Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

கு.ப.ராஜகோபாலன் நினைவு முகம்

Labels: , ,

எஸ்.ராமகிருஷ்ணன்


திருப்பதி செல்லும் ரயிலில் அந்தத் தம்பதியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைக் கடந்த வயது. தாத்தா ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ரயிலில் கூட்டம் இல்லை. அவர் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஆங்கில பேப்பர், பிளாஸ்டிக் கூடையில் செருகப்பட்டிருந்தது.
ரயில் வேகமாகக் கடந்து செல்லும்போது, அவர் தொலைவில் உள்ள வயலில் வந்திறங்கும் கொக்குகளைக் காட்ட, ஒரு குழந்தையின் வியப்பில் வெளியே எட்டிப் பார்த்தார் அந்தப் பாட்டி. பயணம் முழுவதும் அவர்கள் தணிவான குரலில் எதையோ பேசிச் சிரித்துக்கொண்டே வந்தார்கள். இடையிடையில் தாத்தா சாக்லெட் சாப்பிடுவதும், பாட்டி அதில் பாதியைப் பிடுங்கி வைத்துக்கொள்வதுமாக ஒரு விளையாட்டு நடந்துகொண்டு இருந்தது. பிறகு, தாத்தாவின் தோளில் சாய்ந்து படுத்துக்கொண்டார் பாட்டி. அவரது நரையோடிய கேசம் காற்றில் பறந்து தாத்தாவின் முகத்தில் படர்ந்தது.
ஓடும் ரயிலில், தாத்தா டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடிக்க முற்பட்டபோது, தண்ணீர் சிதறி எதிரில் இருந்த எங்கள் மீதும் தெறித்தது. ‘‘இன்னும் சின்னப் பிள்ளையாட்டம் இருக்கீங்களே... கல்யாணமாகி நாப்பது வருசமாச்சு. உங்களை மாத்தவே முடியலை’’ என்று பாட்டி சொல்ல, ‘‘நாப்பது எங்கடி ஆச்சு? நாப்பத்தஞ்சு முடிஞ்சிருச்சு’’ என்றார் தாத்தா சிரிப்புடன். ‘‘அதெல்லாம் கரெக்டா கணக்கு வெச்சிருங்க’’ என்றபடி ஈரத்தைத் துடைத்தார் பாட்டி.
நாற்பத்தைந்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும், களிப்பும் கேளிக்கையுமாக வாழ்வை அப்படியே பாதுகாக்கும் அந்த ரகசியம் என்னவென்று கேட்கலாம் போலத் தோன்றியது. அவர்களோ தீராத மையலில் புதையுண்டவர்களைப் போல் இருந்தார்கள். வாழ்வில் சுவை துவங்கும்போது தித்திப்பாக இருக்கலாம், ஆனால், அதன் கடைசி விளிம்பில்கூட இத்தனை இனிப்பு இருக்க முடிவது ஆச்சர்யம் தந்தது.
என்னுடன் வந்திருந்த நண்பன், தன் மனைவியிடம் அவர்களைக் காட்டி, ஏதோ சொன்னான். அவன் மனைவி, ‘‘அதான் நரையேறிப் போச்சுல்ல... இன்னும் என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு?’’ என்றாள். ‘‘நீ எல்லாம் நினைச்சாலும், இந்த வயசுல இப்படி இருக்க முடியாதுடி!’’ என்றான் நண்பன். ‘‘ம்ம்ம்... இந்த மூணு வருஷமே போதும் போதும்னு இருக்கு. வயசானா நான் உங்களை விட்டுட்டுப் பையன்கூட அமெரிக்கா போயிருவேன்’’ என்றாள். அருகில் இருந்த அவர் களின் இரண்டு வயதுப் பையன் எதுவும் புரியாமல், சிப்பர் டம்ளரில் பால் குடித்துக் கொண்டு வந்தான். வாழ்தலின் சுவை நாளுக்கு நாள் திரிந்து கொண்டே இருக்கக் கூடியதுதானோ?
திருப்பதியில் நண்பனின் குழந்தைக்கு மொட்டை போடு வதற்காக டிக்கெட் வாங்கிக் காத்திருக் கும்போது, திரும்பவும் அந்த வயதான தம்பதி யைப் பார்த்தேன் அந்தப் பாட்டி கையில் டிக்கெட் டுடன் நிற்க, தாத்தா அவருடைய கையைப் பிடித்தபடி எதையோ சொல்லிச் சிரித்தார். பாட்டியும் சிரித்தபடியே நாவிதர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்து தன் கையில் இருந்த சீட்டைத் தந்து, தன் தலையை மொட்டையடிக்கும்படி சொன்னார்.
சவரக்கத்தியை நன்றாகத் தீட்டி, பாட்டியின் தலையில் தண்ணீர் தெளித்து மழிக்கத் துவங்கியதும், அருகில் உட்கார்ந்திருந்த தாத்தாவின் கண்கள் தானே கசியத் துவங்கின. பாட்டியின் தலைமுடி கற்றை கற்றை யாக தாத்தாவின் கைகளில் வந்து விழுந்தன. அவர் அழுகையை அடக்க முடியாதவரைப் போல வெளியே எழுந்து போய், ஒரு மரத்தடியில் குழந்தை யைப் போல நின்று விசும்பினார்.
குளித்துவிட்டு, மொட்டையடிக் கப்பட்ட தலையும் ஈரப்புடவையுமாக வந்தார் பாட்டி. வயதானவரின் முகத்தில் இருந்த துயரக் களையைக் கண்டது போல, பாட்டி ஆறுதல் சொல்லும் தொனியில், ‘‘சாமி காரியம். இதுக்குப் போயி கண்ணைக் கசக்கிட்டு இருக்கீங்க. தொடச்சுக்கோங்க’’ என்றார். மொட்டையடிக்கப்பட்ட பிறகு பாட்டி, ஒரு துறவி போலிருந்தார்.
அன்று மாலையில் நல்ல மழை பெய்தது. காற்றோடு கூடிய திடீர் மழை. தரிசனத்தை முடித்துவிட்டு வந்தபோது மழை பிடித்துக்கொண்டது. நாங்கள் நனைந்தபடியே ஓடி வெளிப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஒதுங்கினோம். அங்கே அந்தப் பாட்டியும் தாத்தாவும் ஜமுக்காளத்தை விரித்து உட்கார்ந்திருந்தனர். ஒரு துண்டைக் கொடுத்து எங்களைத் தலை துவட்டிக்கொள்ளச் சொன்னார் பாட்டி. பிறகு, முறுக்கும் லட்டும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.
மழை விடும் வரை அருகிலே இருந்தோம். நண்பனின் மனைவி, ‘‘வேண்டுதலுக்காக மொட்டை போட்டீங் களா?’’ என்று கேட்டார். ‘‘சொன்னா சிரிப்பீங்க. அது ஒரு கதை’’ என்று தாத்தாவைக் காட்டியபடி சொல்லத் துவங்கினார் பாட்டி. ‘‘இவர் என் அத்தை பையன். நாங்க அப்போ திருக்கடையூர்ல இருந்தோம். அத்தை வீட்ல ரொம்ப வறுமை. அதனால இவர் எங்க வீட்லதான் தங்கிப் படிச்சார். அப்போ எனக்கும் இவர் மேல ரொம்ப ஈடுபாடு இருந்தது. இது என் வீட்ல யாருக்கும் பிடிக்கலை.
அப்பா எனக்கு திருநாகேஸ்வரத்துல இருந்து ஒரு மாப்பிள்ளை பாத்து நாள் குறிச்சிட்டாரு. கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லை. என்ன செய்றதுனும் தெரியலை. முகூர்த்தத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு யோசனை வந்தது. யாருக்கும் தெரியாம ஒரு நாவிதர்கிட்டே போயி, என் தலையை மொட்டை போட்டுட்டு வந்துட்டேன். அப்போ எனக்கு கருகருனு அவ்வளவு கேசம்.
மொட்டைத் தலையா வந்து நின்ன என்னைப் பாத்து வீடே பயந்து போயிருச்சு. ஒரே ரகளை. அப்பா வுக்கு அப்படி ஒரு கோபம். விஷயம் மாப்பிள்ளை வீடு வரைக்கும் போயி, கல்யாணம் நின்னு போச்சு. அப்புறம் வேற வழியில்லாம இவருக்கே என்னைக் கட்டி வெச்சிட்டாங்க. பிரச்னையில்லாம கல்யாண மாகி குழந்தை பிறந்தா இங்கே வந்து மொட்டை போடுறேன்னு அப்போ மனசில வேண்டிட்டு இருந்தேன். இவருக்கு வடக்கே வேலை கிடைச்சது. பாட்னாவில் வேலை, நாற்பது வருஷம் அங்கேயே இருந்தாச்சு. குழந்தைகள் இல்லை. ஆனா, வேண்டுதல் அப்படியே இருக்கேன்னுதான் வந்து மொட்டை போட்டுட்டேன். இத்தனை வருஷமா இவர் என் தலையை மொட்டை அடிக்க விடவே இல்லை. வயசாறது இல்லையா... இனி எவ்வளவு காலம் இருக்கப் போறோம்னுதான் புறப்பட்டு வந்தோம்’’ என்றார் பாட்டி. தாத்தாவின் முகம், மேலும் வேதனையில் ஆழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது.
பேச்சற்றவர்களாக நாங்கள் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். திடீரென தாத்தா தன் மௌனத்தைக் கலைத்தவரைப் போல, ‘‘அப்படி என்கிட்டே என்ன பிடிச்சிருக்கு?’’ என்று கேட்டார். ‘‘ஆங்... அதையெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது’’ என்றார் பாட்டி.
மழை நின்ற பிறகு நாங்கள் இறங்கி நடக்கத் துவங்கினோம். அந்தப் பாட்டி சொன்னது மறுக்க முடியாத உண்மை. ஒரு ஆணிடம் என்ன பிடித்திருக் கிறது என்று எந்தப் பெண்ணாலும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. அதோடு வாழ்வைக் கொண்டு செலுத்துவது, ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருக்கும் கற்பனையும் ரகசிய எண்ணங்களும்தானே என்றும் தோன்றியது. என்றோ மனதில் ஒரு விதையைப் போலத் துவங்கிய ஆசையை இன்று விருட்சமான பிறகும் பாட்டி வளர்த்துக்கொண்டே இருக்கிறார். வாழ்வின் நிஜமான சுவை இதுதான் போலும். வீடு திரும்பும் வரை அவர்கள் நினைவில் வந்து கொண்டே இருந்தார்கள்.
பெண்ணின் வாழ்வு திருமணத்தால் மட்டுமே அளவிடப்படுகிறது. திருமணத் துக்காக பாதியில் படிப்பை, வேலையை, எழுத்தை, இசையை விட்ட ஆயிரமாயிரம் பெண்கள் இருக்கிறார்கள். மருந்துக்குக் கூட ஒரு ஆண் இப்படி நடந்து கொண்டது கிடையாது. திருமண வாழ்வு இனித்தாலும் கசந்தாலும் அதுதான் அவளது தலைவிதி. அதற்கு மாற்றும் கிடையாது.
கணவனை இழந்த ஒரு பெண்ணின் மன உலகை மிக நேர்மையாகவும் நுட்பமாகவும் பதிவு செய்த கதை கு.ப.ராஜகோபாலனின் ‘திரை’. பெண்களின் வெளிப்படுத் தப்படாத ஆசைகளையும் கனவுகளையும் தனது படைப்பு களின் மூலம் கவனப் படுத்தியவர் கு.ப.ரா. அவரது கதைகள் மன உலகின் விசித் திரங்களைச் சித்திரிப்பவை.
பால்ய வயதில் திருமண மாகும் கால கட்டம் அது. ஆகவே, உரிய காலம் வரை மனைவி அவளது பெற்றோர் வீட்டில்தான் இருப்பாள். அப்படி பெற்றோர் வீட்டில் இருக்கும் தன் மனைவி ராஜத்தைக் காண்பதற்காக அவள் கணவன் வந்து சேர் கிறான். கடந்த சில மாதங் களாக தனது பெற்றோருக்குத் தெரியாமல் ராஜம் உருகி உருகி கணவனுக்குப் பல கடிதங்கள் எழுதி இருக் கிறாள். அந்தக் கடிதங்கள் தந்த மனமயக்கத்தில் விரகதாபம் ஏற்பட்டு வந்து சேர்கிறான் ராஜத்தின் கணவன். ஆனால், வீட்டுக்கு வந்த நாள் முதல் அவனை ராஜம் கவனிக்கவே இல்லை. எதற்காக இப்படி நடந்துகொள்கிறாள் என்று அவனுக்கும் புரியவில்லை.
