Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

குருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்

Labels: ,

தேவதேவன்

1] மழை பெய்து

அப்போதுதான் முடிந்திருந்தது
அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு
பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை
நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்
அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல
வானளாவிய சூனிய வெளியெங்கும்
என் பார்வையை இழுத்தபடியே
பறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது
அதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்
ஒரு செத்த எலி

six-in-waiting-break-of-day-jennifer-lommers

2. குருவியுடன் சற்று நேரம்
நான் அதைப்பார்த்து புன்னகைத்தவுடன்
அது கேட்டது
'என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? '
'ஒரு கவிதையை எழுதப்பார்க்கிறேன் '
'புரியும்படியாக சொல் '
'உன்பார்வையில் சொல்ல வேண்டுமானால் பறத்தல்
படிப்பவர்களை கொஞ்சம் பறக்கும்படி செய்கிற
சில வரிகள் எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் '
'உனக்கு பறக்கத் தெரியுமா ? '
'பறக்கத்தெரிந்தவந்தானே எழுத முடியும் ? ' '
'அப்படியா ரொம்ப சந்தோஷம்
அதுதான் உன்னைப்பார்த்த உடனேயே
எனக்கு உன்மேல் ஒரு பிரியம்
ஏற்பட்டது போலிருக்கிறது
சரி இப்போது என்னோடு வருகிறாயா
ஒரு ரவுண்டு போய்வருவோம் '
இருவரும் பறக்கதொடங்கினோம்
'எங்கே போயிருந்தீர்கள் இத்தனைநேரம் ?
எத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா ? '
மாடிப்படி ஏறிவந்து எரிச்சலுற்றாள் மனைவி
எழுதுவதிலேயே மூழ்கி இருந்திருக்கிறேன் என்றேன்
வெற்றுக்காகிதத்தை சுட்டிக்காட்டி
விடாது அவள் துரத்த
உண்மை வெளியே வந்துவிட்டது


3. வண்ணத்துப்பூச்சி

அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று
வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்
இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்
அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டதா இம்மண்ணில் ?
மண்ணின் வளமும் பெருமையும் மின்ன
மேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்
எத்தனை வண்ணங்களில் !
ஆனால்
தேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்
சிறகுகள் பரபரக்க
அங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது
என்னை அறுத்தது அழகா அருவருப்பா
எனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி
உறிஞ்சும் வேகத்தில்
கைகூப்பி இறைஞ்சுவதுபோல
மேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான
உடல் முழுக்க விர்ரென்று
நிரம்பிக் கொண்டிருந்தது தேன்
சிறகுகளின் மெலிதானதுடிப்பில்
ஆழமானதோர் நடுக்கம்
எந்தமொரு வைராக்கியத்தை
மூச்சை பிடித்துகாக்கிறது அது ?
அதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்
கீழ்நோக்கி சுருண்டு உன்னியது
கரு தாங்கும் அதன் கீழ்பகுதி
தேன் நிரம்பி கனத்து
பூமி நோக்கி தள்ளும்
சின்னஞ்சிறு பாரத்தை
வெகு எளிதாக
தேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன
மரணமற்ற ஆனந்த பெருவெளியில்!


4 . நிசி

இரை பொறுக்கவும்
முட்டை இடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
வானவெளிப்பறவை ஒன்று
இட்ட ஒரு பகல் முட்டையின்
உட்கரு நிசியுள்
பகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்
உறங்காது துடிக்கும் நான்
என் அவஸ்தைகள்
கர்வுவில் நடைபெறும் வளர்ச்சியா
பரிணாம கதியில்மனிதனை புதுக்கி
ஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா
பகலின் நினைவுகள் கொட்டி கொட்டி
இரவெல்லாம் தெறிக்கும்
என் சிந்தனைகள் வேதனைகள்
ஏன் இவ்வேதனை ?
எதற்கு இச்சிந்தனைகள் ?
நானே அறியாது
என்னில் கலக்கும் ஜீன்கள்
கருவே அறியாது
கருவில் கலக்கும் தாதுக்கள் எவை ?
இனி நான் எவ்வாறாய் பிறப்பேன்
என் கனவில் எழுந்த அந்த மனிதனாய்
நான் என்று பிறப்பேன் ?
அல்ல மீண்டும் மீண்டும்
முட்டை இடவும் இரை ப்றுக்கவும்
இரைக்காய் சக ஜீவிகளுடன்
போராடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
அதே வானவெளிபறவையாக

5. துள்ளல்

நீரின் மேற்பரப்பில் ஒருமீன்
துள்ளி விழுகையில் கண்டது
சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில்
பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில்
மரணம்
மரித்த அக்கணமே பறவை


6. சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...

