Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

கந்தர்வன் - கல் தடம்

Labels: , ,

எஸ்.ராமகிருஷ்ணன்


கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல; அதன் ஊடாக இசையும் கலையும் சிறுவணிகமும், மருத்துவ மும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக் கின்றன. கோயில் ஒரு கூட்டு வெளி. அது யாருமற்றவர்களுக்கான போக்கிட மாகவும், காலத்தின் மாபெரும் சாட்சியாக வும், கோடிக்கோடி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் சமர்ப்பிக்கப் படும் இடமாகவும் இருக்கிறது.
ஆனால், பிரார்த்தனை என்பது வெறும் சடங்காகிவிட்ட சூழலில், தெய்வத்தைத் தவிர மற்ற யாவும் கவனிப்பாரற்றுப் போகத் துவங்கி விட்டிருக்கின்றன. ஓதுவார்களின் தேவாரப் பாடலும், நாகஸ்வர இசையும், படபடக்கும் புறாக் கூட்டமும், தண்ணீர் நிரம்பிய தெப்பத்தின் மீது கோபுர நிழல் ஊர்ந்துகொண்டு இருப்பதும், பண்டாரங்களின் ஞானப் பாடலும், எண்ணெய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றங்களும், பிராகாரத்தை நிறைக்கும் மணியோசையும், சந்தன மணமும், கால் தூக்கி நிற்கும் யாளிகளும், உற்சவமும், உலாவும், தேரும், திருவிழாவும் கோயிலின் புராதன நினைவுகள் போலவே புதையுண்டு கிடக்கின்றன.
இன்று கோயில் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தைக் கூடம். அதே கற்தூண்களும், சிற்பங் களும் இருக்கின்றன. ஆனால், அதன் மீது எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள், அவர்களின் முழு முகவரியோடு செல்போன் நம்பர் வரை பொறிக்கப்பட்டு மின்னுகின்றன. (நூற்றாண்டைக் கடந்தும் அழகு குறையாத யாளியைச் செய்த சிற்பியின் பெயரோ இன்று வரை யாருக்குமே தெரியாது!).
தரிசனத்துக்கும் முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள். சிபாரிசுக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு, என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகிவிட்டது கோயில். அமைதி யையும் சாந்தத்தையும் இன்று கோயிலில் காண்பது அபூர்வமாகி விட்டது.
கோயிலுக்குச் செல்பவர்களில் ஒரு சதவீதம் பேர்கூட அங்குள்ள சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிராகாரச் சுவர் முழுவதும் கல் வரிகளாக நீளும் கல்வெட்டுகளையோ நின்று பார்ப்பதை நான் கண்டதே இல்லை. பொதுச் சுவர்களில் சிவப்பு நிறங்களில் ஒட்டப்படும் விரை வீக்க விளம்பரங்களைக்கூட நின்று படிப்பதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால், மாறாத அழகும் புன்னகையும் கொண்ட சிற்பங்களை நேர்கொள்வதற்கு எவருமே இல்லை.
பல கோயில்களில், அங்கு பணிபுரிவர்களுக்கே எது என்ன சிற்பம் என்று பெயர்கூடத் தெரிவதில்லை. நான் கோயிலுக்குச் செல்ல நேர்ந்த சமயங்களில், வெகு அரிதாகவே சன்னதிக்குச் செல்வேன். மற்றபடி, எனக்குக் கோயில் ஒரு சிற்பக் கூடம். காலத்தின் கருவறை. வழிபாடுள்ள கோயில்களிலாவது யாராவது ஆட்கள் தென்படுகிறார்கள். கைவிடப்பட்டு தூர்ந்த நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் சிற்பங்கள் மூளியாக்கப்பட்டு, கை கால் இழந்த நிலையில் சிதறிக் கிடக்கின்றன. புளியமரத்தடியில் தேவகணங்களும், துவாரபாலகர்களும் உருச்சிதைந்து போய், கேட்பாரற்றுக் கிடக்கிறார்கள்.
சமீபத்தில், திருவிடைமருதூரில் உள்ள பாவை விளக்கைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நின்றிருக்கிறது அந்த விளக்கு. ஐந்தரை அடி உயர வெண்கல விளக்கு. தொலைவிலிருந்து பார்க்கும்போது யாரோ ஒரு பெண், நூற்றாண்டுகளாக கையில் விளக்குடன் நின்றுகொண்டு இருப்பது போல இருக்கிறது. அவளின் முக வசீகரமும், நகக்கண்கள்கூட துல்லியமாக வார்க்கப்பட்டிருந்த அழகுமாக, பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போன்ற ஈர்ப்பைத் தருகிற விளக்கு.
சரபோஜி மன்னர்களின் காலத்தில் வாழ்ந்த பெண் அவள். தனக்கு விருப்பமானகணவன் வேண்டும் என்பதற்காக வேண்டுதல் செய்து அதை நிறைவேற்றும் படியாக தன்னைப் போலவே வெண்கலத்தில் விளக்கு செய்து வைத்திருக்கிறாள். அந்த பெண்ணின் கண்கள் காதல் ஏறி கவிழ்ந்திருக்கின்றன. உதட்டில் சந்தோஷம் கரை தட்டி நிற்கிறது. அவள் காலடியில் உள்ள கல்வெட்டில் அவளது பிரார்த்தனையின் நோக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதை வார்த்து எடுத்தவன் எத்தனை பெரிய கலைஞனாக இருந்திருப்பான்! எப்படி அவளது ஆடை மடிப்புகளைக்கூட இத்தனை சுத்தமாகச் செய்ய முடிந்திருக்கிறது அவனால்! அதுவும், அவளது கையில் உள்ள விளக்கு எரியும்போது முகத்தில் ஒளிர்ந்து படரும் சுடரொளியில் முகம் வெட்கத்தில் சுருங்கி விரிவது போலவே இருக்கிறது. இத்தனை வசீகரமும் கவனிக்கப்படாமல் ஒதுங்கியே இருக்கிறது. அவசரமும் பரபரப்பும் மிக்கவர்களாக கையில் காசை இறுக்கிப் பிடித்தபடியே சன்னதியை நோக்கி ஓடும் மனிதர்களின் கண்களில் அந்தப் பாவைவிளக்கு படுவதே இல்லை. ரயில் நிலையங்களிலும் ரேஷன் கடைகளிலும் காண முடிந்த பரபரப்பு கோயிலுக்குள்ளும் தொற்றிக்கொண்டு விட்டது.
இதன் இன் னொருபுறம், கிராமப்புற கோயில்களில் பெரும்பான்மை, சாதியைக் கட்டிக் காக்கும் காப்பரண் களாக ஆகி இருக்கின்றன. கிராமக் கோயில் எதிலும், எவரும் விருப்பம்போல நுழைந்துவிட முடியாது. ஒவ்வொரு தெய்வமும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியது! மற்ற எந்த சாதிக்காரனும் அந்தக் கோயிலின் வாசற்படியைக்கூட மிதித்துவிட முடியாது. ஆலயப் பிரவேசம் நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோயில்கள் பல ஊர்களிலும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆறு வருடங்களுக்கு முன், நானே ஒரு சம்பவத்தை நேரில் கண்டிருக்கிறேன். சிவகாசி அருகில் உள்ள சிற்றூர் ஒன்றில் உள்ள காளியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரிந்து, அரசு அவர்கள் ஆலயப் பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.
குறிப்பிட்ட நாளில், தாசில்தாரில் துவங்கி அத்தனை அரசு அதிகாரிகளும் அந்தக் கிராமத்தில் குவிந்தார்கள். ஆனால், எந்த மக்கள் ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமோ, அவர்களில் ஒருவர்கூடத் தன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அரசு அதிகாரியே ஒரு தட்டில் பழம், தேங்காய் வாங்கி எடுத்துக்கொண்டு, அவர்களில் சிலருக்குத் தைரியம் சொல்லி அழைத்து வந்திருந்தார். ஆண்களும் பெண்களுமாக நாற்பது பேர் வந்தனர். கோயிலுக்குள் நுழைவதற்காக அவர்கள் வந்து நின்றபோது, அந்த முகங்களில் பயமும் நடுக்கமும் ஒளிந்திருப்பதைக் காண முடிந்தது. வயதான பெண் ஒருத்தியின் கைகள் நடுங்கின. கோயிலுக்குள் அவர்களை அனுமதித்தது தங்களுக்கு உடன்பாடில்லை என்பதுபோல, மற்றொரு மேல்சாதியினர் கோயிலை விட்டு விலகியே நின்றிருந்தார்கள்.அதுவரை இருந்த பூசாரி, அன்று தான் பூஜை வைக்க முடியாது என்று விலகிக்கொண்டார். தாசில்தாரே துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பூஜை வைத்தார்.
பூஜை முடிந்தது. பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த நாடகம் முழுவதும் ஒரு நாள்தான்! மீண்டும், அந்தக் கோயில் எந்தச் சாதிக்குச் சொந்தமாக இருந்ததோ, அவர்கள் வசமே திரும்பிப் போய்விட்டது. அன்று கோயிலில் சாமி கும்பிட வந்தவர்கள், அதன் பிந்திய நாட்களில், வேறு வேறு காரணங்களுக்காக உதைபட்டார்கள்.
வழிபாட்டை விடவும் முக்கியமானது சக மனிதனை மதிப்பதும், அவனைப் புரிந்துகொள்வதுமே ஆகும். நம்மைச் சுற்றிய மனிதர்களின் மீது தீராத துவேஷமும், பகையும், பொறாமையுமாக வாழ்கிற நாம், கோயிலில் மட்டும் எப்படிப் பரிசுத்தவாதிகளாக நடந்துகொள்ள முடியும்?
மனம் காழ்ப்பு உணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டு இருக்கும்போது, கருணையையும், அன்பையும் எப்படிக் கோயிலில் காண முடியும்? எளிய மனிதர்களின் விட்டுக்கொடுத்தல் எத்தகையது என்பதை நாம் உணரவே இல்லை. அடுத்தவனின் உரிமையை அபகரித்துக் கொள்வதற்குத்தான் நமது அறிவும் பலமும் அதிகம் பயன்பட்டிருக்கிறது.
கந்தர்வனின், ‘சாசனம்’ என்ற கதை எளிய மனிதர்களின் விட்டுக் கொடுத்தலையும் ஆவேசத்தையும் நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. கந்தர்வன் ஒரு கவிஞர். முற்போக்குச் சிந்தனையாளர். ‘விதவிதமாக மீசை வைத்தோம்... ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ என்று பாடும் கவியுள்ளம் கொண்டவர். சிறந்த சிறுகதைப் படைப்பாளி.
‘சாசனம்’ கதை, ஒரு புளிய மரத்தைப் பற்றியது. அந்த மரம் குறவர்கள் குடிசைகளுக்கு மத்தியில் உள்ளது. பிரமாண்டமான அந்த மரத்தடியில் பன்றிகள் அடைந்து கிடக்கின்றன. கதைசொல்லி அதைத் தனது அப்பாவின் புளியமரம் என்று அறிமுகப்படுத்துகிறார்.
அருகில் உள்ள ஊர்களில் அப்பாவுக்கு நிறைய நிலங்கள் உண்டு. யாவையும் குத்தகைக்காரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே அப்பா அவர்களுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டு இருப்பார். அந்த நிலம் யாவும் தாத்தாவுக்கு, மகாராஜா தானமாகத் தந்தவை. அதற்கு சாசனமும் இருக்கின்றன.
அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த மானது அந்த கொறட்டுப் புளி தான் (குற வீட்டுப் புளி என்பதைச் சொல்லக் கூச்சப்பட்டு, கொறட்டு புளியாக்கி இருந்தார் அப்பா). ஒவ்வொரு முறை புளியம்பழங்களை உலுக்கும்போதும், அந்தப் பகுதியில் உள்ள கிழவி ஒருத்தி யும் அவளது மகளும் மரத்தடியில் வந்து நிற்பார்கள். அந்த கிழவியின் மகள் தாத்தாவின் சாடையிலே இருப்பாள். அப்பா பேசும்போது அவர்கள் வாஞ்சையாகக் கேட்பார்கள். பழம் உலுக்கி முடிந்ததும் அப்பா தன் காலால் கொஞ்சம் பழங்களை ஒதுக்கி, அந்தக் கிழவியை எடுத்துக்கொள்ளச் சொல்வார். அவள் மறுப்பேதும் இன்றி அள்ளிக்கொள்வாள். உண்மையில், அந்தப் புளியமரம் தனக்குச் சொந்தமானதுதானா என்று அப்பாவுக்கே சந்தேக மாகத்தான் இருந்தது. அதைச் சொந்தம் கொண்டாட அவரிடம் எந்தச் சாசனமும் இல்லை. ஆனா லும், அதை அனுபவித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அடுத்த வருஷம் அவர் புளியம்பழம் உலுக்க ஆளைக் கூட்டிக்கொண்டு போனபோது, அந்தக் கிழவி மரம் தனக்குத்தான் சொந்தம் என்றும், அதை உலுக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் அறிவிக்கிறாள்.
அப்பா கால மாற்றத்தை உணர்ந்துகொண்டு அதிர்ச்சியடைந் தவராக, வெளியேறி வீடு திரும்பி வருகிறார். ஆனால், அந்த மரம் தன்னுடையதுதானா என்று பரிசோதிக்க, அவர் சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவில்லை என்பதோடு கதை முடிகிறது.
மறைமுகமாக இக்கதை விளக்குவதெல்லாம், அந்தக் கிழவி அவரது தாத்தாவின் மனைவிகளில் ஒருத்தி. அவளுக்கு உரிமையான மரத்தை இத்தனை வருடமாக அவள் அனுமதியோடு அப்பா அனுபவித்துக் கொண்டு இருந்தார். ஆனால், அதற்கான நன்றியோ, கருணையோ அவரிடம் இல்லை. முடிவாக, புளியமரத்துக்கு உரிமையானவள் குரல் தரும்போது, வழியின்றி வெறும் ஆளாகத் திரும்பிவிடுவதன் மூலம் அவர் உண்மையை ஒப்புக் கொள்வதை அறிய முடிகிறது.
பிறப்பில் உருவான பேதங்களைக் களைவதற்காகத்தான் கோயில்களும், பள்ளிக்கூடமும், அற நிலையங்களும் உருவாக்கப்பட்டன. இன்று அவையே சாதியையும், துவேஷத்தையும, வன்முறை யும் வளர்ப்பவை ஆகிவிட்டன.
சாலையோரத்தில் உள்ள நடுகல்லை ஒரு பௌத்தத் துறவி வணங்கிக்கொண்டு இருக்கிறார். அதைக் கண்ட மற்றொரு துறவி, ‘இதென்ன முட்டாள்தனம்?’ எனக் கேட்க, ‘கோயிலின் உள்ளே நீ வணங்கும் புத்தனும்கூட இதைப் போன்றதொரு கல்தானே?’ என்று சிரிக்கிறார் என்கிறது ஜென் கதை.
நிஜம்தானே! நாம் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்தையும், அன்பையும் தூர விலக்கிவிட்டு, அபிஷேகமும், ஆராதனைகளும் செய்வதால் மட்டும் மனம் மலர்ச்சியுற்றுவிடும் என்று நம்பினால், அதன் பெயர் முட்டாள்தனம்தான் இல்லையா?
தொழிற்சங்கவாதியாகவும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்த கலைஞராகவும் தீவிர பங்களிப்பு செய்த கந்தர்வன், வாழ்வின் அரிய தருணங்களைக் கதைகளாக்கியவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். Ôகண்ணதாசன்Õ இதழில் எழுதத் துவங்கிய இவர் Ôசெம்மலர்Õ, Ôசுபமங்களாÕ, ÔதாமரைÕ போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். கவியரங்க மேடைகளில் இவர் வாசித்த கவிதைகள் இன்றும் திரும்பத் திரும்ப பாடப்பட்டு வருகின்றன. Ôமீசைகள்Õ என்ற இவரது கவிதைத் தொகுப்பும் Ôபூவுக்கு கீழேÕ, Ôசாசனம்Õ போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் மிக முக்கியமானவை. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் உள்ள அவரது மகளின் வீட்டில் வசித்தபடி இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த கந்தர்வன் உடல்நலக் குறைவின் காரணமாக ஓராண்டுக்கு முன் மரணமடைந்தார்.

3 comments:

கேசவன் said...

///மனம் காழ்ப்பு உணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டு இருக்கும்போது, கருணையையும், அன்பையும் எப்படிக் கோயிலில் காண முடியும்?///

சம்மட்டி அடி தான் போங்கோ. நல்லா நாக்க புடுங்கறது மாதிரித்தான் கேட்டு இருக்கீங்க. (ஆனா யாரு நாக்க?)

///‘விதவிதமாக மீசை வைத்தோம்... ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ ///

என்னாது சின்னபுள்ள தனமா இருக்கு. எனக்கு மீசை வைக்க மட்டும் தான் தெரியும்.(::)

///இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த கந்தர்வன் உடல்நலக் குறைவின் காரணமாக ஓராண்டுக்கு முன் மரணமடைந்தார்.///

அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

ஐயா சாமீ நல்ல வலைப்பதிவு, ஆனா கொஞ்சம் சின்ன சின்ன பாராவா போடுங்க. படிக்க கொஞ்சம் எளிமையா இருக்கும்.

இன்னும் எத்தனையோ கருத்து சொல்லலாம், ஆனா கொஞ்சம் வேலை இருக்கு.

www.gnanamethavam.blogspot.com

வரட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா.........

ராம் said...

நன்றி ஆர்வி அவர்களே.. வருகைக்கும் சிபாரிடுக்கும், உங்கள் விருதுக்கும்.

கிருஷ்ண பிரபு said...

அருமையான பதிவு. தொடருங்கள்.