Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

பழைய ஒரு சிறிய காதல் கதை - பஷீர்

Labels:

வைக்கம் முஹம்மது பஷீர்
தமிழில் : சுரா

காதல்வயப்பட்டிருந்த கால  கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

auguste-rodin-the-kiss-rodin-museum-paris

பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.

நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.

தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…

என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.

பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.

இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.

இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி!

முதல் பார்வை…

பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே!

இப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு!

இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.

நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!

உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!

180px-VaikomMuhammadBasheer முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.

என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.

அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!

தெய்வமே!

அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?

நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!

அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை?

அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?

இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.

நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!

அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.

ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.

ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன?

ஆச்சரியம்! அவள் என்னைப் பார்த்துவிட்டாள்…! அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது! இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.

கவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.

தினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.

காதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.

அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?

நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.

நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ! வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்!

“”ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே?”

“”சும்மா…”

உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:

“”போயாச்சா?”

“”இல்லை. நான் அங்கே வரட்டுமா?”

“”எதற்கு?”

“”சும்மா!”

“”வேண்டாம்!”

“”வேணும். நான் வருவேன்!”

“”நாய் இருக்கு!”

“”பரவாயில்லை!”

“”அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்!”

“”பரவாயில்லை. நான் வருவேன்!”

“”அய்யோ… வேண்டாம்!”

நிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.

நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி…! ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள்! முன் னோக்கி நகர வேண்டுமே! நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்!

நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்…? ச்சே… ஏறிவிட வேண்டும்! கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.

அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.

“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.

ஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.

அவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.

நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.

தொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன!

எப்படி என்றால்… “”அய்யோ!… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ!” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.

நான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.

“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.

பிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா?

நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.

வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்!

அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?

என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்! அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்!

“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே?’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.

ஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே! தலைவர்!’ ஆட்கள் கூடுவார்கள்.

தெய்வமே! என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு! இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது!

நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும்! தெய்வமே! அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்!’

கடவுளே!… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள்! தெய்வமே! என்னை அவமானப் படுத்தி விடாதே.

அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.

எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.

அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.

அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே!

நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.

இறுதியில் அவர்கள் கூறினார் கள்:

“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்!”

மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகை யில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்!

மங்களம்.

அவன் அவள் - விக்ரமாதித்யன் நம்பி

Labels: ,

விக்ரமாதித்யன் நம்பி

nambi256

அவன் அவள்

எவ்வளவு சொல்லியும் நம்புவதாக இல்லை அவள்.
எந்தவிதத்திலும் சமாதானம் செய்துவிடமுடியாது என்கிற மாதிரி
பிடிவாதமாக இருந்தாள்.
இப்படி வைராக்யமாக இருக்கிறவளோடு எப்படி வாழமுடியும்.
அன்பான வார்த்தைகளைக் கூட ஆணின் பசப்புமொழிகள் என்பது
போலப் புறக்கணிக்கப் பழகிவிட்டிருந்தாள்.
தொட்டுப் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து வந்தாள்.
பார்வையை எதிர்கொள்வதை விட்டுவிட்டிருந்தாள்.
இவ்வளவு இறுக்கம் ஒரு பெண்ணுக்கு ஆகாது.
கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்திருந்த அவநம்பிக்கை
நாள்பட நாள்படத் திரண்டிருந்த கசப்பு
சன்னம் சன்னமாகக் குவிந்துபோன வெறுப்பு
எல்லாம் ஆகக்கூடிப் பாறையாக நின்றன.
அவள் இக்கதிக்கு ஆனதில் தான்தான் முழுமுதல் காரணகர்த்தா என்ற உறுத்தல் வேறு மனசைக் குடைந்து கொண்டிருந்தது.
நிவர்த்திக்க வகையறியாது சிந்தை குழம்பியிருந்தான்.
நியாயம் அவள் பக்கம்தான் என்று ஆதியிலிருந்தே உணர்ந்திருந்தான்.
அவள் மனசில் இத்தனை துக்கம் கொண்டிருப்பது தப்பில்லைதான்
தன்னிடம் அவள் மிகுந்த வன்மத்தோடு இருப்பதில் தவறில்லை
என்றாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பகையாளி போலவேதான் அவள் நடந்துகொண்டாள்.
வெகு கடுமையாக விரோதம் பாராட்டினாள்.
இது இப்படி ஆகியிருக்கக் கூடாது.
இந்த மாதிரி துரதிர்ஷ்டம் நேரக்கூடாது ஒரு ஆணுக்கு.
அவள் இப்படிப்பட்ட பெண்ணே இல்லை.
ஆசையும் பாசமும் கொண்டவள்.
குழந்தைதான்.
கவலை தெரியாத அந்த பச்சைப்பிள்ளை மனசைக் காலம் அழித்துவிட்டதா.
காற்றுப்போல சுதந்திரமான அவள் குதூகலத்தைக் கொன்றது விதிதான்.
பெண்ணுக்கு மட்டுமேயான அவள் கனவுகள் கருகிப் போயிருக்க வேண்டாம்.
நாளும் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்கையில் பேதலித்துப் போகிறான் அவன்.
அவளுடைய தொடர்ந்த புகார்களைக் கேட்டுக்கேட்டு கலவரமடைகிறான்.
அவனைச் சுட்டெரிக்கிறது அவள் கோபம்.
அவள் பழிவாங்கிக் கொண்டிருக்கிறாளா.
உண்மையிலேயே அவன் களைத்துப் போய்விட்டான்.
இந்த யுத்தத்தை நீடிக்கவிடுவது முட்டாள்தனமானது.
ஆனால் அவள் எதையும் கேட்க சித்தமாயில்லை.
என்னை விட்டுவிடு என்கிறாள்.
வேண்டாம் இந்த உறவு என்றே சொல்கிறாள்.
நிம்மதியாக இருக்கவிடு போதும் என்று கணக்குத் தீர்க்கிறாள்.
அப்படி என்ன கொடுமை இழைத்துவிட்டோம்.
பெண்தெய்வங்களே பெண்தெய்வங்களே
பிழை பொறாத பெண்தெய்வங்களே
* * * *


ஆயாசமாக இருந்தது.
பக்கத்தில் இருந்தும் விலகிப்போயிருப்பது இருவருக்குமே
புரிந்த ஒன்றுதான்.
பேசினாலே தப்பாகிவிடுகிறது.
விஷம் தோய்ந்த கத்திகளாகின்றன வார்த்தைகள்.
முகத்திலேயே விழிக்காதவர்கள் போலத்தாம் பேசிக் கொள்ளும்படியாகின்றன.
அன்பாக இருந்தோம் என்பது கனவாகவும்
அப்படி இனிமேல் இருக்கமுடியாது என்பது எதார்த்தமாகவும் மாறியிருந்தன.
நாலு சுவர்களுக்குள் இந்தமாதிரி இருப்பது அவளுக்கும்
தாளமுடியாத அவஸ்தையாகத்தான் இருக்கும்.
என்னசெய்தும் இந்த மனமூட்டத்தை விலக்க முடியாது போயிற்று.
ஆண்களையெல்லாம் வரிசையாக நிற்கவைத்துச் சுடவேண்டும்.
கோபமாகக் குரல் உயர்த்தி அவள் அன்றொருநாள் சொல்லக் கேட்டபோது
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இதுநாள் வரை பத்து தடவையாவது சொல்லியிருப்பாள்.
எரிச்சல்தான் இது.
எரிப்பது தீதானே.
இது தீதான்.
இதை அணைக்கமுடியுமா.
* * * *


கொஞ்சம் நாடியைப் பிடித்துத் தாங்கினால் போதும் முதலில்.
பிறகு உன்னைவிட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று
மண்டியிட வேண்டியிருந்தது.
காலகதியில் எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்டையிடம் அடிமை
போல மன்னிப்புக் கேட்டுத் தப்பித்துக் கொண்டிருந்தான்.
நாடகத்தின் காட்சிகள் மாறுவது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவள்
நடிப்பு என்று கருதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.
அவனும் நாடகத்தை முடித்துவிடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தான்.
என்றபோதும் அவள் அவனுக்குப் பெரிதும் வேண்டியிருந்தாள்.
உணவை ஒழிக்கமுடியுமா.
உறக்கத்தை விடமுடியுமா.
சுவாசத்தை எப்படி நிறுத்த.
இப்படியே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் அவன் அவளிடம்
சமரசம் செய்து கொண்டிருந்தான்.
இனி சமரசத்துக்கு இடமில்லை என்று அவள் முடிவு செய்திருப்பது
போலப் பட்டது.
இவனுக்குமே அபத்தமாகத்தான் இருந்தது.
இதுவரை ஏதோ ஒரு பந்தத்தில் கட்டுண்டிருந்திருக்கிறோம்.
எல்லாம் கழிந்துபோனதாகத் தோன்றுகிறது.
அவளுக்கு அவன் வேண்டியதில்லை.
ஒரு பரிவிலும் பற்றிலும்தாம் நடையேற்றி வைத்திருக்கிறாள்.
பாவம் என்றுகூட இருக்கலாம்.
காலம்காலமாக எல்லாப் பெண்களும் பாவம் பார்த்துத்தான்
ஆண்களை விட்டு வைத்திருக்கிறார்கள்.
எந்த நேரமும் எளிதாகத் துண்டித்துவிடமுடியும் உறவை.
ஒரு பெண்ணை உண்மையான ஆண் ஒதுக்கிவிட்டுப் போகமுடியாது.
இது ஆணின் பலவீனமாக இருக்கலாம்.
அது பெண்ணின் சக்தியாக இருக்கும்.
இந்த மாயவளையில்தான் எல்லாரும் சிக்கிக் கிடக்கிறார்கள்.
இவனும் விதிவிலக்கு இல்லை.
இதுதான் பெரியசோகம்.
* * * *


அவளுக்குத் தெரியும் அவனை.
திரும்பத்திரும்பத் தேடி வருவான்.
அந்த அளவுக்கு அடிமைப்பட்டிருந்தான்.
அவள் இல்லாமல் உயிர்தரித்திருக்க இயலாது.
அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக் கூடியவள்.
இவ்வளவு காலமும் நடந்தது விளையாட்டு.
இனி நடக்கவிருப்பது வினை.
விளையாட்டிலேயே ஜெயிக்கத் தெரியாதவன்
வினைக்கு என்ன ஆவான்.
* * * *


தூங்கிக் கொண்டிருந்தாள்.
தொட்டு எழுப்பலாம்.
தயக்கமாக இருந்தது.
எப்படி தூங்கமுடிகிறது அவளுக்கு
அவன் தூக்கத்தைப் பறித்துவிட்டு.
அவள் அயர்ந்து உறங்குவதே அவன் அருகாமையில்தான்.
நிம்மதியான உறக்கம் அவன் சார்ந்தது.

* * * *

அம்முலு -லா.ச.ரா

Labels: ,

லா.ச.ராமாமிருதம்

அம்முவுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. பழக்கக்கோளாறு அப்போதைக்கப்போது கடியாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மணி பார்க்கத் தெரிந்திருந்தால்தானே ஆனநேரம் தெரியும் ?

அப்புறம் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து போய் பல் விளக்கிவிட்டு, வென்னீரடுப்பை மூட்டி, தாமிரம் பளபளக்கத் தேய்த்து செம்மண் பூசிய வென்னீர்த் தவலையை அடுப்பில் ஏற்றினாள். பிறகு எண்ணெய் தேய்த்துக் கொண்டாள். அளகபாரத்தில் அங்கங்கே வெள்ளி சுடர்விட்டது.

வேறு யாராவது, வெற்றிலை மடித்துக் கொடுத்து, குங்குமமிட்டு, 'கெளரி கல்யாணம் ' பாடி தலையில் ஒரு கை எண்ணெய் வைத்தால் அவளுக்கு இஷ்டம் தான். ஆனால் மன்னி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பக்ஷணமெல்லாம் அம்முலுதான் பண்ணினாள். ஆனால் நேற்று முழுக்க சற்று உளையக் காரியம் தான். இப்போ போய், நேரமாச்சுன்னு அண்ணா அறைக்கதவைத் தட்டி எப்படி எழுப்புவது ?

எதற்கும் ஸ்னானம் பண்ணிவிட்டு இட்டிலிப் பாத்திரத்தை அடுப்பில் போட்டு விட்டு வந்தால், மன்னியையும் குழந்தைகளையும் எழுப்பச் சரியாயிருக்கும்.

முழுகிவிட்டு வந்து கண்ணாடி எதிரில் நின்றாள். அவள் நிறம் உற்ற சிவப்பைச் சேர்ந்ததல்ல; வெளுப்புமல்ல. இரண்டும் கலந்தவொரு பொன்னிறம், முகத்தில் காலத்தின் வடுக்களோ, வயதின் கோளாறுகளோ இல்லை. இன்னமும் பத்து வருஷங்களானாலும் அவளால் இப்படியே இருக்கமுடியுமோ என்னவோ ? புன்னகையில் இடது கன்னம் குழிந்தது.

குழந்தை மாதிரி கையைக் கொட்டிச் சிரித்துக் கொண்டே ஓடிப்போய் அண்ணாவின் அறைக் கதவைத் தட்டினாள்.

'மன்னி ' மன்னி ' '

'ஊம்-- ?ஆ-- ? 'உள்ளிருந்து கொட்டாவிகள் கிளம்பின.

'மன்னி ' -- தீபாவளி வந்துடுத்து, எழுந்திரு ' '

'இப்போத்தானே உடம்பை சாய்ச்சேன் ' ' மதுரம் இன்னொரு கொட்டாவி விட்டாள்.

'இதென்ன அக்கிரமம் ' பாதிராத்திரி ஒண்ணரை மணிக்கே தீபாவளி வந்து விடுமா என்ன ? ' என்று அவள் அகமுடையான் சாப்பிட மறந்தாலும், கையில் கட்டிக் கொள்ள மறக்காத கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

'பம்பாயெல்லாம் ராத்திரி முழுக்கவே தீபாவளி தான் ' என்றாள் மதுரம்.

18120731 'உங்கள் அண்ணாவாத்துப் பெருமை இங்கே வேண்டாம். இந்தப் பக்கமெல்லாம் விடிய இரண்டு நாழிக்குத்தான் தீபாவளி. அதோ அம்முலு கதவையுடைக்க ஆரம்பித்து விட்டாள். சொன்னாலும் கேட்காது. மரியாதையாய் எழுந்து நீ வெளியே போய்விடு. நான் இன்னும் நாலு இன்னும் நாலு மணி நேரமாவது தூங்கணும். '

'விடிஞ்சா அமாவாசை. தர்ப்பணமுண்டு. தெரியுமோன்னோ ? '

'தர்ப்பணம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இட்டிலி முன்னாள் ஆகட்டும் ' என்று அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

'தூங்கவிடமாட்டேங்கறாளே பாவி கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி தானும் தூங்கமாட்டேன் என்கிறாள் ' என்று உரக்கத் திட்டிக் கொண்டே, மதுரம் கதவைத் திறந்தாள்.

அம்முலு எதிரே நின்றாள். அவள் மனதில் பொங்கி வழியும் தீபாவளிக் கொந்தளிப்பில், மன்னியின் முகச் சுளிப்புக் கூட தெரியவில்லை.

'மன்னி ' மன்னி ' தீபாவளி ' ' அம்முலு கையைக் கொட்டினாள். 'முன்னாலே உன்னைத் தூக்கி மணையில் வைக்கலாம் வா ' ' முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு மதுரம் வென்னீருள் அறைப்பக்கம் சென்றாள்.

'அடே வாசு ' அடே மணி ' சீனா ' கமலம் ' எல்லோரும் எழுந்திருங்கோ தீபாவளி ' தீபாவளி ' '

'இந்தச் செவிடு பண்ணற ரகளையைப் பாரு ' என்று மாடியில் படுத்திருந்த மதுரத்தின் தம்பி பாலு இரைந்தான்.

'என்னப்பா இப்படி கத்தறே ' காதிலே விழப்போகிறது. '

பாலுவின் நண்பன் பாஸ்கரன், பாலுவின் அழைப்பின் பேரில் தீபாவளிக்காக வந்திருந்தான். அவன் பெற்றோர்கள் வெளியூரில் இருந்தனர். இந்த ஒரு நாளைக்காக அவ்வளவு தூரம் எங்கே போவது ?

'கவலையே படாதே. அவள் காதில் குண்டு போட்டாலும், விழாது. படுசெவி. ஐயையோ, இந்த வீட்டில் நாங்கள் பேசுவதெல்லாம் அம்முலுவுக்குக் காது கேட்குமென்றிருந்தால், எங்கள் அத்தனை பேருக்கும் நாக்கு இழுத்து விடவேண்டியதுதான் ' '

'கெளரீ கலியாணம் வைபோகமே.... '

'யாரப்பா அது ? குரல் 'ஜம்மென்று இருக்கிறதே ' கம்பீரமா, புருஷக் குரல் மாதிரி ' '

'யாரு, எல்லாம் செவிடாம்பாள் தான் ' '

'குரலில் என்ன சுத்தம் ' ஆனால் அவள் பாடுவது அவளுக்கே கேட்காதல்லவா ? '

'வாசுதேவ தவபாலா -- அரசகுல காலா.... '

அம்முலுவின் குரல் கணீரென இயற்கையான காத்திரம் படைத்து நல்ல கணகணப்புடன் எழும்பி மலையருவி போல் வீட்டை நிறைத்தது. நட்டா முட்டியாய், தாயின் வாய்வழி கேட்டு நறுக்காய் நாலு உருப்படிகள் தான் அவளுக்குத் தெரியும். அவைகளும் அவளுக்குக் காது கேட்காது.

உள்ளே, ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு தலைமேல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

பாஸ்கரனும் பாலுவும் கீழிறங்கி வருகையில், குழந்தைகளெல்லாம் நீராடிவிட்டு எண்ணெய் பிசுக்கு உலருவதற்காகப் பழந்துணிகளைக் கட்டிக் கொண்டு மத்தாப்புக்களைக் கொளுத்திக் காண்பித்துக் கொண்டிருந்தன. அம்முலு கைகுழந்தையை முழங்காலில் போட்டுக்கொண்டு, எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள். இன்னமும் சீக்காய் தேய்க்கும் கட்டம் வரவில்லையாதலால் பாப்பா தலையை தூக்கித் தூக்கி அவளையே பார்த்து பொக்கை வாயைக் காட்டிக் கொக்கரித்தது.

மதுரம் புதுத் துணிகளை எடுத்துவர மாடிக்குச் சென்றிருந்தாள். எப்பவுமே அப்படித்தான். உடல் நலுங்காத வேலைகளைத் தனக்குப் பங்கு போட்டுக் கொள்வதில் மதுரத்துக்கு அலாதி சாமர்த்தியமுண்டு. வரப்பிரசாதி என்றுகூட சொல்லலாம். சமையல் வீட்டுவேலைகளுக்கும், குழந்தைகளுக்குப் பணிவிடைக்கும் அம்முலுதான்.

அம்முவின் அசாதாரண அழகைக் கண்டு பாஸ்கரன் பிரமித்துப் போனான். முட்கள் நடுவே சப்பாத்திப் பூவைப்போல், இத்தனை பேர்களுக்குமிடையில், அவள் அழகின் பூரிப்பில் ஒரு தனி ஒதுக்கம், வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கும் அவனால் அறிய முடிந்தது.

ஆம், அவளே ஒரு தனி உலகத்திலிருந்தாள்; நித்திய மெளன உலகம். மற்றவர்கள் பேசினால், மெளனப் படங்களில் காண்பதுபோல, உதட்டின் அசைவிலும் உடல் ஆட்டத்திலும் சமிக்கையிலும் அவள் அர்த்தம் கண்டுகொள்ளணுமேயொழிய, வாய்ப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ள முடியாது.

தினசரி, குழந்தை பெரியவர்களின் கூக்குரல்களும், சிறுஞ்சண்டை பெருஞ் சண்டைகளும், நாகரிகம் முற்ற முற்ற நாளடைவில் உலகத்தை நாசத்துக்கே இழுத்துச் செல்லும் தெருச் சந்தங்களும், சொல்வதெல்லாம் காது கேட்பதால் நேரும் கவலைகளும், அவள் உலகத்தில் புகுந்து, மற்றவர்களைச் செய்வது போல், உடலையும் மனதையும் துளைத்து உருக்கி அவளை உளுக்க வைக்கவில்லை. அவளை விட நாலு வயது மதுரம் இளையவள். ஆனால் மதுரத்திற்குக் கன்னத்துச்சத்தை ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் அலங்காரம், பூச்சு எல்லாம் அமர்களம்தான். தான் இன்னும் புது மெருகு அழியாமல் இருப்பதாகவே எண்ணம்.

அம்முலுவின் முகத்தில் இன்னமும் பால் சொட்டிற்று ஆயினும் கூந்தலில் மாத்திரம் இருண்ட மேகத்தில் மின்னல் போல், ஒன்றிரண்டு வெள்ளி மயிர்கள் புரண்டன. அவள் பல்வேறு பிடுங்கல்களுக்கு ஆளாகவில்லை. கணப்புச் சட்டியில் தணல் மூடிய பொன்னுருண்டை போல் ஒரே ஒரு மஹோன்னதமான துயரத்தில் துலங்கிக் கொண்டிருந்தாள்.

பாலுவையும் பாஸ்கரனையும் பார்த்துவிட்டுச் சட்டென எழுந்து, புன்னகை புரிந்த வண்ணம் குழந்தையை அலக்காய்த் தூக்கிக் கொண்டு வென்னீர் அறையுள் சென்றாள்.

'உடம்பைப்பார், சரியான நாட்டுக் கட்டை ' ' என்றான் பாலு. பாஸ்கரனுக்குத் திடாரென்று பாலுவைக் கண்டு கரிப்பு எடுத்தது.

'என்ன முழிக்கிறாய் ? நாட்டுக் கட்டையென்றால் எல்லா விதத்திலும் நாட்டுக் கட்டைதான். எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாம் கைநாட்டுதான். 'இந்த இடது கைப் பெருவிரல் குறி செவிடாம்பாள் -- இல்லை--அம்முலு--இல்லை அலமேலு அம்மாளுடையது. ' 'இன்று முழுவதும் பற்றுப் பாத்திரங்களைத் தேய் அல்லது கிணற்றிலிருந்து ஜலம் இழுத்து ஊற்று ' என்றால் செய்து கொண்டிருப்பாள். அதுவும் என் அக்காளுக்கு வேலை வாங்க சொல்லிக் கொடுக்கணுமா ? '

அம்முலுவுக்கு, பாலு தன்னை ஏளனம் பண்ணுவதெல்லாம் தெரியாது. கொல்லைப் புறத்து முற்றத்தில் குழந்தையின் தலையைத் துவட்டிக் கொண்டே ஆகாயத்தை குழந்தைக்குச் சுட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.

திடாரென்று ஒரு அவுட்டு வாணம் கிளம்பி ஆகாயத்தில் சீறிக் கொண்டே சென்று 'பட் 'டென்று வெடித்தது. அதனின்று நாலைந்து வர்ணங்களில், நஷத்திரக் கூட்டங்கள் உதிர்ந்து குடை கவிந்து அவிந்தன. ஆயினும் ஒரே ஒரு நீலப் பொறி மாத்திரம் அழியாது, வெகு தூரம் வானவெளியில் தனியே மிதந்து சென்றது. அதன் கதியைக் கண்ணுக்கெட்டிய வரை கவனித்த வண்ணம், அம்முலு அதிசயித்து நின்றாள்.

அது கடைசியாய்க் கரியாய்த்தான் ஆயிற்றோ அல்லது நஷத்திரங்களுடன் கலந்துவிட்டதோ ? நிச்சயமாய்த் தெரியவில்லை.

அம்முலு பெருமூச்செறிந்தாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

மதுரம் புதுத் துணிகளுக்குக் குங்குமம் தடவிக் கொசுவிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் அவளைச் சுற்றி ஆரவாரித்துக் கொண்டிருந்தன. ஆனந்தசிவம் அறையை விட்டு வெளியே வந்து நின்று கையை முறித்து முதுகைச் சொரிந்து கொண்டிருந்தான்.

'இந்தாடா வாசு, உனக்கு சொக்காய் வேஷ்டி; மணி, உனக்கு அரை நிஜார் சொக்காய்; சீனு, உனக்கு சொக்காய் வேஷ்டி; கமலுவுக்குப் பாவாடை ஜாக்கெட்; எனக்குப் புடவை ரவுக்கை; பாலு, உனக்கு உன் அத்திம்பேருக்கும் வேஷ்டி துண்டு-- '

அம்முலு எல்லோருக்கும் பங்கீடு ஆவதைப் பார்த்துக் கொண்டு வாய் பேசாது தன் பங்கிற்காகக் காத்துக் கொண்டிருந்தாள் முகத்தில் ஆவல் ததும்ப. புன்சிரிப்புடன் அப்படி அவள் நின்றது, அப்பா ஆபீஸிலிருந்து வருகையில் வாங்கி வந்த பொட்டலத்தைப் பிரிக்கக் காத்துக்கொண்டிருந்த குழந்தை மாதிரியிருந்தது.

திடாரென்று இம்சையான மெளனம் அங்கு தேங்கியது.

அம்முலுவை அவர்கள் அடியோடு மறந்து விட்டார்கள். பாஸ்கரனுக்கு முகம் திகுதிகு என்று எரிந்தது. கண்ணுக்கெதிரில், இருள் தூலங்கள், கூட்டானிட்டாற் போல், ஒன்றன்பின் ஒன்று குறுக்கே பாய்ந்து சென்றன.

இங்கு நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் ?

இந்த வீடே காடு மாதிரி இருந்ததேயொழிய வீடாய் இல்லை. அவரவர் துணியை அவரவர் பிய்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் மாமிசத்துண்டை முன்னங்கால்களுக்கிடையில் பதுக்கிக்கொண்டு ஒன்றுக்கொன்று 'உர்--ர்-- ' என்று உறுமிக்கொண்டிருக்கும் மிருகங்கள்....

அம்முலு--

ஆனந்தசிவத்தின் முகத்தில் அசடு தட்டிற்று. போன தீபாவளிக்கு என்ன பண்ணினானோ, அல்லது இந்த தீபாவளிக்குப் பாஸ்கரனில்லாவிட்டால் என்ன சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்திருப்பானோ ? இருந்தாலும் மூணாம் மனிதனுக்கெதிரில்..... மதுரத்தைப் பார்த்துக் கடுகடுவென விழித்தான். மதுரம் மென்று விழுங்கினாள்.

'எல்லாம் ஏகப்பட்ட செலவாயிடுத்து, நான் என்ன பண்றது ? உள்ளே என் கலியாணப் புடவை இருக்கு. வேணுமானால்... '

ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு சீறினான். கொண்டு வா அதை இல்லை, இவளை அழைத்துக் கொண்டு போய்க் கொடு -- என்ன ஸார், பாருங்கோ இந்த பொம்மனாட்டிகளை ' நமக்கு இவர்களோடு கடைக்குப் போகப் பொழுது இல்லையே என்று காசை இவர்கள் கிட்டேவிட்டால் இப்படித்தான். தன் காரியம் தன் கணக்குத்தான்-- '

Damn you ' உங்களைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரிய வேண்டாம். இங்கே நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் ? Damn you, Damn பாலு Damn all of you '

பட்டுப் புடவையுடன் அம்முலு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டாள். சுயம்வர மண்டபத்திற்கு வந்த ராஜகுமாரி மாதிரியிருந்தாள் அவள் பின்னால் மதுரம், புதுப் புடவையைக் கட்டியும், சோபையிழந்து, தாதி மாதிரி.

அம்முலு வந்து அண்ணனை நமஸ்கரித்தாள்.

ஆனந்தசிவத்துக்கு தொண்டையை என்னவோ பண்ணிற்று. விழிகளில் கண்ணீர் விளும்பு கட்டியது. தொண்டையைப் பலமாய்க் கனைத்துக்கொண்டு ஸ்னானத்திற்குச் சரேலென்று சென்றான்.

அம்முலு மன்னியைச் சேவித்துக்கொண்டாள். மதுரம் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, 'தீர்க்க சுமங்கலீ பவா ' என்று ஆசிர்வதித்தாள். ஆசி சாபம்போல் ஒலித்தது.

பாஸ்கரனுக்கு, குளித்துவிட்டுப் படியேறுகையில் 'ஏண்டாப்பா இந்த வீட்டிற்கு வந்தோம் ' என்ற ஒரே எண்ணம், இசைத்தட்டில் கீறல் விழுந்தாற்போல், திரும்பத் திரும்ப அதே எண்ணம், இடம் தூக்கி எடுத்து விடுவார் இன்றி, நெஞ்சில் தவித்தது.

மாடியில் ஆனந்தசிவம், மதுரத்திற்குப் பட்டாசு சுடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐந்து பெற்றும் இன்னமும் ஆசை விடவில்லை. அவளுக்கும் பட்டாசுக்குப் பயப்பட ஆசைவிடவில்லை.

பாஸ்கரன் பாலு அறைக்குச் சென்றான். பாலு ஒரு சோமாசியை அப்படியே முழுசாய் விழுங்க முயன்று கொண்டிருந்தான்.

'அம்முலுவின் கணவன் எங்கே ? ' என்று பாஸ்கரன் ஏதோ பேச்சுவாக்கில் கேட்பதுபோல் கேட்டான்.

'ஓ, அதுவா, அது ஒரு கதை. அவள் கணவன் எங்கே என்று ஒருத்தருக்கும் தெரியாது. அவன் ஒரு சங்கீத வித்வான். அப்படியென்றால் என்ன தெரியுமோல்லியோ ? தேங்காமூடி வித்வான். இஸ்பேட் ராஜா. ' வாய் நிறைய அடைத்துக் கொண்டு, கன்னம் உப்பக் குதப்புகையில், பாலுவின் விழிகள் பயங்கரமாய்ப் பிதுங்கின.

'அக்காவுக்கும் அம்முலுவுக்கும் ஒரே பந்தலில்தான் கலியாணம் நடந்தது. பையன் கொஞ்சம் தறிதலை. படிப்பு வரவில்லை என்றுதான் பாட்டில் போட்டிருந்தார்கள் என்று பந்தல் பேச்சு. ஏதோ பொறுப்பையும் தலையில் கட்டிப் போட்டால், பையன் உருப்பட்டு விடுவான் என்று பெற்றவர்கள் எண்ணம். அதனால் ஒரு கலியாணத்தையும் பண்ணி வைத்தார்கள். '

'அவனுக்கும் அம்முலுவுக்கும் ஒரு வயது வித்தியாசம் தானிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு பத்து வருஷத்திற்கு முந்திய கதை சொல்கிறேன். '

'தலை தீபாவளி வந்தது. அதுவும் ஒன்றாகத்தான் நடந்தது. மாப்பிள்ளைப் பையனை வழக்கம்போல் கூப்பிட்டிருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு கல்லிழைத்த மோதிரத்தை சண்டை போட்டு வாங்கினார். வித்வான் அட்சரம் எண்ணி தாளம் போடுவது சபைக்கு எப்படித் தெரிகிறது ? '

'எல்லாம் 'குஷி 'யாய்த்தானிருந்தது மாப்பிள்ளைப் பையன்கள் பட்டாசு சுட்டான்கள். பெண்டாட்டிகளுக்கு சுடக் கற்றுக் கொடுத்தான்கள் -- இல்லையா சேஷ்டையெல்லாம் ' '

பாலு தாத்தா மாதிரி பேசினான்.

'பொல்லாத வேளை வந்தால் யார் என்ன பண்ண முடியும் ? அம்முலு, பட்டாசு வெடித்து அப்பொழுதான் அணைந்து போன விளக்கை குனிந்து ஏற்றிக்கொண்டிருந்தாள். அம்முலு புதுப் புடவையும் புதுமணப் பெண்ணுமாய் விளக்கை ஏற்றுகையில் எப்படியிருந்திருப்பாள். அந்தக் காட்சியை எண்ணிப் பார்த்துக்கொள். '

அவள் அகமுடையானுக்குத் திடாரென கும்மாளம் பிறந்து விட்டது. கல்யாணி ராகத்தின் உச்சஸ்தாயி ஸ்வரத்தை ஒரே மூச்சாய்ப் பிடித்துக் கொண்டு, இரண்டு கையிலும் ஓலைப் பட்டாசுகளை பக்கத்து விளக்கில் ஏற்றி அவள் முகத்துக்கெதிரே பிடித்தான்.

'ப--டா--ர்-- '

இரண்டு காதுகளையும் கெட்டியாப் பொத்திக் கொண்டு அம்முலு அப்படியே, குனிந்த தலை நிமிராது, குன்றி உட்கார்ந்து விட்டாள்.

பையனுக்குக் கிலி பிடித்துவிட்டது. ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டோம் என்று தெரிந்து விட்டது இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்.

'அம்முலு '---அம்முலு ' ' '

அன்றிலிருந்து அம்முலுவுக்குக் காதே கேட்கவில்லை. திருப்பித் திருப்பி என்ன கேட்டாலும், 'நீளமாய் ஒரே சத்தம்தான் எனக்குக் கேட்கிறது -- யாரோ பாடறாளா ? ' என்பாள்.

'என்ன நடந்தது ? எது நடந்தது ? மாப்பிள்ளை பையன் எங்கே ? '

'மாப்பிள்ளைப் பையனாவது மண்ணாங்கட்டியாவது ' எண்ணெய் ஸ்னானம் பண்ணி, புது வேஷ்டியுடன் ஓடினவன்தான். இன்னமும் அகப்படப் போகிறான். இங்கு வந்தவனுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பியவனுமில்லை. ஆச்சு, பத்து வருஷங்களும் போச்சு. அவனைத் தேடாத இடமில்லை. அம்முலுவுக்குப் பண்ணாத வைத்தியமில்லை. ஒன்றும் பயனில்லை. காதும் போச்சு, கணவனும் போனான். வாழ்வும் போச்சு. '

அதே ஏக்கத்தில் அம்முலுவின் தாயார் இறந்து விட்டாள். ஒரே பெண். அப்புறம் அம்முலுவுக்கு கதி ஆனந்தசிவம்தான்.

அம்முலு மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அதை ஆராய எனக்கு யோக்யதையுமில்லை, தைரியமுமில்லை. அவள் தன் வாழ்க்கையின் சூன்யத்தில் தான் ஐக்கியமாகி விட்டாளோ, அல்லது இன்னமும் என்றாவது ஒரு நாள் அவள் கணவன் திரும்பி வருவான் என்னும் நம்பிக்கையில் தான் இன்னமும் ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கிறாளோ ? '

அறைக்கு வெளியே யாரோ போகும் அரவம் கேட்டது. பாஸ்கரன் எட்டிப் பார்த்தான்.

அம்முலு புதுப்புடவை சரசரக்க வான வீதியில் மிதந்து சென்ற நீலப்பொறிபோல், அதிசயக் கனவு கண்டு இன்னும் அதனின்று விழித்தெழாத கண்களுடன், புன்னகை புரிந்த் வண்ணம் நிதானமாய் மாடிப்படி வழியாக கீழே போய்க் கொண்டிருந்தாள்

தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

Labels: ,

எம்.வி. வெங்கட்ராம்

கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும்.
FatherandSon2
என் மகனைப் பற்றி நானே புகழ்ந்து பேசினால், 'கலியாணம் ஆகாத பையன்; குறைத்துப் பேசினால் மார்க்கெட் ஆகுமா, என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கலாம். 'காக்காயின் பொன் குஞ்சு' என்று பரிகாசம் செய்கிறவர்களும் இருப்பார்கள். என் மகனை நான் இகழ்ந்தால் 'பிள்ளையைப் பெறத் தெரிந்ததே தவிர, வளர்க்க தெரியவில்லையே, ஐயா' என்று என்னையே சாடுவார்கள். ஆகையால், பொதுவாக, அவனைப் பற்றி என் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடுகிறேன்.

அவன் பெயர் சந்திரன்; என்னுடைய மூத்த மகன். வயது இருபத்திரெண்டு முடிந்துவிட்டது. சட்டப் பரீட்சையில் தேறி, பிராக்டீஸ் செய்யாமல் வீட்டோடு இருக்கிறான். என்னோடு வியாபாரத்தையும் நில புலங்களையும் கவனிக்கிறான். சட்டக் கல்லூரியில் சேரும்வரை வக்கீல் ஆக வேண்டும் என்று ஒரே ஆத்திரமும் ஆவலுமாக இருந்தான். கல்லூரியில் சேர்ந்ததும் அவனுக்குக் கதை எழுதும் பைத்தியம் பிடித்தது. படித்தபடியே கதைகளும் கட்டுரைகளும் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினான். (சில பல என்று கூடச் சொல்லலாம்) பத்திரிகைகளில் அவை வெளியாயின. வக்கீல் பட்டம் பெற்று வெளியே வந்ததும் அவனுக்கும் வக்கீல் தொழில் பிடிக்க வில்லை. பத்திரிகை நடத்துகிறேன் என்று என்னிடம் அனுமதி கேட்டான். அனுமதி கேட்பதென்ன, 'ஆரம்பிக்கட்டுமா?' என்று கேட்டான், ஆரம்பித்து விட்டான். அதுவும் ஒரு தொழில்தானே என்று நானும் பேசாமல் இருந்தேன்.

அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் நான் குறுக்கிடுவதில்லை. அவன் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை. தவறு செய்யமாட்டான் என்று பத்திரிகை நடத்தப் பணம் கொடுத்தேன். 'ராகம்' என்ற அந்தப் பத்திரிகை அழகாகத்தான் இருந்தது. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அதை மரியாதையுடன் வரவேற்றன. அவை மலை உயரத்துக்கு என் மகனைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தியதைக் காண எனக்கு மிகவும் பெருமையாகத்தான் இருந்தது.

ஆறு மாதங்கள் கழித்துக் கணக்குப் பார்த்தேன், ஆறுமாத இலக்கியத்தின் விலை ஐயாயிரம் ரூபாய் என்று கணக்கு காட்டியது. எனக்குப் 'பக்' கென்றது.

அவனைக் கூப்பிட்டு, ''சந்திரா, பத்திரிகை நன்றாக நடக்கிறதா?'' என்று கேட்டேன்.

mv. venkatraman ''இதோ பாருங்கள் அப்பா'' என்று அன்று தபாலில் வந்த இருபது, முப்பது கடிதங்களை என்னிடம் நீட்டினான் அவன்.

''அது சரி, கணக்குப் பார்த்தாயா?''

''அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல'' என்றான் அவன் உணர்ச்சியோடு.

''லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா? அதற்காகச் சொல்ல வரவில்லை. என் தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங் களுக்கு இருக்கும். நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

கூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும் கவனித்தால் மற்ற சத்புத்திரர் களின் லட்சியம் என்ன ஆகும்?''

''பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே? 'ராகத்'துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே?''

''நீ கதை கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு எல்லாம் அனுப்பு. மார்க்கெட்டில் பெயர் உண்டாகிவிடும். பிறகு பத்திரிகை ஆரம்பம் செய், தொழில் எப்படி நடக்கிறது பார்,'' என்றேன் ஆறுதலுக்கு.

''இலக்கியம் வேறே, தொழில் வேறே; இலக்கியம் தொழில் ஆக முடியாது; சரி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, 'ராகம்' முடிந்துவிட்டது.''

சொன்னபடியே செய்துவிட்டான் அவன். அவனுக்கு வருத்தமாக இருந்ததா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. என்னோடு வியாபாரத்தை கவனித்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்து, பத்து இருபது என்று சம்பாதிக்கத் தொடங்கினான்.

மொத்தத்தில், என் அபிப்பிராயத்தில், என் பையன் நல்லவன். என் சொல்லைத் தட்டமாட்டான் என்பதில் மட்டும் நான் இப்படிச் சொல்லவில்லை. பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஏராளமாக மார்க்குகள் வாங்கித் தேறியதோடு, வருஷம் தவறாமல் நன்னடத்தைப் பரிசும் அவனுக்குத்தான் கிடைக்கும். சிகரெட், பொடி, புகையிலை வகையறா தெரியாது. சீட்டாட்டத்தில் ஜாதிப் பிரிவினை கூடத் தெரியாது. பெண்களுடன் சங்கோசம் இல்லாமல் பழகுவான். நானும் பயப்படாமல் பழகவிட்டேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லையே? ஆனால் அவன் வேலியைத் தாண்டியது கிடையாது. அப்படிப் போனதாக அபவாதம் கூட இல்லை. படித்த பையனின் லட்சணம் ஒன்றும் அவனிடம் காணோமே என்று நான் கூட ஆச்சரியப்படுவது உண்டு. நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று எனக்கு அவன்மேல் குறை; எனக்கு கண்டிக்கத் தெரியவில்லை என்று என்மேல் அவனுக்கு குறை! அவனும் நானும் பழகுவதைப் பார்த்தால், அப்பனும் பிள்ளையுமாகத் தோன்றாது. இரண்டு நண்பர் களாகத்தான் தோன்றும்.

இப்பேர்பட்ட பிள்ளை, கல்யாண விஷயத்தில் மட்டும் என்னிடம் மனம் விட்டுப் பேசாமல் மர்மமாக இருப்பதன் காரணம் எனக்கு பிடிபடவில்லை. அவன் பையன்; நாற்பது வயதில் கூட மணம் செய்து கொள்ளலாம். ஆனால் மகாலட்சுமி பெண்; அவனைக் கலியாணம் செய்து கொள்வதற்காகக் காத்திருக்கிறவள். அவளை ஊறுகாய் போட முடியுமா?

மகனுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் தகப்பனின் உரிமையை மறந்துவிட முடிகிறதா? நாள் ஆக ஆக எனக்கும் பொறுமை போய்விட்டது. அவனைக் கண்டித்துக் கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அதற்கு ஒரு நாளும் குறித்துக் கேட்டேன்.

அன்று விடுமுறை நாள். காலையில் எனக்கு முன்னால் அவன் எங்கோ போய்விட்டான். மத்தியானம் சாப்பிட வரட்டும் என்று கோபமாக இருந்தேன்; ஆனால், இரவு ஏழு மணிக்கு, அதாவது நான் கோபித்துக் கொள்வதற்கு தயாராக இல்லாத ஒரு நேரத்தில் அவன் வந்து சேர்ந்தான்.

கோபம், என் இயற்கைக்குப் பொருந்தாத ஓர் உணர்ச்சி. கோபம் வந்தால் முகம் கடுமையாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எல்லாம் அவன் வரவில்லை. அவன் வந்தபோது நான் குருமூர்த்தியோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தேன். அவன் என் கடைசிப் பையன். வயது மூன்று இன்னும் பூர்த்தி ஆகவில்லை.

இருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம்? இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன். குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கொஞ்சம் உண்டு. நானும் அவளும் கட்டுப் பாடாகத்தான் இருந்தோம். நாங்கள் மனிதர்கள் தானே? கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தால் அதை மீறிவிட்டோம். பிறகு டாக்டரைப் பார்த்து அவள் நாலைந்து இஞ்செக்ஷன்கள் செய்து கொண்டோள்; ஏதோ மாத்திரைகள் கூட அவள் சாப்பிட்டதாக ஞாபகம். கட்டுப்பாடு, டாக்டர், இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை குருமூர்த்தி.

'சுத்த பிண்டம்; கல்லைப் போட்டாலும் கலைக்க முடியாது, ஸார்' என்று பிறகு சொன்னார் ஜோஷியர். சுத்த பிண்டம் என்பதாலோ என்னவோ வீட்டில் உள்ள எல்லோரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டு, குருமூர்த்தி பெரியவன் ஆகிவிட்டான்.

சந்திரன் இரவு வீடு திரும்பிய சமயம் குருமூர்த்தி பென்சிலும் நோட்டுமாக எழுதிக் கொண்டிருந்தான்; நான் செலவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

''என்னடா எழுதினே?''

''மஞ்சள் ஓரணா,'' என்றான் குருமூர்த்தி.

''எழுது, சந்தனம் ஓரணா''

''ஆயிட்டுது,''

''பழம் ரெண்டனா''

''எழுதிட்டேன்''

''எல்லாம் என்ன ஆச்சு?''

''ரெண்டனா''

முட்டை முட்டையாகக் கிறுக்கி, அவன் கணக்கு எழுதுவதைப் பார்த்து சந்திரன் சிரித்தபோதுதான் அவன் வந்ததை நான் கவனித்தேன். உடனே, கோபம் வந்தது. குருமூர்த்தியை அப்படியே விட்டு விட்டு எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தேன்.

''ஆசிரியர் வந்தாயிற்றா? காலையிலிருந்து எங்கே மறைந்துவிட்டீர்கள்?'' என்றேன், என் குரலில் கொஞ்சம் கடுமை இருந்ததை நானே கண்டேன்.

அவன் அதை லட்சியம் செய்ததாகத் தெரிய வில்லை.

''ஏன் அப்பா, ஏதாவது அவசர ஜோலி இருந்ததா? மகாலட்சுமி வீட்டுக்குப் போனேன். ரகுராமன் வந்தார். மகாலட்சுமி அங்கேயே சாப்பிடச் சொல்லிவிட்டாள். பேசிக் கொண்டே இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.''

மகாலட்சுமியின் பெயரைக் கேட்டதும் நான் வரவழைத்த கோபம் எங்கோ போய்விட்டது.

''உனக்கு என்ன வயது தெரியுமா?''

''இருபத்திரண்டு'' என்றான் அவன் சிரித்தபடி.

''இவ்வளவு வயசாகியும் இந்த குருமூர்த்திக்கு இருக்கிற தெளிவு கூட உன்னிடம் காணோமே? வீட்டுக்கு வந்ததும் செலவுக் கணக்கு கேட்கிறான். நீ''

''நான்தான் பத்திரிகையை எப்போதோ நிறுத்தி விட்டேனே''

''அதை நான் சொல்லவில்லை. எந்த விஷயத்திலும் ஒரு தெளிவு வேண்டும் என்கிறேன். வயது வந்த ஒரு பையனும் ஒரு பெண்ணும் நாள் முழுவதும் கதை பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை யாராவது கண்டால் என்ன நினைப்பார்கள்?''

''பிறத்தியார் ஒன்று சொல்வார்கள் என்பதற்காக நமக்குப் பிடித்ததைச் செய்யாமல் இருக்க முடியுமா அப்பா?''

''அப்படியானால் மகாலட்சுமி உன் மனசுக்குப் பிடிக்கிறாள் என்று சொல்லு''

''பிடிக்காமல் என்ன அப்பா?''

''அப்படியானால் முகூர்த்தத்துக்கு நாள் பார்க்க லாமா?''

''யாருக்கு?''

''என்னடா அது? மகாலட்சுமிக்குத்தான்''

''மகாலட்சுமிக்கா? என்னிடம் கூட சொல்லாமல் வரன் பார்த்துவிட்டீர்களா?''

''என்ன அது, என்ன அது, வரன் பார்த்து விட்டீர்களாவா! என்னடா, புதுசாய் பேசுகிறாய்? உனக்காகவே பிறந்து வளருகிறாள், வேறு வரன் எதுக்காகத் தேடுவது?''

''வேண்டாம்''

''அதுதானே பார்த்தேன்; வருகிற பங்குனியில் நாள் பார்த்துவிடட்டுமா?''

''வேண்டாம் என்றேனே அப்பா?''

''எப்போது வேண்டாம் என்றாய்? நாள் பார்க்காமல் சீர்திருத்த மணம் செய்து கொள்ளப் போகிறாயா? இதற்காகத்தான் ஆகட்டும், ஆகட்டும் என்றாயா? எனக்கு என்னடா இதில்? மகாலட்சுமியும் சரி என்றால் எனக்கு சம்மதம். இதைச் சொல்லவா இவ்வளவு தயங்கினாய்?''

''அது இல்லை அப்பா, மகாலட்சுமியை வேண்டாம் என்றேன்.''

''ஆரம்பித்து விட்டாயே! என்ன விளையாட்டு இது? இரண்டு பேரும் சேர்ந்து கும்மாளம் அடிக்கிறீர்கள். கலியாணப் பேச்சில் மகாலட்சுமியைப் பற்றி விளையாடாதே, சொல்லிவிட்டேன்.''

''நிஜமாகத்தான் சொல்லுகிறேன்''

''ஏன், கறுப்பாயிருக்கிறாள் என்பதாலா?''

''அதுக்காக இல்லை''

''ஒண்ணரைக் கண் என்றா?''

''வந்து அப்பா''

''சதா நாட்டியம் ஆடுகிறாளே, அதனாலா?''

''நான் சொல்ல வந்தது''
''அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்று தானே சொல்லப் போகிறாய்?''

''நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டே போனால் நான் எப்போது பேசுவது?''

''மனசுக்குப் பிடிக்கிறது என்று கலியாணம் வேண்டாம் என்றால் என்னடா அர்த்தம்? போடா, போடா, கலியாணம் என்றால் இவ்வளவு வெட்கமா? போ, போ நாள் வைத்து விட்டுச் சொல்லி விடுகிறேன்.''

''இரண்டு நாள் தவணை கொடுங்கள் அப்பா. முடிவாகச் சொல்லிவிடுகிறேன்''

''நல்ல பிள்ளை! உனக்கு இவ்வளவு தூரம் இடம் கொடுத்துப் பழகியது பிசகு என்று கூட தோன்றுகிறது.''

''அப்பா, பிறகு உங்களுக்குத் தெரியும்''

''எனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு எல்லாம் தெரியும். அப்படித்தானே? வக்கீலுக்குப் படித்து, பத்திரிகை நடத்திவிட்டால்''

''அப்பா, ஒரு நியூஸ். நாளைக்கு ரகுராமனும் மகாலட்சுமியும் இங்கே சாப்பிட வருகிறார்கள். நீங்களும் நானும் கடைக்குப் போக வேண்டாம்.''

''யார் இந்த ரகுராமன்?''

''அவர் ஒரு கவி; ரொம்ப நல்லவர்''

''கதாசிரியனாலேயே வீடு இவ்வளவு அமளிப் படுகிறது; கவி நல்லவராம். என்ன வயசு அவருக்கு? மகாலட்சுமியோடு அவருக்கு என்ன வேலை?''

''அவருக்கா? ஐம்பது, ஐம்பத்திரண்டு இருக்கும்''

''சரி, இரண்டு நாளில் உன் சம்மதத்தைச் சொல்லிவிட வேண்டும்''

அவன் அங்கே இருந்தால்தானே நான் பேச முடியும்?

எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருந்தது. மகாலட்சுமியை மணப்பதற்கு, தவணை சொல்லும் பையனைப் பற்றி என்ன சொல்லுவது?

மகாலட்சுமியை நான் சாதாரணப் பெண் என்று சொல்ல மாட்டேன். நல்ல சிவப்பு; களையான முகம்; எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படிப்பு; சிறந்த சங்கீத ஞானம்; பாடுவதற்கு இனிமையான குரல்; நாட்டியமாடத் தெரியாது; தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் நல்ல பண்டித்தியம்; பெட்டி போல் அடக்கமான பெண், வீட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி; பெண்ணா அவள்? வரதட்சிணை நான் எதிர்பார்க்கவில்லை. மகாலட்சுமி என் வீட்டுக்கு வந்தாலே போதும் என்பது என் ஆசை.

இந்த ஆசைக்கு மற்றோர் அடிப்படையான காரணமும் உண்டு. நானும் அவள் தகப்பனாரும் அடி வயது முதல் சினேகிதர்கள். எங்கள் இருவருடைய குடும்பங்களும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தன. தெய்வத்தின் தயவில், இரண்டு குடும்பங்களுக்கும் 'இல்லை' என்று ஏங்கும்படியான நிலைமை இல்லை. இந்த அமைதியில் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மகாலட்சுமியின் தந்தை திடீரென்று மாரடைப்பு என்று வியாஜம்-தலை¨யைக் கீழே போட்டுவிட்டார். உயிர் பிரியும் தறுவாயில்-தம் குடும்பத்தை சம்ரட்சிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டார். அவருடைய மனைவி உள்பட அந்தக் குடும்பம் பூராவுமே என்னைக் கலந்து கொள்ளாமல் ஒன்றும் செய்வதில்லை. மகாலட்சுமி நான் சொல்வதற்கு மாறாக ஒரு வார்த்தை பேச மாட்டாள்.

அவள் தகப்பனார் உயிரோடு இருந்தபோதே இரு குடும்பங்களுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் ஏற்பட வேண்டும் என்கிற ஆவல் அவருக்கும் எனக்கும் இருந்தது. அதற்கு ஏற்பச் சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப் பழகுவதைக் கண்டபோது நாங்கள் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத் திட்டமிட்டோம். 'இவனுக்கு அவள்; இவளுக்கு அவன்' என்று முடிச்சு போட்டிருந்தோம்.

இப்போது, இந்நிலையில் சந்திரன் அவளை மணப்பதற்கு சால்ஜாப்பு சொல்லி வந்ததோடு, தவணையும் கேட்பதன் மர்மம் எனக்கு புரியவில்லை.

'சிறிது காலம் போனால் சரியாகிவிடுவான். இருவரும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறார்கள்? எதற்காகவோ தயங்குகிறான், பின்னால் ஒப்புக் கொண்டுவிடுவான்' என்று சமாதானம் செய்து கொண்டு படுத்தேன்.

காலையில் மகாலட்சுமியின் முகத்தில் கண் விழித்தேன்.

''வா அம்மா'' என்று வெளியில் வந்தபோது சந்திரனோடு ஓர் இளையவன் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன்.

''அப்பா, நான் சொன்னேனே; இவர்தான் ரகுராமன்...''

''இவரா? ஐம்பது வயது என்றாயே, இருபது இருபத்திரண்டுதான் இருக்கும்போல்...''

''வேடிக்கையாகச் சொன்னேன்!''

ரகுராமன் கவியாகத் தோன்றவில்லை. மிகவும் அடக்கமாக இருந்தான்; அழகாய் பேசினான்.

அன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி, காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க் கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச் சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டே அவளிடம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான் அவளுக்கு ஞானம் இருந்தது.

மாலையில் முதலில் மகாலட்சுமி விடை பெற்றுக் கொண்டாள். பிறகு ரகுராமன் கிளம்பினான். இருவரும் போனபின் சந்திரன் என்னைச் சூழ்ந்து கொண்டான்.

''அப்பா, ரகுராமன் எப்படி?'' என்றான்.

''எப்படி என்றால்?''

''அவனைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?''

''ஏதாவது சிபாரிசுக் கடிதம் வேண்டுமோ?''

''காலேஜ் லெக்சரர் வேலை போதும் அவனுக்கு. ரகு நல்ல பையனா, கெட்ட பையனா?''

''என்ன கேள்வி இது? உன்னைவிட நல்ல பையன் தான்'' என்றேன், அவனுக்கு உறுத்தட்டும் என்பதற்காக.

''அப்படிச் சொல்லுங்க அப்பா!'' என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான்.

''இது என்ன அற்ப சந்தோஷம்?''

''ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக விசாரித்து விட்டேன்.''

''நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே'' என்றேன் சிரித்துக்கொண்டே.

''இருக்கிறதே!''

''பத்மாவுக்குப் பத்து வயதுதானேடா? அழகுதான் போ! சின்னக்குழந்தையை...''

''பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்!''

''நான் அப்போதுதான் முதன் முறையாக அதிர்ச்சி எனப்படும் உணர்ச்சிக்கு வசப்பட்டேன். சில நிமிஷங்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

''என்னடா சொல்லுகிறாய்''

''அப்பா, ஆத்திரப்படக்கூடாது.''

''எனக்கு ஆத்திரப்படத் தெரியவில்லை என்று தானே நீ என்னை இப்படி ஹிம்சிக்கிறாய்? மகாலட்சுமியை நான் மருமகளாக அடைய.''

''கொஞ்சம் பொறுங்கள். உங்கள் வார்த்தையை நான் எப்போதாவது தட்டியது உண்டா? நான் சொல்வதில் தப்பு இருந்தால் சொல்லுங்கள், ஒப்புக் கொள்கிறேன்.''

''என்னடா சொல்லப் போகிறாய்? இப்படி எல்லாம் பழகிவிட்டு, இது என்ன முடிவடா திடீரென்று?

''அப்பா மகாலட்சுமி நீங்கள் சொல்வதுபோல், மகாலட்சுமி மட்டும் அல்ல, ஸரஸ்வதியும்கூட வயது வந்த பிறகும் நான் அவளுடன் இவ்வளவு அதிகமாய்ப் பழகினேன் என்றால்... அதற்குக் காரணத்தைச் சொல்லவே எனக்கு வெட்கமாயிருக்கிறது.''

அவன் முகம் சுண்டுவதைக் கவனித்தேன். அதை ஒருபோதும் என்னால் சகிக்க முடியாது. என்னுடைய வருத்தத்தை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதலாகப் பேசினேன்.

''சும்மாச் சொல்லு; என்னிடம் சொல்லுவதற்குமா வெட்கம்?''

மகாலட்சுமி படித்தவள் என்று மட்டும் நீங்கள் நினைக்கிறீர்கள். எனக்கு அவள் அப்படித் தோன்றவில்லை. எனக்கு அவள் ஒரு பிறவி மேதையாகத் தோன்றுகிறாள். இல்லாவிட்டால், இந்த வயதில் அவளுக்கு இவ்வளவு ஞானம் இருக்க நியாயம் இல்லை. நான் சட்டம் படித்தேன்; பத்திரிகை நடத்தினேன். ரொம்பத் தெரிந்தவன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுக்குத் தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு... எனக்கு மலைப்புத் தட்டுகிறது. அப்பா, சொல்ல வெட்கமாக இருக்கிறது; சொல்லா விட்டால் உங்களுக்கு வருத்தமாயிருக்கும்; அதனால் சொல்லுகிறேன். நான் அவளை அடிக்கடி பார்க்கப்போவது அவளிடம் ஏதாவது கற்கலாம் என்றுதான். அவளுக்கு முன்னால் நான் சின்னக் குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக நினைப்பது எப்படி? அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது! அப்படிச் செய்யலாமா அப்பா? அவளுக்கு எற்ற புருஷன் ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்... எனக்கு ஏன் நீங்கள் ஸமஸ்கிருதம் சொல்லித் தரவில்லை?''

''தமிழையாவது நீ ஒழுங்காய்ப் படித்திருக்கலாமே?''

''சரி, அப்பா; ரகுவைப்பற்றி யோசித்து முடிவு சொல்லுங்கள்.''

சொல்லிவிட்டு எங்கோ வெளியில் போனான் அவன். இந்தப் பிள்ளையைப்பற்றி நான் என்ன சொல்வது? அழகு இல்லை, படிப்பு இல்லை. ஆரோக்கியம் இல்லை, வரதட்சிணை இல்லை என்பதுபோன்ற காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிப்பது உலகு வழக்கு. தனக்குக் கல்வி குறைவு என்று சொல்லிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறான் என் பிள்ளை. 'என்னைவிட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதுபோல், என்று அவன் சொன்ன பிறகு அவளையே மணம் புரியும்படி அவனை நான் எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்?

இரவு சுமார் பத்து மணிக்கு அவன் மறுபடியும் என்னிடம் வந்தான்.

''என்மேல் கோபமா அப்பா?''

''உன்மேல் எனக்கு எப்போது கோபம் வந்தது? நீ சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. நீ சொல்வது போலவே செய்யலாம். மகாலட்சுமியின் அபிப்பிராயம் தெரியாமல் என்ன செய்வது?''

''அவளையும் ஜாடையாகக் கேட்டேன். நீங்கள் பார்த்து முடிவு செய்தால் சரி என்கிறாள்.''

''அட பாவி! அவள் சம்மதமும் வாங்கிவிட்டாயா?''

சிறிது நேரம் அவன் மெளனமாக உட்கார்ந்திருந்தான்.

''உனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லப்போகிறாயா, அடுத்தபடி?'' என்றேன் அவன் தயங்குவதைக் கண்டு.

''என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டது இவ்வளவுதானா? அப்படியெல்லாம் நான் சொல் வேனா அப்பா? உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் பார்த்து ஒரு பெண் முடிவு செய்யுங்கள்.''

''அப்புறம் ஆடுபோல் ஒரு பெண் வாங்கி மாடு போல் ஒரு பையனை விற்றார் எங்கள் அப்பா என்று கதை எழுதுவதற்கா?''

''கலியாண விஷயம் எனக்கு என்ன தெரியும்? உங்கள் திருப்திக்குச் செய்யும் முடிவு என் நன்மைக்குத் தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.''

குடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான் அவனுக்காகத் தேர்ந் தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல் அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லா விட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள் என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான் தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை.

இருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.

*****

ஐந்திணை- விக்ரமாதித்யன் நம்பி

Labels: ,

விக்ரமாதித்யன் நம்பி
nambi23
குறிஞ்சி

கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத் தேன் கூடுகள்
அதிசயமாய்
துலங்கும் அருவிகள்
மெளனமே
இருப்பான சித்தர்கள்
முன்னை
பழங்குடிகள்
வானம்
தொடும் மஞ்சுக்கூட்டம்
தண்ணீர் பட்டுத் தெறிக்கும்
தேக்குகள் மூங்கில்கள்
பக்கத்திலேயே
பாக்குமரங்களும்
ஏலக்கொடிகளில்
எச்சமாய் மணம்
சிந்திக் கிடக்கும்
மலை முந்திரி
படர்ந்து தழுவும்
மிளகுக் கொடிகள்
வேரில் பழுத்துக்
கிடக்கும் பலாக்கள்
தேன் கதலிகள்
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்
* * *


முல்லை

காதைக் குடையும்
சிள்வண்டுகள் சப்தம்
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறக்காடு
இருள் நிறைத்திருக்கும்
தாவரங்கள்
உலாவும்
உயிர்பிராணிகள்
குழிபறித்து விளையாடும்
குறுமுயல்கள்
காற்று கொண்டுவரும்
செண்பக மணம்
கொடிவலைப் பின்னல்களில்
காட்டுக் குயில்கள்
ஆகாயம் மறைத்துக்
கிடக்கும் இலையடர்த்தி
பூமியே தெரியவிடாத
புதர்கள் புல்காடுகள்
கலகலப்பாய்த் திரியும்
காடை கெளதாரிகள் மலையணில்கள்
வழிமறிக்கப் பார்க்கும்
நரிக்கூட்டம்
அலைபாயும் மயில்கள்
மிரண்டோடும் மான்ஜாதி
ஆடுமாடுகளுக்கு
அற்றுப்போகாத இரை
ஆயர்கள் மனம் போல
அழகுபட்ட முல்லைக்காடுதான்
* * * * *


மருதம்

காடு திருத்துகிறார்கள்
கழனி யாக்கிறார்கள்
அருவி வந்து விழுந்து
ஆறாய்ப் பெருகிப் பெரும்
பேறாய் நயத்தக்க நாகரிகம்
விதைத்தது
முளைத்தது கண்டு
பசேலென்று
வயல் வைத்தார்கள்
வாழை நட்டார்கள்
கரும்பு போட்டார்கள்
கொடிக்கால் செய்தார்கள்
ஆணும் பெண்ணும்
நாளும் பாடுபட்டார்கள்
கோடையில் உழுந்து
பயறுச் செடிகள்
கூடவே வெள்ளரியும்
இஞ்சி மஞ்சள் கிழங்கென்று
வகைவகையாய்ச் செய்வித்தார்கள்
ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல
பாதி மனிதன் முழு மனிதனான்
தலை வாழை இலையிட்டு
சோறு கறி பரிமாறினாள் திலவி
பந்தியில் பாலும்
பலாச்சுளையும் இட்டார்கள்
நெய்போட்டார் மோர் விளம்பினார்
பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார்
கூட்டென்றார் பொரியலென்றார்
பச்சடியில் பத்து தினுசு செய்தார்
சொதியில் தனி ருசி சேர்த்தார்
வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு
வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும்
விருந்துகள் விழாக்கள் தோரணங்கள்
தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள்
ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள்
பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க
போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு
கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும்
கலைவண்ணமாய் சிலை வடித்தார்
கண்பார்த்ததைக் கைசெய்யும்
வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும்
கொட்டி முழக்குகிறார் ஓய்வில்
சொல்கொண்டு எழுத்தாக்கினார்
பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார்
நதி கொண்டு வந்த பண்பாடு தேறி
காதலோடு கற்புக்கும் வகைசெய்தார்
இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த
சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக
சைவத்தால் தமிழ் வளர்த்தார்
தமிழால் சைவம் வளர்த்தார்
மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து
மானுடத்தின் உச்சம் காட்டும்
மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம்
எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்
* * * * *


நெய்தல்

திரண்டு வரும் தண்ணீர்
எங்கே போகும்
தெறித்து விழுந்த
தண்ணீரோடு சேரும்
வந்துபோகும் அலைகளின்
வருத்தமென்ன வாட்டமென்ன
தொடுவானம் சொல்லும்
இரகசியமென்ன விஷயமென்ன
அடிவானத்துக்கப்பால்
இருக்கும் மர்மமென்ன மாயமென்ன
கடல் நடுவே பூமியா
பூமிக்கு மத்தியில் சமுத்ரமா
எப்படி வகைபடுத்த
கடல் என்னது
கடல்குதித்துச் சூடாற்ற
கண்ணதாசன் கவிதைவரி
நடுக்கடலில்
நாளும் நெய்தலின் மக்கள்
திரண்டிருக்கும்
தேக்கு உடம்பும் ஆதிமனசும்
எதன் கைவண்ணம்
கடல்மீன்கள் நண்டுகள்
முத்துகள்
தோன்றுவதெப்படி
பவளம் விளைவது
எந்த முகூர்த்தத்தில்
வலம்புரிச் சங்குகள்
வடிவுகொள்வது எங்ஙனம்
வருணதேவன்
வகுத்து வைத்ததா காலமழை
உப்பு நீரில்
ஒரு கொள்ளைத் திரவியம்
யார் செய்த
மாயம்
கடல்
ஒரு அதிசயம்
கடல்
கொண்டிருப்பது போதிசயம்
அது
வைத்திருப்பது நிறைய அற்புதம்
நெய்தல் நிலமே
நிரம்ப அற்புதம்தான்
* * * * *


பாலை

வேரோடும்
பிரண்டைக் கொடிகள்
சப்பாத்தி கள்ளிகள்
கானலெரிக்கும் வெயில்
கையவு நீர்
காணக்கிடைக்காத மண்
புழுதி
பறக்கிறது
பேய்கள்
இராஜ்யம் செய்கின்றன
என்ன
செய்வார்கள் ஜனங்கள்
எப்படி
வாழ்வார்கள் இந்த வெக்கையில்
காளி மாதாவின் கருணை
இப்படியா
* * * * *

மௌனியின் உலகு

Labels: , ,

வெங்கட் சாமிநாதன்

எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத இந்த எழுத்து மேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல? அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான். பின்னர் அவ்வப்போது எழுதியது நண்பர்களும் மற்ற எழுத்தாளர்களும் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான்.

mowni4

மௌனியைத் தமிழகத்துக்குத் திரும்ப நினைவூட்டிய மறைந்தே போன அவர் இடத்தைத் திரும்ப புனர்ஜீவித்த க.நா. சுப்ரமண்யம் 1959-ல் மௌனியின் கதைகளைச் சேகரித்து அவர் கதைகளின் தொகுப்பு ஒன்றை புத்தகமாக வெளியிட முயன்றபோது, அது எத்தகைய சாகச வேட்டையாக முன் நிற்கும் என்பதை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கடைசியில் ஒரு பதினைந்து கதைகளை அவர் தேடிப்பிடித்து வெளியிடுவதில் வெற்றி பெற்றார். மௌனி என்ற பெயரில் ஒரு மனிதர் எழுத்தாளர் உண்மையில் இந்த உலகில் இருக்கிறார் என்று நிரூபிக்க, மௌனியை ல்வாயில் நடந்த எழுத்தாளர் மகாநாட்டிற்கு அழைத்துவந்து முன் நிறுத்தினார். பின் வந்த வருடங்களில் மௌனியின் கதைகளைப் புகழ்ந்து பாராட்டும் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதே அளவிலும் எண்ணிக்கையிலும் அவரது எழுத்தைக் குறிந்த கண்டனங்களும் தான்.

தமிழின் சிறுகதை முன்னோடிகள் இரண்டு முனைகளில் போராடியதாகத் தோன்றுகிறது. ஒன்று மொழி சம்பந்தப்பட்ட போராட்டம். இரண்டு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைக் கையாளுவதில். அவர்களில் புதுமைப் பித்தன் மாத்திரமே எவ்வித சிரமமுமின்றி வெற்றிகண்ட ஒரு மேதையாகவிருந்தார். என்னமோ அவர் பாட்டிலைத் திறக்கவேண்டியது உடனே அடைத்துக் கிடந்த பூதம் அவர் கட்டளையை நிறைவேற்றுவது போலத்தான் மொழியும் வடிவமும் அவருக்கு பணிந்தன. மற்றவர்கள் எல்லாம் சிரமப்பட வேண்டியிருந்தது.

மௌனியின் விஷயத்தில் அந்த போராட்டம் இன்னம் சிரமம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் அவர் எழுத நினைத்தது அவருக்கே உரிய கருப்பொருளாக இருந்தது. புதுமைப் பித்தனே இது பற்றி எழுதியிருக்கிறார்.

"கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டு வார்த்தைகளில் அடைபட மறுக்கும்

கருத்துக்களையும் மடக்கிக்கொண்டு வரக்கூடியவர் அவர்(மௌனி) ஒருவரே"

கற்பனை வளமும் மொழித்திறனும் மிக எளிதாகக் கைவரப்பெற்ற ஒரு மாமேதை, தன்னுடைய சிந்தனைகளையும் கற்பனையையும் வெளியிடுவதற்கு மொழியுடன் நிரந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன் உடன் நிகழ்கால முன்னோடிக்கு அளிக்கும் இந்த பாராட்டு மிகப் பெரிய பாராட்டுத்தான்.

அக்காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல மௌனியின் போராட்டம் மொழியை ஒரு ஆற்றல் பெற்ற சாதனமாகக் கையாளுவதில் மட்டுமில்லை. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தனக்கே உரியதுமான தன் உள்ளுலகை வெளியிடுவதற்கு ஏற்ற வெளியீட்டு மொழியைக் காண்பதற்கும் அவர் சிரமப்படவேண்டியிருந்தது.

அவரது ரம்பத் தயக்கத்தையும் பின்னர் அவருக்கு இருந்த அசிரத்தையையும் மீறி, பின்னர் அவர் ஒரு கதை எழுத உட்கார்ந்து விட்டாரானால், அவர் தான் சொல்லவிரும்பியதைச் சொல்லும் வகையில் மொழியை க்கிக்கொள்வதில் அவர் திறன் காட்டத்தான் செய்தார். அவருடைய முதல் சிறு கதையான

ஏன்? அவருடைய இலக்கியக் கலையை ராய முதல் அடியை எடுத்துக்கொடுக்கிறது. மாதவன் என்னும் பதிநான்கு வயது மாணவன் பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும் போது தன் வகுப்புத் தோழி சுசீலாவிடம், "சுசீலா, நானும் வீட்டிற்குத் தானே போகிறேன், இருவரும் சேர்ந்து போகலாமே?" என்று சொல்கிறான். ஆனால் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, புருவங்கள் உயர்த்தி வியப்புடன் கண்கள் பெரிதாகிப் பார்த்தது "ஏன்?" என்று கேட்பது போல் இருந்தது. இந்த "ஏன்?" அந்த பையனைப் பிசாசாகப் பற்றிக் கொள்கிறது. அதன் பின் அவர்கள் இருவர் மனதையும் ட்டிப் படைக்கிறது. அவர்கள் தனித் தனி அன்றாட வாழ்வில் அந்த ஏன் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் முன் நின்று ஏன்? என்று கேட்கத் தவறுவதில்லை. அவர்கள் பிரமை பிடித்தது போல் கிறார்கள். இந்த ஏன்? அவர்களுக்குள்ளிருந்து மாத்தி ரம் எழும் கேள்வியாக இல்லை. அவ்விதமாயின் அது உணர்வு நிலையாக இருக்கும். மன நோயாக கியிருக்கும். ஆனால் இந்த ஏன்? அவர்களை வெளிஉலக்த்திலிருந்தும் எதிர்ப்பட்டு முறைத்து நிற்கும் ஒன்றாக கியிருக்கிறது. அப்போது அது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக விரிகிறது. ஏன் இப்படி? எதற்காக? ஏன் எதுவும் அப்படி? என்ற கேள்விகளே எழுந்தவண்ணம் இருக்கின்றன, பதில் வருவதில்லை. மௌனி கதையை அத்தோடு முடிக்கிறார். இரு நிலைகளின் இடையே வாசகனை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுகிறார் மௌனி.

உலகைப் பற்றிய இந்தப் பார்வையைத் தான் மற்ற கதைகளிலும் நாம் சந்திக்கிறோம். கொஞ்ச தூரம் என்ற கதையில், "மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம் இவனைச் சந்தேகமாய்த் தலை சாய்த்துப் பார்த்தது. ... வாய்க்காலில் துணி துவைக்கும் பாறாங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது,. அதுவும் திடீரென்று பறந்து அச்செடியில் "ஏன்? எங்கே? என்று கத்திக்கொண்டு மறைந்து விட்டது. "

இங்கும் கதைமுழுதும் பரந்து கவிந்திருப்பது ஒரு வெறுமை உணர்வு. வாழ்வின் அர்த்தமற்ற குணம். அது முதலில் நிறைவேறாத காதலில் தொடங்கி பின் அத்தோடு நிற்பதில்லை.

மௌனியின் கதைகளிலும், கதை சொல்பவனும், கதையின் முக்கிய பாத்திரமும் கா•ப்கா கதைகளின் K போல ஒரு பெயரற்ற 'அவன்' தான். அவன் எங்கிருந்தோ தன் இருப்பிடம் திரும்பி வருவான். தன் கடந்த காலத்திய நினைவில் தோய்ந்து விடுவான். இன்னொரு படி நிலையில் மௌனியின் பாத்திரங்கள் தனி மனிதர்கள் மாத்திரமல்ல. உணர்வு நிலைகளின் பிரதிபலிப்புகள். பிரக்ஞை வெளிகள். தோற்ற உலகின் பின்னிருக்கும் உலகின் பளிச்சிட்டு மறையும் மின்னல் காட்சிகள்.

அவருடைய கதைகளில் சம்பவங்கள் என்று எதுவும் நிகழ்வதில்லை. அவர் ஒரு நிலையின் மின்னல் வெட்டிப் venkat_swaminathan பளிச்சிடும் கணத்தை எடுத்துக்கொண்டு அதன் சாரமான உணர்வு நிலையை வெளிக்கொணர்கிறார் பின் அதை தத்துவார்த்த நிலைக்கு எடுத்துச் செல்கிறார். ரம்ப ஏன்? என்ற கேள்வியின் நீரில் விரல் விட்டுப் பார்க்கும் சோதனையாய் தொடங்கிய மௌனியின் பயணம் பின் கதைகளில் மிகச் சிக்கலான ஒன்றாக வளர்ந்து விடுகிறது. அழியாச் சுடர் கதையில் ஒரு இளைஞன் கோவிலில் சன்னதியின் முன் கூடியிருந்தவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்த பரவசத்தில் 'நான் உனக்காக எது செய்யவும் காத்திருக்கிறேன், எதுவும் செய்ய முடியும் " என்று ரகசியமாகச் சொல்லிக்கொண்டது "உள்ளிருந்த விக்கிரஹம், எதிர்த் தூணில் ஒன்றி யிருந்த யாளி எல்லாம் கேட்டு நின்றது" போலத் தோன்றியது மட்டுமல்லாமல் "சந்தனப் பொட்டுடன் விபூதி பூசி இருந்த விக்கிரஹமும் புருவஞ்சுளித்து சினம் கொண்டதாகத்" தோன்றுகிறது. அது மட்டுமில்லை. "தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு கோபித்து முகம் சுளித்தது" கோவிலினுள் அந்நிகவையும் அச்சூழலையும் விவரிக்கும் மௌனி ஒரு மயிர்க் கூச்செரியும் அச்சம் தோன்றும் மாய உலக உணர்வை எழுப்புகிறார். கற்பக்கிரஹத்தினுள் இட்டுச் செல்லும் நுழைவாயிலுக்கும் கற்பக்கிரஹத்திற்கும் இடையே உள்ள இருள் வெளியில் எண்ணெய் விளக்குகளின் விட்டு விட்டு பிரகாசிக்கும் மஞ்சள் ஒளி பரவியிருக்க நிகழ்கிறது இந்த நாடகம். இந்த வெளி தான் பிரக்ஞை நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் வெளி போலும். இடத்திலும் காலத்திலும் நிகழும் மாற்றம்.

அவருடைய தனித்துவமான பெரும்பாலான கதைகளில் இந்த நிலை மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கான பயணம் அந்தி நேரத்தில் தான் நிகழ்கிறது. சுற்றியிருக்கும் இருள் வெளியை ஒரு மாய உணர்வூட்டும் மஞ்சள் ஒளி, அப்போது மனிதர்கள் நிழல் உருவங்களாக, நகரும் நிழல்களாகத் தோற்றம் தருவார்கள். விக்டர் டர்னர் தன் The Ritual Process: Structure and Anti-Structure (1969) புத்தகத்தில் liminality என்றும் communitas என்றும் சொல்லும் நிலையை மௌனி கதைகளின் இச்சூழல் நினைவூட்டுகின்றன.

மரபான நாட்டுப்புற கலைகளையும் அவற்றின் சடங்குகளுக்குள்ள சக்தியையும், உள்ளர்த்த அங்களையும் பற்றியெல்லாம் மௌனி தெரிந்திருப்பார் என்றோ ழமாக ராய்தறிந்திருப்பார் என்றோ சொல்லமுடியாது. தன்னையறியாமலே, கூட்டு அடிமனப் பிரக்ஞையிலிருந்து பெற்றதைக் கொண்டு அவர் இலக்கிய சிந்தனை இவற்றை வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. பிரக்ஞை வெளியில் என்ற கதையில் அவர் சொல்கிறார்:

"ஓளி படராத பிரக்ஞை வெளியில் சேகரன் தடுமாறிக்கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடு வெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -வஸ்துக்கள் வாஸ்தவம் எனப் படுவதற்கு - மாயைப் பூசு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும் விழிப்பில் மறக்கவும்......"

இம்மாதிரியான பல பகுதிகளை மௌனியின் கதைகளில் சந்திக்க நேரும். அவை வேறு வேறு சந்தர்ப்பங்களில் வேறு வடிவங்களில், தனி மனிதனையும் பிரபஞ்சத்தையும், ஒரு தத்துவார்த்த பிரகடனமாக அல்ல, குணரூப வாக்கியமாக அல்ல, உணர்ந்த வாழ்ந்த அனுபவங்களாக சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசகன் தத்துவார்த்த உள்ளீடுகளை, பிரபஞ்சம் முழுதும் ஒன்றிணைந்துள்ள முழுமையை, அத்வைத ஒருமையை வாசிக்கக் கூடும். ஆனால் இக்கதைகள் ஏதும் தத்துவார்த்த சிந்தனை விளக்கமாக எழுதப்படவில்லை. உண்மையான மனித வாழ்க்கை நிலைகளை, மனதின் உருக்கமான மன நிலைகளைச் சொல்லும் முகமாகத்தான் இவை எழுதப்பட்டுள்ளன. இது தான் அவருடைய எழுத்தின் உள்ளார்ந்த மையம். அவருடைய சிறந்த கதைகள் சொல்ல முயற்சிப்பது.

மௌனியின் உலகம் தனித்துவமானது, தமிழ் இலக்கியத்துக்கு அவர் பங்களிப்பு போல. எஸ். மணியாக அவர் உயர் கணிதத்தின், தத்துவ விசார பயின்ற மாணவர். கர்னாடக சங்கீத ரசிகர். எப்போதாவது தனது மகிழ்ச்சிக்கு வயலின் வாசிப்பவர். இலக்கியத்தையும் விட, சங்கீதத்திலும் தத்துவங்களிலும் அவருக்கு ழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். எ•ப். எ.ஹெச் ப்ராட்லியின் Appearance and Reality அவர் திரும்பத் திரும்ப விரும்பிப் படிக்கும் புத்தகம். இலக்கியத்தில் •ப்ரான்ஸ் கா•ப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹே, ராபர்ட் ம்யூசீல் போன்றோரின் படைப்புகள் அவர் மிகவும் ரசித்தவை.

அவருடனான என் பழக்கம் அறுபதுகளின் தொடக்க வருடங்களில் ஏற்பட்டது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம். Encounter என்ற மாதப்பத்திரிகையில் போர்ஹேயின் இரண்டு கதைகளை முதலில் நான் படிக்க நேர்ந்த போது (அவற்றில் ஒன்று Circular Ruins, மற்றது இப்போது என் நினைவில் இல்லை) அந்த கதைப் பக்கங்களைக் கிழித்து அவருக்கு அனுப்பி வைத்தேன். அவை அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. அதிலிருந்து போர்ஹேயும் அவர் விரும்பிப் படிக்கும் சிரியர்கள் பட்டியலில் சேர்ந்தார். அறுபதுகளில் அவருடனான என் ரம்ப சந்திப்புக்களில் அவருடைய அப்போதைய சமீபத்திய கண்டு பிடிப்பான ராபர்ட் ம்யுசீலின் Man without Qualities பற்றி மிகப் பரவசத்தோடு பேசினார்.

சங்கீதத்தைப் பொறுத்த வரை ஒரு சங்கீதக் கச்சேரி முழுதும் உட்கார்ந்து கேட்க அவருக்குப் பொறுமை இருப்பதில்லை என்பார். ராக சஞ்சாரத்தில் அவ்வப்போது மின்னலடிக்கும் மேதைத் தெறிப்புகள் ஒருவரது கற்பனையின் வீச்சைச் சொல்லும் அத்தெறிப்புகள் தான் அவருக்கு வேண்டும். இலக்கியத்திலும் அவர் விரும்பி ரசிப்பது இம்மாதிரித்தான். அவ்வப்போது பளிச்சிடும் மின்னல் வீச்சுக்கள், அவைதான் கற்பனையின் மின்னல் கீற்றுப் போல வீசி மறையும், அவை தான் தோற்றக் காட்சி உலகத்திலிருந்து அவற்றின் பின்னிருக்கும் உண்மைக்கு வாசகனை இட்டுச் செல்லும். ராமக்ரிஷ்ண பரமஹம்சர் முன்னறிவிப்பில்லாது அவ்வப்போது ழ்ந்து விடும் தன்னை மறந்த தியான நிலை போல. உருவகமாகச் சொல்வதென்றால் எழுத்து என்பது அவருக்கு ஒரு பயணம் கட்டமைக்கப்பட்ட நிலையிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டதுக்கு, டர்னர் liminality என்று சொல்கிறாரே அந்த நிலைக்கு. மௌனி சொல்வார், "புதுமைப் பித்தனிடம் தான் ஏதோ இருப்பது போல் தோன்றுகிறது"

தமிழ் இலக்கியத்தில் தனித்து நிற்கிறார். கா•ப்காவும் போர்ஹேயும் அவரவர் இலக்கிய சமூகத்தில் தனித்து இருப்பது போல. இன்று இந்த நூற்றாண்டு நிறைவு பெறும் கட்டத்தில் தமிழில் நிறைய எழுத்தாளர்கள் சிலர் தம் எழுத்துக்களில் புதுமைப்பித்தனின் பாதிப்பை, இன்னும் சிலர் ஜானகி ராமனின் பாதிப்பைக் காணமுடியும். மௌனி, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுடன் அவர்களது சகாவாக அவர் காட்சியளித்தாலும், அவர் தனித்து நிற்பவர். அவர் இவ்வளவு நீண்ட காலமாக எழுதியது அரைகுறை மனத்தோடும் தயக்கத்தொடும், மிகக் குறைவாக எழுதிய போதிலும்.

வினோத ரசமஞ்சரி - விக்ரமாதித்யன் நம்பி

Labels: ,

விக்ரமாதித்யன் நம்பி
nambi26
கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது
*****
வினோத ரசமஞ்சரி

எல்லோருக்கும்
வாய்ப்பதில்லை மொழி
அதுவும் கவிதைமொழி
அமைவது பெரும்பேறு
கவிதை மொழியே
கவித்துவம் போல
யாருக்குக் கொடுக்கலாமென
பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள்
நூலறிவாளர்களை
நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான்
மரபறியாதவர்களை
பெரிதாய் மதிப்பதில்லை
ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை
ஒரு பொருட்டாய் கருதுவதில்லை
மொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும்
மடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய்
****


பாவக்கதை

உன்னைப் பார்க்க
பாவமாகத்தான் இருக்கிறது
ஆனால்
அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது
அவன்
பார்க்க பாவம்தான்
எனில்
ஒன்றும் செய்வதற்கில்லை நான்
ஐயோ பாவம்
அவள்
அதற்கு
என்ன செய்ய முடியும்
பாவம்தான்
இவள்
நான்
என்ன செய்ய
என்ன தெரியுமா
பாவத்தைக் கட்டிச் சுமக்கமுடியாது
நானே பாவம்
உருகிவழிதல் மட்டுமல்ல உண்மை
உறைந்துபோதலும்தான்.
******


எந்த போதையிலும்

சங்கப் பாடல்கள்
திரும்பத்திரும்ப
சுழன்றுகொண்டிருக்கின்றன மனசுள்
சிலம்பின் வரிகள்
சிந்தையிலேயே
குடிகொண்டுவிட்டன எப்பொழுதோ
திருநாவுக்கரசு சுவாமிகள் போல
தேடினாலும்
கிடைக்கமாட்டான் ஒரு கவிஞன்
திரிகூடராசப்பகவிராயர்க்கு
யார்
சொல்லித் தந்திருப்பார்கள் கவிதை
பாரதி
ஒரு
கவிஞானி
கண்ணதாசன்
குற்றாலப்
பேரருவிதான்
பிறகு
எவர் வந்திருக்கிறார்
சிறுகுயிலே
*******


கவிதை

என்ன
நிறம் கேட்டார்கள் ஐயா
வெள்ளையா
இதோ எடுத்துக்கொள்ளுங்கள்
பச்சையா
வேண்டும்
இரண்டொரு நாள் கழித்து
வந்து வாங்கிக்கொள்ள முடியுமா ஸார்
சிவப்பா
தோழரே
செய்வதற்கு
ஒரு பத்து நாளாகுமே
கறுப்பா
கொஞ்சம் கஷ்டம்
சற்று அவகாசம் தந்தால்
வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் ஸ்நேகிதா
மஞ்சளா
திட்டுவார்களே அப்பா
சரி தருகிறேன்
நாலு நாள் பொறுங்கள்
நீங்கள் சொன்னது
நீலம்தானே
அடுத்த வாரம் தருகிறேன்
அன்பரே
என்ன நிறத்தில்
எப்பொழுது வேண்டும் சொல்லுங்கள்
உடனுக்குடன் செய்து தருகிறேன்
உங்கள் விருப்பம் போல
தரம்
நன்றாய் இருக்கும்
விலை கூட என்று
யோசிக்கக் கூடாது சரியா
****


மேலும் மேலும்

மேலும் மேலும்
குழப்புகிறார்கள்
மேலும் மேலும்
கொள்ளையடிக்கிறார்கள்
மேலும் மேலும்
நோகடிக்கிறார்கள்
மேலும் மேலும்
கவலையூட்டுகிறார்கள்
மேலும்மேலும்
யோசிக்கவைக்கிறார்கள்
மேலும்மேலும்
தொந்தரவுபடுத்துகிறார்கள்
மேலும் மேலும்
கலவரப்படுத்துகிறார்கள்
மேலும்மேலும்
பதறச்செய்கிறார்கள்
மேலும் மேலும்
கேள்வி கேட்கிறார்கள்
மேலும் மேலும்
விமர்சிக்கிறார்கள்
மேலும் மேலும்
பயப்படுத்துகிறார்கள்
மேலும் மேலும்
கோபம் கொள்கிறார்கள்
மேலும்மேலும்
பொய்சொல்கிறார்கள்
மேலும்மேலும்
கோழையாகிறார்கள்
மேலும் மேலும்
வாழவே விருப்பம் கொள்கிறார்கள்
மேலும்மேலும்
சாவைத் தள்ளிப் போடுகிறார்கள்
மேலும் மேலும்
என்ன இருக்கிறது
மேலும் மேலும் எனும்
மனசுதான்
மேலும் மேலும்
என்ன எழுத.
****


கூட்டுக் கவிதை

காக்கைப்பாட்டு
காகமே எங்கே போனாய் நீ
எங்கேயும் போகவில்லை காகம்
எங்கே போனாலும்
கூடு திரும்பிவிடும் அந்திக்கு
காகமே எங்கே போனாய் நீ
பொன்மாலைப் பொழுதுகளை இழந்து
போகப் போகிறாயா நீ
இழந்ததெல்லாம் என்றும்
இழப்புதான் காகமே
இழக்காதே எதையுமே நீ
காகமே எங்கே போனாய் நீ
துணை தேடிப் போனாயா நீ
துணைதேடி அவ்வளவு
தூரம் போயிருக்க முடியாது
எங்கே போனாய் நீ
எல்லோரும் கலக்கமுறும்படி
காகமே எங்கே போனாய் நீ
காகத்துக்குத் தெரியும்
காகத்தைப் பற்றி
கவலைப்படுகிறவனுக்குத் தெரியாது
காகமே எங்கே போனாய் நீ
காகம் உள்ளூர்தாண்டிப் போகாது
காகத்துக்கு என்ன கவிதை
காகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில்
காகமே எங்கே போனாய் நீ
குறுக்குத்துறைப் படிக்கட்டுகளில்
கொட்டிக்கிடக்கும் பருக்கைகளை
கொத்தித் திங்கப் போனேன் போ
சங்கிலிபூதத்தானுக்குப் போட்ட படையல்
மிச்சமிருக்கு எனக்கு போ
புட்டார்த்தியம்மா சந்நிதிக்கு வெளியே
பிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ
என்று சொல்வாயோ
திருநெல்வேலி மண் விட்டுப் போக
பிரியப்படாத காகம் நான்
மருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான்
லெவல் கிராஸிங் இசக்கியம்மன்தான்
என் இஷ்டதெய்வம்
போடா போ போக்கத்தவனே போ
என கரையும் காகமே எங்கே போனாய் நீ
கேட்டதையே கேட்டு சலிப்பூட்டாதே
கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே
கேட்பது சுலபம் கிழவி போல
கிளைக்கேள்வி வேர்க்கேள்வியென்று
கேட்டு நீ இம்சிக்காதே
குஞ்சுமுகம் தேடுது
கூடு செல்ல நேரமாகுது
கொண்ட ஜோடி நினைவு வாட்டுது
கோபித்துக் கொள்ளாதே
போய் வருகிறேன் நான்


(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது.கேள்விகள் எம்.டி.எம். உடையவை. பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை--விக்ரமாதித்யன் நம்பி)
******