ஒரு பறவை நீந்துகிறது
சொற்களை வாரி இறைத்தபடி
சொற்களை வாரி இறைப்பதனாலேயே
அது நீந்துகிறது
காற்றின் துணையும் உண்டு
நீ இக்கவிதைஅயி வாசிக்கையில்
அமைதியான ஏரியில்
துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்
படகுப்பயணம் போல
கேட்கிறதா உனக்கு
அப்பறவையிந் சிறகசைவு தவிர
வேறு ஒலிகளற்ற பேரமைதி ?
சொற்பெருவெளியில்
சொல்லின் சொல்லாய் அப்பறவை
தன் பொருளை தேடுவதாய்
சொற்களை விலக்கி விலக்கி
முடிவற்று முன் செல்கிறது
அப்போது
உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?
பரவசமா ?
ஏகாந்தமா ?
குற்றவுணர்ச்சியின் கூசலா ?
தனிமையா ?
தாங்கொணாத துக்கமா ?
இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை
உன்னில் உண்டாக்கி விடலாம்
ஆனால் எந்தபொறுப்பையும்
அறிந்திராதது அது .

7 . சிறகுகள்

வானம் விழுந்து நீர்
சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை
நீரில் எழுந்தது வானம்
சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு
சிறகினுள் எரியும் சூரியத்தகிப்பே
சிறகடிப்பின் ரகசியம் ஆகவேதான்
சுய ஒளியற்ற வெறும் பொருளை
சிறகுகள் விரும்புவதில்லை
பூமி போன்ற கிரகங்களை
அது நோக்குவதேயில்லை
[சிறகடிக்கையில்
வெட்கி ஒடுங்கிக் கொள்கின்றன
பறவையின் கூர்நகக் கால்கள்]
சூர்யனுக்குள் புகுந்து வெறுமே
சுற்றிசுற்றி வருகின்றன சிறகுகள்
சிறகின் இயல்பெல்லைக்குள்
நிற்குமிடமென ஏதுமில்லை
வெளியில் அலையும் சிறகுகளுக்கு
இரவுபகல் ஏதுமில்லை

8. அமைதி என்பது

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத்தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது
அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ ?
எழுந்துசென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?

தேவதேவனின் பிரக்ஞை உலகம்

காலப்ரதீப் சுப்ரமணியன்

தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.

devadevan மேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சாதாரண அனுபவங்களை மேலேற்றி 'பிரபஞ்ச போதத்துக்கு ' -- அல்லது அதீத தத்துவ தரிசனத்துக்கு--- குறியீடக்கைக் காட்ட்வதாக தேவதேவனின் கவித்துவம் விளங்கினாலும் இதற்கு எதிர்மறையாக பிரபஞ்ச போதத்தை அன்றாட அனுபவங்களுக்குள் தேடும் நிலையில் பிறக்கும் பின்னல் கோலங்களே கவிதையாவதைக் காணலாம். கவிதை பற்றி தேவதேவன் சொல்லியுள்ள பிரமிப்பு மயமான சொற்களும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.

தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்ட்டுத் தன்மையும் காரணமாகும். குறியீடுகளின் பன்முகத்துக்கு அவருடைய வீடு மரம் பற்றிய கவிதைகளை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

தேவதேவனின் கவிதைகளில் தொடர்ந்து படர்வது மரங்களைப்பற்றிய பிரக்ஞையோட்டம். இது ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் நிழலிடுகிறது .அதுவும் சமீப கால கவிதைகளில் அதிகமாகவே அடர்ந்து கிளைபரப்பியுள்ளது . ஆனால் ஒரு விஷயத்தை பலகோணங்களில் நின்று புதிது புதிதாய் காண்பதும் வார்த்தைசெறிவும் இதை தெவிட்டல் நிலைக்கு செல்லாமல் தவிர்க்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய நிதரிசனமும் அதீத பிரச்சாரமும் கலந்துள்ல இன்று மரங்களைப்பற்றி கவிதை எழுதுவது இன்றைய மோஸ்தர்களுள் ஒன்று. ஆனால் தேவதேவனிடம் காணப்படுவது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு ஆழ்ந்த தொனி. எதாத்த வாழ்க்கையில் தேவதேவனுக்கு மரங்களுடன் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு இங்கு கவனிக்கத்தக்கது . பீதி நிறைந்த குழந்தைப்பருவத்தின் மனமுறிவு வெளிப்பாடுகளோ, உணர்ச்சி கரமான மனப்போராட்டங்களோ ,வாழ்க்கையில் நிராதரவாய் நின்ற நிலைகளோ தற்காலிகமான கொள்கைகவர்ச்சிகளோ அவரது இதுப்போன்ற ஈடுபாடுகளை அசைக்கமுடியவில்லை என்பதும் , இவை ஆழ்ந்த மதிப்பீடுகளாக அவரது அகத்தில் மாற்றம் பெற்றுள்ளமையும்தான்

[நன்றி முன்னுரை 'பூமியை உதறி எழுந்தமேகங்கள் ' ]

0 comments: