Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

மெளனியின் சிறுகதைகள் - மரணமும் மகத்துவமும்

Labels: , ,

பாவண்ணன்

தற்செயல் என்கிற விஷயம் மனித வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பம் ஆகும். அதை ஒரு துாண்டுதல் என்றும் கொள்ளலாம். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் அத்தற்செயலின் விளைவாக 14_mouni2உருவாகின்றன. திரண்டெழும் விடைகள் வழியாகப் பல துணைக்கேள்விகள் உருவாகின்றன. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கேள்வியை உருவாக்கியபடி நீள்கிறது. மனத்தில் ஒரு முழுக்கேள்விச் சங்கிலியும் அதற்கு இணையான விடைச்சங்கிலியும் பின்னிப் பிணைந்தபடி வளர்ந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு விடையும் ஒரு புதிய புரிதலைத் தருகிறது. ஒவ்வொரு புதிய புரிதலும் அடுத்து நிகழப் போகும் தற்செயலை மேலும் கூடுதலான வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கிறது.

மொத்தத்தில் மெளனி 24 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அநேகமாக எல்லாக் கதைகளிலும் பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் தற்செயலாக அறிமுகமாகிறார்கள். தற்செயலாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். தற்செயலாகப் பெண்களைப் பார்க்கிறார்கள். தற்செயலாக மனத்தைப் பறிகொடுக்கிறார்கள். தற்செயலாக, திடுமென, எதேச்சையாக என்ற சொற்கள் இடம்பெறாத கதையே இல்லை. இந்தத் தற்செயல் என்பது ஒரு வாய்ப்பாக அமைய, பல கதைகளில் , அடுத்தடுத்த சம்பவங்கள் மரணத்தை நோக்கி நகர்கின்றன. வாசலற்ற பெரிய அரண்மனை மரணம். அல்லது எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் உள்ள கோட்டை மரணம். அதை நோக்கி அழைத்துச் செல்கிறார் மெளனி. இந்த உலகத்துக்கு மிகவும் பழக்கமான- நித்தமும் காணத்தக்க - மரணத்தின் அருகே அழைத்துச் சென்று, மரணத்தின் விளங்காத பக்கங்களை விளங்கிக் கொள்ள முயற்சி செய்கிறார். அவர் கதைகளில் உருவாக்கும் தற்செயல்கள் எல்லாமே மரணத்தின் முகத்தை உள்வாங்கிக் கொள்ள ஒரு அருமையான வாய்ப்பாகவே காணப்படுகின்றன.

மெளனி தம் பல கதைகளில் மரணத்தை நிகழ்த்திக் காட்டுகிறார். மாபெரும் காவியம் கதையில் தன் குழந்தை ராமுவின் மரணத்தை ஒருவித இயலாமையுடன் பார்க்கிறான் கிட்டு. ஏன் சிறுகதையில் மெல்ல மெல்லத் தன்னை மரணத்தை நோக்கி நகர்த்திக் கொள்கிறான் மாதவன். மரணத்தை முதலில் ஒரு பளுவாகவும் பிறகு லேசாகவும் உணரும் கிருஷ்ணையர் குடும்பத்தேர் சிறுகதையில் வருகிறார். நீ இன்னும் இறக்கவில்லையே, இருக்கிறாயா என்று பார்க்கததான் வந்தேன் என்று உயிருடன் இருக்கிற ஜோன்ஸைப் பார்க்கப் போகிற சுந்தரத்தின் மனப்போக்கைக் குடைநிழல் கதை காட்டுகிறது. மரணத்தைக் காட்டிலும் மனத்தைப் பிளக்கிற இசையைப் பொழகிற நங்கையின் சித்திரத்தைப் பிரபஞ்ச கானம் காட்டுகிறது. மரணமுற்ற மனைவியின் அருகிலேயே இரவு முழுக்கத் தனித்திருக்கிற கணவனைக் காட்டுகிறது மாறுதல் கதை. இந்த மரணம் பல தற்செயல்களின் விளைவாக இறுதி முடிவாகக் காட்டப் படுகிறது. மரணம் என்பதை புறக்காட்சியிலிருந்து தன் மனத்துக்கு மாற்றப் பார்க்கிறார் மெளனி. அதாவது, வெளியே மரணம் என்ற ஒன்றில்லை என்றாலும் கூட, புறத்தே எதைக் கண்டாலும் அதை ஒரு சாக்காகக் கொண்டு மரணக்காட்சியைத் தன் கண் முன்னால் வரவழைத்துக் கொள்ளும் திறமையில் தேர்ந்துவிடும் அளவுக்கு, தன் மனத்துக்குப் பயிற்சி கொடுக்கிறார் அவர். இதை ஒரு எடுத்துக் காட்டு மூலம் சொன்னால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். நான் குற்றாலத்துக்குச் செல்கிறேன். கண்ணாரக் கண்டு சந்தோஷம் கொள்கிறேன். அருவிகளில் குளித்து மகிழ்கிறேன். அடுத்து இமயமலைக்குச் செல்கிறேன். பனிச்சிகரங்களைப் பார்த்துக் களிக்கிறேன். பிறகு எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து , எதையோ பார்த்தபடி, இமயத்தையும் குற்றாலத்தையும் நினைத்துக் கொள்கிறேன். இரண்டுமே நல்ல அழகிய காட்சிகளாக என் மனத்தில் நிறைந்திருக்கின்றன. நிலவியல் அளவில் குற்றாலமும் இமயமும் பல மைல்கள் தொலைவில் இருப்பவை. ஆனாலும், என் மனத்தளவில்pavannan[1] அருகருகே உள்ள இரு புள்ளிகள் மட்டுமே. மிக நெருக்கமாக இரண்டும் என் மனத்தில் வீற்றிருக்கின்றன. இரண்டுக்கும் அதிக இடைவெளி இல்லை. இரண்டுமே என் பிரக்ஞையின் அனுபவமாக மாறிய பிறகு அடுத்தடுத்து உள்ளவையாகவே மாறி விடுகின்றன. மெளனி இதே போன்ற ஒரு இடத்துக்குத்தான் வருகிறார். சில காட்சிகளைத் தற்செயலாகக் காண்கிறார் அவர். அவற்றின் விளைவாகத் தொடர்ந்து மரணத்தைக் காண்கிறார். எதன் மூலமும் மரணத்தைக் காணமுடியும் என்கிற எண்ணம் அவருக்குள் இருந்திருக்கிறது. எதையும் மரணப்படுத்திப் பார்க்க முடியும் என்கிற எண்ணமும் அவருக்குள் இருந்திருக்கிறது. தன் பிரக்ஞையின் அனுபவமாகவே மரணத்தை மாற்றிக் கொண்ட பிறகு எங்கும் மரணமே அவருக்குத் தெரிகிறது. வாழ்வு என்பது மரணத்தை எதிர்கொள்வதும் மரணம் என்பது வாழ்வை எதிர்கொள்வதும் ஒரு விளையாட்டு போல மாறி விடுகிறது.

மனக்கோட்டை கதையின் இறதிக் காட்சியில் ஒரு வாசகம் வருகிறது. சங்கர் இறக்க முடியும். என் வாழ்க்கையை, என்னை, கனவு காணாது இருக்க முடியாது. அவன் கனவில், நனவென வாழ்க்கை கொள்ளும், நான் இருக்குமளவும் அவன்.. ? என்று வருகிறது அந்த வாசகம். சங்கரின் மரணத்தைக் கனவு காணும் துயிலுக்குச் சமமாக வைத்துப் பார்க்கிறார். அவன் கனவில் இவன் வாழ்க்கை என்றால், இவன் கனவில் யார் வாழ்வு இடம்பெறும் ? அவர் கனவில் எந்த மற்றொருவரின் வாழ்வு இடம்பெறும் ? இப்படியாகத் தொடர்ச்சியாகக் கேள்விகள் கேட்க முடியும். இதில் ஒரு உண்மை தெளிவு பெறுகிறது . அதாவது, மரணம் என்பது உடல் ரீதியான மறைவாக இருக்கலாம். ஆனால் மற்ற எல்லாமே இருக்கிறது. மறைவின் ஊடாக இருப்பைச் சாத்தியப்படுத்துவது புதிராக இருக்கலாம். ஆனால் அப்புதிரின் புள்ளியை நோக்கித்தான் அவர் கதைகள் செல்கின்றன. அதாவது, எல்லாக் கதைகளிலும் ஒரு பருண்மையான இருப்பு நுண்மையான இருப்பாக மாறுகிறது. வடிவமுள்ள ஒன்று தன் வடிவத்தை இழந்து அல்லது பறிகொடுத்து வடிவமற்ற ஒன்றாக மாறுகிறது. அழியாச்சுடர் கதையில் இலையுதிர்த்து நிற்கும் ஒரு மரத்தின் காட்சி இடம் பெறுகிறது. மரணத்தின் மாற்று உருவமாகவே அதைச் சித்தரிக்கிறார் மெளனி. ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடி, கைவிரித்து தேடத் துளாவுவதைப் பார்த்தாயா ? என்றொரு கேள்வி கேட்கப் படுகிறது. தன் விரிக்கப்பட்ட சிப்பிக் கோடுகள் அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது காணாது தெரியவில்லையா ? என்றும் கேட்கப் படுகிறது. பட்டுப் போக இருக்கிற மரம் வெட்டவெளியில் எதைத் தேடும் ? இருப்பு இருப்பின்மையை நோக்கிய விழைவு என்று எடுத்துக் கொள்ளலாம். மரமாகப் பிம்பப் படுத்தப் பட்ட மரணம் வேறொன்றை நோக்கிச் செல்கிறது. ஒரு இருப்பு-மரணம்-மாற்று இருப்பு என்கிற சுழல் பாதையில் கதையைப் பின்னுகிறார் மெளனி. இங்கே மரணம் ஒரு சிறிய இடைவெளி மட்டுமே. நாடகத்தில் வேஷத்தை மாற்றிக் கொள்ள விடப்படுகிற இடைவெளி போல இந்த இடைவெளியை எடுத்துக் கொள்ளலாம். இதனால் இருப்புக்கு எந்தக் குந்தகமும் இல்லை. அது இன்னொன்றாக மாறுகிறது என்பதைத் தவிர.