அந்த வீட்டில் ராஜத்தின் அக்கா சரஸ்வதி விதவையாகி யார் கண்ணிலும் படாமல் தனியே இருக்கிறாள். ஒரு நாள் வீட்டில் உள்ளவர்கள் திருவிழா பார்க்கப் போய்விடுகிறார்கள். சரஸ்வதி மட்டும் தனியே உட்கார்ந்து வீணை வாசித்துக்கொண்டு இருக்கிறாள். அவள் பாடும் பாடலைக் கேட்டதும், இதுவரை தனக்குக் கடிதங்கள் எழுதியதுகூட இவளாக இருக்குமோ என்று ராஜத்தின் கணவனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சரஸ்வதியிடம் போய், ‘‘நீதானே எனக்குக் கடிதங்கள் எழுதினாய்?’’ என்று கேட்கிறான். அவள் உண்மை வெளியாகி விட்ட பதற்றத்தில், ‘‘அது என் தங்கையின் நல்வாழ்வுக்காக எழுதினேன்’’ என்று சமாளிக்கிறாள். ‘‘இல்லை, உன் மனதில் உள்ள ஆசைகள், கனவுகளைத்தான் கடிதமாக வெளிப்படுத்தி இருக்கிறாய். அதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்’’ என்று அவன் அவள் மீது மோகம்கொள்ளும்போது, சரஸ்வதி, அவன் ராஜத்துக்கு மட்டுமே உரியவன் என்றும், இப்படிக் கடிதம் எழுதுவதன் மூலம் மட்டுமே தன்னை சாந்தப் படுத்திக்கொள்ள முடிவதாகவும், விதவைக்கு வேறு வழி இல்லை என்றும் சொல்லி, அவன் மனதை மாற்றுகிறாள். அப்போது வீட்டில் உள்ளவர்கள் வந்துவிடுகிறார்கள். சரஸ்வதி தன் அறைக்குப் போய் விடுகிறாள். அவர்கள் இருவருக் குள்ளும் முன்போல கண்ணுக்குப் புலப்படாத திரை விழுந்துவிடுகிறது என்று முடிகிறது கதை. காலம் ஒரு திரையை விலக்கும் போது இன்னொரு திரையை உண்டாக்கிவிடுகிறது போலும்! இன்று விதவையைத் திருமணம் செய்து கொள்வது எளிதாகி, அந்தத் திரை விலக்கப்பட்டுவிட்டது. ஆனால் காதல் திருமணமோ, வீட்டார் பார்த்து வைக்கும் திருமணமோ எதுவாயினும் திருமணத்தின் மூலம் உருவான அன்பும் காதலும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போலப் பறந்துபோய்விடுவது மட்டும் ஏன் என்று புரியவில்லை. திருமணம் இன்றும் விலக்கப்பட முடியாத நூறு திரைகள் கொண்டதாகவே இருக்கிறது.
பரமபதத்தில் பாம்பு எது... ஏணி எது என்று பார்த்தவுடனே தெரிந்துவிடுகிறது. வாழ்வில் பாம்பையும் ஏணியையும் பிரித்தறிவது அத்தனை எளிதானதில்லையோ!
மணிக்கொடி காலச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவர் கு.ப.ரா. 1902&ல் கும்பகோணத்தில் பிறந்த இவர், முழு நேர எழுத்தாளராக வேண்டி, சென்னைக்கு இடம் மாறி கஷ்ட ஜீவனத்தை மேற்கொண்டவர். தமிழ்ச் சிறுகதையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமானவர்களில் கு.ப.ராவும் ஒருவர். விடியுமா, கனகாம்பரம், நூருன்னிசா போன்ற இவரது கதைகள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருக் கின்றன. 42 வருடங்களே வாழ்ந்த கு.ப.ரா. மிகக் குறைவான சிறுகதைகளே எழுதியிருக்கிறார். ‘ஆண் & பெண் உறவை நுட்ப மான பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன இவரது கதைகள்’ என்கிறார் க.நா.சு. இவரது எழுத்தின் பாதிப்பு தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் எனப் பலரிடம் காணப்படுகிறது.

0 comments: