69eb7e59d_m


வங்கியில் பணிபுரியும் என் நண்பர் சரவணன், கிழக்குத் தாம்பரத்தின் உள்ளே ஓர் இடம் வாங்கி, புதிதாக வீடு கட்டியிருந்தார். வழக்கமாக புதிய வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் காலையில்தான் விழா நடத்துவார்கள். ஆனால், சரவணன் யாவரையும் மாலையில் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு. வீட்டின் வெளியே, சிறிய தோட்டம் அமைப்பதற்காக இடம் விட்டிருந்தார்கள். விருந்தினர்களுக்காக இரவு உணவு, ஒரு பக்கம் தயாராகிக்கொண்டு இருந்தது.

வீட்டைச் சுற்றிக் காட்டும்போதே, இருட்டத் தொடங்கியிருந்தது. வீட்டில் ஒவ்வொரு அறையிலும் விதவிதமான விளக்குகள். ஒரு அறையில் பெரிய லாந்தர் விளக்கு தொங்கிக்கொண்டு இருந்தது. சுவர்களில் நவீன டியூப்லைட்கள். போதாததற்கு சிறியதான மெர்க்குரி விளக்குகள். வெளிச்சம் ஒரு நீருற்று போல வீடெங்கும் பொங்கிக்கொண்டு இருந்தது. வீட்டின் வெளியிலும் நான்கு மூலைகளிலும் டியூப் லைட்டுகள். ஏன் இத்தனை விளக்குகள் என்று எண்ணும்படி அவை அமைக்கப் பட்டு இருந்தன.

சரவணன் அதைக் கவனித்தவர் போலச் சொன்னார்... ‘Ôவீட்ல மொத்தம் நாற்பத்தெட்டு லைட் போட்டிருக்கேன் சார். ராத்திரியானா மொத்த லைட்டையும் எரியவிட்றணும். விடிய விடிய எரியட்டும். வீடு எப்பவும் வெளிச்சமா இருக்கணும்...’’
நான் வேடிக்கையாகக் கேட்டேன்... ‘Ôதூங்கும்போதுகூட விளக்கை அணைக்கமாட்டீர்களா?’Õ
அவர் தலையசைத்தபடியே சொன்னார்... ‘Ôபத்து வருஷமா நான் தூங்கும்போதுகூட லைட் எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். இல்லைன்னா பயமா இருக்குது.’’
ஒரு குழந்தையைப் போல பேசுகிறாரே என்று தோன்றியது. வீட்டைப் பார்க்க வந்தவர்கள், வீட்டிலிருந்த விளக்குகளைப் பற்றி வியந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அருமையான உணவுக்குப் பிறகு, நட்சத்திரங்கள் சிதறிக்கிடந்த வானத்தின் அடியில், நாங்கள் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டோம். சரவணன், தான் கட்டிய வீட்டைத் தானே பார்த்துக் கொண்டு இருந்தார்.

ÔÔஇந்த வீடு கட்ட ஆரம்பிச்ச அன்னியிலேர்ந்து தினம் இங்கே வந்து இதே இடத்தில் உட்கார்ந்து பார்த்துட்டேயிருப்பேன். பாதி கட்டி முடிஞ்சபோது சிமென்ட் பூசாத சுவரை தடவிக் கொடுப்பேன். சில நேரம் அந்த ஈர வாசனையை நுகர்ந்து கிட்டிருப்பேன். வீடு கட்டுறது ஒரு தனி யான அனுபவம். எத்தனையோ பிரச்னை, சிக்கல்னு வந்தாலும் கண்ணு முன்னாடி வீடு கொஞ்சம் கொஞ்சமா வளர்றதைப் பாக்குறது தனி சுகம்!

கதவில்லா வீட்டைப் பாக்கும்போது அது நம்ம தோள் மேல கை போட்டு நின்னு பேசிட்டிருக்கிற மாதிரி ஒரு நெருக்கம் வந்திடும். ஒவ்வொரு புது வீடு கட்றதுக்கு பின்னாடியும் கண்ணுக் குத் தெரியாத எத்தனையோ அவமான மும் ரணமும் இருக்கத்தான் செய்யுது.
வீடு கட்டி முடிச்சு, கதவு ஜன்னல் எல்லாம் பொருத்தி வெச்ச அன்னிக்கு கை நடுங்குது. கரகரனு கண்ணுல தண்ணி கொட்டிருச்சு. நிஜமா அழுதுட் டேன். வீடு வெறும் இடம் இல்லை. ‘நான் தோத்துப்போகலை. நல்லாதான் வாழறேன்’னு காட்ற சாட்சி அது.

மதுரைல நாங்க வாழ்ந்த வீட்டை, கடன் வாங்குறதுக்காக அப்பா அடமானம் வெச்சுட்டாரு. வட்டி கட்ட முடியலைனு வீட்டு கரன்ட்டை கட் பண்ணிட்டாங்க. எல்லாரும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற வயசு. வீட்ல பகல்லயே குண்டு பல்பு எரிஞ்சா தான் வெளிச்சம் வரும். கரன்ட் போனதில் இருந்து, வீட்ல எப்பவும் இருட்டுதான். எங்கம்மா ஆத்திரத்தில், கெரசின் விளக்குகூட வைக்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்தாள். இருட்டுலியேதான் சாப்பிடுவோம். இருட்டுலியேதான் படுத்துக்குவோம். தினம் ராத்திரில யாராவது அழுகிற சத்தம் கேட்கும்.. அக்காவா, அண்ணனா, அண்ணியா, அம்மாவானு முகம் தெரியாது. இருட்டு எங்களைக் கொஞ்சம் கொஞ்சமா தின்னுகிட்டே இருந்துச்சு.
கடன் தொல்லை தாங்க முடியாம அப்பா வீட்டைவிட்டு ஓடிப் போயிட் டாரு. வீட்டை வித்துட்டுப் புறப்பட லாம்னு நினைச்சாக்கூட கடன்ல இருந்து தப்ப முடியாதுனு தெரிஞ்சுபோச்சு. வேற வழியில்லாம ராத்திரியோட ராத்திரியா யாருக்கும் தெரியாம, கொஞ்சம் துணியை மட்டும் எடுத்துக்கிட்டு வீட்டை அப்படியே சாமான்களோட விட்டுட்டு மெட்ராஸ§க்கு வந்துட் டோம். முப்பது வருஷமாச்சு! ஒரு தடவைகூட எங்க வீடு என்ன ஆச்சுனு பாக்கப் போகவே இல்லை.

நடுவுல ஒரு தடவை எங்க அண்ணன் மட்டும் போய்ப் பாத்துட்டு வந்தான். ‘வீட்டை இடிச்சு அந்த இடத்தில் பெரிய செருப்பு கடை வந்திருச்சு’ன்னு சொன்னான். வீட்டை இடிக்கிறப்போ எங்க சாமான்களை எல்லாம் அள்ளி தெருவில் போட்டாங்களாம். அந்த நாற்காலியை ஆயிரம் ரூபாய் கொடுத்து அண்ணன் வாங்கிட்டு வந்தான். அதைப் பாக்கப் பாக்க ரெண்டு நாளைக்கு யாருக்கும் சாப்பாடு இறங்கலை.

எங்க எல்லோரோட உடம்புலயும் இருட்டு ஒட்டிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இருக்கு. எப்படியோ வேலை செஞ்சு மேலே வந்துட்டோம். இப்போ அண்ணன் பெங்களூர்ல வீடு கட்டியிருக்கான். அக்கா காஞ்சிபுரத்துல இருக்கா. அவளும் பெருசா வீடு கட்டிட்டா. நான்தான் பாக்கி. நானும் இப்போ வீடு கட்டிட்டேன். சொல்லுங்க சார், இருட்டுலியே சாப்பிட்டு இருட்டுலியே முகம் கழுவி வாழ்ந்ததை மறக்க முடியுமா?’’
வானில் இருந்த நட்சத் திரங்கள் ஒடுங்கியிருந்தன. சரவணன் வீட்டின் பிரகாச மான வெளிச்சத்தைக் காணும் போது விளக்கிச் சொல்ல முடியாத வேதனை என் உடலைக் கவ்வுவதாக இருந்தது.

வர்ணம் பூசப்பட்டு ஒளிரும் வீடுகளுக்குப் பின்னால் கறுப்பும் வெளுப்புமான கதைகள் ஒளிந்திருப்பதுதான் வாழ்வு சொல்லும் நிஜம் போலும்! கூடாரத்தைத் தூக்கிக் கொண்டு ஆட்டு இடையர்கள் ஊர் ஊராகப் போவது போல நகர வாழ்வில் வீடு மாற்றி வீடு என்று அலைபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.

வீட்டை உருவாக்கிக்கொள்வது எளிதானதில்லை. அது நீண்ட கனவு. சிலருக்குச் சில வருடத்தில் அது சாத்தியமாகிறது. பலருக்கு அது எட்டாக்கனவாகவே எஞ்சி விடுகிறது. மகாகவி பாரதிகூட காணி நிலத்தில் அழகிய தூண்கள் கொண்ட வீடு கட்டி வாழ்வதற்கு தானே ஆசைப்பட்டிருக்கிறான்!

வீடு பறிபோவதுதான் வாழ்வு நசிவதற்கான முதல் அடையாளம். எத்தனை கடன்கள் இருந்தாலும் வீடு இருக்கும் வரை யாவும் திரும்ப கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வீட்டை இழந்த பிறகு வாழ்வில் மிஞ்சுவதெல்லாம் போக்கிடமற்ற தனிமையும் அவமானமும்தான்.

இத்தகைய அவமானத்திலிருந்து மீள முடியாத மனிதன் மூர்க்கமாகி விடுகிறான்; அல்லது, புத்தி பேதலித்து விடுகிறான். இந்த நிகழ்வுக்கு சாட்சி சொல்வது போலிருக்கிறது ‘கரிச்சான குஞ்சு’வின் ரத்த சுவை என்கிற கதை. சம்ஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட கரிச்சான் குஞ்சு, மிகக் குறை வாகவே தமிழில் எழுதியுள்ளார்.
ராமு என்பவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கேள்விப்பட்டு அவனைக் காண்பதற்காகச் செல்லும் அவனது நண்பரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. ஊரில் சுற்றித் திரியும் மூர்க்கமான குரங்கு ஒன்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு குரங்கு போகும் இடங்களுக்கெல்லாம் தானும் கூடவே அலைகிறான் ராமு.

அவன் குடும்பம், கடன் தொல்லை யால் வீட்டை இழந்து நொடித்துவிட்டது. வீட்டை காலி செய்வதற்கு கோர்ட் இரண்டு மாத காலம் அவகாசம் தந்திருக்கிறது. அந்த நிலையில்தான் ராமுவுக்கு புத்தி பேதலித்துவிட்டது.
ராமுவின் வீட்டைக் கடனுக்காக எழுதி வாங்கியவர் கோபாலய்யர். அவர் வேண்டும் என்றே வட்டியை அதிகமாக வாங்குவதற்காக பம்பாயில் இருக்கிற தன் தங்கையின் பெயரால் கடன் பத்திரம் எழுதித் தருகிறார். அதனால் ஒவ்வொரு முறை கடனை முடிக்கப் போகும்போதும் பத்திரம் தங்கையிடம் இருப்பதாகச் சொல்லி வட்டியை மட்டும் வசூல் செய்கிறார்.

சில வருடங்களில் வட்டி அதிகமாகி, கடனைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால் வீடு கடனில் மூழ்கிப் போய்விடுகிறது. அன்றிலிருந்து ராமு சித்தம் கலங்கிவிட்டது என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ராமுவைச் சந்தித்துப் பேசுகிறான் ஒரு நண்பன். ராமு தனக்கு உண்மையில் சித்தம் கலங்கிவிடவில்லை என்றும், ஒரு நாள் தான் ஒரு முரட்டுக் குரங்கைப் பார்த்தாகவும், அது ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று அதன் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாகவும், அப்போது குரங்கு தன் கையில் வழியும் நாயின் ரத்தத்தைச் சுவைத்துப் பார்க்கவே அந்த ரத்த ருசி அதற்குப் பிடித்துவிட, அன்றிலிருந்து அது மாமிச பட்சிணியாக மாறி விட்டதாகவும் சொல்கிறான். அதைக் கேட்ட நண்பன், ‘‘குரங்கு அப்படியானதில் உனக்கு என்ன பிரச்னை?’’ என்று கேட்க, ‘‘தாவர பட்சிணியான குரங்குகூட ரத்த சுவைக்குப் பழகி, மாமிசபட்சிணியாக மாறிவிடு வதைப் போன்றதுதான் கோபாலய்யர் வேலையும். அவர் கடன் கொடுக்கத் தொடங்கி அதுவே பின்பு வட்டித் தொழிலாகி இன்று ரத்தம் குடிக்கப் பழகிவிட்டார். நான் கோபாலய்யரின் பின்னால் அலைவது போல நினைத்துக்கொண்டுதான் குரங்கின் பின்னால் அலைகி றேன். அது என்ன செய்யும் என்று எனக்குப் புரியவே இல்லை’’ என்கிறான் ராமு.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த முரட்டுக் குரங்கு இன்னொரு குரங்காட்டி கொண்டு வந்திருந்த பெண் குரங்கு ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய் அதையும் கொன்று விடுகிறது. குரங் காட்டி முரட்டுக் குரங்கை சுருக்குப் போட்டுப் பிடித்துவிடு கிறான். ஆனால், ஊர்க்காரர்கள் அது தெய்வாம் சம் கொண்டது என்று விட்டு விடச் சொல் கிறார்கள்.

குரங்காட்டி விட மறுக்கவே அவனை அடித் துப் போட்டு விட்டு குரங்கை அவிழ்த்து விடுகிறார்கள். கோபாலய்யரும் குரங்கும் ஒன்று தான் என்று தெரிந்ததால் தானோ என்னவோ ராமு குரங்கைப் பார்த் துக்கொண்டே இருக்கிறான். ஊர்க்காரர்கள் அவனைப் பைத்தியம் என்று சொல்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது.
ருஷ்ய விவசாயி கள், புதுமனை புகுவிழா நாளில், வீடு ஒரு விருட்சத் தைப் போல நன்றாக வேர்விட்டு மண்ணை இறுக்க மாகப் பற்றிக் கொள்ளட்டும் என்று வாழ்த்து வார்களாம். காற்றையும் வெளிச்சத்தையும் தனக்குள்ளாக வாங்கிக்கொண்டு வீடும் சதா எதையோ பாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏனோ வீட்டின் பாடல், நம் செவிகளுக்குக் கேட்பதே இல்லை.

‘பசித்த மானுடம்’ என்ற அரிய நாவலை எழுதி, தமிழ் நாவல் உலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் கரிச்சான் குஞ்சு. தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள சேதின்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் நாராயணசாமி. இவரது நெருங்கிய நண்பர் எழுத்தாளர் கு.ப.ராஜ கோபாலன் ‘கரிச்சான்’ என்ற புனைபெயரில் எழுதியதன் நினைவாக, தன் பெயரை ‘கரிச்சான் குஞ்சு’ என்று மாற்றிக் கொண்டவர். இசையில் ஆழ்ந்த புலமை படைத் தவர். கும்பகோணத்தில் வாழ்ந்து மறைந்த இவர், இந்தியத் தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

சாலைத் தெரு

Labels: , , ,

எஸ்.ராமகிருஷ்ணன் –கதாவிலாசம்
ஆ.மாதவன்


பகல் கனவுகள் பலிப்பதில்லை என்பார்கள். அது நிஜமா எனத் தெரியாது. ஆனால், பள்ளிக் கனவுகள் எதுவும் பலிப்பதேயில்லை என்பதை நானே கண்டிருக்கிறேன்.
பள்ளியில் பேசிய ரகசியப் பேச்சுகள் யாவும் கண்  விழித்தபடி கண்ட கனவுகள்தானே! வகுப்பறையில் உடைந்த சாக்பீஸ் துண்டுகளைவிடவும் அதிகமாகக் கனவுகள் சிந்திக்கிடந்திருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் திரைப்பட விழாவுக்குத் திருவனந்தபுரம் madhavan செல்லும்போதும், சாலைத் தெருவுக்குச் செல்ல மறப்பதேயில்லை. பத்மநாபசுவாமி கோயில் எதிரில் உள்ள பரபரப்பான வணிக வீதி அது. இந்த விருப்பத்துக்குக் காரணம், அந்தத் தெருவில்தான் ஆ.மாதவனின் கடை இருக்கிறது.

ஆ.மாதவன், தமிழின் தனித்துவமான எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் வாழ்பவர். சாலைத் தெருவில் ஒரு கடையை நடத்தி வருகிறார்.

அந்தத் தெருவில் நடக்கும் வெவ்வேறு நிகழ்வுகளை, அங்கு வாழும் மனிதர்களை, அவர்களின் விசித்திர நடவடிக்கைகளை விவரிக்கின்றன அவரது சிறுகதைகள்.
அவரது 'வேஷம்' என்ற கதையைப் படித்தவுடனே, அவரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதற்காகவே ஒருநாள் இரவு ரயிலில் புறப்பட்டு, திருவனந்தபுரம் சென்றேன்.
ஆ.மாதவன் என்ன வணிகம் செய்கிறார், கடை எண் என்ன... எதுவும் தெரியாது. அவரது வீட்டு முகவரியும் என்னிடமில்லை!

சாலைத் தெருவுக்குச் சென்று விசாரித்தபோது, அப்படி ஒரு தமிழ் எழுத்தாளர் இருப்பதே எவருக்கும் தெரியவில்லை! 'பாண்டியா?' என்று மட்டும் ஒரு கடைக்காரர் கேட்டார்.'திருவனந்த புரத்திலே பிறந்த தமிழர்' என்று சொன்னேன். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை! சாலைத் தெருவுக்குள்ளாகவே மாலைவரை அங்குமிங்கு மாகச் சுற்றியலைந்துவிட்டு, இரவே ஊர் திரும்பிவிட்டேன்.
ஆனால், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஆ.மாதவனை தமிழ்ச் சங்கக் கூட்டமொன்றில் சந்திக்க நேர்ந்தது. எளிமையான தோற்றம். முகத்தில் சாந்தம்.
வெளிப்படுத்த முடியாத அன்புடன் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். 'உங்களைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசைப்பட்டிருக்கிறேன்' என்று முகத்துக்கு நேராகச் சொல்லக் கூச்சமாக இருந்தது.
சாலைத் தெருவாசிகளை ஆ.மாதவன் தன் எழுத்தின் மூலம் அழியாத ஓவியங்களைப் போல சாஸ்வதமாக்கிவிட்டார். தமிழ் இலக்கியத்தில் ஒரேயரு தெருவைச் சுற்றியே தன் படைப்புலகை உருவாக்கிய தனியரு எழுத்தாளர் மாதவன்!
சொல்லித் தீராத கதைகள், அந்தத் தெருவில் ஊறிக்கொண்டிருக்கின்றனபோலும்! எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள், மனிதர்களின் சுபாவம் தெருவில் படிகிறதா... அல்லது, தெருவின் சுபாவம் மனிதர்களைப் பற்றிக்கொள்கிறதா எனத் தெரியாதபடி, சாலைத் தெருவும் அதன் மனிதர்களும் விசித்திரமாக இருந்தார்கள்!

மரத்தில் ஆணி அறையப்பட்ட இடத்திலிருந்து பிசின் வழிந்து கொண்டிருப்பதைப்போல, ‘வேஷம்' கதையைப் படித்த நாளிலிருந்து மனதில் அறியாத வலியன்று கசிந்துகொண்டிருந்தது.

சிவதாஸ் என்ற இளைஞனின் கதையே ‘வேஷம்'. அவன் பிழைப்புக்காக தாலூகா அலுவலகத்தில் மனுக்கள் எழுதித்தருவது, வெளிநாட்டுப் பயணிகளுக்கு பட்லர் ஆங்கிலத்தில் பேசி, கோயிலைச் சுற்றிக்காட்டுவது எனச் சின்னஞ்சிறு வேலைகளைச் செய்து பிழைத்துக்கொண்டு இருக்கிறான். நிரந்தர வருமானம் இல்லை, இருப்பிடமும் இல்லை!

சிவதாஸின் ஓர் அதிகாலைப்பொழுதில் கதை துவங்குகிறது. ஒரு கல்யாணத்துக்குச் செல்வதற் காக பத்மநாப சுவாமி கோயில் குளத்தில் விடிகாலையில் குளித்துவிட்டு, துவைத்துத் தயாராக வைத்திருந்த பாலிஸ்டர் வேட்டி, சட்டை அணிந்து முக்கில் இருந்த பண்டாரத்தின் வெற்றிலைப் பாக்குக் கடையில் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.

அவன் கல்யாணத்துக்குச் செல்வதற்கு ஒரேயரு காரணம் மட்டுமே இருக்கிறது. அது, அங்கே கிடைக்கும் ஓசிச்சாப்பாடு!

வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக, அருகில் உள்ள கல்யாண மண்டபங்களில் எந்தத் திருமணம் நடந்தாலும் பெரிய மனிதனைப் போல நுழைந்து, பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். அது, அவனது வாடிக்கை.
அன்றும், இதற்காகத்தான் அதிகாலையிலே தயாராக இருந்தான். திருமண வீட்டுக்கு ஆட்கள் வரத் துவங்கினார்கள். திருமண மண்டபத்தை நிர்வகிக்கும் நாயருக்குத் தெரியாமல் உள்ளே போகவேண்டும்!
அவர் கண்டுபிடித்தால் துரத்திவிடுவார் என்பதால், பெரிய மனிதரைப்போல உள்ளே நுழைந்து, வசதியான ஒரு நபரின் அருகில் உட்கார்ந்துகொண்டான். அது, ஒரு மலையாளி வீட்டுத் திருமணம். உள்ளே உணவு தயாரிக்கும் வாசம் கமகமக்கிறது.

'மண்டப நிர்வாகி வருகிறாரா?' என்று கள்ளப் பார்வை பார்த்தபடியே, கல்யாணச் சடங்குகளைக் கவனிக்கிறான். மணப்பெண்ணுக்குப் புதுப்புடவை தருகிறார்கள். அதை வாங்கிக் கொள்ளும்போதுதான் தெரிகிறது, அந்த மணப்பெண் அவனோடு பள்ளியில் படித்த சுபாஷினி. உடனே, 'அவள் தன்னைப் பார்த்து விடக்கூடாதே' என்று கலக்கம் உருவாகிறது.

பால்ய வயதில் சுபாஷினியும் அவனும் ஒரே பள்ளியில் படித்தார்கள். ஒரு நாள் சுபாஷினிமீது காகித அம்பு விடுகிறான் சிவதாஸ். அவளும் பதிலுக்குச் சிவப்பு மையை அவன்மீது ஊற்று கிறாள். இதனால் சண்டை உருவாகி, நாளடைவில் அது சமாதானமடைந்து நேசமா கிறது. ஆனால், பள்ளிப் படிப்பை முடிக்காமலே சிவதாஸ் பாதியில் நின்று விடுகிறான்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனது பள்ளித் தோழியைப் பார்த்தவுடன், கல்யாண மண்டபத்தைவிட்டு வெளியே போய்விடலாமா என்று தோன்றுகிறது. ஆனால்,3770584447_d1e7bcd268_m தன்மானத்தைவிடவும் பசி வலுவடையவே, சாப்பிடு வதற்குச் செல்கிறான். விதவிதமான உணவு வகைகள், பாயசம் என விருந்து மணக்கிறது. அவனது இலையில் பொரியலும் அவியலும் பருப்பும் நெய்யும் சுடுசாதமும் போடுகிறார்கள்.
சாப்பிடக் கை வைக்கும்போது, மண்டப நிர்வாகி நாயர் அவனைப் பார்த்துவிடுகிறார். சட்டையைப் பிடித்து இழுத்து, 'ஓசிச் சாப்பாட்டுக்கு வந்தவனுக்கு முதல் பந்தியா?' என மிகக் கேவலமாகத் திட்டுகிறார்.

சிவதாஸ் எழுந்துகொள்ள முற்படும்போது, புதுமணப்பெண்ணாக எதிர்வரிசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுபாஷினி, அவனைத் திரும்பிப் பார்க்கிறாள்.
வெளியே துரத்தப்படும் அவனை, வாசலில் காத்துக்கிடக்கும் பிச்சைக்காரர்கள்கூடக் கேலி செய்து சிரிக்கிறார்கள்.
'கூடப்படித்த பெண்ணின் திருமணத்தில், இப்படி ஒருவேளை சோற்றுக்கு ஆசைப்பட்டுப்போய், கள்ளனைப்போலப் பிடிபட்டு அவமானப்பட்டு விட்டோமே? என்ன வாழ்க்கை இது! குளத்தில் விழுந்து செத்துவிடலாமா?' என்று தோன்றுகிறது.
ஆத்திரத்தில், தான் போட்டிருந்த பாலிஸ்டர் சட்டையைக் கழற்றிச் சுருட்டி, குளத்தில் வீசி எறிகிறான். சிவதாஸின் வேஷம் கலைந்து போயிற்று. ஆனால், நிர்வாணத்தை விடவும், தான் நேசித்த பெண்ணின் முன் அடைந்த அவமானமே, அவன் உடலைக் கூசி நடுங்கச் செய்வதாக இருந்தது.

தோல்வியைவிடவும் அதை ஒப்புக்கொள்ளும் தருணம்தான் அதிக வலியைத் தரக்கூடியது.

அவமானப்படுவது பெரிய விஷயமல்ல. நாம் நேசிக்கும் ஒருவரின் முன்பாக அவமானப்பட்டு நிற்பதுதான் தாங்கமுடியாத வலி, இல்லையா?
அதோடு, இந்தக் கதை பில்லியர்ட்ஸ் மேஜையில் ஒரு பந்து மோதி, மற்ற பந்துகளைத் திசைக் கொன்றாக உருளச்செய்வதுபோல, என்றோ என்னுள் புதையுண்டு போயிருந்த மெகருன்னிசா டீச்சரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
கிராமப் பள்ளியன்றில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, மெகருன்னிசா என்ற புதிய ஆசிரியை வேலைக்கு வந்துசேர்ந்தாள். மெகருன்னிசாவுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். காலில் வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தாள்.

மற்ற ஆசிரியைகளைப்போல் இல்லாமல், அவள் எப்போதும்சிரித்துக் கொண்டே இருந்தாள். அவள் வருவதற்கு முன்புவரை, பள்ளியில் இருந்த ஆசிரியை களுக்குத் தங்கள் வயது தெரியவே இல்லை!

ஆனால், அவள் வந்த மறுநாளில் அவர்களின் நரைத்த தலையும், பருத்த உருவமும் உரத்த குரலும் அவர்களின் வயதைக் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். அவசரமாகத் தங்களை அழகு படுத்திக்கொள்ளத் துவங்கினார்கள். அது, அவர்களது வயதை மேலும் அதிகப்படுத்திக் காட்டியது.
ஆசிரியர்களும் மாணவர்களைப் போலவே, டக்இன் பண்ணிக்கொண்டு வகுப்புக்கு வந்தார்கள். அவர்கள் பாண்ட் பாக்கெட்டில் சீப்பு இருப்பதும் அடிக்கடி அவர்கள் தலைசீவிக்கொள்வதும் தெரிந்தது.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் யாவரும் ஒன்றுசேர்ந்து ஒருதீர்மானம் போட்டோம். எங்களைத் தவிரவேறு வகுப்பு ஆசிரியர்களோ மாணவர்களோ மெகருன்னிசா டீச்சரைக் காதலிக்கக் கூடாது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது எளிதாக இல்லை.

மெகருன்னிசா டீச்சர் எட்டாம் வகுப்புக்கு ஆங்கிலப் பாடம் எடுக்கச் சென்றபோது, ஒரு மனப்பாடப் பாடலைத் தப்பில்லாமல் சொன்னதற்காக, கோபாலைப் பாராட்டி ஒரு சாக்லெட்டைப் பரிசாகத் தந்த நிகழ்ச்சி, எங்களை ஒரு இரவு தூக்கமில்லாமல் செய்ததோடு, கோபாலைப் பள்ளியைவிட்டே விரட்டுவதற்கான சதி ஆலோசனைகளிலும் ஈடுபடச் செய்தது.

அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுப்பு வந்தது. அதன்பிறகு, பள்ளி திறந்த இரண்டு நாட்கள் மெகருன்னிசா டீச்சர் வரவில்லை. மூன்றாம் நாள் வந்தவள், வகுப்பு முழுவதற்கும் சாக்லெட் கொடுத்துவிட்டு, தனக்கு அடுத்த வாரம் திருமணம். எல்லோரும் அவசியம் வரவேண்டும் என்றாள். சாக்லெட்டை மெல்ல முடியவில்லை... கசப்பாக இருந்தது!
அன்று மாலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் திரும்பவும் ஒன்றுகூடி, மறு தீர்மானம் போட்டோம். எங்களை ஏமாற்றிவிட்டு டீச்சர் திருமணம் செய்துகொள்ளப் போகிறாள். ஆகவே, அவளது திருமணத்துக்கு யாரும் போகக்கூடாது! அதை மீறி, திருமலைமுருகன் மட்டும் டீச்சர் திருமணத்துக்குப் போயிருந் தான். அதற்காக அவனை நாங்கள் விளையாட் டில்கூடச் சேர்த்துக்கொள்ளவில்லை!
திருமணம் நடந்து முடிந்த இரண்டாம் நாளே, மெகருன்னிசா டீச்சர் பள்ளிக்கு வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் களையே இல்லை. பாடம் நடத்தும்போது, ஏதோ யோசனையாகவே இருந்தாள்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு, ஒரு பகலில் புல்லட் ஓட்டிக்கொண்டு ஒரு ஆள், எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். தன்னை மெகருன்னிசாவின் கணவன் என்று சொல்லிக்கொண்டு, எங்கள் வகுப்பறைக்கு வந்தான்.
டீச்சர் அவனை வகுப்புக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய், ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள். அவன் திடீரெனக் கத்தத் துவங்கி, 'என்னடி... பேசிட்டே போறே? சம்பாதிக்கிற திமிரா... நீ வேலை பார்த்தது போதும். இப்பவே என்கூடக் கிளம்பு' எனக் கையைப் பிடித்து இழுத்தான்!

டீச்சர் வர மறுத்து, ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவன் ஆத்திரத்தோடு மெகருன்னிசா டீச்சரின் முகத்தில் ஓங்கியறைந்தான். வலி தாங்காமல் கத்தி அழுதுவிட்டாள் டீச்சர்.

மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்து, டீச்சரின் கணவனை விலக்கித் தனியே அழைத்துக்கொண்டு போனார்கள். சிறுகுழந்தையைப் போல மெகருன்னிசா டீச்சர் அழுதுகொண்டிருந்தாள்.
அடிபட்டதுகூடக் காரண மில்லை... இத்தனை மாணவர்கள் பார்க்க, அடி வாங்கிவிட்டது தான் அவளை வேதனைப்படுத்தியிருக்க வேண்டும். தலை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. தொலைவில் டீச்சரின் கணவன் உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தான்.

வெளிநாட்டில் வேலை செய்வதாகச் சொல்லி அவன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவனுக்கு முன்பே ஒரு திருமணம் நடந்து மணவிலக்கு நடந்திருப்பதாகவும் மெகருன்னிசா டீச்சர், மற்ற ஆசிரியர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். டீச்சர், அதன்பிறகு வகுப்புக்கு வரவேயில்லை. பள்ளியிலிருந்தும் மாற்றல் வாங்கிக்கொண்டு போய் விட்டாள்.

பால்யத்தில் அவள் உருவாக்கிய ஆசைக் கனவுகள், நீர்க்குமிழ்கள் போலக் காற்றில் நிமிஷ நேரம் அழகு காட்டி விட்டுக் கரைந்து போய் விட்டன.

என்னவானது அவள் வாழ்க்கை? எங்கே இருக்கிறாள்? இன்றுவரை எதுவும் தெரியாது. கதையைவிடவும் வாழ்க்கை அதிகப் புதிரானதில்லையா?

'ஒரே படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேறு வேறு கனவுகள் காண்கிறோம்' என்று ஆங்கிலத்தில் ஒரு வழக்குச் சொல் இருக்கிறது.

கனவுகள் நமக்குக் கிடைத்த வரமா, சாபமா என்றுதான் தெரியவில்லை!

ஆ.மாதவன் 1934-ம் வருடம் திருவனந்தபுரத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி இறுதியுடன் படிப்பை விட்டுவிட்டு கடை வியாபாரத்துக்குச் சென்றுவிட்டார். நாற்பத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. இவரது சிறுகதைகள் ‘ஆ.மாதவன் கதைகள்' என்ற பெயரில் மொத்தத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ‘கிருஷ்ணப் பருந்து' இவரது புகழ்பெற்ற நாவலாகும்

பறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்

Labels: ,

தேவதேவன்

1 ] பனைகள்

பனைகளின் தலைகளெங்கும்
பறவைகளின் சிறகுகள்
பச்சைப்பனைகளின் நடுவே
ஒரு மொட்டைப் பனை
மொட்டைப்பனை உச்சியிலே
ஓர் பச்சைக்கிளி
அடங்கிவிட்டது
'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல்
மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது
இனி இங்கே நான்
செய்யவேண்டியதுதான் என்ன ?
'நானே தடைகல் 'ஆகும்வழியறிந்து
வழிவிடுவதை தவிர ?
பனைகளின் தலைகளெங்கும்
படபடக்கும் சிறகுகள்
பாவம் அவை பூமியில்
மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

18tree-600
2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

3] பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்
ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது
ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்

4] தனிமரம்

ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்
தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை
அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்

5] பனை

விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ
எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?
அனைத்தையும் ஊருருவிய பின்னே
ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்
அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?
ஒற்றைகாலில் நின்றபடி
உன் தவத்தின் வைரத்தை
என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?
அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்
வீற்றிருந்தது அது
பின்பு
இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து
வெளியேறியது அது
கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்
எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து
நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்
நின்றிருந்தது அது .

6] நச்சுமரக்காடு

ஒரு மரம்
அதன் ஆணிவேர் நான்
அதன் பக்கவேர்கள்
என் மதம் என் ஜாதி என் இனம்
என் நாடு என் கொள்கை என் மரபு
இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை
நான் சொல்ல வேண்டுமா ?
அச்சம்தரும் வலிமையுடன்
அடிமரம்.
ஆயிரமாயிரமாண்டு எனினும்
மனித குலம் அளவுக்கு இளமை
அதன் இருப்பிற்கும் எதிர்காலத்துக்குமான
உத்த்ரவாதப் பசுமை தழைக்கும்
அதன் கிளைகள்
எந்த புகைப்படத்திலும்
எந்த வரைபடத்திலும்
அடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்
எங்கும் காய்த்து குலுங்குகின்றன
தோட்டாக்கள் வெடிகுண்டுகள் அணுஆயுதங்கள்

7] பூக்கும் மரங்களின் ரகசியம்

நீரை நாடும் தேடலே
வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே
அடிமரம்
ஒளியை நாடும் விழைவே
கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே
மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே
தளிர்கள்
அறிந்தேன்: பூக்கும் மரங்களின்
ரகசியம்.

8] புயலில்

புயலில் சரிந்த ஒரு மரத்தை
நிமிர்த்தி நிற்க வைத்துவிட்டேன்
ஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.
நான் சொன்னேன் குழந்தைகளிடம்
' 'இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் '
எல்லாம் வெகு சுலபம்
புயலில்
தன் வாழ்வுக்காய் அன்றி
தன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை
வெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்
சொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .
மாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய
வீழ்ந்து கிடந்தது மரம்
தான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான
ஓரு பேருண்மை முன்
வீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது ?
பரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்து
அது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா
சற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக
இடைஞ்சலில்லாத போக்குவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்
அகோரமாய் கைகால்கள் வெட்டப்பட்டு
சாலையோரமாய் இழுத்து இழுத்துவீசப்பட்டிருந்தது.
அணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து
கரைகளை உடைத்து
படைப்பின் ஆற்றையும் விழுங்கிவிட்டது
பேராசையின் வெள்ளம்
இயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்
விருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து
இருண்ட ராத்திரி .
முழு மரத்திலிருந்து
முறிந்து விழுந்த கிளையினைப்போல
நானும் என் குழந்தையும்

9] இலையசைவு
விருப்பமோ தீர்மானமோ இன்றி
இலையில் தங்கியிருந்த நீர்
சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது
ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை
'அப்பாடா ' என மேலெழுந்தது இலை
அது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்
தேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத
ஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்
அசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக
ஒரு நீண்டகிளையின் சிறு உறுப்பு
தான் என ஒரு கணமும்
முழுமுதல் என மறு கணமும்
இங்கும் அங்குமாய் அல்லாது
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது.

நகுலன் படைப்புலகம்

Labels: ,

சங்கர ராம சுப்ரமணியன்

(6.12.02 வாணியம்பாடியை அடுத்த காவலூரில் வெளி மற்றும் புது எழுத்து சார்பில் நடத்தப்பட்ட நகுலன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நகுலனின் பெயர் எனக்கு கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மூலம் தான் அறிமுகமானது. அப்போது நகுலன் nAGULANEதொடர்பாய் ஏற்பட்ட மனப்பதிவு ஏதோ ஒரு கொடுங்கனவை அனுபவமாக்குபவர் என்பது தான் அது. படிக்கும்போது விலகிப் படிக்க முடியவில்லை. பயம் கவிழ்த்துவிடும். பயம், பயம் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரபஞ்சனின் கதையில் வரும் நல்லியல்பு கொண்ட இளைஞனாக என்னை விரும்பிக் கொண்டிருந்தேன். ஜே.ஜே. படித்த பிறகு கூடுதல் நெஞ்சு நிமிர்த்தல். இந்த தருணத்தில் நகுலன் என் மன அடுக்குக்குள் புகுந்துவிட்டார். அவரை எப்படி வகைப்படுத்துவது. அவசியமில்லாத விருந்தாளியாய் - ஆனால் நான் அழைத்து வந்த விருந்தாளி அல்லவா -- அவரை வீட்டின் புழக்கடையில் அமரும்படி செய்துவிட்டு தப்பித்து என் இலக்கிய பயணத்தை லயம் குலையாமல் தொடர ஆரம்பித்துவிடுவேன்.

அதற்குபின் வந்த வசந்தங்களும், கோடைகளும், என் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. வெயிலும், ஊமைப்பனியும் தலைக்குள் இறங்கத் தொடங்கிய பொழுது அது. அப்போது நண்பனின் கடிதத்தில் நகுலனின் கவிதை வரி ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வெயில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து

கொண்டிருக்கின்றன

என்ற வரி அது. இவ்வரி தான் நகுலனை நோக்கி என்னை ஈர்த்தது. கோடைகளும், வசந்தங்களும் என் உடலில் உருவாக்கிய தோல்வி உறுப்புதான் புழக்கடையில் மறைந்திருக்கும் நகுலனிடம் என்னை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். செத்தைகள் குவிந்து, பிரமைகளை தோற்றுவிக்கும் திருநெல்வேலி வெயில் நகுலனுடைய கவிதைகளை வாசிக்க வைத்தது.

ஆசை, ஆசையின்மை - வெற்றி, தோல்வி - இருப்பு, இன்மை - மாறி, மாறி உரையாடிக் கொண்டிருக்கும் மனித மனத்திற்கு தோல்வியின் மீது ஒரு அடங்காத வசீகரம் உண்டு. அது இடிபாடுகள் மீதான வசீகரம். நினைவுகளில் சதா திளைத்துக் கொண்டிருக்கும் பொய்கைதான் தோல்வி. அது மிகுந்த அழகுடையது. நகுலனின் எழுத்தில் தோல்விதான் முக்கிய அனுபவம். நான் தோல்வி என்று குறிப்பிடுவது இலக்கிய தோல்வியை அல்ல. நகுலனின் அந்தரங்க தோல்வியும் அல்ல. சூழலை ஒரு நாடகமாக, ஏதோவொன்றை சுட்டி இன்னொன்றுக்கு காரணமாக்கும் வினோத தர்க்க முறையை ஒரு மனம் இயக்கமின்மையிலிருந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஏனெனில்

'யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம் '

நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம்.

வீட்டின் கூரையில் காகங்கள் கரைந்தால் விருந்தாளி வருவார்கள் என்பது நமது ஊர்களில் உள்ள நம்பிக்கை. ஊர் தொடர்பான கவனிப்பாய் இருக்கும். அந்த ஊரில் நிறைய பெண்கள் சைக்கிளில் போய் கொண்டிருப்பார்கள். ஊர் பற்றி எந்த ஒட்டுதலும் விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு நகுலனின் ஜன்னலில் இருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது. இந்தபார்வைதான் நிறுவப்பட்ட கலாச்சாரத்தின் sankar நினைவுகளிலிருந்து நகுலன் அணுகப்படாமல் இருப்பதற்கு காரணம். சமூகம் தான் உருவாக்கியுள்ள தளைகளை எழுத்தாளன் மீறும்போது அது முதலில் தன் எதிர்ப்புணர்வை தெரியப்படுத்துகிறது. காலத்தில் கலாச்சாரம் தன் இறுக்கத்தை நெகிழ்த்துகையில் அந்த எழுத்தாளனின் உடலையும் பொருத்திக் கொள்ள சில சமிக்ஞைகளை அனுப்புகிறது. தன்னை போன்ற உடல்கள் புறக்கணிக்கப்படும் வேளையிலும், உரையாடல் என அர்த்தப்படுத்திக்கொண்டு - அர்த்தப்படுவதான பாவனை செய்துகொண்டு - பதில் சமிக்ஞை செய்து தன்னை படைப்பாளி பொருத்திக் கொள்கிறான். வாழ்வையே அது தெரிவிக்கும் செய்தியின் அடிப்படையில் முப்பரிமாண கனவாக பார்க்காமல் வெளிறிய தன்மையை தொடர்ந்து கவனித்து வரும்போது கலாச்சாரமும் அரசியலும் அந்த விதிகளை ரகசியமாய் புறக்கணித்து விடுகின்றன. கலாச்சாரம் என்பதே ஜாதிகளின் நினைவின் மேலும், ரகசியக் கனவுகளின் மீது கட்டப்பட்டது தானே.

கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி ரகசியத் தன்மையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும் மரணமும் பெற்ற தருணம் அது. நகுலனும் எழுத்தின் விசார மரபிலும் மரபான சத்த ஒழுங்கிலும் தான் தன் கவிதைகளை எழுதத் தொடங்குகிறார். குருவாயூர் குருவி வருகிறது.