இக்கதையில்தான் மெளனியின் மிகச்சிறந்த வரியான எவற்றின் நடமாடும் நிழல்கள் என்கிற வாக்கியம் இடம்பெறுகிறது. நிழல் கொடுப்பது, நிழல் என்ற இரண்டுமே வேறு வேறு விஷயங்கள். நிழல் கொடுப்பதற்கும் உருவம் இருக்கிறது. நிழலுக்கும் உருவம் உண்டு. இது உலகியல் உண்மை. ஆனால் எவற்றின் நிழல்கள் நாம் என்று கேட்கப்படும் போது நிழலுக்கு உருவம் தெரிகிறது. அந்த நிழலைக் கொடுப்பவற்றுக்கு உருவம் இல்லை. உருவமற்ற ஒன்றின் அல்லது பலவின் நிழலைப் படைத்துக் காட்டுவது விந்தையாகத் தோன்றும். நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக்கடுமையை நீ காணப் போகிறாய் என்று அந்தப் பெண் பதில் சொல்வதைக் கவனியுங்கள். இங்கும் விதி என்கிற உருவமற்ற ஒன்றின் நிழலாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறாள் அவள். ஓர் உருவத்துக்கு நிழல் உருவாவதைப் பார்த்திருக்கிறோம். உருவமற்ற ஒன்றுக்கு எப்படி நிழல் உருவாகும் ? இக்கேள்வி தலையைக் குடையும் போதுதான் இருப்பிலிருந்து இன்மைக்கும் இன்மையிலிருந்து மீண்டும் இருப்புக்கும் நகரும் சுழல் பாதையின் ஞாபகம் வருகிறது. இதன் இரண்டாவது பகுதியைக் கவனியுங்கள். இன்மையிலிருந்து இருப்பு உருவாவதை நோக்குங்கள். இதே போலத்தான் உருவமற்ற ஒன்றிலிருந்து நிழலும் உருவாகிறது என்று இணைத்துப் புரிந்து கொள்ளலாம். இப்போது அந்த உருவமற்ற ஒன்று -நிழலைக் கொடுக்கிற ஒன்று- மரணம் என்பதை எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம்.

பூட்டப்பட்ட ரகசிய அறையில் என்னென்ன இருக்கும் என்று கற்பனையும் உற்சாகமுமாக எண்ணங்களைச் சிறகடிக்க விடுகிற விளையாட்டுச் சிறுவனைப் போல மரணம் என்னும் மகத்துவமான சந்திப்புப் புள்ளியில் என்னென்ன இருக்கும் என்பதை அறியும் ஆவல் மெளனியை உந்தித் தள்ளுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் கண்டு சொல்வது கொஞ்சம். நம் கற்பனையால்தான் அப்புள்ளியை இன்னும் அழுத்தமாகத் தீட்டிக் கொள்ள வேண்டும். தம் வெப்பத்தால் தண்ணீரைச் சூரியன் ஆவியாக்கியதும் அது மேகமாகி வானில் அலைந்து காற்றுத்தடை ஏற்பட்டதும் மழையாகப் பொழிவதை நினைத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஆனால் மெளியின் அக்கறை மறுபடியும் பொழகிற மழை மீதல்ல. மேகமாக மேலெழுந்த ஆவியின் அலையும் அனுபவத்தைக் குறித்ததாகத் தோன்றுகிறது. அது வானில் தவழும் ஆட்டம், காற்றில் போடும் நீச்சல், மலைகளின் உச்சியில் அதன் ஒய்யார நடையைக் குறித்ததாகத் தோன்றுகிறது. வலசை வரும் பறவைகளைத் தொலைநோக்கியால் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம். நாடு கடந்து பறந்து வரும் பறவைகளின் சுதந்தரத்துக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் -அப்பறவைகளுக்கே கூடத் தெரியாமல்-அவற்றைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள். அவற்றின் நிறமும் இறகுகளும் வானில் நீந்தும் அழகும் நித்தமும் காணும் பறவைகளின் நிறத்தையும் இறகுகளையும் நீச்சலையும் காட்டிலும் புதுசாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்துப் பார்க்கிறார்கள் அவர்கள். பார்த்து என்ன செய்ய என்கிற கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லை. பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. தம் கற்பனையை விரிவாக்கிக் கொள்ள அந்த அனுபவம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. மரணம் என்னும் சந்திப்புப் புள்ளியின் மீது மெளனியின் கவனம் குவிவது கூட இத்தகு ஒரு அனுபவத்தைத் தேடித்தான் என்று தோன்றுகிறது.

0 comments: