Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

புகையும் வயிறு!

Labels: , , ,

எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம்
கோபி கிருஷ்ணன்


தென் மாவட்டங்களில் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையங்கள் ஊருக்கு வெளியே ஏதோ ஓர் இடத்துக்கு இடம் மாற்றப்பட்டுவிட்டன. நள்ளிரவில் பேருந்தை விட்டு இறக்கிவிடப்படும்போது எங்கே இறங்கியிருக்கிறோம் என்று அடையாளமே தெரிவதில்லை. காலங்காலமாக சுவர்பல்லிகளைப் போல பழைய பேருந்து நிலையத்தோடு ஒட்டிக்கிடந்த பேருந்து நிலையவாசிகள் எங்கே போயிருப்பார்கள்?

gopi எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் அத்தனை நடிகர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களுடன், அகலமான நெற்றி நிறைய திருநீறும் கையில் ஒரு பெரிய லென்ஸ§மாக உட்கார்ந்திருக்கும் கைரேகை பார்ப்பவரும், ஒரு கை சூம்பிப்போய் பிச்சையெடுக்கும் நடுத்தர வயதுப் பெண்ணும், தனக்குத்தானே பேசியபடி பேருந்து நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வரும் சித்த சுவாதீனமற்றவனும், வாயில் பிளேடு துண்டை ஒளித்துக்கொண்டு மடித்துவிட்ட சட்டையும் பழுப்பான வேஷ்டியுமாக நிற்கும் பிக்பாக்கெட்காரனும், மூத்திரச் சந்துக்குள் நின்றபடி கஞ்சா பொட்டலம் விற்பவனும், அசைய முடியாத பருத்த இடுப்புடன் டீக்கடை வாசலில் கால்களை அகட்டி உட்கார்ந்து வெற்றிலை எச்சில் துப்பியபடி கொச்சையாக திட்டிக்கொண்டு இருக்கும் வட்டிக்கு விடும் பெண்ணும், நள்ளிரவில்கூட வெள்ளரிக்காய் விற்கும் அந்த பூப்போட்ட பாவாடை அணிந்த சிறுமியும் எங்கே போயிருப்பார்கள்?
உரித்து எறியப்பட்டுவிட்ட வாழைப்பழத்தின் தோலைப் போல அவர்களும் இனி தேவையற்றவர்களாக வீசி எறியப்பட்டிருப்பார்களா? அவர்களுக்கு வீடு இருக்குமா? எப்போது வீடு திரும்புவார்கள்? குழந்தைகள், குடும்பங்கள் எதுவும் அவர்கள் நினைவிலிருக்காதா? எப்போது முதன் முதலாகப் பேருந்து நிலையத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள்?

மதுரையிலிருந்து சென்னைக்கு வருவ தற்காக ஆம்னி பஸ்ஸில் ஏறியிருந்தேன். இரவு பத்து மணியாகியும் ஏழு மணிக்குப் புறப்பட வேண்டிய பஸ்ஸை எடுக்கவே இல்லை. டிரைவரும் இரண்டு ஏஜென்ட்களும் சுற்றிச் சுற்றி வந்து ஆள் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்படியும் பதினைந்து பேருக்கு மேல் ஏறவில்லை. பஸ் புறப்பட்ட நிலையிலே இரண்டு மணி நேர மாக நின்றுகொண்டு இருந்தது.
பேருந்தில் இருந்த ஒருவர், ஆத்திரத்தில் தான் வேறு பஸ்ஸில் போவதாகச் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தார். அவரை ஒரு ஏஜென்ட் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார். பேருந்து நிலையத் தின் இருள் சந்திலிருந்து பைஜாமா ஜிப்பா அணிந்த பருத்த அறுபது வயதைக் கடந்த ஒருவரும், மெலிந்து வெளிறிய ஊதா நிற சல்வார் கமீஸ் உடையணிந்த பெண்மணியும் ஆளுக்கு இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் நடந்து வந்தார்கள்.

வட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது முக ஜாடையிலே தெரிந்தது. ஏஜென்ட்களில் ஒருவன் அவர்களிடம் அரைகுறை இந்தியில் பேசி ஏதோ விசாரித்தான். பிறகு, அவர்களை எங்களது பஸ்ஸில் ஏற்றி ஜன்னலோர மாக உள்ள ஸீட்டில் உட்கார வைத்துவிட்டு, நானூறு ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு கீழே இறங்கினான். பேருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. வயதானவர் சற்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, பக்கத்து ஸீட்டில் இருந்தவரைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தார். பேருந்து புறப்பட்டு சில அடி தூரம் நகர்ந்து திரும்பவும் நின்றது. வயதானவர் அருகில் இருந்த வரிடம், ‘ராமேஸ்வரத்துக்கு அதிகாலை போய்ச் சேர்ந்துவிடுமா?’ என்று கேட்டார். ‘இது ராமேஸ்வரம் போகாது. சென்னை செல்லும் பேருந்து’ என்று சொன்னதும் அவருக்குப் புரியவில்லை. ‘ராமேஸ்வரம் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள்’ என்று எழுந்து அவசரமாக டிரைவர் அருகே போய் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார் பெரியவர். டிரைவரோ, ‘அதை ஏஜென்ட்டிடம் கேளுங்கள்!’ என்றார். இதற்குள் பஸ் பேருந்து நிலையத்திலிருந்து  வெளியே வந்துவிட்டிருந்தது.

பெரியவர் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து கீழே குதித்து, பஸ்ஸின் s-ramakrishnanமுன்னால் சாலையில் உட்கார்ந்து கொண்டு விட்டார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபத்திலும் அவர் ஏதோ புலம்பிக்கொண்டு இருந்தார். பேருந்திலிருந்தவர்கள் டிரைவரைத் திட்ட, ‘தனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லாம் ஏஜென்ட்டின் வேலை!’ என்று அவர் சாதித்துக்கொண்டு இருந்தார். பெரியவரோ ‘ஏஜென்ட் வராமல் இங்கிருந்து எழுந்து வழிவிட மாட்டேன்!’ என்று பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார். இதற்குள் இன்னொரு நபரை சென்னைக்கு ஏற்றிவிட ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஆம்னியைத் தேடி வந்து சேர்ந்தான் அதே ஏஜென்ட். பெரியவர் அவனைக் கண்டதும் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டார். அவனும் சளைக்காமல் ‘ராமேஸ்வரம் போவதற்கு இந்த நேரம் பஸ் இல்லை பெரியவரே! அதான் திருச்சிக்கு போய் மாறுவதற்காக இதில் அனுப்பி வைத்தேன். பணம் வாபஸ் கிடையாது!’ என்று சொன்னான். பயணிகளின் சத்தம் அதிக மாகவே ஏஜென்ட் பஸ்ஸில் ஏறி வயதான பெண்மணியையும் அவர்களது பொருட் களையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்படி இழுத்தான். அவள் கம்பி யைப் பிடித்துக்கொண்டு வரமறுத்தாள். யாரும் எதிர்பாராதபடி ஏஜென்ட் அவர்கள் வைத்திருந்த ஒரு பையைப் பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே போட்டான்.

கைதவறி விழுந்த குழந்தையைப் பிடிக்க முயற்சிப்பவள் போல வயதானவள் பெருங் குரலெடுத்து அழுதபடி பேருந்திலிருந்து இறங்கி பையை எடுக்க ஓடினாள். இதற்குள் வயதானவரும் கலக்கத்துடன் இருட்டில் விழுந்துகிடந்த பையிலிருந்து சிதறிய பொருட்களைத் தேடிக் கொண்டு இருந்தார். ஒரு சிறிய மண் கலயம் ஒன்று உடைந்து சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. வயதானவள் அந்தக் கலயத்தின் துண்டு களையும், தரையில் கொட்டிக் கிடந்த சாம்பலையும் அள்ளிக்கொண்டு, தலையில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். வயதானவரோ கண்ணில் நீர் தளும்ப Ôசெத்துப்போன என் பையன் அஸ்தி சார். கடல்ல கரைக்கறதுக்காக குவாலியர்ல இருந்து ராமேஸ்வரம் கொண்டுபோயிட்டு இருக்கேன்Õ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். பஸ்ஸில் இருந்த யாவரும் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். டிரைவர் தன் ஸீட்டை விட்டு இறங்கி வந்து, இருட்டுக்குள் நின்றிருந்த ஏஜென்ட்டின் முகத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தார். பிறகு, அவனைத் தரதரவென செத்த எலியை இழுத்துக்கொண்டு செல்வதுபோல அந்த அம்மாவின் காலடியில் இழுத்துப்போட்டு, ‘மன்னிப்புக் கேளுடா!’ என்று இந்தியில் சொன் னார். அவன் தயங்கித் தயங்கி ‘வயித்துப்பாட் டுக்காகச் செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிருங்க அம்மா!’ என்றான். அவள் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏஜென்ட் வந்த ஆட்டோ இருளில் நின்றுகொண்டு இருந்தது. பெரியவர் உடைந்துகிடந்த கலயத்தையும் மண்ணில் விழுந்த சாம்பலையும் அள்ளி ஒரு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் போட்டுக்கொண்டு இருந்தார். டிரைவர் ஆத்திரத்துடன் ஏஜென்ட்டிடம் ‘இவர்கள் இருவரையும் ஒரு டாக்ஸியில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியது உன் பொறுப்பு!’ என்று சொல்லிவிட்டு, தன் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை அப்படியே எடுத்து பெரியவரிடம் கொடுத்தார். பிறகு பேருந்து புறப் பட்டது. வயதான பெண்ணும் பெரியவரும் ஏஜென்ட்டுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டு ,இருந்தார்கள்.
டிரைவர் பஸ் கிளம்பும் முன்பாக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டபடி, ‘என்ன சார் செய்றது? நாய் பிழைப்பாப் போச்சு... எப்படி யாவது உங்களை காலையில எட்டு மணிக்குள்ளே மெட்ராஸிலே கொண்டுபோய் சேர்த்துடறேன்!’ என்றபடி பேருந்தை இயக்கினார்.

அடித்தட்டு மக்களின் உலகம் விசித்திரமானது. அதன் போராட்ட மும் இயல்பும் நாம் தீர்மானிக்க முடியாதது. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களின் உலகைப் புரிந்துகொள்வதும் சமகால இலக்கியத்தின் முக்கிய போக்காக உருவாகிக்கொண்டு இருக்கிறது. தமிழில் இது போன்ற எழுத்துக்கு முன்னோடி யாக ஜி.நாகராஜனையும் ஜெயகாந்தனையும் குறிப்பிடலாம். இதன் தொடர்ச்சியாக உருவான நவீன சிறுகதை உலகில் முக்கிய எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.

பெருநகர வாழ்க்கை எப்படி மனிதர்களைத் தங்களது இயல்பான உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுக்கிவிடுகிறது என்பதைப் பற்றியே கோபி கிருஷ்ணனின் கதைகள் பேசுகின்றன. வாழ்வின் அபத்த நிலைகளை எதிர்கொள்ளும் நெருக்கடிகளே அவரது கதையுலகம். கோபி கிருஷ்ணனின் மனிதர்கள் ஒண்டிக்குடித்தனங்களில் வாழ்பவர்கள். மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்... ஆனால், மனதுக்குள்ளாகத் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக்கொண்டு சமாதானம் அடைகிறவர்கள். இவர்கள் உலகத்தில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. குளிப்பது முதல் புணர்வது வரை யாவும் யாவரும் அறிந்த நிகழ்ச்சிகளே. எருமைமாட்டிலிருந்து கவர்ச்சி நடிகை வரை எல்லாவற்றைப் பற்றியும் இவரது கதை உலகம் ஆதங்கத்துடன் பேசித் தீர்க்கின்றன.

கோபி கிருஷ்ணனின் புயல் என்ற சிறுகதை, மாநகரில் புயல் மழையன்று ஒரு குடும்பத்தின் காட்சியை விவரிக்கிறது. வேலையிலிருந்து கிழிந்துபோன மழைக்கோட்டுடன் வீடு திரும்பும் பொறுப்பான ஒரு குடும்பத் தலைவன், வழியில் குழந்தையின் நினைவு வரவே அதன் காய்ச்சலுக்கு ஒரு மாத்திரையும் சாக்லெட் ஒன்றும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். வீட்டில் குழந்தை சாக்லெட்டைக் கண்டதும், ‘என்னப்பா இன்னிக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கே. எனக்குப் பிறந்த நாளா?’ என்று கேட்கிறது. தனது அக்கறை இன்மையை நினைத்து அவனுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. புதிதாக வேலைக்குப் போகத் துவங்கி இருந்த மனைவி புலம்புகிறாள்.

தான் வேலை செய்யும் மருத்துவ மனையில் ஆபாசப்படங்களை வைத்துக் கொண்டு ஓர் ஊழியர் செவிலியரோடு கேலி பேசுவதையும், அங்குள்ள கிழட்டு மருத்துவர் ஒரு செவிலியைச் சேர்த்து வைத்துக்கொண்டு சல்லாபம் செய்வதையும் பற்றி சொல்கிறாள். வேலைதான் இப்படியிருக்கிறது என்றால், வேலை விட்டு வரும் வழியில், மழையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒருவன் ஆபாசமாக ஜாடைகாட்டி அவளை அழைக்கிறான். பயத்துடன் மகளின் பள்ளிக்கு அவசரமாகப் போய் அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறாள்.

வீட்டிலோ சில மாதங்களுக்கு முன்பு அதே வீட்டில் குடியிருந்த ஒருவன் நன்றாகக் குடித்த நிலையில் உள்ளே நுழைந்து, சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ‘இளமை சுகம்’ படத்துக்கு டிக்கெட் இருக்கிறது போகலாமா என்று கேட் கிறான். அவள் பயத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய் ஒளிந்துகொள்கிறாள்.

இப்படி ஒரு நாள் வாழ்க்கையின் கசடுகளைக் கொட்டுகிறாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்த கணவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை யாருக்கும் எந்த இடையூறும் செய்திராத தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தன்னைத்தானே சலித்துக்கொண்டபடி ‘சாக்கடையில் உழலும் பன்றிகள்!’ என்று அவர்களைத் திட்டுகிறான். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவனால் என்பதோடு கதை முடிகிறது.

நெருக்கடிகளுக்குப் பழகிக்கொள் வதைத் தவிர, அதை எதிர்கொள்வதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்பதை கோபி கிருஷ்ணனின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பரிகாசமும் வலியும் கலந்த இந்தக் கதையை வாசித்து முடிக்கும்போது, நூற்றாண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வரும் நீதி நூல்களும் தர்ம விசாரங்களும் வாழ்க்கையின் மீது எந்த எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதையே உணர முடிகிறது. உடைந்த கண்ணாடியைப் போல வாழ்வு முகம் காணும் யாவரையும் சிதறடித்துதான் காட்டுகிறது. வாழ்வின் கரங்கள் எப்போது உயர்வைத் தருகிறது, எப்போது கீழ்மையை உருவாக்குகிறது என்பதை எவரும் சொல்ல முடியாது. யாராலும் வெல்ல முடியாத வில்லாளியான அர்ச்சுனனும் கூட சில காலம் அரவாணியாகத்தான் வாழ்ந்திருக்கிறான். இப்படித்தானிருக் கிறது வாழ்வின் ருசி!

நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படும் கோபி கிருஷ்ணன் மதுரையில் பிறந்தவர். உளவியல் & சமூக சேவை இரண்டிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். “ஆத்மன் ஆலோசனை மையம்Õ” என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஒவ்வாத உணர்வுகள், தூயோன், மானிட வாழ்வு தரும் ஆனந்தம், டேபிள் டென்னிஸ் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலஹீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003-ஆம் ஆண்டு காலமானார்.

1 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

/தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன்./

படிக்கும்போதே வலியைத் தந்த வார்த்தைகள்! அனுபவித்தவருக்கு எப்படியிருந்திருக்கும்?

தன்னுடைய உண்மையான அடையாளம் எது, தன்னுடைய அடையாளங்களாகக் கருதிக் கொண்டிருப்பது எது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள்ளாகவே
கோபி மாதிரிப் பலருக்கும் முடிந்துபோன ஒன்றாகவே ஆகிவிடுவதை என்னவென்று சொல்வது?