பிரெக்டுக்கு எதிர்வினை புரியும் விதமாகத்தான் நகுலன் முதலில் தன் அ-கவிதைப் பாதையை தொடங்குகிறார். ஏன் மரங்களைப் பற்றி பேசக் கூடாதென்று. பிறகு எழுதும் கவிதைகளில் குருவாயூர் குருவி இல்லை. அப்போது அவர் பார்வையில் படும்பொருள்கள் நிழலோடு சேர்ந்து நகுலனின் வெளிக்குள் புகுந்து விடுகின்றன.

* * * *

நினைவுப்பாதை, நாய்கள் போன்ற இவரது நாவல்களிலோ பிற புனைவுகளிலோ தமிழில் ஏற்கனவே உறுதிப்பட்ட செம்மையான கதைமாந்தர் உருவாக்கம் கிடையாது. நகுலனின் வெவ்வேறு சாயல்களாகத்தான் எல்லா பாத்திரங்களும் முயக்கம் கொள்கின்றன. நினைவுப்பாதை நாவலில் ஒரே ஒரு ஞாபகம் மட்டுமே புனே என்னும் ஒரு காட்சி அல்லது அனுபவத்தை வைத்து நடக்கப்போகும் விஷயங்களுக்கான சமிக்ஞையை பெறுவது போலத்தான். நகுலனின் எழுத்துக்களையும் அவர் விவரிக்கும் காட்சிகளையும் சில சகுனங்களாகத் தான் புரிந்து கொள்கிறேன். ஒரு தோல்வியுற்ற மனம் தெரிவிக்கும் நவீன சகுனங்கள் தான் அவை.

* * *

நிகழ் வாழ்க்கையை விசாரம் செய்து ஒரு தத்துவசரடில் எழுதிச் செல்வதாகத்தான் தமிழில் நவீன கவிதை வெளிப்படத் தொடங்குகிறது. மரபின் செழுமையை சாதகமாக்கிக் கொண்டு படிமங்களின் வழியான சமத்கார கவிதைகளை பிரமிள் எழுதத் தொடங்கும் போது நவீன கவிதையில் பெரும் உடைப்பு ஒன்று நிகழ்கிறது. நவீன கவிதை புனைவின் சாயல்களை ஒரே கணத்தில் நடந்து வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்

குருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்

Labels: ,

தேவதேவன்

1] மழை பெய்து

அப்போதுதான் முடிந்திருந்தது
அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு
பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை
நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்
அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல
வானளாவிய சூனிய வெளியெங்கும்
என் பார்வையை இழுத்தபடியே
பறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது
அதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்
ஒரு செத்த எலி

six-in-waiting-break-of-day-jennifer-lommers

2. குருவியுடன் சற்று நேரம்
நான் அதைப்பார்த்து புன்னகைத்தவுடன்
அது கேட்டது
'என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? '
'ஒரு கவிதையை எழுதப்பார்க்கிறேன் '
'புரியும்படியாக சொல் '
'உன்பார்வையில் சொல்ல வேண்டுமானால் பறத்தல்
படிப்பவர்களை கொஞ்சம் பறக்கும்படி செய்கிற
சில வரிகள் எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் '
'உனக்கு பறக்கத் தெரியுமா ? '
'பறக்கத்தெரிந்தவந்தானே எழுத முடியும் ? ' '
'அப்படியா ரொம்ப சந்தோஷம்
அதுதான் உன்னைப்பார்த்த உடனேயே
எனக்கு உன்மேல் ஒரு பிரியம்
ஏற்பட்டது போலிருக்கிறது
சரி இப்போது என்னோடு வருகிறாயா
ஒரு ரவுண்டு போய்வருவோம் '
இருவரும் பறக்கதொடங்கினோம்
'எங்கே போயிருந்தீர்கள் இத்தனைநேரம் ?
எத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா ? '
மாடிப்படி ஏறிவந்து எரிச்சலுற்றாள் மனைவி
எழுதுவதிலேயே மூழ்கி இருந்திருக்கிறேன் என்றேன்
வெற்றுக்காகிதத்தை சுட்டிக்காட்டி
விடாது அவள் துரத்த
உண்மை வெளியே வந்துவிட்டது


3. வண்ணத்துப்பூச்சி

அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று
வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்
இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்
அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டதா இம்மண்ணில் ?
மண்ணின் வளமும் பெருமையும் மின்ன
மேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்
எத்தனை வண்ணங்களில் !
ஆனால்
தேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்
சிறகுகள் பரபரக்க
அங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது
என்னை அறுத்தது அழகா அருவருப்பா
எனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி
உறிஞ்சும் வேகத்தில்
கைகூப்பி இறைஞ்சுவதுபோல
மேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான
உடல் முழுக்க விர்ரென்று
நிரம்பிக் கொண்டிருந்தது தேன்
சிறகுகளின் மெலிதானதுடிப்பில்
ஆழமானதோர் நடுக்கம்
எந்தமொரு வைராக்கியத்தை
மூச்சை பிடித்துகாக்கிறது அது ?
அதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்
கீழ்நோக்கி சுருண்டு உன்னியது
கரு தாங்கும் அதன் கீழ்பகுதி
தேன் நிரம்பி கனத்து
பூமி நோக்கி தள்ளும்
சின்னஞ்சிறு பாரத்தை
வெகு எளிதாக
தேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன
மரணமற்ற ஆனந்த பெருவெளியில்!


4 . நிசி

இரை பொறுக்கவும்
முட்டை இடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
வானவெளிப்பறவை ஒன்று
இட்ட ஒரு பகல் முட்டையின்
உட்கரு நிசியுள்
பகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்
உறங்காது துடிக்கும் நான்
என் அவஸ்தைகள்
கர்வுவில் நடைபெறும் வளர்ச்சியா
பரிணாம கதியில்மனிதனை புதுக்கி
ஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா
பகலின் நினைவுகள் கொட்டி கொட்டி
இரவெல்லாம் தெறிக்கும்
என் சிந்தனைகள் வேதனைகள்
ஏன் இவ்வேதனை ?
எதற்கு இச்சிந்தனைகள் ?
நானே அறியாது
என்னில் கலக்கும் ஜீன்கள்
கருவே அறியாது
கருவில் கலக்கும் தாதுக்கள் எவை ?
இனி நான் எவ்வாறாய் பிறப்பேன்
என் கனவில் எழுந்த அந்த மனிதனாய்
நான் என்று பிறப்பேன் ?
அல்ல மீண்டும் மீண்டும்
முட்டை இடவும் இரை ப்றுக்கவும்
இரைக்காய் சக ஜீவிகளுடன்
போராடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
அதே வானவெளிபறவையாக

5. துள்ளல்

நீரின் மேற்பரப்பில் ஒருமீன்
துள்ளி விழுகையில் கண்டது
சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில்
பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில்
மரணம்
மரித்த அக்கணமே பறவை


6. சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...

ஒரு பறவை நீந்துகிறது
சொற்களை வாரி இறைத்தபடி
சொற்களை வாரி இறைப்பதனாலேயே
அது நீந்துகிறது
காற்றின் துணையும் உண்டு
நீ இக்கவிதைஅயி வாசிக்கையில்
அமைதியான ஏரியில்
துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்
படகுப்பயணம் போல
கேட்கிறதா உனக்கு
அப்பறவையிந் சிறகசைவு தவிர
வேறு ஒலிகளற்ற பேரமைதி ?
சொற்பெருவெளியில்
சொல்லின் சொல்லாய் அப்பறவை
தன் பொருளை தேடுவதாய்
சொற்களை விலக்கி விலக்கி
முடிவற்று முன் செல்கிறது
அப்போது
உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?
பரவசமா ?
ஏகாந்தமா ?
குற்றவுணர்ச்சியின் கூசலா ?
தனிமையா ?
தாங்கொணாத துக்கமா ?
இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை
உன்னில் உண்டாக்கி விடலாம்
ஆனால் எந்தபொறுப்பையும்
அறிந்திராதது அது .

7 . சிறகுகள்

வானம் விழுந்து நீர்
சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை
நீரில் எழுந்தது வானம்
சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு
சிறகினுள் எரியும் சூரியத்தகிப்பே
சிறகடிப்பின் ரகசியம் ஆகவேதான்
சுய ஒளியற்ற வெறும் பொருளை
சிறகுகள் விரும்புவதில்லை
பூமி போன்ற கிரகங்களை
அது நோக்குவதேயில்லை
[சிறகடிக்கையில்
வெட்கி ஒடுங்கிக் கொள்கின்றன
பறவையின் கூர்நகக் கால்கள்]
சூர்யனுக்குள் புகுந்து வெறுமே
சுற்றிசுற்றி வருகின்றன சிறகுகள்
சிறகின் இயல்பெல்லைக்குள்
நிற்குமிடமென ஏதுமில்லை
வெளியில் அலையும் சிறகுகளுக்கு
இரவுபகல் ஏதுமில்லை

8. அமைதி என்பது

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத்தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது
அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ ?
எழுந்துசென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?

தேவதேவனின் பிரக்ஞை உலகம்

காலப்ரதீப் சுப்ரமணியன்

தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.

devadevan மேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சாதாரண அனுபவங்களை மேலேற்றி 'பிரபஞ்ச போதத்துக்கு ' -- அல்லது அதீத தத்துவ தரிசனத்துக்கு--- குறியீடக்கைக் காட்ட்வதாக தேவதேவனின் கவித்துவம் விளங்கினாலும் இதற்கு எதிர்மறையாக பிரபஞ்ச போதத்தை அன்றாட அனுபவங்களுக்குள் தேடும் நிலையில் பிறக்கும் பின்னல் கோலங்களே கவிதையாவதைக் காணலாம். கவிதை பற்றி தேவதேவன் சொல்லியுள்ள பிரமிப்பு மயமான சொற்களும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.

தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்ட்டுத் தன்மையும் காரணமாகும். குறியீடுகளின் பன்முகத்துக்கு அவருடைய வீடு மரம் பற்றிய கவிதைகளை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

தேவதேவனின் கவிதைகளில் தொடர்ந்து படர்வது மரங்களைப்பற்றிய பிரக்ஞையோட்டம். இது ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் நிழலிடுகிறது .அதுவும் சமீப கால கவிதைகளில் அதிகமாகவே அடர்ந்து கிளைபரப்பியுள்ளது . ஆனால் ஒரு விஷயத்தை பலகோணங்களில் நின்று புதிது புதிதாய் காண்பதும் வார்த்தைசெறிவும் இதை தெவிட்டல் நிலைக்கு செல்லாமல் தவிர்க்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய நிதரிசனமும் அதீத பிரச்சாரமும் கலந்துள்ல இன்று மரங்களைப்பற்றி கவிதை எழுதுவது இன்றைய மோஸ்தர்களுள் ஒன்று. ஆனால் தேவதேவனிடம் காணப்படுவது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு ஆழ்ந்த தொனி. எதாத்த வாழ்க்கையில் தேவதேவனுக்கு மரங்களுடன் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு இங்கு கவனிக்கத்தக்கது . பீதி நிறைந்த குழந்தைப்பருவத்தின் மனமுறிவு வெளிப்பாடுகளோ, உணர்ச்சி கரமான மனப்போராட்டங்களோ ,வாழ்க்கையில் நிராதரவாய் நின்ற நிலைகளோ தற்காலிகமான கொள்கைகவர்ச்சிகளோ அவரது இதுப்போன்ற ஈடுபாடுகளை அசைக்கமுடியவில்லை என்பதும் , இவை ஆழ்ந்த மதிப்பீடுகளாக அவரது அகத்தில் மாற்றம் பெற்றுள்ளமையும்தான்

[நன்றி முன்னுரை 'பூமியை உதறி எழுந்தமேகங்கள் ' ]

புகையும் வயிறு!

Labels: , , ,

எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம்
கோபி கிருஷ்ணன்


தென் மாவட்டங்களில் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையங்கள் ஊருக்கு வெளியே ஏதோ ஓர் இடத்துக்கு இடம் மாற்றப்பட்டுவிட்டன. நள்ளிரவில் பேருந்தை விட்டு இறக்கிவிடப்படும்போது எங்கே இறங்கியிருக்கிறோம் என்று அடையாளமே தெரிவதில்லை. காலங்காலமாக சுவர்பல்லிகளைப் போல பழைய பேருந்து நிலையத்தோடு ஒட்டிக்கிடந்த பேருந்து நிலையவாசிகள் எங்கே போயிருப்பார்கள்?

gopi எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் அத்தனை நடிகர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களுடன், அகலமான நெற்றி நிறைய திருநீறும் கையில் ஒரு பெரிய லென்ஸ§மாக உட்கார்ந்திருக்கும் கைரேகை பார்ப்பவரும், ஒரு கை சூம்பிப்போய் பிச்சையெடுக்கும் நடுத்தர வயதுப் பெண்ணும், தனக்குத்தானே பேசியபடி பேருந்து நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வரும் சித்த சுவாதீனமற்றவனும், வாயில் பிளேடு துண்டை ஒளித்துக்கொண்டு மடித்துவிட்ட சட்டையும் பழுப்பான வேஷ்டியுமாக நிற்கும் பிக்பாக்கெட்காரனும், மூத்திரச் சந்துக்குள் நின்றபடி கஞ்சா பொட்டலம் விற்பவனும், அசைய முடியாத பருத்த இடுப்புடன் டீக்கடை வாசலில் கால்களை அகட்டி உட்கார்ந்து வெற்றிலை எச்சில் துப்பியபடி கொச்சையாக திட்டிக்கொண்டு இருக்கும் வட்டிக்கு விடும் பெண்ணும், நள்ளிரவில்கூட வெள்ளரிக்காய் விற்கும் அந்த பூப்போட்ட பாவாடை அணிந்த சிறுமியும் எங்கே போயிருப்பார்கள்?
உரித்து எறியப்பட்டுவிட்ட வாழைப்பழத்தின் தோலைப் போல அவர்களும் இனி தேவையற்றவர்களாக வீசி எறியப்பட்டிருப்பார்களா? அவர்களுக்கு வீடு இருக்குமா? எப்போது வீடு திரும்புவார்கள்? குழந்தைகள், குடும்பங்கள் எதுவும் அவர்கள் நினைவிலிருக்காதா? எப்போது முதன் முதலாகப் பேருந்து நிலையத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள்?

மதுரையிலிருந்து சென்னைக்கு வருவ தற்காக ஆம்னி பஸ்ஸில் ஏறியிருந்தேன். இரவு பத்து மணியாகியும் ஏழு மணிக்குப் புறப்பட வேண்டிய பஸ்ஸை எடுக்கவே இல்லை. டிரைவரும் இரண்டு ஏஜென்ட்களும் சுற்றிச் சுற்றி வந்து ஆள் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்படியும் பதினைந்து பேருக்கு மேல் ஏறவில்லை. பஸ் புறப்பட்ட நிலையிலே இரண்டு மணி நேர மாக நின்றுகொண்டு இருந்தது.
பேருந்தில் இருந்த ஒருவர், ஆத்திரத்தில் தான் வேறு பஸ்ஸில் போவதாகச் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தார். அவரை ஒரு ஏஜென்ட் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார். பேருந்து நிலையத் தின் இருள் சந்திலிருந்து பைஜாமா ஜிப்பா அணிந்த பருத்த அறுபது வயதைக் கடந்த ஒருவரும், மெலிந்து வெளிறிய ஊதா நிற சல்வார் கமீஸ் உடையணிந்த பெண்மணியும் ஆளுக்கு இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் நடந்து வந்தார்கள்.

வட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது முக ஜாடையிலே தெரிந்தது. ஏஜென்ட்களில் ஒருவன் அவர்களிடம் அரைகுறை இந்தியில் பேசி ஏதோ விசாரித்தான். பிறகு, அவர்களை எங்களது பஸ்ஸில் ஏற்றி ஜன்னலோர மாக உள்ள ஸீட்டில் உட்கார வைத்துவிட்டு, நானூறு ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு கீழே இறங்கினான். பேருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. வயதானவர் சற்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, பக்கத்து ஸீட்டில் இருந்தவரைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தார். பேருந்து புறப்பட்டு சில அடி தூரம் நகர்ந்து திரும்பவும் நின்றது. வயதானவர் அருகில் இருந்த வரிடம், ‘ராமேஸ்வரத்துக்கு அதிகாலை போய்ச் சேர்ந்துவிடுமா?’ என்று கேட்டார். ‘இது ராமேஸ்வரம் போகாது. சென்னை செல்லும் பேருந்து’ என்று சொன்னதும் அவருக்குப் புரியவில்லை. ‘ராமேஸ்வரம் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள்’ என்று எழுந்து அவசரமாக டிரைவர் அருகே போய் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார் பெரியவர். டிரைவரோ, ‘அதை ஏஜென்ட்டிடம் கேளுங்கள்!’ என்றார். இதற்குள் பஸ் பேருந்து நிலையத்திலிருந்து  வெளியே வந்துவிட்டிருந்தது.

பெரியவர் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து கீழே குதித்து, பஸ்ஸின் s-ramakrishnanமுன்னால் சாலையில் உட்கார்ந்து கொண்டு விட்டார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபத்திலும் அவர் ஏதோ புலம்பிக்கொண்டு இருந்தார். பேருந்திலிருந்தவர்கள் டிரைவரைத் திட்ட, ‘தனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லாம் ஏஜென்ட்டின் வேலை!’ என்று அவர் சாதித்துக்கொண்டு இருந்தார். பெரியவரோ ‘ஏஜென்ட் வராமல் இங்கிருந்து எழுந்து வழிவிட மாட்டேன்!’ என்று பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார். இதற்குள் இன்னொரு நபரை சென்னைக்கு ஏற்றிவிட ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஆம்னியைத் தேடி வந்து சேர்ந்தான் அதே ஏஜென்ட். பெரியவர் அவனைக் கண்டதும் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டார். அவனும் சளைக்காமல் ‘ராமேஸ்வரம் போவதற்கு இந்த நேரம் பஸ் இல்லை பெரியவரே! அதான் திருச்சிக்கு போய் மாறுவதற்காக இதில் அனுப்பி வைத்தேன். பணம் வாபஸ் கிடையாது!’ என்று சொன்னான். பயணிகளின் சத்தம் அதிக மாகவே ஏஜென்ட் பஸ்ஸில் ஏறி வயதான பெண்மணியையும் அவர்களது பொருட் களையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்படி இழுத்தான். அவள் கம்பி யைப் பிடித்துக்கொண்டு வரமறுத்தாள். யாரும் எதிர்பாராதபடி ஏஜென்ட் அவர்கள் வைத்திருந்த ஒரு பையைப் பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே போட்டான்.

கைதவறி விழுந்த குழந்தையைப் பிடிக்க முயற்சிப்பவள் போல வயதானவள் பெருங் குரலெடுத்து அழுதபடி பேருந்திலிருந்து இறங்கி பையை எடுக்க ஓடினாள். இதற்குள் வயதானவரும் கலக்கத்துடன் இருட்டில் விழுந்துகிடந்த பையிலிருந்து சிதறிய பொருட்களைத் தேடிக் கொண்டு இருந்தார். ஒரு சிறிய மண் கலயம் ஒன்று உடைந்து சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. வயதானவள் அந்தக் கலயத்தின் துண்டு களையும், தரையில் கொட்டிக் கிடந்த சாம்பலையும் அள்ளிக்கொண்டு, தலையில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். வயதானவரோ கண்ணில் நீர் தளும்ப Ôசெத்துப்போன என் பையன் அஸ்தி சார். கடல்ல கரைக்கறதுக்காக குவாலியர்ல இருந்து ராமேஸ்வரம் கொண்டுபோயிட்டு இருக்கேன்Õ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். பஸ்ஸில் இருந்த யாவரும் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். டிரைவர் தன் ஸீட்டை விட்டு இறங்கி வந்து, இருட்டுக்குள் நின்றிருந்த ஏஜென்ட்டின் முகத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தார். பிறகு, அவனைத் தரதரவென செத்த எலியை இழுத்துக்கொண்டு செல்வதுபோல அந்த அம்மாவின் காலடியில் இழுத்துப்போட்டு, ‘மன்னிப்புக் கேளுடா!’ என்று இந்தியில் சொன் னார். அவன் தயங்கித் தயங்கி ‘வயித்துப்பாட் டுக்காகச் செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிருங்க அம்மா!’ என்றான். அவள் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏஜென்ட் வந்த ஆட்டோ இருளில் நின்றுகொண்டு இருந்தது. பெரியவர் உடைந்துகிடந்த கலயத்தையும் மண்ணில் விழுந்த சாம்பலையும் அள்ளி ஒரு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் போட்டுக்கொண்டு இருந்தார். டிரைவர் ஆத்திரத்துடன் ஏஜென்ட்டிடம் ‘இவர்கள் இருவரையும் ஒரு டாக்ஸியில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியது உன் பொறுப்பு!’ என்று சொல்லிவிட்டு, தன் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை அப்படியே எடுத்து பெரியவரிடம் கொடுத்தார். பிறகு பேருந்து புறப் பட்டது. வயதான பெண்ணும் பெரியவரும் ஏஜென்ட்டுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டு ,இருந்தார்கள்.
டிரைவர் பஸ் கிளம்பும் முன்பாக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டபடி, ‘என்ன சார் செய்றது? நாய் பிழைப்பாப் போச்சு... எப்படி யாவது உங்களை காலையில எட்டு மணிக்குள்ளே மெட்ராஸிலே கொண்டுபோய் சேர்த்துடறேன்!’ என்றபடி பேருந்தை இயக்கினார்.

அடித்தட்டு மக்களின் உலகம் விசித்திரமானது. அதன் போராட்ட மும் இயல்பும் நாம் தீர்மானிக்க முடியாதது. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களின் உலகைப் புரிந்துகொள்வதும் சமகால இலக்கியத்தின் முக்கிய போக்காக உருவாகிக்கொண்டு இருக்கிறது. தமிழில் இது போன்ற எழுத்துக்கு முன்னோடி யாக ஜி.நாகராஜனையும் ஜெயகாந்தனையும் குறிப்பிடலாம். இதன் தொடர்ச்சியாக உருவான நவீன சிறுகதை உலகில் முக்கிய எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.

பெருநகர வாழ்க்கை எப்படி மனிதர்களைத் தங்களது இயல்பான உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுக்கிவிடுகிறது என்பதைப் பற்றியே கோபி கிருஷ்ணனின் கதைகள் பேசுகின்றன. வாழ்வின் அபத்த நிலைகளை எதிர்கொள்ளும் நெருக்கடிகளே அவரது கதையுலகம். கோபி கிருஷ்ணனின் மனிதர்கள் ஒண்டிக்குடித்தனங்களில் வாழ்பவர்கள். மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்... ஆனால், மனதுக்குள்ளாகத் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக்கொண்டு சமாதானம் அடைகிறவர்கள். இவர்கள் உலகத்தில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. குளிப்பது முதல் புணர்வது வரை யாவும் யாவரும் அறிந்த நிகழ்ச்சிகளே. எருமைமாட்டிலிருந்து கவர்ச்சி நடிகை வரை எல்லாவற்றைப் பற்றியும் இவரது கதை உலகம் ஆதங்கத்துடன் பேசித் தீர்க்கின்றன.

கோபி கிருஷ்ணனின் புயல் என்ற சிறுகதை, மாநகரில் புயல் மழையன்று ஒரு குடும்பத்தின் காட்சியை விவரிக்கிறது. வேலையிலிருந்து கிழிந்துபோன மழைக்கோட்டுடன் வீடு திரும்பும் பொறுப்பான ஒரு குடும்பத் தலைவன், வழியில் குழந்தையின் நினைவு வரவே அதன் காய்ச்சலுக்கு ஒரு மாத்திரையும் சாக்லெட் ஒன்றும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். வீட்டில் குழந்தை சாக்லெட்டைக் கண்டதும், ‘என்னப்பா இன்னிக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கே. எனக்குப் பிறந்த நாளா?’ என்று கேட்கிறது. தனது அக்கறை இன்மையை நினைத்து அவனுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. புதிதாக வேலைக்குப் போகத் துவங்கி இருந்த மனைவி புலம்புகிறாள்.

தான் வேலை செய்யும் மருத்துவ மனையில் ஆபாசப்படங்களை வைத்துக் கொண்டு ஓர் ஊழியர் செவிலியரோடு கேலி பேசுவதையும், அங்குள்ள கிழட்டு மருத்துவர் ஒரு செவிலியைச் சேர்த்து வைத்துக்கொண்டு சல்லாபம் செய்வதையும் பற்றி சொல்கிறாள். வேலைதான் இப்படியிருக்கிறது என்றால், வேலை விட்டு வரும் வழியில், மழையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒருவன் ஆபாசமாக ஜாடைகாட்டி அவளை அழைக்கிறான். பயத்துடன் மகளின் பள்ளிக்கு அவசரமாகப் போய் அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறாள்.

வீட்டிலோ சில மாதங்களுக்கு முன்பு அதே வீட்டில் குடியிருந்த ஒருவன் நன்றாகக் குடித்த நிலையில் உள்ளே நுழைந்து, சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ‘இளமை சுகம்’ படத்துக்கு டிக்கெட் இருக்கிறது போகலாமா என்று கேட் கிறான். அவள் பயத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய் ஒளிந்துகொள்கிறாள்.

இப்படி ஒரு நாள் வாழ்க்கையின் கசடுகளைக் கொட்டுகிறாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்த கணவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை யாருக்கும் எந்த இடையூறும் செய்திராத தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தன்னைத்தானே சலித்துக்கொண்டபடி ‘சாக்கடையில் உழலும் பன்றிகள்!’ என்று அவர்களைத் திட்டுகிறான். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவனால் என்பதோடு கதை முடிகிறது.

நெருக்கடிகளுக்குப் பழகிக்கொள் வதைத் தவிர, அதை எதிர்கொள்வதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்பதை கோபி கிருஷ்ணனின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பரிகாசமும் வலியும் கலந்த இந்தக் கதையை வாசித்து முடிக்கும்போது, நூற்றாண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வரும் நீதி நூல்களும் தர்ம விசாரங்களும் வாழ்க்கையின் மீது எந்த எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதையே உணர முடிகிறது. உடைந்த கண்ணாடியைப் போல வாழ்வு முகம் காணும் யாவரையும் சிதறடித்துதான் காட்டுகிறது. வாழ்வின் கரங்கள் எப்போது உயர்வைத் தருகிறது, எப்போது கீழ்மையை உருவாக்குகிறது என்பதை எவரும் சொல்ல முடியாது. யாராலும் வெல்ல முடியாத வில்லாளியான அர்ச்சுனனும் கூட சில காலம் அரவாணியாகத்தான் வாழ்ந்திருக்கிறான். இப்படித்தானிருக் கிறது வாழ்வின் ருசி!

நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படும் கோபி கிருஷ்ணன் மதுரையில் பிறந்தவர். உளவியல் & சமூக சேவை இரண்டிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். “ஆத்மன் ஆலோசனை மையம்Õ” என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஒவ்வாத உணர்வுகள், தூயோன், மானிட வாழ்வு தரும் ஆனந்தம், டேபிள் டென்னிஸ் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலஹீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003-ஆம் ஆண்டு காலமானார்.

ஒற்றை அறை

Labels: , , ,

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்

எஸ்.சம்பத்

எல்லா மேன்ஷன்களி லும் ஐம்பது வயதைத் தொட் டும் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி இருக்கிறார். கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் அவர் இப்படி வாழ் கிறார் என்று சொல்ல முடியாது. சரியான வேலையின்மை, குடும்பப் பிரச்னைகள், வெளியில் தெரியாத தோல்விகள் என ஏதேதோ சிக்கல்கள் அவர்களது கால்களில் கொடியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

Matthew Booth

மற்ற அறைகளைப் போல இன்றி அவர்களது அறையில் தினமும் சரியான பூஜை நடக்கிறது. மாலை நேரம் ஜன்ன லில் ஊதுபத்தி கொளுத்தி வைக்கப் படுகிறது. அறையில் படுக்கை, அலமாரி யாவும் சுத்தமானதாக இருக்கின்றன. சுவரில் உள்ள ஹேங்கரில் ஒழுங்காக உடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

அறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் மிகச் சிறியதாக இருக்கிறது. (கண்ணாடி முன் நின்ற படி தன்னைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்குச் சுளீர் என்று வலிப்பது போலிருக்குமோ!) காலையில் அலுவலகம் புறப்படும்போது வெளுத்த உடையும் திருநீற்றுக் கீற்றுமாக அவர்கள் சந்தோஷத்துடன் புறப்படுகிறார்கள். ஆனால், அவர்களது மனதில் குளத்துத் தண்ணீரில் தெரியும் மேகம் போல, பெண்களின் மீதான ஆசை ஊர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகப் பேசிக்கொள்வது கிடையாது.

திருமணம் செய்துகொள்ளாததால், ஒருவன் குடும்ப வாழ்வில் இருந்து விடுபடக்கூடும். ஆனால், காமத்திலிருந்து விடுபட முடியுமா? கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வ தும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாக வும், அறியாமை நிரம்பியதாக வுமே இருக்கிறது.

காமம் குறித்த அறிதல் பதின்பருவத்தில் துவங்குகிறது.sambath வேட்டைக்குச் செல்பவன், மிருகங்களின் கால் தடங்களை வைத்து என்ன மிருகம் அது, எப்படி அதன் உருவம் இருக் கும், எந்தத் திசையிலிருந்து எந்தத் திசை நோக்கிப் போகிறது என்று அடையாளம் கண்டுகொள்வது போல கொஞ்சம் கொஞ்சமாக செவி வழிச் செய்திகளாலும், ரகசிய வாசிப்பாலும் காமத்தை அறிந்துகொள்ளத் துவங்கு கிறோம். அதன் பிறகு, நம் மனதில் நிரம்பி வழிவதெல்லாம் அடக்கப்பட்ட காம உணர்ச்சி தரும் எண்ணங்களும், அதன் விசித்திரக் கற்பனைகளுமே!

ஆணோ, பெண்ணோ எவராயினும், காமம் உடலில் தோன்றும்  ஒரு சூறாவளி. அது எப்போது கரையைக் கடந்து செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது.
இங்மர் பெர்க்மனின் ‘வர்ஜின் ஸ்பிரிங்’ என்றொரு படத்தில், மிகப் பரந்த பசுமையான புல்வெளி ஒன்று காட்டப்படுகிறது. தொலைவில் நாலைந்து ஆட்டிடையர் ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவாலயத்துக்குச் செல்கிற ஓர் இளம்பெண் கையில் பூக்கூடையுடன் கடக்கிறாள். ஏகாந்தமான காற்றும், அழகும் அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
கடந்துபோகும் வழியில் உள்ள இடையர்களைக் கண்டு அவள் சிரிக்கிறாள். அவர்களும் கபடமின்றிச் சிரிக்கிறார்கள். ஆனால், நிமிஷ நேரத்தில் அவர்களது முகம் மாறுகிறது. ஒரு மிருகத்தைப் போல காமம் அவர்களது கண்களில் கொப்பளிக்கிறது. அந்தப் பிராந்தியத்தில் யாருமில்லை என்பதைக் கண்டுகொள்கிறார்கள்.

உடனே பாய்ந்து, அந்தப் பெண்ணைத் தங்களது இச்சைக்குப் பலியாக்கிவிடுகிறார்கள். யாருமற்ற அந்தப் பிரதேசத்தில் ஒரு பெண் உருக்குலைந்து, உதிரப் பெருக்கோடு கிடக்கும் காட்சியைப் பெர்க்மன் காட்டுகிறார். அப்போதும் அதே புல்வெளி, பசுமை மாறாமல் காற்றில் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. காம சுகிப்பை இப்படித் திரையில் காணும்போது முகத்தில் அறைவது போலத்தான் இருக்கிறது.

இது ஏதோ கற்காலத்தில் நடந்த சம்பவம் அல்ல. சம காலத்திலும்கூட காமம் இப்படி ஒரு மூர்க்கத்தையும் வன்முறையையும் கொண்டுள்ளதை நாம் அன்றாடம் காண முடி கிறது. பெண் வீழ்த்தி நுகரப்பட வேண்டிய வள் என்ற எண்ணம் காலங்காலமாகவே மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.

ஆண், காம உணர்ச்சி களுக்கு எத்தனையோ வடிகால் தேடிக்கொள் கிறான். பெண்களோ காமம் குறித்த தங்களது மனதின் சிறு அசைவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாதபடி கலாசாரச் சூழல் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. ஆண்டாள், தனது பாடலில் தனக்குக் காமம் ஏற்படுத்தும் வலியை, பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறாள். அது பக்தி என்பதைக் கடந்து, உடலின் தீராத குரல் என்றுதான் தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்தவரையில் விருப்பத்துடன் தன் கணவனை முத்தமிடுவதற்குக்கூட ஒரு பெண் பல முறை யோசிப்பதுதான் குடும்பங் களில் நடக்கிறது. தாக மிகுதியால் வரும் மிருகம் தண்ணீரைக் கண்டதும் குடிப்பதற்குத் தான் முயற்சிக்குமே தவிர, தண்ணீரில் தனது உருவம் தெரிவதை நின்று ரசிக்காது. அப்படித்தான் விளக்கை அணைத்துவிட்ட வுடன் இருள் அறையைக் கவ்விக்கொள்வது போல, காமம் துளிர்த்த உடல் ஓர் ஆக்டோபஸ் போல கிடைப்பதைப் பற்றிக்கொண்டு இச்சையைத் தீர்த்துவிடுகிறது.
காமத்தை அறிவது ஒரு கலை என்று இந்திய சமூகம் நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்தபோதிலும், அது ஒரு வடிகால் என்று மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. கற்பனைதான் காமத்தை அதிகப்படுத்தும் ஒரே சாதனம். கற்பனையற்றுப் போயிருந்தால் காமம் ஒரு இயந்திர நிகழ்வு போலவே ஆகியிருக்கும்.

உடலை நாம் அறிந்துகொள்ளாததுதான் காமத்தைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு முதல் காரணம். உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தை எப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் உறங்கும்போது நம் கனவில் புலி பாய்வதாக இருந்தால்கூட உடல் தானே திடுக்கிட்டு விழித்துவிடுகிறது. உண்மையில், உடல் ஒரு விசித்திரமான இசைக் கருவி. அதிலிருந்து நாம் விதவிதமான இசையை வாசிக்க முடியும். ஆனால், அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.
எனக்குத் தெரிந்த மேன்ஷன்வாசி களில் ஒருவரான நித்யானந்தம், நாற்பத்தைந்து வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, பெண் பார்த்து பேசி ஒப்புக் கொண்டார். திருமணம் தூத்துக்குடி அருகில் உள்ள ஏதோ கிராமத்தில் நடந்தது. மேன்ஷன் அறையில் இருந்த நண்பர்கள் பலரும் தனது திருமணத் துக்கு வரவில்லை என்பதால், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப் பதாகத் தனக்குத் தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு போன் பண்ணி சொன்னார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓட்டலில் நடந்தது. அன்று மாலை லேசான தூறல் விழுந்துகொண்டு இருந்தது. நித்யானந்தம் தலைக்கு டை அடித்து, புது கோட்\சூட் அணிந்து, ஆறு மணிக்கே புதுப் பெண்டாட்டியுடன் வந்து நின்றிருந்தார்.

நானும் இன்னொரு நண்பனும் போய்ச் சேர்ந்தபோது, அங்கே இரண்டு பேர் மட்டுமே வந்திருந் தார்கள். நித்யானந்தத்தின் முகம் இறுக்கமாக இருந்தது. நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. எவரும் வரவே இல்லை. மணி ஒன்பதாகியபோது, மழை வலுத்திருந்தது. மண்டபத்தில் பதினோரு பேர் மட்டுமே இருந்தோம். இருநூறு பேருக்குத் தேவையான சாப்பாடு தயாராக இருந்தது. புது மனைவி நகத்தைக் கடித்தபடி நின்றுகொண்டு இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத நித்யானந்தம் கோபத்தில் வெடித்துப் பேசினார்...

‘‘நாப்பத்தஞ்சு வயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல... அதான், இந்த அவமானப்படுறேன். கூட இருந்தவன், வேலை பாக்கிறவன்னு ஒருத்தன்கூட வரலை, பாருங்க! எத்தனை பேருக்குத் தேடித் தேடிப் போய்ச் செய்தேன்! எல்லாச் சாப்பாட்டையும் அள்ளிக் கொண்டு போய் நாய்க்குப் போடச் சொல்லு!’’ என்றபடி விடுவிடுவென மனைவியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டுப் போய்விட் டார்.
அறைக்கு வந்தபோது பலரும் அவர் சொன்னது போலவே, ‘நித்யானந்தத் துக்கு எதுக்குய்யா அம்பது வயசுல கல்யாணம்? பொம்பளை ஆசை லேசில் விடுதா..? இத்தனை நாள் நம்மகிட்டே நடிச்சிருக்கார். அதான் ஒருத்தனும் ரிசப்ஷனுக்கு போகலை’ என்று கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். சரியாக நான்கு மாதத்துக்குப் பிறகு, நித்யானந்தம் முன்பு போலவே அதே மேன்ஷனுக்கு திரும்பி வந்து சேர்ந்தார். தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சரிவரவில்லை என்றதோடு, ‘மனசு ஆசைப்பட்டாலும் உடம்பு ஒப்புக்கலை சார். அதான் காரணம்!’ என்றார். அறைவாசிகள் அதையும் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால், அதன் பிறகு அவர் சிரித்து எவரும் பார்க்கவே இல்லை.
பால் உணர்ச்சிகள் குறித்த கதைகள் பெரும்பாலும் மலிவான தளத்தில் எழுதப்பட்டு வரும் சூழலில், அதன் நுண்மையான அதிர்வுகளைப் பதிவு செய்த கதை... எஸ்.சம்பத் எழுதிய ‘சாமியார் ஜூவிற்கு போகிறார்’. சம்பத், நவீன தமிழ் இலக்கியத்தின் தனிக் குரல். மிகக் குறைவாக எழுதியவர். குறைவான காலமே வாழ்ந்த வரும்கூட. அவர் எழுதிய சிறுகதைகளில் மறக்க முடியாததும், வெகு நேர்த்தி யானதும் இக்கதையே!

தினகரன் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குச் செல்கிறான். அன்று விடுமுறை நாள். அவனது மனைவி பத்மா காலையிலிருந்தே பால் உணர்ச்சிமிக்கவளாகத் தாபத்தில் இருக் கிறாள். கணவனிடம் எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியாத நிலையில், அவர்கள் மிருகக்காட்சி சாலைக்குப் புறப்பட்டுவிடுகிறார்கள்.
அவளுக்கு எப்படியாவது அன்று முழுவதும், கணவனைத் தனது பிடியிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு உருவாகிறது. இதனால் அவனுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஜார்ஜெட் புடவையை உடுத்திக்கொள்கிறாள். மிருகக்காட்சி சாலையில் அன்று ஏகக் கூட்டம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிறிதுசிறிதாக கணவனுடன் சரசம் செய்கிறாள். அன்று எதிர்பாராதவிதமாகக் கூண்டில் இருந்த ஒரு புலி தப்பி வெளியே வந்துவிடுகிறது. அதைக் கண்டு, பலரும் அலறி ஓடுகிறார்கள். புலி எங்கே பாய்வது என்று தெரியாது தடுமாறி ஓடுகிறது. முடிவில் அது சுடப்பட்டு இறக்கிறது.
இந்தக் காட்சி, வீடு திரும்பிய பிறகும் தினகரனுக்கு மிகுந்த மனவேதனையை உருவாக்குகிறது. மனைவியோ காமத்தால் அதிகம் பீடிக்கப்பட்டவளாகிறாள். மனிதன் தன்னால் அடக்க முடியாத வற்றுக்கு கூண்டுகள் உண்டாக்கி, அடக்கி வைத்திருக்கிறான். சுதந்திரத்துக்கு எதிராக நிறைய கூண்டுகள் இருக்கின்றன என்று யோசிக்கும்போது அவனது மனைவியின் காமமும் அந்தப் புலி தப்பியது போன்றது தான் என்று தினகரன் புரிந்து கொள்கிறான்.
அன்று கூடலில், தினகரன் ஒரு பஞ்சைப் போல எடை அற்றவனாக இருப்பதாகச் சொல்கிறாள் அவன் மனைவி. அவனோ புலி, கூண்டை விட்டு வெளியே வந்ததும், தனது சுதந்திரத்தைத் தேடியே! அதை அடைவதற்குள் புலி கொல்லப்பட்டு விட்டதே என்று ஏதேதோ புலம்பியபடி கனவு காணத் துவங்குகிறான்.

ஒரு விளக்கின் சுடரைப் போல காமம் சதா அசைந்துகொண்டே இருப்பதைப் பற்றி நுட்பமாகச் சித்திரிக்கும் கதை இது. ஒருபுறம் அதிவேக நாகரிகம், காமத்தை மலினப் பொருளாக்கி விற்பனை செய்கிறது. மறுபுறம் கண்களைக் கட்டிக்கொண்டு சித்திரம் வரைவது போல பால் உணர்வுகளின் அறியாமை நம்மைப் பீடித்திருக்கிறது.

காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட வேண்டிய ஒரு ரகசியமல்ல; அதே சமயம், கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும், அழுவதும்போல அது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு! அந்த இயல்பை நாம் புரிந்துகொள்ளாதவரை பெர்க்மனின் ஆட்டு இடையர்களைப் போலவே இருப்போம்! எஸ்.சம்பத் 1941&ல் திருச்சி யில் பிறந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் அரிய வகை எழுத்து இவருடை யது. பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற சம்பத், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங் களிலும் சில காலம் பணியாற்றியுள்ளார். விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுகதை கள் மட்டுமே எழுதியுள்ளார். இவரது ”இடைவெளி” என்ற நாவல், மரணம் குறித்த ஆழ்ந்த கேள்விகளை முன் வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகும்.

சம்பத்தின் அப்பா ரயில்வே உயர் அதிகாரியாக வேலை செய்தவர் என்ப தால் வளர்ந்தது, படித்தது யாவும் டெல்லியில்! Ôருஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்துலகை உருவாக்க வேண்டும்Õ என்று ஆசை கொண்ட சம்பத், எதிர்பாராத மூளை ரத்தக்கசிவு நோய் காரணமாக, தனது 42-வது வயதில் மரணமடைந்தார்.
இன்றும் தமிழ் இலக்கியத்துக்கு புதிய வழிகாட்டுதலாக இவரது எழுத்துகள் உள்ளன.